எந்த நேரமும் அதிரனின் முன்னால் ஜெயித்துவிட வேண்டும், அவனை நோகடித்துவிட வேண்டும் என நினைத்தானே தவிர அதற்கு தன்னுடைய நேர்மையான முயற்சிகள் வேண்டும் என்பது புரியாமல் போனது.
அவை எல்லாம் ஒரே நாளில் வெடித்து வெளிவர அதிரன் அழுத்தமாய் பார்த்தால், மேகா புரியாமல் பார்த்தாள்.
அவளுக்கு உமேஷை தெரிந்திருக்கவில்லை. எதற்கு இந்த கோபம் என்றும் தெரிந்திருக்கவில்லை.
ஆனால் பேச்சின் திசை மட்டும் சரியில்லை என்று தோன்ற தானாக அதிரனின் விரல்களை பற்றிக்கொண்டாள்.
“சில் டா மேகா…” என அதிரன் அவளிடம் தலைசாய்த்து சொல்லிவிட்டு,
“நீங்க வந்ததுக்கு நன்றி, ஸ்டே அவே உமேஷ்…” அதிரனால் பொய்யாய் கூட புன்னகைக்க முடியவில்லை.
“நீங்க அழைச்சு வந்திருக்கேன். பேசாம எப்படி போக? ஒருவேளை கல்யாணம் பண்ணி உங்க ஹீரோயினை மூவிக்கும் யூஸ் பண்ணிக்கறதா ஐடியாவா? டூ இன் ஒன் பர்ப்பஸ்…”
உமேஷ் சொல்லவும் தேவராஜ் மகனின் முகமாற்றத்தில் அருகே வர மேகாவின் விழிகளில் நீர் நிறைந்துவிட்டது.
மேடையில் வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. பல்லவனும் அஷ்வினுடன் வர அஷ்வின் அதிரனிடம் தாவவும் சற்றே நிதானமானான் அதிரன்.
‘இதுதான்டா வேணும், நீ கோவப்படவாவது செய்யனும். ஏதாவது ஒன்னு நீ செய்ய அது எனக்கு ஆயிரம் மடங்கு சந்தோஷத்தை தரும்’ என்று பார்த்து நின்றான்.
உமேஷிற்கு வந்த இடத்தில் கொஞ்சமாவது தழைந்து போய் தனக்கொரு இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் அதிரனின் சந்தோஷத்தை கண்டதும் பின்னுக்கு சென்றது.
செல்லும் இடமெல்லாம் ‘அதிரனுடன் பிரச்சனை செய்தவன், அதிரனை வைத்தே படமெடுக்க தெரியாதவன்’ என்ற பேச்சுக்கள் அடையாளமாகி இருக்க அதனை பொய்யாக்கவேண்டிய நிர்பந்தம் இருக்க அதற்கும் முற்றுப்புள்ளி அவனின் வாயால் வைத்துக்கொண்டான் உமேஷ்.
“சீக்கிரமே ஹீரோயினி ஆக வாழ்த்துக்கள் மேடம்…” என்றான் உமேஷ் வஞ்சகத்துடன் சிரித்தபடி.
“யூ…” அதிரன் சீற்றத்துடன் பார்க்க அவனின் இந்த ஆவேசத்தில் இன்னும் அரண்டாள் மேகா.
அதிரன் எதையும் காண்பிக்காமல் அமைதியாக நிற்பான். ஆனால் பல்லவனின் கோபத்தை பார்த்திருக்கிறானே உமேஷ்.
ஆனாலும் ஒரு மிதப்பு, இத்தனை மீடியா, திரைத்துறையினர் கூட்டத்தில் பல்லவனால் என்ன செய்துவிட முடியும் என்று. அது அவர்களுக்கு தான் அசிங்கம் என்று திமிருடன் பார்த்தான்.
“அட வான்னு சொல்றேன்ல…” என யோசிக்காமல் பல்லவன் அவனின் தோளில் கை போட்டு அழைத்துக்கொள்ள அதிரன் உமேஷையே பார்த்தபடி தன் பார்வையை தொடர்ந்தான்.
“அதி காம்டவுன்…” தேவராஜ் மகனின் தோளை தட்ட,
“ஹ்ம்ம், ப்பா…” என்றவன் சுத்தமாய் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.
அதற்குள் அடுத்த ஆட்கள் வர தேவராஜ் வரவேற்க இருந்த சத்தத்தில் உமேஷ் பேசியதை எதையும் யாரும் கேட்டிருக்கவில்லை.
