திடீரென ரகசியமான குரலில் கிசுகிசுப்பாய் காதுக்கருகே வந்து அவர் சொல்ல திடுக்கிட்டு பதறி எழுந்துவிட்டாள் மேகா.
கவனமெல்லாம் அதிரனிடம் இருக்க சுபத்ரா தன்னை அழைத்ததும் தெரியவில்லை, அருகே வந்ததும் தெரியவில்லை,
அவரின் காதோர சுருண்ட முடி மேகாவின் காதில் திடீரென்று உரசியதும், சுபத்ராவின் திடீர் பேச்சும் அவளை எழ செய்துவிட்டது.
“என்னாச்சு?…” அதிரும், தேவராஜும் இந்த சத்தத்தில் ஓடி வர,
“சொல்லாத சொல்லாத…” என்றார் அவர் சைகை காண்பித்து.
“இல்ல நான் உங்களையே கவனிச்சுட்டு இருந்தேனா அத்தை தான் நீங்க, ரகசியம், நீங்க அப்படித்தான்…” என்று உளற,
“உன்கிட்ட ஒரு ரகசியம் பேச முடியாது போல? அவங்களை மாதிரி நாம கூட்டணி வச்சுக்கனும்னா முதலுக்கே மோசம். அட போமா…” என்றார் சுபத்ரா சலிப்பாய்.
அவரின் பேச்சில் மேகா அசடுவழிய அதிரனும், தேவராஜும் சிரித்துவிட்டனர் அவர்களை பார்த்து.
“இதுல காதையே கடிச்சுட்ட மாதிரி எந்திச்சு நின்னுட்டா. அந்த குக்கிங் பொண்ணு என்னை என்ன நினைக்கும்?…” என்று வேறு சொல்ல மேகாவுமே வாய்விட்டு சிரிக்க,
“ஹ்ம்ம், எல்லாரும் ஒன்னு சேர்ந்தாச்சா? ஒருத்தருக்கும் சாப்பாடு இல்லை. எல்லாமே எனக்கு மட்டும் தான்…” என்று மிரட்டியபடி அனைவருக்கும் பரிமாறி தானும் அமர்ந்துகொண்டார்.
பேசியபடி சாப்பிட்டு முடித்தவன் ஹர்ஷத்திடம் பேசிவிட்டு வந்து மேகாவை கிளப்பினான்.
“எங்க போறோம்?…” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லவில்லை.
“நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ…” என்றவன் அவளுக்கான உடைகளையும் ஆராய,
“அச்சோ நானே பேக் பன்றேன். எத்தனை நாள்?…”
“த்ரீ டேய்ஸ்…” என்று மட்டும் சொல்ல எடுத்து வைத்தாள்.
“குளிரும். அதுக்கானதையும் பேக் பண்ணிடு…”
“ஊட்டியா?…”
“இன்னும் கொஞ்ச நேரத்தில ப்ளைட். நாம இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்….” அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் பேச அதன் பின் மேகா கேட்கவே இல்லை.
வேகமாய் கிளம்பி பெற்றோரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு நேராக ஏர்போர்ட் வந்தான்.
மதுரை வரை ப்ளைட்டில் வர அவனின் பாதுகாப்பிற்கும் சேர்த்தே ஆட்கள் வந்தனர்.
‘இதுவா ஹனிமூன்’ மேகாவின் மனதில் கிண்டல் வழிந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.
அவனின் வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டது. இதுவே படப்பிடிப்பு என்றால் கூட்டம் கூடிவிடும். வந்திருப்பதோ தனிமையை தேடி.
அங்கே காரில் இருந்து ஜீப்பிற்கு மாறினான் அதிரன் தன் மனைவியுடன் தாங்கள் இருவர் மட்டும்.
வேறு வாகனத்தில் பாதுகாவலர்கள் பின் தொடர மேகாவுடன் தனியாய் ஒரு பயணம்.
அதிரன் ஜீப்பை ஓட்ட அருகே தன் மேகப்பெண். அந்த நொடி அவனின் முகத்தில் அளவில்லாத சந்தோஷம்.
மேகாவின் முகத்தையும் அவன் கவனித்தபடி இருந்தான். பிடிக்கிறதா இல்லையா என்ற கேள்வியே இல்லை.
