பூஜாவிற்கு முகமே விழுந்துவிட்டது. தனது ஆஸ்தான நட்சத்திரம். அவனின் முன் தனக்கு கெட்டபெயரா? அதுவும் அவனே கண்டிக்கும் விதமாய் பேச முகம் மாறிவிட்டது.
இதுவரை தன்னை வீட்டில் அத்தனை பேர் திட்டியும் வராத ஒரு அவமான உணர்வு பூஜாவிற்கு உண்டாகியது.
“அந்த இடத்தில நான்றதனால நடந்தது வேற. ஆனா இதுவே வேற மாதிரி ஆகியிருந்தா? தப்பாயிருக்குமே? அதுவும் அவ்வளோ பேர் லைவ்ல இருக்கும் போது. யோசிக்க வேண்டாமா?…” என்றான்.
“தப்புதான். அன்னைக்கே வரு அண்ணி கூட என்னை அடிச்சுட்டாங்க…” சிறுத்துவிட்ட குரலில் சொல்ல.
அதிரன் ஒன்றும் பேசவில்லை. இருவரும் பேசுவதை பார்த்தபடி அப்படியே நின்றான்.
“சரி விடு, அதான் முடிஞ்சிருச்சே. இப்ப வா, போட்டோ தானே? எடுக்கலாம்…” என்று சொல்ல அத்தனை நேர கவலையும், வருத்தமும் போய் குதிக்காத குறையாய் தனது போனை எடுத்து கேமராவை ஆன் செய்தாள்.
“வாங்க…” என்று பூஜாவினருகே மேகா மறுபக்கம் நிற்க அவளுக்கருகே வந்துவிட்டான் அதிரன்.
“இப்படி நில்லு…” என மேகாவை தன்னருகே நிறுத்தி போட்டோவிற்கு போஸ் குடுக்க பூஜா கவனிக்கவில்லை. மேகா கவனித்துவிட்டாள்.
“அண்ணா ப்ளீஸ், அண்ணி ப்ளீஸ். என் ப்ரெண்ட்ஸ்க்கு ஒரு வீடியோ கால் பன்றேன். ஒரு ஹாய் மட்டும் சொல்லிடுங்களேன் ப்ளீஸ்…” என்று கெஞ்ச,
“நோ பூஜா, நாங்க கிளம்பனும்…” என்று சொல்லிவிட்டான் அதிரன்.
முகம் வெகுசாதாரணம். எப்போதும் போல சின்ன புன்னகை. ஆனால் மறுக்கும் விதமாய் தலையசைத்து சொல்லவும் பூஜா பாவமாய் நிற்க,
“இன்னொரு நாள் பேசலாம். நீ போ பூஜா…” என்றாள் மேகா.
“சரி, பை அண்ணா…” என்று சொல்லிவிட்டு அவனும் புன்னகையுடன் தலையசைக்கவும் கிளம்பினாள்.
“என்னாச்சு? ஏன் முகமே மாறிடுச்சு?…” என மேகா கேட்டதும்,
“நத்திங் டா…” என்றவன்,
“என்ன இத்தனை ஐட்டம்ஸ்?…” என்றான் சிரிப்புடன்.
“உங்களுக்கு தான். அசோகா அல்வா, கேசரி, இது உளுந்துவடை, சட்னி. இதெல்லாம் பிடிக்குமா?…” என்றாள் அடுத்ததாக,
“மேகாவுக்கு பிடிக்குமா?…” என்று அவன் திரும்பி கேட்க,
“ஓஹ், ரொம்ப…”
“வாவ்…” என்றபடி வேறு பேசிக்கொண்டே அவளின் கவனத்தை திசை திருப்பி கொண்டுவந்ததை லேசாய் ருசி பார்த்துவிட்டு அவளுக்கே எல்லாம் ஊட்டிவிட்டுவிட்டான் அதிரன்.
“ப்ளேட் காலி, வா கீழே போகலாம்…” என்று மேகாவுடன் கீழே இறங்க அங்கே மோனிகாவும், பல்லவனும் பூஜாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“அட இதுல என்ன இருக்கு? போட்டோ எடுக்க தான் பூஜா வந்தா…” என்றான் அவன்.
“நீ போ பூஜா…” என மோனிகா சொல்லவும் பூஜாவும் சென்றுவிட்டாள்.
“பூஜா சொல்லிட்டா மாப்பிள்ளை. நீங்க பேசினதையுமே சொன்னா. மனசுக்குள்ள ஒரு விஷயம் உறுத்திட்டு தான் இருந்துச்சு. இப்ப பூஜாக்கிட்ட நீங்க எடுத்து சொன்னதும் என் மனசு நிறைஞ்சிருச்சு…” என்று அவனின் கையை பிடித்து சொல்ல,
“ஆமா ண்ணா, நல்ல பொண்ணு தான். கொஞ்சம் விளையாட்டுத்தனம். விளைவு தெரியாம பண்ணிடுவா. எடுத்து சொன்னாலும் புரியறதில்லை. ஆனா பொண்ணு பாவம்…” என மோனிகா சொல்ல அதிரன் தலையசைத்தான்.
