“சூர்…” என்று அதிரனும் எழுந்துகொள்ள டீ கப்பை கையில் எடுத்துக்கொண்டவள்,
“எல்லாரும் தூங்கறாங்க. அதனால சும்மா வீட்டை பார்த்துட்டு வரலாம்…” என்று அவனுடன் பேசியபடி ஒவ்வொரு இடமாய் காண்பித்தாள்.
பேச்சுக்களோடு மாடிக்கு செல்ல இன்னும் வெயில் குறையவில்லை. அப்படியே மொட்டைமாடிக்கு வர ஓரத்தில் ஓரிடத்தில் பின்னால் வீட்டில் இருக்கும் தென்னை மரத்தின் நிழல் தெரிய மெல்ல நடந்தான் அதிரன்.
“ஹ்ம்ம் வெயிலா இருந்தாலும் ரொம்ப அமைதியா இருக்கு. இந்த ஏரியாவே ரொம்ப நல்லா இருக்கு….” என்றான் கையை வீசியபடி நடந்துகொண்டே.
“உங்களுக்கு நிஜமா பிடிச்சிருக்கா?…”
“ஏன்? ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லபோனா சில மாசங்களுக்கு முன்னவே பிடிச்சிருச்சு….”
“வந்திருக்கீங்களா அப்போவே?…”
“சென்னையில தெரியாத இடமில்லை. இந்த இடம் தெரிஞ்சதும் இன்னும் அதிகமா பிடிச்சது…” என்றான் சுவற்றில் சாய்ந்து நின்று.
தண்ணீர் தொட்டியின் படிக்கட்டின் அருகில் இருக்க அதனை பிடித்தபடி நின்றவள் அதிரன் தன்னை பார்த்ததில் இருந்தென்று சொல்கிறானோ என இன்னும் ஆழமாய் பார்க்க,
“எக்ஸாக்ட்லி மேகா…” என்றான் தலையசைத்து.
இருவரும் பேசிக்கொண்டிருக்க அதிரனின் மொபைல் சப்தம் எழுப்பவும் எடுத்து பார்த்தவன் தவிர்க்க முடியாத அழைப்பை கண்டு,
“பேசிட்டு வரேன்…” என அட்டன் செய்தான்.
மேகாவும் பேசி முடிக்கட்டும் என்று அங்கிருந்து வேடிக்கை பார்க்க கையில் கப் இருக்கவும் தலையில் அடித்துக்கொண்டாள்.
“கப்பை வச்சிட்டு வரேன்…” என சத்தமில்லாமல் வாயசைத்து சொல்லி கீழே செல்வதாக கூற அவளின் கன்னம் கிள்ளி தன்னிதழில் ஒற்றிக்கொண்டவன் தலையசைத்தான் செல்லுமாறு.
மேகாவும் அவனின் செயலில் ஒரு சிரிப்புடன் கீழே செல்ல அவள் சென்ற அடுத்த நிமிடம் சிட்டாய் பறந்து வந்தாள் பூஜா.
மேகா கப்பை கொண்டு வரவும் மோனிகாவின் கேள்வியில் மாடியில் அதிரன் இருப்பதாக தெரியவர நைஸாக நழுவிவிட்டாள்.
அத்தனை சந்தோசம். கிட்டத்தட்ட துள்ளிக்கொண்டு ஓடி வந்தாள் பூஜா. வேகமாய் வந்ததில் மூச்சுவாங்க,
இன்னும் மாலை முழுதாய் கவிழாமல் இருக்க பிற்பகல் வேளை என்பதல அடுத்தடுத்த மாடிகளில் மட்டுமல்ல எல்லா இடங்களும் நிசப்தமாக இருந்தது.
இல்லை என்றால் சுற்றிலும் அவனை பார்க்க கூடும் என்பதால் சத்தமின்றி மறைவாக இருக்கும் தண்ணீர் தொட்டியும், தென்னங்கீற்றும் இருக்குமிடத்தில் நின்றிருந்தான்.
அப்போதுதான் போனை வைத்திருக்க பூஜாவின் இந்த திடீர் குரலில் திடுக்கிட்டு திரும்பினான்.
“என்னை தெரியுதா?…” என சற்றே இடைவெளி விட்டு நின்றவளுக்கு அவனருகில் இன்னும் சென்று பார்ப்போமா என தோன்றியது.
தன்னை அடையாளம் தெரியுமோ, தெரியாதோ என்னும் பதட்டம், அவனிடம் தனியே பேசிவிட கிடைத்துவிட்ட வாய்ப்பில் உலகம் மறந்த ஆனந்தம். எங்கே இதனை தன் அம்மா பார்த்துவிடுவாரோ என்னும் பயம்.
ஆனாலும் பூஜாவிற்கு அதிரனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. தன்னுடைய சொந்தம் என்று சொன்னாலும் ஒரு செல்பி கூட இல்லை என்றால் தன்னை கேலி பேச மாட்டார்களா கல்லூரி தோழிகள் என்று தோன்றியது.
