“ஆமா, என் பேர் அதானே? ஏன் இந்த புருஷன் பேர் சொல்ல கூடாதுன்னு ஏதாவது சென்ட்டி பீல் இருக்கா உனக்கு?…” அத்தனை இலகுவாய் அவன் சொல்ல புருஷன் என்றதில் மேகாவிற்கு தான் ஜிவ்வென்றானது.
“மேகா சொல்லு, உடனே கிளம்பிடலாம்…” என்றான் கையை கட்டிக்கொண்டு அவளை பார்த்தபடி.
“சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்லை. ஆனா இப்போ தோணலையே?…” அவன் கேட்க கேட்க தான் அதனை சொல்லமுடியாமல் அவள் தேங்கி நின்றாள்.
இயல்பாய் விட்டுவிட்டால் கூட சரளமாய் வந்துவிடுமோ என்னவோ, அவன் கேட்க, பார்க்க, சிரிக்க அவள் தன் கட்டுப்பாட்டிலேயே இல்லை.
“எப்போ தோணும்?…”
“தெரியலை…” என்றவள் பார்வையில் இறங்கியவன்,
“அதுக்கேன் முகம் இப்படி மாறுது. ஓகே….” என்று தோளை குலுக்கிக்கொண்டான்.
“ஆனா தியேட்டர்ல வச்சு நீ சொன்ன தானே? என்னை பார்த்ததும். எனக்கு சத்தம் கேட்கலை. ஆனா நீ சொன்ன. எனக்கு தெரியும்…” என்று புன்னகைக்க ஆமோதிப்பாய் தலையசைத்து இதழ்களை வளைத்தாள்.
“ஓகே, இப்ப சொல்ல வேண்டாம். ஆனா உன்னை ஒவ்வொரு செகெண்ட்க்கும் அதி சொல்ல வைக்கிறேன்…” என்று அவன் சொல்ல புருவம் உயர்த்தி சிரித்தவள்,
“ஒஹ் பார்க்கலாமே…” என்று அதற்கும் ஒப்புக்கொள்ள,
“போலாம்…” என்று ஹர்ஷத்திற்கு கால் செய்து அழைத்துக்கொண்டான்.
மேகாவின் வீடு சென்று சேரும் வரை வேறு பேசுக்கள் எதுவுமில்லை இருவரிடத்திலும்.
ஹர்ஷத், ட்ரைவரை வைத்துக்கொண்டு பேச அதிரனுக்கும் தோன்றவில்லை, மேகாவை சங்கடப்படுத்தவும் விரும்பவில்லை.
இப்போதைய மனநிலைக்கு தன்னால் மேகாவிடம் பேசும் பேச்சுக்களுக்கு எல்லையை வகுக்க முடியுமா என்று தெரியாது.
அதனை கொண்டே தன்னை தானே கட்டுப்படுத்திக்கொண்டு வந்தவன் பாடல்களை மெலிதாய் முனுமுனுத்துக்கொண்டே வர மேகாவிற்கு அந்த பயணம் அத்தனை சுகமானதாய் இருந்தது.
வீட்டை நெருங்கியதும் தான் அவளை அழைத்தான் அதிரன். உள்ளே வருவானோ என பார்க்க,
“இப்போ வர முடியாது. வாங்கன்னு கூப்பிட்டுடாத மேகா. எனக்கு டைம் இல்லை…” என்றான்.
“ஹ்ம்ம், ஓகே…” மேகம் தலையசைக்க சிரிப்புடன் அதனை ஏற்றவன்,
“இங்க வந்துட்டேன். ஆனாலும் நிச்சயம் என்னால உன்னோட ப்ரீயா பேச முடியுமான்னு தெரியலை. நிறைய கமிட்மெண்ட்ஸ். முடிச்சிட்டு வெடிங் பார்மாலிட்டீஸ்ல ஜாயின் பண்ணிக்கறேன். ஓகே?…”
“ஹ்ம்ம், ஓகே…” என்றவள்,
“ஹெல்த்தை கவனிச்சுக்கோங்க…” என்றும் கூறினாள்.
“வாவ்…” என தலையசைத்து கண்கள் மின்ன சிரித்தவன்,
“நீயும் டேக் கேர். சீக்கிரம் மீட் பண்ணலாம் மேகா…” என்று சொல்லி விடைபெற்று கிளம்பினான்.
சொல்லியதை போல திருமணத்தின் முதல் வாரம் வரை கழுத்தை பிடிக்கும் வேலைகள்.
ராவும், பகலுமாய் உறக்கமில்லாமல் தன்னுடைய போர்ஷன் எல்லாம் நடித்து, டப்பிங் பேசி முடித்து, பாடல்களை பாடி முடித்து என்று அத்தனை பிஸி அதிரன்.
எத்தனை இருந்தும் மேகா விஷயத்திலும், தங்கள் திருமண விஷயத்திலும் ஒரு பார்வை இருந்துகொண்டே தான் இருந்தது.
வேலையை கொண்டு அதனிலிருந்து அவன் தள்ளியிருக்கவே இல்லை. எல்லாமே அவனின் கவனத்தின் பின்பு தான் முடிவு செய்யப்பட்டது.
சொந்தங்கள் முதல் வாரமே வந்துவிட அதிரனுக்கும், தேவராஜிற்கும் அப்போது தான் நேரமே கிடைத்தது.
திருமணம் அமுதினியன் குடும்பத்தின் பழக்க வழக்கத்தை கொண்டு முதல்நாள் இரவு நிச்சயதார்த்தம் என்றும், மறுநாள் அதிகாலை முகூர்த்தம் என்று முடிவாகி இருந்தது.
