மேகா விழித்த நேரம் அதிரன் இல்லை அறையில். நேரத்தை பார்க்க விடிந்துவிட காத்திருந்தான் பகலவன்.
இன்னும் ஆறு மணியாகியிருக்கவில்லை. அத்தனை சொல்லியிருந்தார் மலர். விடிவதற்குள் எழுந்து குளித்துவிட வேண்டும் என்று.
இப்போது தனக்கு முன்பே அதிரன் இல்லாதிருக்க மலர் சொல்லியதை நினைக்கையில் சற்று சங்கடமாக இருந்தது.
“மாப்பிள்ளை எந்திக்கமுன்ன எழுந்து குளிச்சிட்டு வரு. அவங்க பழக்கவழக்கம் எப்படியோ? ஆனா நம்ம வழக்கத்தை மாத்த முடியாதுடா. என்னடா இது முதல் நாளே இப்படின்னு யாரும் நினைக்க கூடாது…” என்றிருந்தார்.
“எப்பவும் நம்ம வீட்டுல எழுந்திக்கறத போல இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் எழுந்துக்கோ வரும்மா. தலையை நல்லா காய வச்சிருடா. ஈரம் பிடிச்சா உனக்கு சேராது. இங்க வேற வரனும் நீங்க. முதல் நாளே முடியலைன்னு சொல்லிட கூடாது பார்த்துக்கோ…”
மலர் பார்த்து பார்த்து அழுத்தி சொல்லியிருந்தாலும் அவரின் பதட்டத்தை மேகாவால் புரிந்துகொள்ள முடிந்தது.
எழுந்தமர்ந்தவளுக்கு அத்தனை சோர்வு. முதல்நாள் அதிகாலை எழுந்ததும், கொஞ்சமும் ஓய்வின்றி இருந்தது மீண்டும் தூக்கத்திற்கு தான் தள்ளியது.
உறங்கும் பொழுது கிட்டத்தட்ட விடியலை நெருங்கியிருந்தனர் இருவரும். அதன் பின்னர் அதிரன் எப்போது உறங்கினான என்று கூட தெரியவில்லை.
இப்போது அதிரன் அருகிலில்லாமல் போக வந்த தூக்கமும் சென்றது. சொல்லிக்கொள்ளாமல் எங்கே சென்றிருப்பான் என தோன்ற எழுந்துவிட்டாள்.
தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு வர இன்னும் அதிரன் வந்திருக்கவில்லை.
பால்கனியை திறந்து பார்க்க அப்போது தான் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் பூமியை நெருங்கிக்கொண்டு இருந்தது.
தலையை உலர்த்தியபடி வேடிக்கை பார்த்தவளுக்கு சூடாக ஏதேனும் குடித்தால் பரவாயில்லை என தோன்ற தனியே கீழே செல்ல தோன்றாமல் தண்ணீரை எடுத்து குடித்தவள் அங்கிருந்த ஒற்றை இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.
இந்த நேரம் தன் வீட்டில் எழுந்திருப்பார்கள். ஆனால் அழைக்க முடியாது. அம்மாவை தவிர்த்து யாரேனும் எடுத்தால்?
கேள்விகள் எப்படி வருமோ? நிச்சயம் கேட்காமல் இருக்க போவதில்லை. நினைக்கையில் முகம் சிவந்தது.
நேரத்தை பார்க்க ஐந்து நாற்பது என்றது. அப்படியே சாய்ந்தவள் கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணயர்ந்தாள் மீண்டும்.
அதிரன் கதவை திறந்துகொண்டு உள்ளே வர மேகா இருக்கையில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.
“என்ன இங்க தூங்கறா?…” என்றபடி தானும் சென்று குளியல் போட்டுவிட்டு அவள் அருகே வந்தவன் உறங்குவதை பார்த்து இடுப்பில் கை வைத்து அப்படியே நின்றான் புன்னகையுடன்.
மூடிய இமைகள் சிவந்து போயிருந்தது மேகாவிற்கு. அவளின் விரிந்த கூந்தலை ஒதுக்கியவன் மெல்ல தூக்க போக அந்த தொடுகையில் பதறி விழித்தாள்.
“ஹேய் மேகா நான் தான், சில்…” என்றதும் வேகமாய் எழுந்தவள் மீண்டும் அங்கேயே அமர,
“என்னடா இப்பவே எழுந்து குளிச்சிட்ட? அதுவும் சிட்டர்லையே தூக்கம் மேகத்துக்கு?…” தன் கால் முட்டியில் கைகளை ஊன்றியபடி குனிந்து கேட்டான் அதிரன்.
“இல்லை தூக்கம் வரலை, அதான் எந்திச்சு குளிச்சுட்டேன்…” வாய் அவனுக்கு பதிலை சொன்னாலும் கண்கள் ஒத்துழைக்கவில்லை.
மீண்டும் சொருகிக்கொண்டு வந்தது உறக்கம். நன்றாக நான்கைந்து மணிநேரம் உறங்கினால் என்னவென்று தோன்றியது.
