“இல்லைன்னு சொல்ல முடியாது. சமாளிச்சிருக்கேன். இப்பதான் மாடிக்கு போயிருக்காங்க…” என்ற சுபத்ரா,
“எனக்கு என் பிள்ளையோட சந்தோஷமும் சிரிப்பும் முக்கியம். அவ அவனுக்கு புடிச்ச பொண்ணோட ம்ஹூம், வருவோட ஆயுசுக்கும் நிறைவா வாழனும். அது மட்டும் தான் எனக்கு முக்கியம்…” என்றார் அதட்டலாக.
“இனி எதுவுமே சொல்லமாட்டேன் போதுமா?…”
“யாரை?…”
“நம்ம மருமக பொண்ணை…”
“மேகா, மேகவர்ணா…” என்றார் சுபத்ரா மகன் சொல்லுவதை போல.
“அதி சொல்ற மாதிரி இல்லை…” என தேவராஜும் சிரிக்க,
“அவன் சொல்றது வேற. நான் சொல்றது வேற. இப்படித்தான் இருக்கும். கேளுங்க…”
“ஓகே ஓகே. கேட்டுக்கறேன்…” என்றார் அவரும் மனைவியின் புன்னகையில்.
மாடிக்கு தங்கள் அறைக்குள் வந்த அதிரனும், மேகாவும் அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.
வந்ததிலிருந்து அதிரன் பேசுவான் என பார்க்க அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் பார்வை அவளிடமே.
மருந்துகளை கட்டிலின் அருகில் இருந்த லைட்லேம்ப் பக்கத்தில் வைத்துவிட்டு அங்கும் இங்கும் என நடந்தாள்.
பேசவும் தயக்கமாக இருந்தது. ஒருபக்கம் தேவராஜ் பேசியது கஷ்டத்தை தந்தாலும் எப்படி இவனிடம் பிடிக்குமா, சாப்பிடுவானா என கேட்காமல் போனோம் என்று தன்னையே நிந்தித்தபடி இருந்தாள்.
அதிரனை நடிகன், பாடகன் என்ற அடையாளம் தவிர்த்து தன் கணவன் இவன் என்ற அளவில் மட்டும் பார்த்ததும், அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்காமல் விருந்தை தயாரித்து பரிமாறியதும் என நினைக்க நினைக்க ஆறவில்லை.
“எதுக்கு?…” அதிரன் புரியாததை போல உடனே அவளின் மன்னிப்பிற்கு கேள்வி எழுப்பிவிட்டான்.
அவள் பேசாமலே பேச வைக்க அத்தனை பேசியவன், இப்போது பேசியும் பேசாமல் இருக்க முடியுமா அதிரனால்?
“பதில் சொல்லு மேகா…” மீண்டும் கேட்க அவன் முகத்தை பார்த்தவள்,
“கோவமா இருக்கீங்களா?…” என்றாள் சற்றே அச்சத்துடன்.
“ஆமா, தெரியுதா உனக்கு?…” ஆமோதித்து ஒப்புக்கொள்ள இதோ வந்துவிட்டேன் என்பதை போல் அழுகை கண்ணை நிறைத்துவிட,
“ப்ச், இங்க வா…” என்றவன் அருகில் வந்ததும் அவளை அணைத்தவன் மூக்கில் மெல்லிய முத்தமிட்டு பின் மெலிதாய் வலிக்காமல் கடித்தான்.
“எப்படி சிவக்குது பாரு. மிளகாய் மாதிரி…” என்று மூக்கை பிடித்து ஆட்ட,
“கோவமா இருந்தீங்க…” என்றாள் அவன் முத்தமிட்டதும் ஆச்சர்யமாக புருவம் உயர்த்தி.
“கோவமா இருந்தா கிஸ் பண்ண மாட்டாங்களா? நான் பண்ணுவேனே…” என்றவன் முகம் முழுவதும் முத்தமிட்டு அவளை மூச்சுமுட்ட செய்து அத்தனைக்கும் கிரீடமாய் அவனின் இதழ்கள் அவளின் மச்சத்தில் சரணடைந்தது.
அவ்வளவு தான். மேகாவின் இறுக்கங்களும், பயமும் மொத்தமாய் தளர்ந்து போக இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள் அவனை.
“பயந்துட்டேன் தெரியுமா?…” என தேம்பியபடி அவனை கட்டிக்கொள்ள அஷ்வின் செய்ததை போலிருந்தது மேகாவின் அணைப்பும் அழுகையும்.
“சில் மேகா…” என்று அவளை ஆற்றுப்படுத்தினான் அதிரன்,
“இனிமே இப்படி இருக்கமாட்டேன்னு சொல்லு. விடறேன். இல்லைன்னா இப்படியே இரு…” என்று சுகமாய் அவள் தோளில் தலையை சாய்த்துகொண்டான் அதிரன்.
“என்ன கலாட்டா இது? விடுங்க…”
“ம்ஹூம்…”
“ப்ளீஸ் அதி…” அவள் கெஞ்சலாக சொல்ல,
“இந்த அதில என்னவோ ஒரு கிக் மிஸ் ஆகுதே?…” என்றான் அணைப்பை தளர்த்தி.
“அதெல்லாம் தெரியாது…” என்றவள் இன்னும் விலகி அமர அவளின் முகத்தையே பார்த்தான்.
இப்போது கொஞ்சம் தெளிந்து முகத்தில் சஞ்சலங்கள் குறைந்துபோய் புன்னகையுடன் இருந்தது.
“ஏன் மேகா அப்படி ரியாக்ட் பன்ற?…” என்றான் அவள் விரல்களை பற்றி.
