வெளியே போட்டோ எடுப்பதற்காக ஆட்கள் காத்துக்கொண்டிருக்க அறைவாசலில் சுபத்ராவின் குரல்.
மேகாவிடமிருந்து சுதாரித்து விலகி நின்றவன் வெளியில் இருந்தவர்களை உள்ளே வரவழைத்தான்.
முதலில் தனித்தனியாகவும், சேர்ந்தும் சில புகைப்படங்களை எடுத்து முடித்த பின்னர் மேகாவின் கையை பற்றிக்கொண்டு மேடையை நோக்கி சென்றான் அதிரன்.
அங்கே செல்ல செல்ல மேகாவின் கால்கள் பின்னிக்கொண்டது. அவளின் பதற்றம் அதிரனின் கைகளில் தெரிய,
“சில் மேகா…” என்றான்.
திருமணம் கூட இரு குடும்பங்களோடு என்பதால் சமாளித்துவிட்டாள். ஆனால் இதுவோ முற்றிலும் வேறு உலகம்.
அவள் தூரத்தில் இருந்து பார்த்து கடந்த உலகம். அத்தனை ஜாம்பாவாங்களும் கண்ணுக்கெதிரே, பார்வையின் அருகே என்னும் பொழுது டென்ஷன் ஆனது.
“மேகா ஸ்மைல் ப்ளீஸ், நம்மளை தான் எல்லாரும் போக்கஸ் பண்ணுவாங்க. லைவ் போகும்டாம்மா…” என்றான் அவன் சமாதானமாக.
“ஹ்ம்ம், அதி…” என்றவள் மெல்லிய சிரிப்பை உதிர்த்தாலும் விழிகளில் இன்னும் அந்த அச்சம்.
அமுதினியனும், மலரும் தங்கள் பெண்ணை ஆசையுடன் பார்த்தனர். மோனிகா, பல்லவனுக்கு ஏக சந்தோஷம்.
இப்போது மேடைக்கு வரவும் ஒவ்வொருவராக வாழ்த்து தெரிவிக்க வர அனைவரையுமே அதிரன் புன்னகையுடன் அறிமுகப்படுத்த கை கூப்பி வணக்கம் தெரிவித்தாள் மேகா.
கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் கடந்திருந்தது. ஒருபுறம் பாடல்கள் பாடப்பட்டுக்கொண்டு இருக்க, அதற்கேற்றாவாறு இன்னொருபக்கம் நடன கலைஞர்களின் ஆடல் நிகழ்ச்சி.
மேகவர்ணாவின் குடும்பத்தினருக்கு நடப்பது என்னவோ கனவுகலகத்தில் என்பதை போல இருந்தது.
சந்திராவுக்கும், பரமசிவனுக்கும் வயிறெரிய கூட நேரமில்லை. அத்தனையயும் வாய்பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மற்ற உறவினர்களும் அதுவே. வந்தவர்களோடு சேர்ந்து அவர்களின் பாதுகாப்பை மீறி புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றாலும் அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவர் வந்தாகிற்று, அடுத்து யார்? அடடே இவங்களும் வந்திருக்கிறாரே? அவர்கள் எப்போது வருவார்களோ? என்பதை போல பேசியபடி ஆச்சர்யத்துக்கொண்டே அமர்ந்திருந்தனர் உறவுகள்.
உறவுகளுக்கு அதில் ஏக பெருமையும் கூட. ஒருசிலரிடம் நெருங்கி போட்டோவும் எடுத்துக்கொள்ள முடிந்தது. பூஜாவின் பாடுதான் பயங்கர கஷ்டம்.
பல்லவன் அவளை யார் அருகிலும் செல்ல கூடாதென்று கட்டளை இட்டிருக்க செல்வத்தின் கண்ணெதிரே பூஜா அசையாமல் அமரவேண்டியதாகிற்று.
செல்வத்திடம் பூஜா சென்று பேசியதை பல்லவன் சொல்லியிருந்தான். அதற்கே அத்தனை சத்தம் போட்டிருந்தார்.
“அவர் உனக்கு புத்தி சொன்னா கொஞ்சமும் காதுல வாங்காம திரும்ப வீடியோ கால்ல ப்ரெண்ட்ஸ்க்கு ஹாய் சொல்ல சொல்லியிருக்க?…” என்று பிடித்து வாங்கிவிட்டார்.
சந்திராவிற்கு இன்னும் சொல்லியிருக்கவில்லை. பூஜா பயந்துகொண்டு சொல்லாமல் இருக்க சொல்லிவிடுவோம் என்றே அவளை அடக்கி வைத்தனர்.
