என்னவோ மகனை பார்த்து பூரித்தவர் கண்கள் கலங்க உணர்ச்சிவசப்பட்டிருந்தார் சுபத்ரா.
எப்போதும் சிரித்த முகம் தான் பிள்ளை. எதையும் காட்டிக்கொள்ளமாட்டான். அத்தனை நிதானம்.
ஆனால் இத்தனை வெளிப்படையாக அவன் முகம் ஒளிர்ந்தது கண்டு அவருக்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
“ம்மா என்ன இது? இவ்வளோ எக்சைட் ஆகறீங்க?…” அதிரன் அவரை அணைத்துக்கொண்டான்.
“நீ சும்மா இரு அதி…” என்றவர் பூக்களை எடுத்து உதிர்த்து கொண்டுவந்து திசை பார்த்து நின்றார்.
“இப்ப விழுங்க. வாம்மா…” என்றவர் இருவரும் காலில் விழுந்து எழுந்ததும்,
“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும். பதினாறையும் பிள்ளைகளா பெத்து குடுத்துரு. நான் பார்த்துக்கறேன்…” என்று வேறு சொல்ல அதிரன் சத்தமாய் சிரித்துவிட்டான்.
“ம்மா….” என ஒற்றை கையை முகத்தில் மூட்டி திறந்து பார்த்து சிரித்தான்.
“என்னமோ போ நீ. எனக்கு கேட்கனும்னு தோணுச்சு. நான் கேட்டேன்…” என்றவர்,
“என்னங்க, சரிதானே? இல்லையா?…” என்று தேவராஜிடமும் கேட்டார்.
“நீ சொன்னா சரியா தான் இருக்கும்…” தேவராஜும் சிரித்தபடி மனைவிக்கு ஒப்புதல் வழங்க சுபத்ராவின் முகத்தில் ஆயிரம் மத்தாப்பூக்கள்.
இதனை பார்த்தபடி மேகா புன்னகையுடன் இருக்க அவளருகே வந்து உச்சியில் முத்தமிட்டவர்,
“அன்னைக்கொரு நாள் என் மகன் ரொம்ப கஷ்டத்தோட வீட்டுக்கு வந்தான். உங்கப்பா ஷூட்டிங்ல வச்சு பார்த்தன்னைக்கு. என்னால தாங்கவே முடியலம்மா. என்ன பெரிய பொண்ணு, தவமா இருக்கனும்னு கோவமா கேட்டேன் இவர்கிட்ட…” என தேவராஜை காண்பித்துவிட்டு,
“இவர் சொன்னார், உன் பிள்ளை தவம் தான் இருக்கன்னு. நிஜம் தான்ம்மா. இப்ப என் மகன் முகத்துல இந்த சந்தோஷம். நிஜந்தான?…” சுபத்ரா சிரித்துக்கொண்டே சொன்னாலும் கண்ணில் நீர் ததும்பி கொட்டிவிட்டது.
“ம்மா சந்தோஷம்ன்னு சொல்லிட்டு அழுதுட்டு இருக்கீங்க?…” என அதிரன் அவரின் கண்ணீரை துடைக்க,
“இல்லை நான் அழலையே…” கண்ணை துடைத்து மேகா புன்னகைக்க அதே நேரம் அதையே சொல்லி சுபத்ராவும் புன்னகைத்தார்.
“மாமா…” என்று அஷ்வின் அதிரனின் காலை கட்டிக்கொள்ள,
“சேம்ப் இதுக்கு போட்டியா?…” அதிரன் சிரிக்க,
“தூக்கு…” என்றான் இரு கையையும் உயர்த்தி.
“சோ ஸ்வீட் செல்லக்குட்டி…” என தூக்கிக்கொண்டான்.
“உங்க ரெண்டுபேருக்கும் அவன் தான் போட்டி. பொறுக்காது அவனை தவிர யாரும் யாரையும் கொஞ்சினா…” என மோனிகா.
மோனிகா சொல்ல தாயை முறைத்துவிட்டு அஷ்வின் அதிரனின் கன்னத்தில் முத்தமிட்டு கழுத்தை இரு கைகளாலும் கட்டி தோளில் சாய்ந்துகொண்டான்.
“சரித்தான்…” மோனிகா தலையசைத்து சிரிக்க,
“வாங்க சாப்பிடுவோம்…” என்று சுபத்ரா நகர்ந்தார்.
“உன்னை கொஞ்சறதை இவன் எப்போ பார்த்தான்? அவ்வளோ பப்ளிக்கா ஒன்னும் பண்ணலையே மேகா…” என்று மேகாவினருகே சொல்ல,
“உங்களோட…” என முன்னே ஓடிவிட்டாள் மேகா.