அதற்கு முன்பிருந்த எந்த சடங்கும் தவிர்த்துவிட கூடாது என்பதில் அத்தனை தெளிவாக இருந்தான் அதிரன்.
என்னதான் தங்கள் வழக்கப்படி திருமணம் என்றாலும் இன்றைய காலகட்டத்தில் சங்கீத், மெஹந்தி எல்லாம் தவிர்க்க முடியாத ஒன்றாகி போனது.
அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தான் அதிரன். இது என் திருமணத்தில் இல்லையே என எந்தவித எண்ணங்களும் மேகாவின் மனதில் வந்துவிட கூடாது என்று பார்த்து பார்த்து ஏற்பாடு செய்தான்.
அத்தனையும் அவனின் மேகத்திற்கென்றே. அன்று காலை தான் மெஹந்தி நடந்து முடிந்திருக்க இருக்க, மதியம் மூன்று போல சங்கீத். அன்றே மாலை நிச்சயதார்த்தம், மறுநாள் திருமணம்.
இத்தனை மாதங்களை கடந்துவிட்டவனுக்கு அந்த இரண்டு நாளை நெட்டி தள்ளுவதற்குள் போதும் போதுமென்றானது.
“மேகா, மேகா என்னை என்ன பன்ற நீ?…” என்று இரவுகளில் அவளை உணர்வுகளால் பந்தாடிக்கொண்டு இருந்தான்.
ராஜா முத்தைய்யா மஹால் திருமண மண்டபம் அலங்காரத்தால் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப முயன்றது.
அமுதினியன், மலர் பக்க சொந்தங்கள் சொந்தங்கள் எல்லாம் ஒருவர் விடாமல் குடும்பத்தோடு வந்துவிட்டிருந்தார்கள்.
தங்களை அத்தனை இகழ்ச்சியாக பேசியவர்கள் எல்லாம் இப்போது உறவு என்று சொல்லிக்கொண்டு வந்து சிரிக்கிறார்கள்.
வேஷத்திலும் வெளிவேஷம். என்ன ஒன்று, கேட்ட காதிற்கும், மனதிற்கும் தான் அவர்களின் இப்போதைய திடீர் அன்பை முழுமையாக ஏற்க முடியவில்லை.
அக்கறை என்ற பசப்பல்கள் இப்போது அதிகமாக இருக்க ஜீரணிக்க முடியாததாகவும் இருந்தது.
தங்கள் வீட்டில் இருந்தபடி தங்களை அதிரனுடைய உறவுகள் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டார்கள் அவர்களை சுற்றி இருப்பவர்களிடம்.
அவளை பிரபாவின் பொறுப்பில் விட்டுவிட்டனர். ஏற்கனவே தாயிடமும் அத்தனை அடி. இவர்களும் எச்சரிக்க பூஜா அமைதியாகி போனாள்.
தேவராஜ் அத்தனைமுறை சொல்லிவிட்டார். உறவுகள் சூழ இந்த திருமணம் நடப்பதில் தான் மேகாவிற்கு இன்னுமே நிம்மதியை சந்தோஷத்தை தர முடியும் என்று.
இதனால் என் திருமணம் இப்படி நடந்துவிட்டது என்ற எண்ணம் மேகாவிற்கு மட்டுமல்ல, அவளின் குடும்பத்தினருக்கும் வந்துவிட கூடாதென்று தெளிவாக இருந்தனர் அதிரனும், அவனை சேர்ந்தோரும்.
அதன்படியே இருபக்க உறவுகளும் என்று மண்டபம் நிறைந்திருந்தது. முழுக்க முழுக்க சொந்தங்களை கொண்டு திருமணம்.
மீடியாவிற்கு எந்த அழைப்பும் இல்லை. வரவேற்பிற்கு தான் அவர்கள் அனுமதி. திருமண நிகழ்வுகளின் புகைப்படங்கள் தாங்களே அதிகாரபூர்வமாக தருவதாக தெரிவித்துவிட்டார் தேவராஜ்.
பரமசிவமும், சந்திராவும் வயிறெரிந்தனர். இத்தனை பெரிய மண்டபமா? இதென்ன இவ்வளவு ஆடம்பரம் என்று புகை விடாத குறை.
ஆனால வாயை திறந்து கேட்க முடியவில்லை. பல்லவன் ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான்.
அத்தனையும் மாப்பிள்ளை வீட்டின் செலவுகள் என்று. பெண்ணை மட்டும் தந்தால் போதும் என்று சொல்லிவிட்டனர் என சொல்லிவிட்டான்.
அது இன்னுமே காழ்ப்புணர்வை தந்தது. இவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா என நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதற்கே போட்டு பூஜாவை அத்தனை அடி அடித்தார் சந்திரா.
“எல்லாம் உன்னால உன்னால. அன்னைக்கு போனை வச்சுட்டு சும்மா இருந்திருந்தா இதையெல்லாம் பார்க்க வேண்டியதிருக்குமா?…” என்று அத்தனை மொத்தினார்.
பேங்கில் வேலை செய்பவனுக்கு திருமணம் செய்ய பேசியதே தாங்கமுடியாமல் இருக்க, இப்போது உலகமே கொண்டாடும் பாடகன், பெரும் பணத்திரள் கொண்டவன் தேடி வந்திருக்க பார்த்து பார்த்து கண்கள் அவிந்தது.
ஆனால் தேவராஜ் மேகாவிற்கு என்ன செய்ய விரும்புகின்றனரோ அதனை மனதார செய்யும்படி சொல்லிவிட்டார் அமுதினியனிடம்.