“வேறொன்னும் இல்லையே? வேற என்ன செய்யுது?…” என்றவர்,
“இப்ப வந்திடறேன்…” என்று எழுந்து வெளியே ஓடினார்.
“உள்ள வாம்மா, ஏன் அங்கயே நின்னுட்ட?…” தேவராஜ் மேகாவை இன்னும் உள்ளே அழைக்க அவளால் ஒரு அடி எடுத்துவைக்க முடியவில்லை.
அதிரனுக்கு உடல்நிலை சரியில்லை என்பது போக, தேவராஜின் பேச்சும் வெகுவாய் காயப்படுத்தி இருந்தது மேகாவை.
“நான் பேசினதை கவனிச்சிருப்பன்னு நினைக்கறேன்ம்மா. தப்பா எடுத்துக்காத. இனி நீ தான் ஆதியை இன்னும் கொஞ்சம் கவனமெடுத்து கவனிக்கனும், புரியுதா?…” என்றதும் தலையசைத்தாள்.
“என்னை வேற விதமா நினைக்காதப்பா. நானும் உன் அப்பா மாதிரி தான். நீயும் எனக்கொரு பொண்ணு மாதிரி தான். ஆனா அதின்னு வரும் போது…” என்றவர்,
“அவனுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. அவன் நிறைய காரம் சின்ன வயசுல இருந்தே எடுத்துக்கமாட்டான். உன்கிட்ட அவன் எதுவுமே சொல்லலைன்னு எனக்கு புரியுது. இதுல உன்னை நான் குறையா சொல்லலைப்பா…”
முயன்று மருமகளை சமாதானம் செய்யத்தான் நினைத்தார் தேவராஜ். மேகாவிடம் பேச ஆரம்பிக்கவுமே அதிரனின் முகத்தில் அத்தனை தவிப்பு.
எப்போதும் மகனை வருத்தப்பட செய்யாதவர். இப்போதும் அவனின் முகம் பார்த்து நிதானமாக மருமகளிடம் பேசினார்.
இல்லை என்றாலும் மேகாவிடம் தன்மையாக தான் பேசியிருப்பார். அது அவரின் குணாதிசயமாக இருந்துவிட்டது.
“அப்பா சொன்னா சரியான அர்த்தத்துல எடுத்துப்ப தானப்பா?…” என்றார் மருமகளிடம்.
அதுவே மேகாவை இன்னும் மனதளவில் பாதிக்க செய்ய தலையசைத்தாள் அவள்.
காலை எத்தனை சந்தோஷமாய் கிளம்பி சென்ற பெண், இப்போது அப்படி தன் முன் தவறு செய்துவிட்டதை போல நிற்க தாங்க முடியவில்லை அவருக்கு.
அவருக்கே அப்படி இருக்க அதிரனின் நிலையை சொல்லவே தேவையில்லை என்பதை போல மேகாவிடமே பார்வையை பதித்திருந்தான்.
“சரி சரியாகிடும். இனிமே பார்த்துக்கோம்மா…” என்றுவிட்டு தேவராஜ் கிளம்பிவிட அதிரன் மேகாவை நோக்கி கை நீட்டினான்.
“இதோ நான் வந்துட்டேன். இத சாப்பிடு. குடல் புண் எதுவும் ஆகாம கொஞ்சம் குளுகுளுன்னு இருக்கும். எரியாது…” என்றார் சுபத்ரா.
“ம்மா இவ்வளோ பட்டாரா?…” தாய் கிண்ணம் நிறைய கொண்டுவந்திருந்த வெண்ணையை கண்டு அதிரன் மறுக்க,
“ஒரு நாள் இதை சாப்பிடலாம். சொன்னா கேளு. இல்லைன்னா இன்னும் கஷ்டமாகிடும். மருந்து இருக்கட்டும். அதோட இது இன்னும் பலன் குடுக்கும். சாப்பிடு…” என்று நீட்ட அதிரன் மேகாவை பார்த்தான்.
“நீயே குடும்மா…” என்று உடனே சுபத்ரா மேகாவிடம் தர,
“இல்ல, இல்ல த்தை. நீங்க குடுங்க. நீங்களே குடுங்க…” என்று அவள் பதறி மறுக்க அதிரனின் முகம் மாறிவிட்டது.
“ம்மா நீங்க குடுங்க…” என்று அவன் எடுக்க,
“நானே தரேன்…” என்று வெண்ணையை உருட்டி அவனின் வாயில் போடவும் அப்படியே விழுங்கிக்கொண்டான்.
