மேகாவால் இன்னும் நம்ப முடியவில்லை. மீண்டும் தன் கழுத்தில் தவழும் திருமாங்கல்யத்தின் மீதே பார்வையை வைத்திருக்க அவளின் கழுத்தை சுற்றி நெற்றிவகிட்டில் குங்குமத்தை அழுத்தமாய் வைத்தான் அதிரன்.
“மேகா…” என்ற மெல்லிய அழைப்பு அவனை நோக்கி திரும்ப செய்ய ஒரு சிரிப்புடன் கண் சிமிட்டியவன்,
“என்னவாம் மேகத்துக்கு? கண்ணெல்லாம் கலங்கிருக்கு? நான் இருக்கேனில்லையா மேகா?…” என்றான் ஆத்மார்த்தமான பார்வையுடன்.
வார்த்தைகளாலும், பார்வைகளாலும், புன்னகையினாலும் கூட தனது காதலை தெரிவித்துவிடுகிறான் அதிரன்.
ஆனால் மேகாவால் அப்படி வெளிப்படுத்தவும் முடியாத அளவிற்கான நேசம் அடிமனதிலேயே பொங்கி அமிழ்ந்துகொண்டு இருந்தது.
அதனை வார்த்தைகளை கொண்டு வடிக்கவும் முடியவில்லை. வாக்கியங்களால் நிரப்பவும் முடியவில்லை.
ஒருவிதமாய் நெஞ்சைமுட்டும் சந்தோஷமும், அதன் அழுத்தத்தில் அழுகையும் பொங்க உதட்டை மடித்து கடித்தபடி தன்னை கட்டுப்படுத்தினாள்.
“மேகா…” அதிரனின் அழைப்பில் மீண்டும் பார்க்க விழிகளில் மெல்லிய நீர்படலம்.
அவளின் தோளை சுற்றி ஆதரவாக அரவணைத்து விடுவித்தவனின் நெகிழ்வில் சற்று நிதானித்து தலையசைத்தாள் மேகா.
“எல்லாரும் நம்மளை தான் பார்க்காங்க…” என்றதும் தலையசைத்தாள்.
அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் ஆரம்பமாகியது. பெரியோர்கள் வரிசையாய் வந்து ஆசிர்வதித்து நகர்ந்தார்கள்.
அம்மி மிதித்து அவள் பாத விரலில் மெட்டியை அணிவித்துவிட்டு அதிரன் நிமிர அந்த நிகழ்வு அழகாய் படமாகியது.
சம்பிரதாயங்கள் குறையின்றி பரிபூரணமாய் நிறைவேறி மண்டபத்தில் இருந்து முதலில் மேகாவின் இல்லம் தான் புறப்பட்டனர் மணமக்கள்.
அங்கே அரைமணி நேரம் போல இருந்துவிட்டு பால் பழம் சாப்பிட்டுவிட்டு கிளம்பி அதிரன் இல்லம் வந்து சேர்ந்தனர்.
முதன் முதலில் அதிரனின் இல்லம் வருகிறாள். அதற்கு முன் மேகாவின் வீட்டிலிருப்போர் ஏற்கனவே பந்தல் கால் ஊன்றும் அன்று வந்துவிட்டு தான் சென்றிருந்தனர்.
ஆனால் முதல் முதலாக வந்தவள் முகத்தில் மெலிதான மிரட்சி தெரிய எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
தங்கள் வீடும் பெரிது தான். சொல்ல போனால் தங்கள் சொந்தங்களிலேயே அத்தனை பெரிதாய் ஆடம்பரமான வீடு தங்களது தான்.
ஆனால் அதிரனின் இல்லம் அவளின் கற்பனைக்கு எட்டாததாக பிரமாண்டமாக இருந்தது.
மிகப்பெரிய இசையமைப்பாளரின் மருமகள். முதன்மை நடிகனும், பாடகனுமான புகழ்பெற்றவனின் மனைவி.
லேசாய் நடுக்கம் பிறக்க இந்த நொடி என்னவோ பூதாகாரமாக தோன்றியது மனதிற்குள் அவளறியாமல்.
அதுநாள் வரை அதிரன், அவனின் காதல், திருமணம் இப்படியான எண்ணங்களில் இருந்தவளின் மனதை புதுவித தோற்றம் ஆக்கிரமித்தது.
கும்பிட்டு முடித்து வணங்கிவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தனர் மணமக்கள். சிறிது நேரத்தில் செல்வம் மற்றவர்களை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
அமுதனும் இல்லை. ஏதேனும் ஏடாகூடமாக பேசிவிட்டால் இங்கே நிலைமை மோசமாகிவிடும் என்பதால் பல்லவனிடம் சொல்ல,
“ஓகே பெரியப்பா பார்த்துக்கோங்க. நீங்க முன்னாடி கிளம்புங்க…” என சொல்லியிருந்தான்.
அவனால் அப்போதே கிளம்ப முடியாத சூழ்நிலை. ஆனாலும் தந்தையால் தனியாக சமாளிக்க முடியாதே?
சிறிது நேரம் இருந்துவிட்டு தானும் கிளம்ப பார்த்தான் பல்லவன். அதிரனை தனியே பிடிக்க பார்க்க அவனுடன் அவனின் உறவுகள் பேசிக்கொண்டிருக்க இடையிடையே போன் வேறு.
முக்கியமானவர்களிடமிருந்து வாழ்த்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அதிரனால் அதற்கு நேரம் கொடுக்காமல் இருக்க முடியவில்லை.
“என்னப்பா? கிளம்பிட்ட மாதிரி இருக்கே?…” பல்லவனின் பரபரப்பில் தேவராஜ் வந்து கேட்க,
“ஹ்ம்ம், இந்த செண்டிமெண்ட் எல்லாம் எனக்கு தெரியாதுப்பா. என் அண்ணன் இப்படியெல்லாம் அனுப்பவே இல்லை என்னை. அதனால ஒன்னும் தெரியலை…” என்று இலகுவாக தோளை குலுக்கியவள்,
“முதல்ல உங்க தங்கச்சிட்ட சொன்னீங்களா? ஏற்கனவே மந்திரிச்சு விட்டமாதிரி இருக்கா அவ…” என்று மேகாவை காண்பிக்க அதிரனுமே பார்த்தான்.
அவ்வளவு நேரம் அதிரனின் சொந்தங்களுக்கு நடுவே அவன் மேகாவின் அருகே சென்று அமர முடியாமல் போன், மற்ற ஆண்கள் என்று இருந்தவன் அவளை பார்த்ததும் மனம் கனிந்தது.
அனைவரும் மேகாவிடம் மாற்றி மாற்றி ஆளுக்கொரு கேள்வியாய் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ஒவ்வொன்றிற்கும் ஒற்றை வார்த்தையிலும், தலையசைப்பிலுமே பதில் சொல்லிக்கொண்டிருந்தவள் முகம் பரிதவிப்புடன் அலைபாய்ந்தது.
அந்த பேச்சுக்களில் அவ்விடத்தில் தன்னால் பொருந்தி போகமுடியாத ஒரு தோற்றம் கண்முன்னே எழுவதை தவிர்க்க முடியவில்லை.