“சரி, வாங்க உட்காருங்க…” என்றதும் ஹாலில் வந்து அமர்ந்தான்.
மேகாவால் இதை பற்றி எதுவும் கேட்க முடியவில்லை அதிரனிடம். பல்லவனுடனும், அமுதனுடனும் பேசியபடி அமர்ந்துவிட்டான்.
இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட வேண்டும். மேகா தனக்கு தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
மோனிகா அதற்கு உதவ எல்லாம் பேக்கிங் செய்யப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டது.
தானும் உடை மாற்றி வர உள்ளே செல்ல மேகா அந்த அறையை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் சோர்வுடன்.
“என்னவாம் மேகம் மழை பொழிய ரெடி போல?…” என்று பின்னிருந்து அணைத்துக்கொள்ள அவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டவளுக்கு அத்தனை கண்ணீர்.
“என் ரூம்…”
“யார் இல்லைன்னா? ரூம் இங்க தான் இருக்கும். நாம வரப்போ இருக்கலாம்…”
“ரொம்ப கஷ்டமா இருக்கு…”
“பார்ரா, பேசாம வீட்டோட மாப்பிள்ளையா வந்திடுவோமா?…” விளையாட்டாய் அவளை கலாட்டா செய்ய,
“உங்களுக்கு இதெல்லாம் புரியாது, போங்க…” என்றாள்.
“ஹ்ம்ம், என்ன பண்ணலாம்?…” என்றவளின் முதுகை வருடியபடி நின்றான்.
சிறிது நேரத்தில் அழுகை குறைந்து மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தவளை கண்டு நெற்றியில் முட்டி புன்னகைக்க,
“சிரிக்கிறீங்க?…”
“மாத்திக்க முடியலை. வேற என்ன பண்ணனும்? சொல்லேன்…” என்றான் விஷமமாய்.
“ஒன்னும் வேண்டாம். கிளம்புவோம். நல்லநேரம்ன்னு அம்மா சொல்லிருக்காங்க…” என நகர போக,
“உன் புக்ஸ் எல்லாம் பேக்கிங்கா மேகா?…” என்றான் அதிரன்.
“ஹ்ம்ம், முடிவு பண்ணிருக்கேன். உனக்கும் பிடிக்கும்ன்னு நம்பறேன். ஆனா பர்ஸ்ட் அங்க தான் போக போறோம். அடுத்து வேணும்னா யூர் விஷ்…”
“எங்கன்னு சொல்லவே இல்லை…”
“ம்ஹூம், நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ. அங்க போனதும் உன் முகத்தில வர உணர்வுகளை நான் கவனிக்கனும். எனக்கு அது வேணும் மேகா…” என்றவன் முகத்தின் ரசனையில் அவ்விடம் என்னவாக இருக்கும் என யோசிக்க ஆரம்பித்தவளை அணைத்துக்கொண்டவன்,
“கிளம்புவோம். அதுக்கு முன்ன…” என்று அவளின் கழுத்தில் முகம் பதிக்க,
“பாவம் என் மச்சம்…” என்றாள் சிலிர்த்து சிரித்து.
“பாவமில்லை. லக்கி பெல்லோ உன் மச்சம். ஆனா நான் பாவம்…”
“ஏன்?…”
“ஆமா, மாமனார் வீட்டுக்கு வந்துட்டு வந்த மாதிரியே போறது நான் மட்டும் தான்…”
“உங்களை…” என்று அவனின் மார்பில் குத்த அதிரனின் புன்னகை விரிந்தது.
“மேகத்துக்கு என்னை கொஞ்சறதை தவிர மத்த எல்லாம் வரும்…” என்று அவளின் முகத்தோடு இழைய,
“அச்சோ போதும்…” என்று அவன் வாயை மூடினாள் மேகா.
“என் முகத்தை மெஹந்தி போட்டுட்டுட்டு இப்படியா? இங்க இல்லை. இப்படி…” என்று அவளின் கையை எடுத்து அவளின் இதழ்களை மூடியவன் அதன் மேலேயே அழுத்தமாய் தன் இதழ் பதித்தான்.
“டூ இன் ஒன் மேகமே…” என்று சிரிக்க உள்ளங்கையில் வரைந்திருந்த அதிரனின் சிரித்த முகமும் அவள் இதழ்களில் பதிந்து விலகியது.
“இப்படியும் நீ கொஞ்சலாம். எனக்கு அதுவும் வாவ் மொமென்ட் மேகா…” என்றவனின் ரசனைகள் மேகாவை இன்னுமின்னும் அதிரனிடத்தில் ஈர்த்து மேகாவை நாணம் சூட செய்தது.