அன்று முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்க கெஸ்ட்ஹவுஸ் விட்டு எங்கும் செல்லவில்லை அதிரனும், மேகாவும்.
அருகாமை ஒன்றே போதுமானதாக இருக்க வெளிவுலகத்தின் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ளவில்லை.
எந்த சமூக வலைத்தளம் பற்றிய செய்திகளையும் கேட்டுக்கொள்ளவில்லை. மொத்தமாக வெளிவுலகில் இருந்து விலகியே இருந்தனர்.
மறுநாள் காலை முதலில் எழுந்த அதிரன் முந்தைய நாளை போல மேகாவை எழுப்பவில்லை.
இன்னும் மழையின் தாக்கம் சாரலாய் இருக்க தான் மட்டும் வெளியே நின்று பார்த்துவிட்டு வந்தான்.
வெயில் வராமல் எங்கும் செல்ல கூடிய சூழல் இல்லை. கொஞ்சம் மனதிற்கு ஏமாற்றமாக இருந்தாலும் இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டான்.
மேகாவை பார்க்க ஆழ்ந்த சயனம். நிர்மலமான முகம் என்று அப்படி ஒரு உறக்கம்.
முந்தைய இரவு நிகழ்வுகளில் அதிரனின் முகம் மலர்ந்து குறும்பாய் புன்னகை நெளிந்தது.
நள்ளிரவு என்னவோ சப்தம் கேட்க எழுந்து திரையை விலக்கி பார்த்தவனின் கண்கள் அகன்று போக,
“மேகா இங்க வா…” என அறையின் இரவு விளக்கை மட்டும் போட்டவன் மேகாவை அப்படியே தூக்கி கொண்டு வந்து கண்ணாடி ஜன்னல் முன்பு நிறுத்தினான்.
“அச்சோ, என்ன அவசரம்? என்னை எப்படி தூக்கிட்டு வரீங்க?…” என்று சிணுங்கியபடி அவனை பேச அவள் முகத்தை திருப்பி சுட்டுவிரலை காண்பித்த திசையில் பார்த்தவளின் தொண்டை வறண்டு போனது.
சிறுத்தைப்புலிகள் இரண்டு சாவாகாசமாக அவ்விடத்தை சுற்றிக்கொண்டு இருக்க மேகாவின் விரிந்தவிழி அசைவற்று போனது.
“வா பக்கத்துல போய் பார்க்கலாம்…” என சிரிப்புடன் சொல்லியவன் மேல் பயத்தில் பாய்ந்தேவிட்டாள்.
“உங்களுக்கெல்லாம் பயமே கிடையாதா? பக்கத்துல போனோம் அதுக்கு நம்ம தான் டின்னர், ப்ரேக்பாஸ்ட் எல்லாம். எப்படி சொல்றீங்க நீங்க?…” என்று பதட்டமாய் ஆரம்பித்து பயத்தில் நடுங்கி அவனிடம் முகத்தை சுருக்க,
“ஹேய் விளையாட்டுடாம்மா…” என அணைத்துக்கொண்டு சிரித்தான்.
அவனின் சிரிப்பு சத்தம் வெளியே கேட்டுவிடுமோ என்று பயத்துடன் இறுக்கிக்கொண்டவள் மெல்ல தலையை மட்டும் திருப்பி பார்க்க அரண்டு போனாள்.
இரும்பு கம்பியால் ஆன அந்த வேலியை தாண்டி உள்ளே வர முயல்வதை போலிருந்தது ஒரு சிறுத்தைப்புலியின் பார்வை.
“போய்டலாம் அதி. அது நம்மளைத்தான் பார்க்குது…” என நடுக்கத்துடன் சொல்ல,
“என்னடா நடு ராத்திரில ரூம்க்குள்ள பளீர்ன்னு ஒரு மேகம்ன்னு அதிசயமா பார்க்குது பொண்ணே…” என்றான் அவளின் தலையில் தன் கன்னத்தை அழுத்தமாய் பதித்து வைத்தபடி.
கண்ணை மூடினாலும் அந்த சிறுத்தைப்புலியின் விழிகளின் கூர்மையில் தான் சென்று நின்றது அவளின் மனது.
“அச்சோ, நான் பார்த்திருக்கவே கூடாது. போச்சு. நான் எப்படி தூங்குவேன்? இப்பத்தான் கண்ணை மூடினேன். அதுக்குள்ளே எழுப்பி அதை காமிச்சு…” என்று நிமிராமல் முணங்க அதிரனின் புன்னகை விரிந்தது.