“இவன் முகத்தை பார்த்தியா? இதுவே வீட் பிரெட்ல பட்டர் வச்சு சாப்பிடறதுன்னா தானா இறங்கும். தனியா வெண்ணெய் மட்டும்ன்னா முகம் எப்படி போகுதுன்னு…” என விளையாட்டாய் சொல்லியவர்,
“ஹ்ம்ம் என் பிள்ளை காரமெல்லாம் சாப்பிட பழகறான் பாரேன். இனிமே மிளகாய் துவையல், கார சட்னி, காரசாரமா மதுரை, காரைக்குடி சமையலும், ஆந்திரா ஸ்பெஷலும் தான் வீட்டுல…” என்றார் கிண்டலாக.
தாயின் பேச்சில் அதிரனின் முகத்தில் புன்னகை பிறக்க மேகா கூட மெலிதாய் இதழ் வளைத்தாள்.
“ம்மா…” என்று அவரின் கையை அதிரன் பிடித்தான்.
“ஏன் நீ சாப்பிடமாட்டியா அம்மா செஞ்சா? காரம்ன்னா மாமியார் வீட்டு சாப்பாடு தானா?…” என்றதும் மேகா மனதிற்குள் திடுக்கிட,
“அப்படின்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை. மலரை இங்க கூட்டிட்டு வந்து வீட்டோட மாமியாராக்கிருவோம். உன் பேரை சொல்லி நானும் நல்லா காரசாரமா சாப்பிடுவேன்…” என்றார் இலகுவாக.
மேகா சுபத்ராவையே பார்த்தபடி இருந்தாள். மனதிற்குள் மயிலிறகாய் அவரின் பேச்சு அவளை வருடியது.
“இவங்களால நாம நினைச்சது ஒன்னும் சாப்பிட முடியாது வரு…” என்றவர்,
“என்ன அங்கயே நின்னுட்டு, இங்க வா…” என்று அவளையும் கட்டிலில் மகனின் அருகில் அமர வைத்துவிட்டு பேசினார்.
“அப்பாவுக்கும் பையனுக்கும் பிட்னஸ்ல அவ்வளோ ஆர்வம். அதுவும் இவன் இருக்கானே?…” என அதிரனை காண்பித்தவர்,
“இந்த சாப்பாட்டுல இவ்வளோ கலோரிஸ் இருக்கு. அது வேண்டாம். இது வேண்டாம்ன்னு சொல்றதுல நமக்கு சாப்பிடற ஆசையே போய்டும். ஆனாலும் நான் சாப்பிடுவேன்…”
“அது நீங்க கண்ணு வைக்கறீங்களே ரெண்டுபேரும், அதனால…” என்று சளைக்காமல் சொல்லியவர்,
“அப்பப்ப சேராம போய்டும். அப்பாவும், பிள்ளையும் திட்டுவாங்களா? ம்ஹூம். கிடையாதே. அட்வைஸ் மாதிரி முகத்தை பாவமா வச்சிட்டு சொல்ல கேட்கற நமக்கு வெறுத்துடும். அமைதியா பார்த்துட்டே பேசுவாங்க. என்னால முடியாதுப்பா…” சுபத்ரா இரு கைகளையும் ஆட்டியபடி தலையசைத்து சொல்ல,
“ஆமா மாட்டிக்கிட்டா மறுநாள் ஏதாவது ரீசன் சொல்லி மௌனவிரதம் இருந்திருவாங்க…” அதிரனும் கேலி பேசினான்.
“நல்லவேளை ஞாபகப்படுத்தின, கல்யாணம் முடியவும் மௌனவிரதம் இருக்கனும்னு நினைச்சேன்…” என்றவர் அங்கிருந்த நாட்காட்டியை தேடி சென்று நாளை கவனித்தார்.
“ஓகே, நாளை மறுநாள் நல்ல நாள், …” என சொல்ல,
“ஹ்ம்ம்…” அதிரன் தலையசைத்து சிரித்தான்.
“சரி சரி, உனக்கு நிறைய ஜூஸ் குடுக்க சொல்லிருக்காங்க. அதை மட்டும் குடிப்பியாம். இப்ப எம்ப்டி ஸ்டமக்கா இருக்க சொல்லிட்டாங்க. நீ ரூம்ல போய் ரெஸ்ட் எடு அதி…” என்றவர்,
“நைட்க்கு நீ என்ன சாப்பிடுவா வரு?…” என்றார் சுபத்ரா.
“ஹாங், அத்தை…” என்றவள்,
“பசியில்லை. மதியம் சாப்பிட்டதும் ஹெவி…” சின்ன குரலில் சொல்ல அதிரன் அங்கே வைத்து ஒன்றும் சொல்லவில்லை.
“அப்ப உனக்குமே ஜூஸ் தரேன். என்ன ஜூஸ் புடிக்கும்?…”
“எனக்கு தனியா எதுவும் இல்லை. எதுவேணாலும் ஓகே த்தை…” என்றாள்.