அவளின் முகம் பார்த்து கவனித்து தெரிந்துகொண்டான். மாலை கவிழ இருக்கிறது.
அதற்குள் மேலே தங்குமிடத்திற்கு சென்றுவிட வேண்டும். உரிய அனுமதியுடன் என்பதால் அவனுக்கு வேறு எந்த இடையூறும் இல்லை.
பாதைகள் சில இடங்களில் குண்டும் குழியுமாக இருக்க மேகா அதிரனை சற்றே பயத்துடன் பார்த்தாள்.
எப்போதும் ட்ரைவருடனே தான் அவனை கவனித்திருக்க இப்போது அவனே ஜீப்பை செலுத்த அச்சம் மேலோங்கியது.
“மேகா…” என்றழைத்தவன்,
“பயமா இருந்தா கையை பிடிச்சுக்கோ…” என்று நீட்டினான்.
“இல்லையே?…” என சமாளிக்க,
“நிஜமாவா?…” என்றவனுக்கு அவளின் பயத்தை கண்டு அத்தனை சிரிப்பு.
“நான் நல்லாவே ட்ரைவ் பண்ணுவேன். பயப்படாதே? உன்னோட பர்ஸ்ட் டைம். அதனால ஜீப். நெக்ஸ்ட் டைம் பைக் ரைட் வரலாம்…” என்று அவளை இன்னும் கலவரப்படுத்தினான்.
“என்ன?…”
“பைக் ரைட்ன்னு சொன்னேன்…” மீண்டும் அழுத்தி சொல்ல,
“ம்ஹூம், நான் மாட்டேன்…” என்று சொல்லி திரும்பியவள் பார்வை அழகாய் விரிந்தது.
பாதி மலைக்கு மேல் ஏறி இருக்க குளிர் உடலில் பரவ ஆரம்பிக்க கண்களை நிறைத்தது மேகக்கூட்டம்.
தேயிலை தோட்டங்களின் மேல் பரவியபடி தவழ்ந்து நெகிழ்ந்து செல்லும் மேகங்களை பார்க்கவும் ஜீப்பின் வேகத்தை குறைத்தான் அதிரன்.
“மேகமலை…” என புன்னகையுடன் அதிரன் சொல்ல அவனிடம் சென்றது பார்வை.
“வந்துட்டோமா? இறங்கவா?…” என்றாள்.
“இல்லை நாம இதுக்கும் மேல போய் தான் தங்க போறோம். வருவோம் நாளைக்கு…” என்றவன்,
“இப்ப இருட்ட ஆரம்பிச்சிடும் மேகா. யானைகள் நடமாட்டம் வந்திரும். அதனால சேஃப் இல்லை. பகல்ல வருவோம்…” என்று சொல்லி நேராக கெஸ்ட்ஹவுஸ் வந்து சேர்ந்தான் மேகாவுடன்.
வந்து சேரவும் முழுதாய் இருட்டவும் சரியாய் இருந்தது. ஏற்கனவே வந்து தங்குவதாக ஏற்பாடுகளை செய்திருந்ததால் திடீர் தேதி மாற்றம் தவிர வேறு எதுவும் இல்லை.
இரவெல்லாம் அத்தனை பயம். என்னென்னவோ சப்தம் கேட்க அந்த வளாகத்தை சுற்றிலும் கேட்ட மிருகங்களின் ஓசையில் மேகா அரண்டு அதிரனை விட்டு விலகவில்லை.
அதனை எல்லாம் நினைத்தபடி விழித்திருந்தவள் எழுந்து சென்று திரையை வெளியே விலக்கி பார்த்தாள்.
வேகமாய் சுழன்றடிக்கும் குளிர் காற்றில் மழைக்கேற்ப அசைந்தாடும் தேயிலை தோட்டங்களின் ஜலக்ரீடை.
மொபைலை எடுத்து அதனை படமாய் பிடித்துக்கொண்டவள் கதவு திறக்கும் ஓசையில் திரும்பி பார்க்க,
“என்ன பன்றாங்க மேகம்?…” என அவளின் பின்னோடு நின்றவன் அவள் எடுத்த புகைப்படத்தை பார்த்தபடி தன் மேகத்துடன் இணைந்து நின்றான் அதிரன்.