“அண்ணே கொஞ்சம் பொறுமையா…” என்று அமுதினியன் அமைதியாக எடுத்துசொல்ல முற்பட அடிக்க வருபவரை போல நெஞ்சை நிமிர்த்தி பார்த்தார் பரமசிவம்.
“என்ன அண்ணே? அவனுங்க வீடு வரைக்கும் வந்துட்டு போயிருக்காங்க. கண்டவ கூட ஆடி காசு பார்க்கறவனுக்கு நம்ப வீட்டு பொண்ணா? அதுவும் இவ்வளவு நடந்த பின்னால? என்ன அமுதா நீயும் காச பாத்து கவுந்துட்டியோ?…”
வரைமுறையற்ற வார்த்தைகளை தண்ணியாய் இரைத்தார் பரமசிவம். இதனை மறுத்து பேச முயன்ற அமுதனை தடுத்த பல்லவன்,
“அப்பா நான் பேசிக்கறேன். நீங்க சும்மா இருங்க…” என்று தடுத்துவிட்டு,
“ஆமா, பார்த்தாச்சு. எங்களுக்கு இதுல சம்மதம். என்னன்றீங்க? எப்ப பார்த்தாலும் இதே தான் செய்யறீங்க? பொன்னை கட்டி குடுக்கற எங்களுக்கு தெரியாதா யாருக்கு குடுக்கனும்னு? தேவையில்லாம யார் பேச்சையோ கேட்டுட்டு பேசாதீங்க….”
பல்லவன் சந்திராவை பார்த்துக்கொண்டே பரமசிவத்தை பேச செல்வம் வந்து சேர்ந்தார்.
“என்னண்ணே, எதுக்கு இப்படி பன்றீங்க? நாளைக்கு வீட்டுக்கு வந்து இது விஷயமா பேசனும்னு தான் அமுதன் சொன்னான்…” செல்வம் சமாளிக்க,
“இங்க பாருங்கண்ணே அக்கா பேச்சை கேட்டுட்டு தான் நீங்க இப்படி பேசறீங்க. உங்களுக்கு விருப்பமில்லையா விடுங்க…” என்றார் செல்வம்.
“அதை தான் நானும் சொல்றேன், உங்களுக்கு இஷ்டம் இல்லையா விடுங்க. உங்க பிள்ளைங்களுக்கு கல்யாணம் முடிக்கும் போது எங்கட்ட என்ன கேட்கவா செஞ்சீங்க? இல்லை தானே? அப்பறம் நாங்க மட்டும் ஏன் கேட்டு செய்யனும்னு எதிர்பார்க்கறீங்க?…”என்றான் பல்லவன்.
பரமசிவம் திகைத்து போய் பதில் பேசமுடியாமல் நின்றுவிட அதை கண்ட சந்திரா,
“பெரியவங்க பேசறப்ப உனக்கென்ன பேச்சு? எதுவா இருந்தாலும் என் தம்பி பதில் சொல்லட்டும்…” என்றார்.
எப்போதடா சேர்ந்துகொள்ளலாம் என்றிருந்தவருக்கு இது ஒரு வாய்ப்பாகி போக மோனிகா அவரை அல்பமாக பார்த்தாள்.
“பாருங்க லட்சணத்தை, இனி இவங்களோட ஆட்டமெல்லாம் இங்க செல்லுபடி ஆகவே கூடாது…” என மலரிடம் சொல்லிவிட்டு சந்திராவை பார்த்தாள்.
சந்திராவை போல பரமசிவம் அத்தனை சீக்கிரம் மாறமுடியவில்லை. இன்னும் கோபத்துடனே தான் இருந்தார்.
“மூத்தவன்னு ஒரு மரியாதை இல்லை. இந்த வீட்டுல எனக்கென்ன வேலை?…” என்று கிளம்பிவிட செல்வம் தான் சமாளித்தார்.
சந்திராவும் கிளம்பிவிட அவர்கள் எல்லோரும் கிளம்பி சென்ற பின்னர் தான் அலையடித்து ஓய்ந்ததை போல இருந்தது.