“அதுக்கு தான் எழுப்பினேன். உன்னை யார் தூங்க சொன்னா மேகா? நான் தான் தூங்கலையே…” என்றவனின் சில்மிஷ பார்வையிலும், சிரிப்பிலும்,
“உங்களை…” என பல்லை கடித்தாள்.
“இனி தூங்கினாலும் கனவுல சிறுத்தை வரும்…” என்று அவள் பாவம் போல் சொல்ல அதிரனின் சிரிப்பு அட்டகாசமாய் வந்தது.
“அச்சோ, வந்திர போகுது…” என அவனின் வாயை பொத்தியவள்,
“நடுராத்திரில என்ன கலாட்டா இது?…” என்றாள் கெஞ்சும் குரலில்.
“உன்கிட்ட தானே விளையாட முடியும்…” என அவள் மேல் சரிந்தவன்,
“ஓகே, பயம் போய்டும். புலியும் போய்டும்…” என்று தட்டிக்கொடுத்தான்.
“ம்ஹூம், கண்ணை மூடவே முடியலை. என்னவோ முன்னாடி நிக்கிற மாதிரி…” இன்னும் உடலில் நடுக்கம் ஓயவில்லை.
அதற்குள் யானை பிளிரும் சத்தம் வேறு. சுத்தமாய் மிரண்டு போனாள். பார்க்காமல் கேட்டுகொண்டு இருக்கும் வரை கூட தைரியமாக இருந்தவளுக்கு பார்த்த பின் அங்கிருக்கவே அத்தனை அச்சம்.
எல்லாம் மொத்தமாய் படையெடுத்து வந்துவிட்டால்? தொண்டை வறண்டுவிட்டது.
“உள்ள வரமுடியாதுல…” அதிரனிடம் கேட்க,
“ம்ஹூம், செக்யூர்டா பீல் பண்ணுடா, நான் இருக்கேன்ல…”
“நீங்க தான் இப்படி பண்ணினது. அப்பறமா இருக்கேன்னு சொல்றது…”
“ப்பா, மேகம் எவ்வளவும் கோபம்?…” அதிரன் அதற்கும் சிரிக்க,
“உங்களுக்கு பயமில்லையா?…”
“ம்ஹூம், பயந்தா என்னாகிடும்? வராதுன்னு நம்புவோம். நம்பிக்கை தான தைரியம். நீ என்னை நம்பு. நான் நம்மை நம்பறேன்…” அவன் அவளை சமாதானம் செய்ய,
“ஹ்ம்ம்…” என்றபடி உறங்க நினைத்து மீண்டும் எதோ சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள்.
மேற்கூரையின் மேல் என்னவோ தொப்பென்று விழுந்து ஓடுவதை போல அருகில் கேட்டது.
“சிங்கவால் குரங்கு…” அதிரன் சரியாய் சொல்ல வந்தன்று மாலையே பார்த்துவிட்டாள் தான்.
ஆனாலும் அது திடீரென்று விழவும், தாவவுமாக இருக்கையில் அச்சம் எழாமல் இல்லை.
“மேகா அது போய்ருக்கும் இந்நேரம்…”
“எங்க போக? திரும்ப வரும் தானே?…” என சொல்ல அதிரனுக்கு கஷ்டமாக போனது.
இத்தனை பயப்படுவாள் என தெரிந்தும் ஒரு ஆர்வத்தில் காண்பித்து இப்போது புலம்பிக்கொண்டே இருந்தாள் மேகா.
அவள் சென்றுவந்த மிருகக்காட்சி, வன உயிரியல் பூங்காவின் கதைகளை அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் பேசவிட்டவன் மீண்டும் மீண்டும் அவள் அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கவும், சிறுத்தைப்புலிகள் போயாகிற்றா என அதிரனை பார்க்க சொல்வதுமாக இருந்தாள்.
“ம்ஹூம் இங்க தான் சுத்திட்டு இருக்கும்…” என மேகாவின் பேச்சு நிற்காமல் இருக்க,
“வீணை வாசிக்கலாமா மேகா? நான் சொல்ற ராகத்துல ஒரு ராகம் செலெக்ட் பண்ணேன். வாசிக்கலாம்…” அதிரன் பேச்சை மாற்றவும்,
“என்ன இங்கயா? வீணையா?…”
“நீ செலெக்ட் மட்டும் பண்ணு. வீணையை ஏன் தேடற?…” என்றான் உல்லாச குரலில்.
“மாட்டேன்…” மேகாவிடம் பயம் குறைந்து அதிரனின் பேச்சில் நாணம் எழ,
“அப்போ ராகத்தை பத்தி கவலை இல்லை. சாய்ஸ் என்னோடது. நோ சொல்ல கூடாது பொண்ணே…” என்றவனின் அடுத்து பாடிய பாடல் வரிகளில் மூழ்கியவள் அதிரனின் இசைக்கேற்ப இசையாய் இசைந்து ஸ்வரம் மீட்டினாள் மேகா.
