கீழே சங்கீத் முடிந்து தன்னறைக்கு சிறிது நேரம் ஓய்விற்கென வந்திருந்தாள் மேகா.
இன்னும் அதிரன் மண்டபத்திற்கு வந்திருக்கவில்லை. வீட்டில் சம்பிரதாயம், சடங்கு, பூஜை என்று அவன் அங்கே இருக்க மேகாவின் விழிகள் நொடிக்கொருதரம் வாசலை தான் பார்த்தது.
சங்கீத் முடியும் வரை கூட வரமுடியவில்லை அதிரனால். மனது சோர்ந்தாலும் வந்தாலும் தன்னால் நேருக்கு நேர் பார்த்துவிட முடியுமா என்று எண்ணி சிரித்துக்கொண்டாள்.
ஆனால் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் நேரடியாக பார்த்துக்கொண்டு தானே இருந்தான் அதிரன்.
அறைக்கு வந்தவளை ஒருமணி நேரம் ஓய்வெடுக்கும்படி சொல்லி சென்றிருக்க மோனிகாவிடம் இருந்து போனை வாங்கிக்கொண்டாள்.
“அண்ணி இதை அப்படியே போட்டோ எடுங்களேன்…” என கையில் இருக்கும் மெஹந்தியை காண்பிக்க அதில் அதிரனின் முகம் அழகிய கோலமாய் அச்சு அசலாய் பதிந்திருந்தது.
“அழகா வந்திருக்கு வரு…” என்றாள் மோனிகா அதனை புகைப்படம் எடுத்தபடி.
“எல்லாம் இருக்கட்டும். முதல்ல போய் இந்த ட்ரெஸ் மாத்திட்டு கொஞ்சம் ரிலாக்ஸா இரு. இன்னும் ஒருமணி நேரம். உனக்கு அலங்காரம் செய்யன்னு வந்திருவாங்க. அப்பறம் நிச்சயம்…”
“ஹ்ம்ம் அண்ணி. வேற யாரும்…”
“யாரும் வரமாட்டாங்க. வேணும்னா நான் கூட இருக்கேன். போய் அஷ்வின் என்ன பன்றான்னு பார்த்துட்டு வரேன்…” மோனிகா சொல்ல,
“இருக்கட்டும் அண்ணி. கொஞ்ச நேரம் தானே?…”
“குட், உன் ப்ரெண்ட்ஸ் யாரையாவது அனுப்பலாம்ன்னா நீ ரெஸ்ட் எடுக்கமாட்டியே? சரி வரேன்…” என்று கிளம்பிவிட்டாள் மோனிகா.
கதவை அடைத்துவிட்டு வந்த மேகா முதலில் எடுத்த போட்டோவை அதிரனுக்கு அனுப்பிவிட்டு தலையலங்காரத்தை கலைத்துவிட்டு முகத்தை கழுவிவிட்டு வந்தமர அதிரன் அழைத்துவிட்டான்.
வேகமாய் போனை எடுத்தவள் பார்வை அதிர்வில் அப்படியே விரிந்தபடி நின்றுவிட்டது.
“மேகா…” அவளின் பேச்சற்ற பார்வையில் சிரித்துவிட்டான் அதிரன்.
“அச்சோ…” என்று அப்படியே கையை கொண்டு கண்ணை மூட அவனின் சிரிப்பு இன்னும் சத்தமாய் கேட்டது.
“நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன்…”
“யாரு? நீ? எனக்கு கால் பண்ணுவியா? வெட்கப்பட்டுட்டே இரு. ஆனா இன்னைக்கு மட்டும் தான்…” என்றவன் ரகசிய சிரிப்பு அவளிடத்தில் ரகசியமாய் வந்து ஒட்டிக்கொண்டது.
“சரி கண்ணை திற. எங்க கையை காமி…” என்றான் அதிரன்.
கண்ணை மூடியபடி தான் கையை காண்பித்தாள் அவனுக்கு. அதை புன்சிரிப்புடன் பார்த்தவன்,
“மேகா கண்ணை திறம்மா. ஷர்ட் போட்டுட்டேன்…” என்றான் மெல்லிய நகைப்புடன்.
அதன் பின்பே அவள் விழி திறந்து பார்த்தாலும் வெட்கம் கொஞ்சமும் குறையவில்லை.
“ஹ்ம்ம், என் முகம் தானே?…” என கேட்டான் கண்கள் சிரிக்க,
“ஆமா, நல்லாயிருக்கா?…”
“பெர்பெக்ட், நைஸ் ட்ராயிங்…” என்றவன்,
“ஆமா அங்க என்ன?…”
“எங்க?…”
“உன் மச்சம் பக்கத்துல. என்னவோ, அதை தட்டிவிடு…” என்றான் சீரியஸான பாவனையில்.
“ஹாங், இதோ…” என்றவள் எழுந்து நின்று தோளை தட்டியவள்,
“எதுவும் இல்லையே?…” என்று மீண்டும் மீண்டும் மச்சத்தின் மேல் கையை அழுத்தமாய் பதித்து தடவி தட்டி பார்க்க,
“மேகா…” ஒட்டுமொத்த உணர்வுக்குவியலாய் அதிரன்.