“அடடா, வரு நல்ல பொண்ணும்மா நீ. இப்படியா சொல்ல முடியும்?…” என்றவர்,
“சொல்லலாம் போல…” என்றும் சொல்லிவிட்டு,
“ரொம்ப நாள் ஆச்சு அதி நீ இப்படி சொல்லி…” என்றார் மகனிடம்.
“அப்போ டெய்லி இப்படி சொல்லுங்க, நானும் சொல்றேன்…” என்று சிரிக்க,
“சரி சரி கிளம்புங்க ரெண்டுபேரும். எனக்கும் வேலை இருக்கு…” என்றார் சுபத்ரா.
அதிரனும் கட்டிலை விட்டு இறங்கியவன் அங்கிருந்த மருந்துகளை எடுக்க போக வேகமாய் மேகா எடுத்துக்கொண்டாள்.
எழுதியிருந்த பேப்பரையும் பார்த்தவள் எதை எப்போது குடுக்க வேண்டும் என்பதையும் கவனிக்க அதிரன் அமைதியாக முன்னே நடந்தான்.
“வரு போம்மா, அவன் முன்னாடி போய்ட்டான்…” என்று சுபத்ரா சொல்லவும் நிமிர்ந்து பார்க்க அவன் மேகாவை திரும்பி பார்த்துவிட்டு மாடியில் ஏறினான்.
பின்னோடே மேகாவும் செல்லவும் அதுவரை புன்னகையோடு இருந்த சுபத்ராவின் முகம் மாறியது.
வேகமாய் தேவராஜை தேடி வந்தார். அங்கே தனது பிரத்யோக அறையில் இருந்தவர் ஏற்கனவே கம்போஸ் செய்து வைத்திருந்த ட்யூன்களை கேட்டுக்கொண்டு இருந்தார்.
சுபத்ரா அங்கே சென்று அவரின் முன் நின்றதும் மனைவியின் முகத்தை கண்டு ம்யூஸிக்கை நிறுத்திவிட்டு காதிலிருந்த ஹெட்ஃபோனை கழற்றினார்.
“என்ன சொன்னீங்க மருமகக்கிட்ட?…” என்றார் உடனே.
“சுபா, நான் தப்பா எதுவும சொல்லலைப்பா…” என்று எழுந்துவிட்டார்.
“சரியாவும் சொல்லலைன்னு தோணுது எனக்கு. அவ முகமே சரியில்லைங்க…” சுபத்ராவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.
“நேத்து ஆரத்தி எடுக்கும் போது இந்த வீட்டு முன்னாடி வந்து நின்ன பொண்ணு முகமே மாறிடுச்சு. கண்ணுக்குள்ள ஒரு பயம். என்னவோ வேத்து மனுஷங்க இடத்துல வந்துட்ட மாதிரி மிரண்டு போச்சு…”
“சுபா…” திகைப்பாய் தேவராஜ் பார்க்க,
“இந்த கல்யாணம் என்ன சூழ்நிலையில எங்க ஆரம்பிச்சு எப்படி முடிஞ்சதுன்னு தெரியும் தானே? என் அதி, அவன் வருவுக்காக எவ்வளோ தவிச்சிருப்பான். இப்படி அவன் முன்னாடியே வருவை பேசியிருக்கீங்க? துடிச்சு போயிருப்பானே?…”
“ஏன் தெரியாமலே போயிருமா? இங்க என்கூட தான் இருக்க போறா. நான் சொல்லி தர மாட்டேனா? இப்படி தாழியை உடைக்கிறது மாதிரி அவ மனசை உடைச்சு முதல் நாளே குடும்பத்தோட ஒட்டவிடாம பண்ணிட்டீங்களே?…”
“அப்படி இல்லை சுபா…”
“நிஜமா தான். கல்யாணம் முடிஞ்சு முதல் தடவை வந்தப்போ அந்த பொண்ணு மனசுல என்ன பதியுமோ அது காலத்துக்கும் மறக்காது. என்ன தான் எல்லாம் சரியானாலும் கூட. இப்ப அவ அந்த ரூம்க்குள்ள நின்ன விதம், அதை என் பிள்ளை பார்த்து மருகினது…”
“ப்ச், போங்க நீங்க. உங்ககிட்ட நான் இதை நினைக்கவே இல்லை. அதிக்கு முடியலைன்றது கஷ்டம் தான். அது அவனா வாங்கிக்கிட்டது. வருவுக்கோ, அவங்க குடும்பத்துக்கோ என்ன தெரியும்? வேணும்னா செய்வாங்க. மருமகனுக்கு எந்த வீட்டிலயும் செய்யற மரியாதை தானே?…”
தேவராஜ் பார்வை ஒருவிதமாக இருந்தால், சுபத்ராவின் பார்வை இன்னொரு விதமாக இருந்தது.