இல்லை என்றால் இங்கேயும் பூஜா எதையாவது இழுத்து வைத்துவிடுவாள் என கண்பார்வையிலேயே வைத்துக்கொண்டார் செல்வம்.
நடிகர், நடிகைகள், பாடகர்கள் இப்படி மாற்றி மாற்றி அனைத்து தரப்பு கலை உலகத்தின் உறுப்பினர்களும் வந்துகொண்டிருக்க இவர்களோடு அடுத்ததாய் வந்தான் உமேஷ்.
முகத்தில் இன்னும் வஞ்சினம் கொண்ட புன்னகையும், கண்களில் வன்மமும் வழிந்தது.
இந்த திருமணம் எப்படி நடந்ததென்று இன்னும் புரியாத புதிர் தான் உமேஷிற்கு. எத்தனை முயற்சிகள்?
பல்லவனிடமே பேசி அடி வாங்காத குறையாக தோற்றுப்போய் வந்திருந்தானே? மறக்க முடியுமா அவனால்.
மேகாவை தனது படத்தில் குடும்பப்பாங்கான கதாப்பாத்திரத்தில் நாயகியாக அறிமுகப்படுத்துவதாக கேட்டு சென்று நூலிழையில் தப்பித்து வந்தவன்.
அதிரனின் சவாலில்லாத பேச்சும், முடிந்தால் செய்து காட்டு என்னும் சொல்லும் அவனை தூங்க விடவில்லை.
எந்த வகையிலும் உமேஷால் மேகாவின் குடும்பத்தினரை கூட நெருங்க முடியாது போக கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்று தனது அடுத்த வாய்ப்பில் கவனத்தை செலுத்தி இருந்தான்.
அதிரனை வைத்து இயக்கிய படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தும் அதற்கடுத்த படங்கள் அத்தனை சுலபத்தில் அமையவில்லை உமேஷிற்கு.
பி.எஸ் தயாரிப்பு நிறுவனம் உமேஷின் அசிஸ்டன்ட் பரத்தை வைத்து அதிரனோடு கூட்டணியமைக்க ஏற்கனவே அரசால் புரசலாய் தெரிந்த உமேஷின் அகம்பாவம் இதில் வெளிப்படையானது.
போதாததிற்கு அவனின் ஆணவ பேச்சுக்களும் கூட. அதிரனை முன்பிருந்தே பார்த்து வருபவர்களுக்கு உமேஷின் இந்த பேச்சுக்கள் சகிக்கவில்லை.
இரண்டாம்கட்ட தயாரிப்பாளர்கள் கூட யோசித்தனர் உமேஷை வைத்து நிம்மதியாக படமெடுக்க முடியுமா என?
“என்னப்பா இவன் அதிரனோடவே ஒத்து போகலை. மத்த ஹீரோ எல்லாம் கெத்தா கொம்பு முளைச்சதுன்னு சுத்தறவங்க. கடைசியில நாம தான் வெறும் கையோட போகனும்…” என தயாரிப்பு சங்க உறுப்பினர்கள் பட்டவர்த்தனமாகவே உமேஷை மறுத்தனர்.
அதில் உமேஷ் இன்னுமே தனது அகம்பாவத்தையும், ஆத்திரத்தையும் தான் வளர்த்துக்கொண்டான்.
திறமைசாலி என்பது போய் அவனின் குணமும், தலைக்கனமுமே அவனின் எதிரியாக உள்ளதை அவன் உணரவே இல்லை.
மீண்டும் மூன்றாம்கட்ட நிலைக்கு தான் தள்ளப்பட்டான். அவனின் திறமை மீது நம்பிக்கை இருந்தாலும் எப்போது என்ன செய்வானோ என்று பயந்தபடி ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பளித்திருக்க அங்கேயும் அதையே தான் செய்தான் உமேஷ்.
“என்னப்பா நீ? உன்னை நம்பி பணத்தை போட்டா என் தலைமேல உட்கார பார்க்க. இன்னொரு படம் தரலாம்ன்னு, தயாரிக்கலாம்ன்னு நினைச்சேன் உன்னை வச்சு. சரிவராது போல?…” என சொல்ல உமேஷிற்கு விழிபிதுங்கியது.
என்ன முயன்றாலும் ஒவ்வொன்றிலும் தனது குணம் தலைதூக்க உமேஷால் முடியவில்லை. எல்லாம் செய்துவிட்டு அடுத்ததாய் கெஞ்சும் நிலை.
மீண்டும் ஒரு படம் இரண்டாம்கட்ட நடிகரை வைத்து தற்போது தான் பேச்சுவார்த்தையில் இருக்க அதனை நல்லவிதமாய் முடித்துவிட நினைத்தான்.