“இப்ப உன்னை நான் கிஸ் பண்ணிட்டேன்…” என்றதும் அவனை திரும்பி பார்க்க சத்தமின்றி அவனிதழ்கள் குவிந்து விரிந்தது.
குப்பென்று வியர்த்து, சிவந்துபோன முகத்துடன் அவனை பார்க்க அதிரன் இன்னும் பக்கம் வந்தான் திரையில்.
“எங்க உன் உள்ளங்கையை கையை காட்டு…” எனவும் சொல்லியதை செய்தாள்.
“இவ்வளோ நேரம் என்ன பண்ண? உன் கை மச்சத்து மேல. அங்க நான் தானே இருந்தேன்? அப்போ…” என்ற பொழுதே இணைப்பை துண்டித்துவிட்டு முகத்தை மூடியபடி அமர்ந்துவிட்டாள். (Diazepam)
அங்கே அவனின் குரல் மேகா என ஒலிப்பதை போலவே தோன்ற மெல்ல கையை விலக்கியவள் பார்வை இப்போது உள்ளங்கையிலிருந்த அவனின் முகத்தில் பதிய மீண்டும் அத்தனை வெட்கம்.
‘அச்சோ’ என்று கையை கூட அருகே எடுத்து செல்ல முடியவில்லை. பேரவஸ்தை அவளை அலைகழிக்க பொங்கிய உணர்வுகளில் இருந்து வெளிவரமுடியாமல் தவித்து போனாள்.
மீண்டும் அதிரன் அழைக்கவில்லை. ஆனால் குரல்வழி செய்தி மட்டும் அனுப்பியிருந்தான்.
“மண்டபத்துக்கு கிளம்பிட்டேன் மேகமே. வந்து இன்னும் பக்கமா பார்க்கறேன் உன்னை…” என்று அனுப்பியிருக்க அதனை மீண்டும் மீண்டும் கேட்டபடி அமர்ந்திருந்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் அலங்காரம் செய்ய என்று பெண்கள் வந்துவிட கூடவே உறவுகளும், தோழிகளும் கூட.
மேகாவிற்கான உடைகள் எல்லாம் அதிரனே டிஸைனர் வைத்து தயாரித்திருக்க அத்தனை அழகாய் இருந்தது.
“வரு, உன்னை தான் கூப்பிட சொல்றாங்க அண்ணா…” என மோனிகா சொல்லும் பொழுதே,
“வரும்மா அதி கூப்பிடறான் பாரேன்…” என்று சத்தமாய் அழைத்துவிட்டார் சுபத்ரா.
அதிரனை நிமிர்ந்து பார்க்கவே அத்தனை கூச்சம். அதுவும் போனில் அவனின் பரிமாணமும், அனுப்பிய ஓசையில்லா அச்சார தழுவலும் அவளை புரட்டியிருந்தது.
“நிமிர்ந்து பாரு வரு…” என்று மேகா சொல்ல,
“அத்த…” என்று வந்து முறைப்புடன் நின்றான் அஷ்வின்.
“போச்சு, அண்ணன் தான் அனுப்பிருக்காங்க போல. வந்து எப்படி முறைப்பா நிக்கிறான் பாரேன்?…” என்று மோனிகா சொல்ல அஷ்வின் அதிரனை காண்பித்தான் மேகாவிடம்.
‘இவங்க ஏன் இப்படி பன்றாங்க?’ என மேகா நிமிர்ந்து பார்த்ததும் அதற்கு காத்திருந்தவன் தன் விரல்களை அருமை என்பதை போல காண்பித்து தலைசாய்த்து புன்னகைத்தான் அதிரன்.
அத்துடன் தன் உள்ளங்கையை விரித்து அவளுக்கு சுட்டி காண்பித்தவன் தன் கழுத்தை சுற்றி தேய்த்தபடி அவளின் மிரண்ட பார்வையில் இதழ்களுக்குள் புன்னகையை அடக்கினான்.
நிச்சயதார்த்தம் நல்லவிதமாக முடிய அனைவரும் உறங்க செல்ல மேகாவை அறைக்குள் அழைத்து செல்லும் பொழுதே போன் செய்வதாக சைகை காண்பித்துவிட்டான் சென்றான் அதிரன்.
“நான் எடுக்கவே மாட்டேன்…” என்று தானிருந்த அறையில் மொபைலை பார்த்துக்கொண்டே மேகா சொல்லிக்கொண்டிருக்க அதிரன் அழைக்கவில்லை.
மீண்டும் குரல்வழி செய்தி தான் அனுப்பியிருந்தான் அவன். முதல் செய்தியே அவளை தூக்கிவாரிபோட்ட வைத்தது.
“இயர்போன் போட்டுக்கோ மேகா…” என்று தான் சிரிப்புடன் அனுப்பியிருக்க,
“நான் எதுவும் கேட்கலைப்பா. இதுக்கு தான் என்னை உன்னோட தங்க சொன்னியா?…” என்று மோனிகா திரும்பி படுத்து காதை மூடிக்கொள்ள,
“அண்ணி…” என்று சிணுங்கினாள்.