“என்னை தெரியுதா? நான் பூஜா, நம்ம கூட லைவ்ல பார்த்தோமே? அன்னைக்கு தான் அந்த பிரச்சனையும் ஆச்சு. என்னை தெரியுதா?…” என்றாள் படபடவென்று.
எங்கே தன்னை மறந்திருப்பானோ என நினைத்து பரபரவென்று நிகழ்வுகளை வரிசைப்படுத்த மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு ஒரு சிரிப்புடன் தலையசைத்தான்.
“ஹப்பா, என்னை தெரியுது. எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? இப்பவும் என்னால நம்ப முடியலை…” என்று கையை உதறிக்கொண்டு குதித்தவள்,
“உங்களோட ஒரு செல்பி. ப்ளீஸ் ப்ளீஸ்…” என்றதும் அதற்கும் தலையசைத்து சிரித்தவன்,
“எடுக்கலாம். இங்க தானே இருக்கேன்?…” என்றான் நிதானமாக.
“ஐயோ உங்களுக்கு தெரியாது. எங்கம்மா உங்க பக்கத்திலயே வர கூடாதுன்னு சொல்லியிருக்காங்க…”
“ஓஹ்…” என்றான்.
“என்ன இப்படி சொல்லிட்டீங்க? ஏன்னு கேட்க மாட்டேங்களா? இப்ப நம்ம சொந்தக்காரங்க கூட. எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?…”
“ஓகே ரிலாக்ஸ்…” என்றான் அமைதியாக.
“என் ப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னேன். அந்த லைவ்னால தான் நீங்க வரு அண்ணியை மீட் பண்ணி இந்த மேரேஜேன்னு. ஒருத்தரும் பெருசா நம்பவே இல்லை. நானும் அந்த இன்சிடன்ட்ல இருந்து அடுத்து வீட்டுல என்ன நடந்துச்சுன்னு எல்லாம் சொன்னேன். கேட்கலையே?…”
“உங்க கல்யாணத்துக்கு என் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிடனும்னு ஆசையா இருந்துச்சு. அம்மா விடலை. அவங்களுக்கு என்னால தான் நீங்க வரு அண்ணியை பார்த்தீங்க. அதனால தான் இந்த கல்யாணம்ன்னு கோவம்…”
“ஓஹ்…” என்றான் அதற்கும்.
“ஆமா, இப்ப கூட அம்மா தூங்கவும் தான் நான் எஸ்கேப் ஆகி வந்துட்டேன். இல்லைன்னா நீங்களும் கிளம்பி போய்டுவீங்க…” என்றாள்.
பேச பேச பூஜாவின் கால்கள் தரையில் நிற்கவில்லை. சந்தோஷத்தில் பறந்துகொண்டு இருந்தாள்.
படபடவென்று அத்தனை விஷயத்தையும் தன்னிடம் ஒப்புவிக்கும் பெண்ணை கண்டு அதிரனுக்கு வருத்தம் எழுந்தது.
“ஆமா, மேகாவை நான் பார்க்கறதா இருந்தா எப்படியும் பார்த்திருப்பேன். இதை சொன்னா உனக்கு புரியாது பூஜா…”
“என் பேர் சொன்னீங்களா? இன்னொருதடவை சொல்லுங்க….” என அதற்கும் குதூகலிக்க,
“லிசன் பூஜா நான் உனக்கு தேங்க்ஸ் சொல்ல முடியாது…” என்றான் முகத்தில் சற்றே தீவிரத்தை கொண்டுவந்து.
‘இந்த பெண் என்ன எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் பேசுகிறது’ என தோன்ற அதிரனுக்கு ஒப்பவில்லை.
வீட்டுக்குள் நடக்கும் தங்களின் சம்பந்தப்பட்ட விஷயம் குடும்பத்தில் நின்றால் அது வேறு.
ஆனால் இப்படி கல்லூரிமாணவ மாணவிகளுக்கிடையே பூஜாவினால் சொல்லப்பட்ட கதையில் என்னவிதமான தாக்கத்தை தந்திருக்கும் என யோசித்தான்.
“உன்னோட நான் பர்ஸ்ட் டைம் பேசறப்போ உன் காலேஜ் நேம் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லியிருந்தேனே? ஏன்னு தெரியுமா?…”
“அது எனக்கு ஞாபகமில்லையே…”
“பேசினது ஞாபகம் இருக்கு, ஆனா இது இல்லையா?…” என்றவன்,
“படிக்கிற பொண்ணு. உன் சேஃப்டி பத்தி யோசிக்கிறதில்லை. ஆனா உன்னோட இந்த இமேச்சூர்ட் பிஹேவியர் இன்னொருத்தரோட வாழ்க்கையை எப்படி மாத்தியிருக்கு பார்…” என்றான்.
“நான் என்ன பண்ணேன்? நல்லது தானே நடந்திருக்கு. உங்க கல்யாணம்….”
“நல்லதா? நீ செஞ்சதோட சீரியஸ்நெஸ் புரியலையா பூஜா? தப்பில்லையா இன்னொருத்தவங்களோட பெட்ரூம்ல அவங்களுக்கே தெரியாம நீ லைவ்ல மொபைலை வச்சிட்டு போனது?…” என்றான்.