“அதுசரி, உன் அண்ணா நாங்க லவ் பண்ணும் போதே எனக்கு இதெல்லாம் பிடிக்கும்ன்னு சொல்லி, என்கிட்டயும் கேட்டு அவரும் தெரிஞ்சிக்கிட்டார்…” என்று ரகசியமாக சொல்லியவள்,
“அவருக்கு பிடிச்சதை எழுதி குடுக்காத குறை தான். மனப்பாடமெல்லாம் பண்ணேன். அப்பத்தான் ஞாபகம் இருக்குமாம்…” என சொல்லி சிரிக்கவும் மேகாவிற்கும் புன்னகை.
திருமணம் முடிந்து மோனிகா வந்த புதிதில் அத்தனை அலப்பறை பல்லவன். என் மனைவிக்கு என்னை பற்றி எல்லாம் தெரியும் என்று மலரிடம் பீற்றிக்கொண்டான்.
“ஆனா அண்ணா பரவாயில்லை, எதையும் உன்கிட்ட திணிக்க நினைக்கலை…” என பேசிக்கொண்டிருக்க பூஜா வந்துவிட்டாள்.
வந்ததில் இருந்து மேகா பூஜாவை பார்க்கவே இல்லை. திருமணத்தன்றும் சரி சந்திராவின் பார்வையிலேயே தான் பூஜா இருந்தாள்.
என்னவோ மகளை திட்டுகிறார் என அப்பட்டமாக தெரிந்தது அனைவருக்கும். எப்போதும் சந்திரா அப்படித்தானே என்பதால் கண்டுகொள்ளவில்லை.
“வா பூஜா, என்ன என்கிட்டே பேசவே இல்லை நீ?…” என கேட்க,
“சும்மா அதான். நீங்க பிசியா இருப்பீங்கன்னு…” பூஜா சொல்ல அவள் முகத்தில் கவலையும், பயமும்.
“என்ன பூஜா? இந்த கல்யாணத்துக்கு காரணமே நீ தான். முன்ன நின்னிருக்க வேண்டாமா நீ? போட்டோஸ் எடுத்து தள்ளுவன்னு பார்த்தா உங்கம்மா முன்னாடி அசையாம உக்கார்ந்துட்ட?…” மோனிகா கிண்டலாய் பேச,
“சும்மா இருங்கக்கா, எங்கம்மா என்னை வச்சு செஞ்சிடுச்சு…” என சோகமாக.
“உங்கம்மா யாரைத்தான் வச்சு செய்யலை? கொஞ்ச நேரத்துல இந்த வடை கேசரியையும் எப்படி வச்சு செய்ய போறாங்கன்னு பாரு…” அதற்கும் மோனிகா கிண்டல் தான் பேசினாள்.
“அக்கா ஏன் க்கா நீங்க வேற?…”
“நான் வேறன்னா இதான் சாக்குன்னு உங்கம்மா என் புருஷனுக்கு வேற பொண்ணை பார்த்தாலும் பார்த்திடுவாங்க., ஆமா எங்க உங்கம்மா?…” என்றாள் அல்வாவை பதம் பார்த்து கிளறியபடி.
“தூங்கறாங்க. அதான் நான் எந்திச்சு வந்தேன்…” என்றவள் மேகாவை பார்க்க,
“என் மேல இன்னும் கோவமா பூஜா? அன்னைக்கு அடிச்சதுல…” மேகா கேட்க,
“அதெல்லாம் இல்லண்ணி, அம்மா தான் பேச கூடாதுன்னு சொல்லியிருக்காங்க…” என்றதும் மேகா மௌனமாக,
“உங்கம்மாவுக்கு காரியம்ன்னா மட்டும் தான் வாய் திறக்கனும். சரி, சூடா அல்வா சாப்பிடறியா நீ?…” என கேட்க நெய் மிதக்க அசோகா அல்வா எச்சிலூறியது.
“ஹ்ம்ம்…” என்றாள் உடனே பூஜாவும்.
“நீ என்ன இங்க வேடிக்கை? டீயை எடுத்துட்டு போ…” மோனிகா மேகாவிடம் சொல்ல,
“யாருக்கு?…” என்றாள் பூஜா.
அவளரிந்து அவர்கள் வீட்டில் இதை யாரும் குடித்ததில்லை என்று தோன்றவும் மேகாவிடம் கேட்க,
“உன் அண்ணனுக்கு தான். ப்ளாக் டீ கேட்டாங்க…” என்று கப்பில் ஊற்றி எடுத்து சொல்ல பூஜாவின் முகம் மலர்ந்துவிட்டது.
அதுவும் அதிரனை அண்ணன் என்று மேகா சொல்லி சென்றதில் மகிழ்ந்து போனாள்.
“ஓகே நீ சாப்பிடு, நான் குடுத்துட்டு வரேன்….” என்று சொல்லி செல்லவும் பூஜாவிற்கு அதிரனுடன் பேச கொள்ளை ஆசை.
அம்மாவை எண்ணி அமைதியாய் இருந்தவள் இப்போது சந்திராவும் உறக்கத்தில் இருக்க தெரியவா போகிறதென நினைத்து மேகாவை தொடர போக மோனிகா பிடித்து நிறுத்திவிட்டாள் பேச்சில்.
மோனிகா கவனித்துக்கொண்டு தான் இருந்தால் அதிரனுடன் பேச பூஜா ஆசைப்பட சந்திரா அதற்கு அனுமதிக்கவில்லை என்று.
இப்போது விட்டால் பின்னாடியே சென்று பேசுகிறேன் என அவர்களுக்கிடையே சென்றமர்ந்து எதையேனும் உளறி வைப்பாள் என பிடித்து நிறுத்திவிட்டாள்.