“ ஓகே, வந்து பெட்ல படுத்துக்கோ. தூங்கு…” என்றவன் அவளின் கை பிடித்து எழுப்ப,
“ஒன்னும் அவசரமில்லை. நல்லா தூங்கு…” என்று சொல்லிவிட்டு அவன் நகர கையை பிடித்து எழுந்தமர்ந்துவிட்டாள்.
“எங்க போறீங்க? ஆமா, எங்க போனீங்க? கீழேயா?…”
“இல்லையே? எங்கயும் போகலைடாம்மா. நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமேன்னு. பாரு…” என்று அவளின் மறுபக்கம் வந்து படுத்தவன் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு,
“உன்னை விட்டு எங்க போக போறேன் மேகா?…”
“ஆனா போனீங்களே? நான் முழிக்கும் போது இல்லை…”
“தேடினியா மேகா?…” என்றான் அவள் முகம் நிமிர்த்தி.
“ஹ்ம்ம், சொல்லாம கிளம்பிட்டீங்களோன்னு…” என்றதும் அவள் விழிகளில் முத்தமிட்டவன்,
“தூக்கம் வரலை. அதான் கார்டன்ல ஒரு வாக். தூங்கும் உன்னை எப்படி எழுப்பி சொல்ல? எழுப்பினா தூங்க விடுவேனோன்னு தோணுச்சு. அதான் சொல்லாம கிளம்பிட்டேன்…” என கூறவும் அவன் முகம் பார்த்திருந்தவள் முகத்தை தாழ்த்திக்கொண்டாள்.
“சரி நீ தூங்கு…”
“நீங்க?…”
“நானும் தான். வேற என்ன பண்ண?…” என சிரிக்கவும் கண்ணை மூடியவள் அடுத்தடுத்த பேச்சுக்களில் நிஜமாகவே தூங்கி போக அதிரனால் எழுந்துகொள்ள முடியவில்லை.
“எவ்வளோன்னு சொல்லு மேகா, நான் தரேன்…” அதிரன் அவளின் பேச்சுக்களுக்கெல்லாம் கிண்டலாகவே பதில் சொல்லியபடி அவளின் இடையோடு சில்மிஷம் செய்ய மேகாவிற்கு சுத்தமாய் முடியவில்லை.
இந்த தொடுகை அடுத்து எங்கே முடியுமோ என்று நினைத்தபடி நேரமாகிவிடும் என அவஸ்தையுடன் நெளிந்தாள்.
“சேரில உன்னை அதிகமா பார்த்ததில்லை மேகா. அப்படியே அள்ளுற பொண்ணே…” என்றான் ரசனையாய்.
“ஹ்ம்ம்…”
“முதல் தடவையும் உன்னை சேரில தான் பார்த்தேன். அடுத்து நம்ம கல்யாணத்தப்போ. அடுத்து இப்போ…” என்று கணக்கிட்டவன் தன் விரல்கொண்டும் கணக்கிடுவதை மேகாவால் உணரமுடிந்தது.
மூச்சை இழுத்துப்பிடித்தபடி நின்றாள் மேகா. அவனின் பேச்சுக்களில் லயித்து, சரிந்து, மயங்கி இப்படி பலவேறு பரிமாணங்கள் மனதிற்குள் மாற்றி மாற்றி உருவமெடுத்தது அவனின் மேகம்.
“நேத்து வீணை எப்படி வாசிச்சேன்னு சொல்லவே இல்லை?…” அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளின் மச்சத்தை தொட்டு தொட்டு வந்தது.
“வீணையா? ஹ்ம்ம்…”
“வீணை தான். ஞாபகமில்லையோ? அப்ப வா…” என நொடியில் கைகளில் அவளை ஏந்திக்கொள்ள,
“அச்சோ விடுங்க, நல்லா வாசிச்சீங்க, போதுமா?…” என்று துள்ளி இறங்கிவிட்டாள்.
இலகுவான பிடியாக இருக்க உடனே அவனின் வசத்திலிருந்து இறங்கினாலும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்துவிட்டான் அதிரன்.
“வீணையை தானே சொல்ற? நான் கரெக்ட்டா புரிஞ்சிக்கிட்டேனா மேகா?…” என்றவனின் ரகசிய சிரிப்பு மேகாவை இம்சித்தது.
“ஆமா, விடுங்களேன். அதான் சொல்லிட்டேனே?…”
“இதென்ன அப்ரிஷேஷன் பொண்ணே?…” என சத்தமாய் சிரித்தவன்,
“ஃபைனலி மேகா நைட்ல அதி சொல்லியாச்சு…” என்றான் விஷமத்துடன்.
“அச்சோ ப்ளீஸ்…”
“என்ன ப்ளீஸ்? சொல்லு சொல்லு. இப்ப அதி சொல்லு…” என்றவன்,
“ம்ஹூம் இல்லை. இல்லை…”
“அதுவும் அதி கூட இல்லை. அதிரா. ஸ்பெஷல் நைட்ல ஸ்பெஷல் கிப்ட் மேகா. இதுவரை யாரும் அதிரான்னு கூப்பிட்டதில்லை…”