“பாவம் அண்ணன். உன்னை வச்சிட்டு என்ன பண்ண போறாரோ?…” என்றுவேறு சொல்ல,
“நான் தூங்க போறேன்…” என்று அவனுக்கு பதிலுக்கு பேசி அனுப்பிவிட்டு போனை அணைத்துவிட்டாள் மேகா.
இப்போது ஆரம்பித்தான் என்றால் பேச்சில் நிறுத்தமாட்டான். உறங்க கண்ணை மூட அவன் திரையில் செய்த சேஷ்டைகள் தான் கண்முன்னே வர உருண்டு புரண்டு கொண்டு இருந்தாள் மேகா.
“அண்ணி என்னால தூங்க முடியலை…” என மோனிகாவை எழுப்ப,
“நாளைக்கு விடிஞ்சதும் முகூர்த்தம் வரு. உன்னை ரெண்டு மணிக்கெல்லாம் எழுப்ப சொல்லியிருக்காங்க. கொஞ்சம் தூங்கு வரு…” என்றாள் அரை உறக்கத்தில்.
“ஏன்?…” என்ற மோனிகாவிற்கு பதில் சொல்லாமல் முழிக்க,
“நீ வேறன்னு சொல்லியிருந்தாலும் அண்ணா போட்டோவை தான் வரைஞ்சிருப்பாங்க. ஏனா இதை முதல்லையே அண்ணா சூஸ் பண்ணிட்டாங்க…” என்று நமுட்டு சிரிப்புடன் மோனி சொல்லவும்,
“அடப்பாவி…” என்று முணுமுணுத்தாள்.
“லவ் மேரேஜ் பண்ண என்னையே புலம்பவிடற நீ. தூங்கு…” என்று சொல்லி மோனிகா உறங்கிவிட வெகுநேரம் சென்றே மேகா உறங்க ஆரம்பித்திருக்க சரியாய் இரண்டு மணிக்கெல்லாம் எழுப்பப்பட்டாள்.
அத்தனை உறக்கத்துடனே குளித்து கிளம்பி வந்து அலங்காரத்திற்கு வந்து அமர்ந்தாள்.
இப்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டது. பயத்துடனே ஒவ்வொரு நேரம் கழிவதையும் கவனித்துக்கொண்டு இருந்தாள்.
இனி தான் அமுதினியனின் மகள் மட்டுமல்ல. தன் குடும்பத்தை விட்டு வேறிடம் செல்ல போகிறோம். நினைவே நெஞ்சடைத்தது.
அமைதியாய் தயாரானாள் மேகா. பார்ப்பவர்களிடம் சின்ன சிரிப்புடன் தலையசைத்து பேசிக்கொண்டிருக்க அதோ இதொவென்று முகூர்த்த நேரம் நெருங்கியது.
கெட்டிமேள சத்தம் பெரிதாய் கேட்க உள்ளங்கால்கள் எல்லாம் நடக்கவே முடியாதளவிற்கு வியர்த்து போனது.
“வரு அண்ணா மேடைக்கு வந்தாச்சு…” என்று மோனி தகவல் கூறினாள்.
“அம்மாவையும், அப்பாவையும் பார்க்கனும் அண்ணி. கொஞ்சம் பயமா இருக்கு…”
“ஏய் என்ன இது? கண்ணெல்லாம் கலங்கிட்டு. அத்தையும் மாமாவும் எவ்வளோ சந்தோஷமா அங்க நிக்கிறாங்க தெரியுமா? நீ அழறது தெரிஞ்சா வருத்தப்படுவாங்கடா…”
பெரிதாய் அவளை சமாளித்து பேசி தேற்றி மேடைக்கு அழைத்து வந்தாள் மோனிகா.
பல்லவனும் அருகே வந்துவிட அவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வந்து அதிரன் அருகே அமரும் முன் சபையினரை வணங்கிவிட்டு அமர்ந்தாள்.
வான்மேகத்தின் நிறத்தில் புடவை, அதற்கெற்றாற்போல் அணிகலன்கள். அதிரனால் பார்வையை எடுக்கமுடியவில்லை.
புன்னகையுடன் அவள் தன்னருகே வந்து அமரவும் திரும்பி தலைசாய்த்து பார்த்தவன்,
“சில் மேகா…” என்றான் குளுமையாக.
தலையசைத்து அவனின் பேச்சை ஆமோதிப்பதாய் சொல்லி லேசாய் புன்னகைக்க இருவரும் எதிர்பார்த்த அந்த தருணம் வந்தேவிட்டது.
மணிமகுடத்தின் மேல் வீற்றிருக்கும் மரகதமாய் திருமாங்கல்யம் சபையை சுற்றி உற்றார், சுற்றார் என அனேகரது ஆசிர்வாதத்துடன் அதிரனின் கையில் வந்து சேர்ந்தது அவனின் மேகத்தை போலவே.