அடுத்ததாக பெரிய நடிகர்களின் பக்கம் கவனத்தை திரும்ப வேண்டும் நினைத்து வைத்திருந்த சமயம் இடியாய் அதிரன், மேகவர்ணா திருமண செய்தி.
உமேஷை பொறுத்தவரை பல்லவன் தன்னை வெறிக்கொண்டு துரத்தியடித்ததில் மேகாவின் குடும்பத்தினர் அதிரன் பக்கமே தலைவைத்து படுக்க போவதில்லை என நினைத்திருந்தான்.
அதுவே அதிரனுக்கு வேதனையளிக்கும் விஷயம் என்றால் தனக்கு இதை விட வேறு என்ன சந்தோஷம்?
நிச்சயம் அதிரனை அறிந்தவரை அவன் மேகாவை விரும்புகிறான் என்பது அவனின் பார்வையிலும், நடவடிக்கையிலும் தெரிந்ததில் இது நடக்காது என்று நினைத்திருக்க எப்படி சாத்தியமானது?
பல்லவனின் கோபம் இப்போது பயமுறுத்துவதாக இருந்தது. இப்போதும் உமேஷ் பல்லவனை பார்க்க அவனும் உமேஷை தான் அழுத்தமாய் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அண்ணனிடமே தங்கையின் அழகை வர்ணித்து படமெடுத்து தென்னிந்திய திரையுலகத்தின் கனவுக்கன்னியாக காண்பிக்கிறேன் என்று பிதற்றியிருக்க பல்லவன் முறைப்புடன் உமேஷை பார்த்தான்.
“என்னங்க? என்னாச்சு?…” என மோனிகா பல்லவனிடம் கேட்க,
“ஒண்ணுமில்லை மோனி. அஷ்வினை குடு. மேடைக்கு போய்ட்டு வரேன்…” என்று வாங்கியவன்,
“நீயும் வா…” என்றான்.
“அப்பவே சுபத்ராம்மா நம்மளை வந்து நிக்க சொன்னாங்க. நீங்க தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க…”
“இங்க சொந்தக்காரங்க உக்கார்ந்திருக்கும் போது நாம மட்டும் மேடையில நிக்கிறது நல்லா இருக்காதே. அதான் அப்பாவும் அம்மாவும் இருக்காங்களே?…”
“அப்ப இப்ப மட்டும்…”
“சும்மா தான். வா போய்ட்டு வருவோம்…” என நடக்க உமேஷ் அதிரனை நெருங்கி இருந்தான் மலர்க்கொத்தோடு.
“வாழ்த்துக்கள் மிஸ்டர் அன்ட் மிசஸ் அதிரன் தேவராஜ்…” என்றவன் பேச்சில் இருந்த வாழ்த்தில் உண்மை இல்லை.
“தேங்க் யூ…” என்று அதிரன் கை குலுக்கவும் அடுத்ததாக வேண்டுமென்றே மேகாவிடம் கை நீட்டினான் உமேஷ்.
“வணக்கம்…” என மேகா கை கூப்ப அதிரனின் விழிகள் இடுங்கின உமேஷை கண்டு.
“நடிக்க மட்டும் நார்த் பொண்ணுங்க. கட்டிக்க குடும்ப குத்துவிளக்கு. வாட் எ ஜோக் அதிரன்…” அன்று உமேஷின் பேச்சில் சனி தான் புகுந்திருந்தது.
தோல்வி, தோல்வி, தோல்வி. அவனால் ஜீரணிக்க முடியவில்லை. தன் கண் முன் அன்றைய நாளில் அதிரன் சொல்லியது தான் இப்போதும் மண்டைக்குள் ஓடியது.
‘நான் சவால் எல்லாம் விடமாட்டேன். எனக்கு பழக்கமும் இல்லை. ஆனா என்னை மீறி இந்த விஷயம் நடக்கவே நடக்காதுன்னு உறுதியா என்னால சொல்ல முடியும்’ என்றானே இறுமாப்புடன்.
இதோ ஜெயித்துவிட்டானே? தன்னை நிம்மதியாய் வாழவிடாமல் செய்தவன் இப்போது சந்தோஷமாக வாழ்கிறானே?
தன்னுடைய எந்த நிலைக்கும் தன்னால் தான் உயர்வும், தாழ்வும் என்பது உமேஷிற்கு புரியவே இல்லை.
நடந்துவிட்ட நிகழ்விற்கு, தற்போதைய தன் நிலைக்கு அதிரனை காரணியாக்கி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள தான் பார்த்தான்.
வன்மம் நிறைந்த அவனின் மூளையில் அவனின் திறமை கூட முடங்கியதை போலானது.