“ம்ம்ம்…” என்றவள்,
“எனக்கு ரொம்ப கில்டியா இருந்துச்சு. அதுவும் நீங்க மதியத்துல இருந்து கஷ்டப்பட்டு. எனக்கு தெரியாம, அது ரொம்ப கஷ்டமா போய்டுச்சு. நான் நல்ல வொய்ப்…”
“ஹேய் மேகா…” என்றான் அவளின் குரலின் தழுதழுப்பில்.
“நிஜமா எனக்கு வேற எதுவும் தோணலை. உங்களோட டயட் கான்ஷியஸ் எதையும் நான் தெரிஞ்சுக்காமலே இருந்திருக்கேன். அதோட பிடிக்காத, சாப்பிடாததை எல்லாம் சாப்பிட்டிருக்கீங்கன்னு….”
“சாப்பிடாததுன்னு யார் சொன்னா?…”
“ஆமா, ஒத்துக்காதது, சாப்பிடாம புதுசா சாப்பிடும் போது தானே அலர்ஜி வரும். மாமா கேட்டாங்களே?…”
“அதுக்கு இப்படியா? இனி இப்படி நீ பீல் பண்ண கூடாது. ஸ்டமக் அப்ஸட் மாதிரி என் மனசும் அப்ஸட் ஆகிடும். புரியுதா?…”
“ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம்? என்னவோ சரியில்லை. என்ன யோசிக்கிற?…” என்றான் அமைதியாக.
“அதெல்லாம் எதுவும் இல்லை. சரி சொல்லுங்க. இப்பவாவது சொல்லுங்க. உங்களை நான் தெரிஞ்சுக்க கூடாதா? எனக்கு தெரியனும் எல்லாம்…” என ஏக்கமும், உரிமையுமாக கேட்க இன்னும் சிரிப்பு தான் வந்தது அதிரனுக்கு.
“வலி இருந்தா அது முகத்துல தானே தெரியும். அதான் என்னை பார்த்து தெரிஞ்சுக்கோன்னு சொன்னேன்…”
என்றவன் தன் முகம் பார்க்க வைக்க சில நொடிகள் தான், நிமிடங்களை எட்டுவதற்குள் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அவனின் மடியில் சாய்ந்துவிட்டாள்.
அட்டகாசமான சிரிப்புடன் அவளின் தலையோடு தலை சாய்த்தவன் இன்னும் அவளை குறுகுறுப்பு மூட்ட அப்படி ஒரு சிரிப்பு மேகாவின் முகத்தில்.
அறையெங்கும் புன்னகை மத்தாப்புகள் தான். அவளின் கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது அந்த நிமிடம்.
——————————————————-
குளிர் உடலை ஊசியென துளைக்க இழுத்து நன்றாக போர்த்தி இருந்தவளுக்கு இன்னும் கதகதப்பாய் வேண்டுமென்று அதிரனை தேடியது மனது.
“மேகா வேக்கப்…” என்றான் அவளின் காதருகே மெல்லிய குரலில் அதிரன்.
“ம்ஹூம், குளிருது. நீங்க போங்க. நான் வரலை..”
“இல்லை வந்து தூங்கலாம். வாடா வாடா…” என்று அவளை எழுப்பி அமர வைத்துவிட்டான்.
“ப்ளீஸ் அதி…” என்று எந்த கெஞ்சலும் எடுபடவில்லை.
அவளை தூக்கி சென்று முகத்தை கழுவ சொல்லியவன் ஜெர்கினையும் சால்வையையும் எடுத்துக்கொண்டான்.
“போகலாமா?…”
“முடியலை உங்களோட…” என சலித்தபடி வெளியே வந்தவள் கிடுகிடுவென்று நடுங்கினாள்.
அந்த கெஸ்ட்ஹவுஸ் தாண்டி வெளியே நடந்தவர்கள் சரிவில் இறங்க முற்றிலும் தேயிலை தோட்டம்.
ஆனால் தோட்டம் மொத்தமும் மேகம் சூழ்ந்து மிதமான தூறலுடன் அவ்விடத்தை அத்தனை குளுமையாய் வைத்திருந்தது.
மேகமலை. அழகுமலை. அது ஒரு மாயவலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேலென்ற தேயிலை தோட்டங்களும் அதனை தழுவிச்செல்லும் காதலி என துண்டு துண்டாய் பஞ்சுபொதியாய் மேகங்களும்.
மேகாவுடன் அதிரன் அங்கே முதல்நாள் மாலை தான் மேகமலை வந்து சேர்ந்திருந்தான்.
தேவராஜ் அந்த நிகழ்வின் மறுநாளே மேகாவுடன் எங்கேயாவது அப்போதைக்கு இரு நாட்கள் சென்றுவருமாறு சொல்லிவிட்டார்.
அதிரனும் மேகாவுடன் கிளம்பி வந்துவிட்டான் தான் அவளுடன் வர விரும்பிய மேகமலைக்கு.
அவன் ஆசைப்படி மேகங்களுக்கு நடுவே தன் மேகம். தன்னை தழுவும் மேகம். தன்னை கொஞ்சும் மேகம்.
சில்லென்று மழைத்துளிகள் விழுந்தும் விழாததை போல மேகத்தோடு காற்றோடு காற்றாய் பறக்க உடல் சிலிர்த்தாள் மேகா.
“மழையுமா?…” என விழி விரித்து அதிரனுடன் விரல் கோர்த்து கேட்டாள் மேகா.
உறக்கம் கலைந்து அந்த சூழலை மனது ரசிக்க ஆரம்பிக்க சால்வைக்குள் அதிரனின் அணைப்பில் அவள்.