சத்தமாய் மோனியின் குரல் கேட்க மேகாவின் அறைவாசலில் நின்ற மூவரும் திடுக்கிட்டு திரும்ப மேகாவும் இதனை அப்போது தான் கவனித்தாள்.
“ப்பா…” என்று கட்டிலில் இருந்து குதித்துக்கொண்டு அஷ்வின் மொபைலுடன் வந்து பல்லவனிடம் காட்டி,
“மாமா வா சொல்லு…” என்றான் தகப்பனை மிரட்டலாக.
“டேய் என்னடா?…” பல்லவனுக்கு தர்மசங்கடமாக போனது.
“மாமா வா சொல்லு…” என்று அஷ்வின் மீண்டும் சொல்ல அந்த தோரணையில் மற்றவர்கள் சிரித்துவிட அதிரனுக்கு அஷ்வின் மீதான பிடிப்பு இன்னும் கூடியது.
“சோ ஸ்வீட் மை சேம்ப்…” என்றான் திரையில் அவனின் முகத்தை வருடி கொஞ்சியபடி.
அஷ்வின் உடனே மொபைலை பல்லவன் கையில் தந்துவிட்டு இடுப்பில் கைவைத்து அவன் அழைக்கிறானா என பார்த்து நின்றான்.
மலரும், அமுதனும் நகர்ந்து வந்து சோபாவில் அமர்ந்துவிட மோனிகா மேகாவினருகே வந்து நின்றாள்.
“உன் அண்ணன் வசமா மாட்டினாரு. எப்ப பார்த்தாலும் பாத்திரக்கடையில யானை புகுந்ததாட்டம் பேசிட்டே இருப்பார்ல. எப்படி வாயடைச்சு போய் நிக்கிறார் பாரேன்…” என்று சொல்லி சிரிக்க அவளை முறைக்க கூட முடியாமல் பல்லவன் இருந்தான்.
அங்கே அதிரனோ தாடையில் கை வைத்தபடி பல்லவன் என்ன பேச போகிறான் என கவனித்துக்கொண்டே சிரிப்புடன் பார்க்க,
“ப்பா…” என்றான் அஷ்வின்.
“இருடா…” என்று மகனிடம் சொல்லிவிட்டு,
“வாங்க மாப்பிள்ளை…” என்றான் பல்லவன் மெதுவாய்.
“எங்க?…” என்றான் அதிரன் நமுட்டு சிரிப்போடு.
“வீட்டுக்கு தான். வாங்க மாப்பிள்ளை…” மீண்டும் பல்லவன் மகனின் பார்வையை கவனித்துக்கொண்டே.
“மோனி இரு இரு. எதையாச்சு சொல்லிட்டு…” என்று மோனிகாவின் பேச்சை நிறுத்திவிட்டான்.
இல்லை என்றால் உவமை சொல்கிறேன் என்று தன்னை டேமேஜ் செய்துவிடுவாள் என்று உஷாராக நிறுத்த,
“தாங்க…” என்று பிடுங்கிக்கொண்டு ஓடினான் அஷ்வின்.
சென்றவன் அனைவரிடமும் ஒரு ரவுண்ட் போனை கொடுத்து அதிரனை அழைக்கும்படி சொல்ல அமுதினியன் கூட பேசிவிட்டார்.
எங்கே தன்னிடமும் தந்துவிடுவானோ என மலர் இங்குமங்குமாக நடந்துகொண்டிருக்க அவரை பிடித்து நீட்டிவிட்டான்.
“போன்ல எல்லாம் எனக்கு பேச வராதுடா…” பேரனிடம் கெஞ்சாத குறையாக மலர் சொல்ல,
“ஆமா நேர்ல வந்தவங்கட்ட மட்டும் நல்லா பேசிட்டீங்க. என்ன த்தை?…” என்றாள் மோனிகா கிண்டலாக.
யாரிடமும் பேச முடியாதென அதிரன் மறுக்கவில்லை. எல்லோரிடமும் நன்றாக பேசிய பின் கடைசியாக இவன் விடமாட்டான் என்று மோனி வலுக்கட்டாயமாக போனை பிடுங்கி மேகாவிடம் நீட்டினாள்.