கனவுகளை தூவும் அர்த்தஜாமத்தில் அங்கே கவிதைகளின் புனைவில், உயிர்களின் இணைவில் ப்ரியங்கள் கூட ஆங்காங்கே விட்டுவைக்கும் காதல்கள் தடங்கள் மிச்சங்களின் சேர்த்தியில் சேமிப்பாகியது.
கொஞ்சம் கொஞ்சமாய் பயமற்று மேகாவும் உறக்கத்திற்கு செல்ல அதிரனின் இதழ்களில் குருஞ்சிரிப்பு படர்ந்தது.
“பேசாம உன்னோட இங்கயே இருந்திடலாம்ன்னு தோணுது மேகா. கைக்குள்ளேயே இருப்ப தானே மேகமே?…” என சொல்லிக்கொண்டவன் இதை அவளிடம் சொன்னால் எப்படி இருக்குமென யோசித்து சிரித்துக்கொண்டான்.
உறக்கமும், உவகையுமாய் விடியல் தொடங்க முதலில் எழுந்துவிட்ட அதிரன் காலை கடமைகளை முடித்துவிட்டு மேகா எழுந்துகொள்ள காத்திருந்தான்.
குளித்துவிட்டு வந்தவன் குடிக்க ப்ளாக் டீ சொல்லிவிட்டு வந்தான். உணவும் தயாராகி இருக்க இப்போது மழை முற்றிலும் வெறித்துவிட்டிருந்தது.
லேசாய் சூரியன் எட்டி பார்க்க ஆரம்பித்திருந்தாலும் மேகங்களின் குளுமையும், சூழலின் இதமும் மாறவில்லை.
இனி மழை வரும் அறிகுறி இல்லை என்பதால் உடனே மேகாவை எழுப்பினான் அதிரன்.
“ஸ்வீட்மார்னிங்டா மேகா. வேக்கப்…” என எழுப்பியதும் எழுந்தமர்ந்துவிட்டாள்.
“திரும்ப வந்திருச்சா?…” என கேட்டு மலங்க மலங்க விழிக்க,
“கண்டிப்பா. நீ பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கு. போகலாம். வா, வா, வா…” என்று எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு உணவை அறைக்கே கொண்டுவர சொல்லிவிட்டு வசந்த்திற்கும் அழைத்துவிட்டான்.
“வா ப்ரேக்பாஸ்ட் முடிச்சுட்டு கிளம்பலாம். லஞ்ச்க்கு இங்கயே திரும்பி வர மாதிரி தான் இருக்கும்…” என்று அவளுடன் சேர்ந்து சாப்பிட எங்கே என கேட்டபடி உணவை உண்டாள்.
வெளியே வந்து பார்க்க ஜீப்பில் போக போவதாக நினைத்தவள் அங்கே நின்றிருந்த பைக்கை பார்த்து மீண்டும் அதிரனை கண்டு திகைத்தாள்.
முழுதாய் கண்கள் மட்டும் தெரியும்படியான உடையும், கையில் க்ளவுஸ், ஹெல்மெட் சகிதம் நின்றிருந்தான்.
“எதுக்கு இந்த ரிஸ்க்? யாராவது பார்த்துட்டா?…” மேகாவிற்கு எங்கே அதிரனை கண்டு சூழ்ந்துவிடுவார்களோ என பயந்து போனாள்.
“பார்த்துக்கலாம். வா வா…” என்று அவளை பின்னால் அமர சொல்ல வசந்த்தும் இன்னும் மூன்றுபேரோடு பைக்கில் நின்றான்.
“இப்படி போகனுமா?…” மேகா கேட்டேவிட,
“இப்படியாவது போகனும் மேகா. வா…” என்று சொல்லியவன் கண்களில் கூலரை மாட்டிக்கொண்டு,
“ஸ்கார்ப் கட்டிக்கோ மேகா…” என்றதும் தானும் முகத்தில் ஸ்கார்ப்பை கட்டிக்கொண்டு ஹெல்மெட் போட்டுக்கொள்ள பைக்கின் சைட் மிரர் வழியே மேகாவை பார்த்தவன் மனதில் அத்தனை உற்சாகம்.
அவனுள்ளம் பறந்ததை போல பைக்கும் மிதமான வேகத்தில் பறக்க குண்டும், குழியுமான பாதையில் மேகாவின் அணைப்பில் அழகிய பயணம்.