“நீ எதையும் நினைக்காம இரு வரு. இவங்கலாம் இனிமே இங்க நாட்டாமை பண்ண முடியாது. மாமாவும் அதுக்கு அனுமதிக்கமாட்டாங்கன்னு நினைக்கறேன்…”
மோனிகா அமுதனையும் பார்த்துக்கொண்டே சொல்ல தலையசைத்தார் அமுதினியன்.
இதற்கே திருமணத்தை விரைவில் நடத்திவிட வேண்டும் எண்ணம் வலுவாய் தோன்றியது.
அடுத்த இரண்டு நாட்களில் தேவராஜ் அமுதினியனை பல்லவனுடன் வரவழைத்து தங்கள் ஆஸ்தான ஜோதிடரிடம் திருமணத்திற்கும், வரவேற்பிற்கும் நாளை குறித்துவிட்டு வந்தனர்.
அமுதினியன் வீடு வந்து சேர்ந்து விஷயத்தை சொல்லும் முன்னரே அதிரன் அழைத்துவிட்டான் மேகாவிற்கு.
அவனின் எண்ணை பார்த்ததுமே எதற்கென்று தெரிந்து உதடுகளில் புன்னகை தவழ எடுத்தாள்.
“ஹ்ம்ம்…” என்று இவள் சொல்ல,
“இன்னும் எவ்வளவு நாள் வெறும் ஹ்ம்ம், ஹலோ, சொல்லுங்க இப்படின்னே ஆரம்பிப்ப மேகா?…” என்றான் சிரிப்புடன்.
“இதை கேட்க தான் கூப்பிட்டீங்களா?…” என்றாள் அவளும்.
“அட, பாரேன்…” என்று சிரித்தவன்,
“மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணியாச்சு மேகா…” அவன் குரலில் அத்தனை பரவசமும், காதலும்.
“இன்னும் அப்பா வீட்டுக்கு வரலை…”
“அதான் நான் கால் பண்ணேன். இன்னும் ரெண்டு மாசத்தில கல்யாணம். ரெடியா இரு…”
“ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம்? வேற எதுவும் இல்லையா?…” என சிரித்தவன்,
“ஓகே, நான் இனி ஷூட்டிங்ல கொஞ்சம் பிஸி ஆகிடுவேன். இங்க இருக்கறது கஷ்டம்….”
“ஏன் வெளியூர் போறீங்களா?…”
“இல்லை, பாரின் தான். ஷூட் இருக்கு. வெடிங் முன்னாடி முடிச்சு குடுக்கனும். அப்போதான் பீஸ்ஃபுல்லா செலிபரேட் பண்ண முடியும். போய்ட்டு கல்யாணத்துக்கு பத்து நாள் முன்னாடியே வந்திருவேன்…” என்றவன் இருபது நாள் முன்பே வந்து சேர்ந்திருந்தான் அதிரன்.
மேகாவிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. திடீரென்று அவள் முன்னால் வர நினைக்க அங்கே மேகாவை நிறுத்தி பேச முயன்றான் பிரதாப்.
தனது தோழிக்கு திருமண பத்திரிக்கையை வைத்துவிட்டு வந்துகொண்டிருந்தவளை மறித்தபடி வந்தது பிரதாப் பைக்.
அவனை கொஞ்சமும் எதிர்பார்க்காத மேகாவின் முகம் மாற இரண்டடி பின்னால் நகர்ந்தாள் அவள்.
“வர்ணா…” என்று தனது பைக்கை நிறுத்திவிட்டு அவளருகே நெருங்கும் முன்னால் காரொன்று வந்து நிற்க அதிலிருந்து அதிரன் இறங்கி வந்தான்.
“ஹாய்…” இருவரையும் பார்த்து புன்னகைத்தவனை கண்டு ஒரு நிம்மதி பெருமூச்சு மேகாவிடம்.
அவனை கண்டதும் அவள் முகத்தில் தோன்றிய உணர்வும், லேசாய் கலங்கிவிட்ட விழிகளும் என அவனருகே வந்து நின்றுகொண்டது அதிரனை இன்னும் புன்னகைக்க செய்தது ஆறுதலாக.