சாப்பிட்டுக்கொண்டே சுபத்ரா பல்லவன் வரவும் அவனுடன் மேகாவின் வீட்டிற்கு சென்றுவருமாறு கூறினார்.
உறவுகள் அதிகம் இருப்பதனால் அங்கே அதிரனை தங்க வைத்து சங்கடப்படுத்த வேண்டாமென்று முதலிலேயே பேசி முடிவெடுத்துவிட்டனர்.
“நான் ஸ்டே பன்றேன்னு சொல்லிட்டேன். இதுல என்ன ஆக போகுது? மேனேஜ் பண்ணிக்கலாம்…” அதிரன் சொல்ல பல்லவனுக்கும், செல்வத்திற்கும் மனதில்லை. அமுதன் அத்தனை யோசித்தார்.
“கண்டிப்பா நீங்க வந்து தங்கனும். ஆனா இப்ப நீங்க தங்கினா சிரமமாகிடும் மாப்பிள்ளை…” என பல்லவன் எடுத்து சொல்லவும் அதிரனும் சரி என்றுவிட்டான்.
பல்லவனுக்கு தெரியும் தன் சொந்தங்கள் அதிரன் வீட்டில் இருந்தால் வெறுமனே இருக்கமாட்டார்கள் என்று.
திருமணத்திற்கே அவர்களை வரவழைக்கிறேன், இவர்களுக்கு சொல்கிறேன் என்று தங்களை எத்தனை இக்கட்டில் இழுப்பதை போல சங்கடப்படுத்தி இருந்தார்கள் என்று.
யோசிக்காமல் யாரையும் வர சொல்லி அதிரனுடன் அறிமுகப்படுத்துகிறேன் என எதையாவது இழுத்துவிட கூடும் என்று தெரியும்.
அதனால் ஒரே நாளில் மறுவீடு வந்துவிட்டு செல்வதென்று முடிவாகி இருந்தது இருவீட்டாரின் யோசனைப்படி.
பல்லவனும் செல்வமும் அவரின் மனைவியும் வந்துவிட்டனர் புதுமண தம்பதிகளை அழைத்து செல்வதற்கென்று.
மேகாவின் இல்லம் வரவும் இருவருக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட அவனின் பாதுகாவலர்கள் வீட்டின் முன்னால் நின்றுகொண்டனர்.
மொத்த சொந்தமும் அவனை பேச்சில் பிடித்துக்கொள்ள மேகா எங்கோ சென்று நிற்க வேண்டியதானது.
“ஒரு போட்டோ, எங்களோட…” என கேட்டு நிற்க அதிரன் சிரித்துக்கொண்டே அனைவருடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டாலும் மேகாவை தன் பார்வையில் தான் நிறுத்தியிருந்தான்.
“அவர் இங்க தானே இருப்பார்? அப்பறம் எடுக்கலாம். முதல்ல லஞ்ச் முடிக்கட்டும்…” என்று சொல்லவும் தான் அதிரன் ஆசுவாசமானான்.
“மாப்பிள்ளை…” என அமுதன் தர்மசங்கடத்துடன் பார்க்க,
“இருக்கட்டும் மாமா…” என சொல்லி சாப்பிட சென்றான்.
இன்னும் வீட்டை சுற்றி பார்க்கவில்லை அவன். அப்போதைக்கு முடியவும் முடியாது என்பதால் சிறிது நேரம் ஹாலில் இருந்துவிட்டு சாப்பிட சென்றுவிட்டான் மேகாவுடன்.
அவர்கள் செல்லவும் செல்வம் அனைவரையும் ஒருபிடி பிடித்துவிட்டார் மாடிக்கு அழைத்து.
“இப்படி செஞ்சா இப்பவே கிளம்பிருவார் அவர். என்ன நினைப்பார் நம்மளையும், நம்ம குடும்பத்தையும்…” என்று பிடித்து சத்தம் போட,
“அதான, இஷ்டத்துக்கு போய் பல்ல கட்டிட்டு நிக்கறீங்க? அவனும் மனுஷன் தான?…” பரமசிவம் தன் பங்கிற்கு வயிற்றெரிச்சலை கொட்டினார்.
செல்வத்தின் பேச்சிற்கு கேட்டனரோ இல்லையோ, பரமசிவம் பேச்சை கேட்டு வாயை மூடிக்கொண்டனர்.
யோசிக்காமல் அதிரனின் முன்னாலும், அனைவரின் முன்னாலும் வார்த்தையை விட்டுவிடுவார். இன்ன வார்த்தை என்றில்லாமல்.
அதனால் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்கள் அனைவருமே. மனதிற்குள் அத்தனை வசைபாடு செல்வத்திற்கு.