அமுதினியனும், மலரும் கூட மோனிகாவுடன் வந்த உறவு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்க இதனை கவனியாமல் போயினர்.
தன்னை ஒரு நிலைக்கு கொண்டுவந்து மனதை சமன் செய்தவன் ஆழ்ந்த பெருமூச்சுடன் மேகாவை பார்க்க அவள் முகம் வெளிறியிருந்தது.
இவை எல்லாம் அவளுக்கு முற்றிலும் புதிது. அதிலும் உமேஷ் பேச்சுக்கள் சுத்தமாய் ஜீரணிக்கமுடியவில்லை.
வேண்டுமென்றே காயப்படுத்த பேசியவையாகவே இருந்தாலும், அதில் உண்மைத்தன்மை இல்லை என்றிருந்தாலும் அந்த நொடி அதில் ஆட்டம் கண்டது மனது.
என்னவிதத்தில் தன்னை எடை போட்டிருக்கிறான் இவன் என்று நினைத்தவளுக்கு ஒருவிதமாய் கூசிவிட்டது.
“மேகா…” அதிரன் அவளை தோளோடு சேர்த்து அணைவாய் நிற்க,
“அதி, இங்க, முடியலை…” வார்த்தைகள் கோர்வையின்றி திணறி வந்தது.
நிச்சயம் அந்த சூழ்நிலையை அவளால் கடக்க முடியாதென்று அதிரனுக்கு தெரியும். ஆனாலும் செல்லவும் முடியாதே?
“இன்னும் கொஞ்சம் நேரம்டா, போய்டலாம். கெஸ்ட் வந்துட்டே இருக்காங்க…”
“அதி…”
“மேகா, கொஞ்ச நேரம். சிரிச்ச மாதிரி முகத்தை வச்சுக்கோ. மீடியா கவர் பன்றாங்க பாரேன்…”
தள்ளி இருந்து பார்ப்பவர்களுக்கு ரகசியம் போல் தோன்ற அதிரனின் முதல் வலியுறுத்தல் மேகாவிடம்.
எப்போதும் அமைதியாக, இல்லை பிடிவாதமாக, விளையாட்டாக, காதலாக பேசுபவன் குரலில் சிறிது கட்டளை தொனித்ததோ.
மீடியாவிற்காக சிரித்தபடி நடிக்க, ஆம், மேகாவும் இப்போது அதிரனை போல இப்படியான விஷயங்களில் பொதுவில் நடிக்க பழக வேண்டும்.
குடும்பத்தினரிடம் அனுசரித்து போவது வேறு. நடிப்பாய் உறவாடுவது வேறு அல்லவா என்று தோன்றியது.
“மேகா…” என்றவன் மேலும் பேசும் முன் அடுத்தவர் வந்துவிட அதிரனின் தோரணை மாறிவிட்டது.
நொடியில் மாறிவிட்ட அவனை வியந்து பார்த்தவளுக்கு தான் சிரமமாக இருந்தது சட்டென தன்னை அப்படி மாற்றிக்கொள்ள.
அவனுக்கு அது சிரமமாய் தெரியவில்லை. மேகா முயன்று முறுவலித்தாள். அதனையும் கவனித்துக்கொண்டான் அதிரன்.
அவனுக்காக மேகாவும் சிரித்தபடி நின்றாள். முகத்தில் அதுவரை இருந்த ஒளிர்வு குறைந்ததை போல தோன்றியது.
“மேகா என்னடா?…” என்றான் இடையில் யாரும் வரும் முன்.
“ஹ்ம்ம், ஓகே ஓகே. நான் ஓகே…” வேகமாய் அவனிடம் சொல்ல அதிரனின் மனதில் சிறு வலி.
உமேஷ் இப்படி பேசுவான் என நினைக்கவில்லையே. சபை நாகரீகம் அறிந்திருப்பான் என்று எண்ணியது தவறல்லவா?
அதிலும் எந்த மனிதனும் இப்படி யோசனை இல்லாது வந்த இடத்தில் இப்படி பேசுவானா? நிச்சயம் இவன் என்னவிதமான மனிதன்? நினைக்க ஆறவில்லை.
உள்ளுக்குள் கோபம் கனன்றது. எப்போதும் நிதானமாக இருப்பவனின் பொறுமையை வெகுவாய் சோதித்து சென்றிருந்தான் உமேஷ்.
“மாமா மேகம்…” அஷ்வின் அதிரனின் யோசனையை கலைப்பவனாக அவன் முகத்தை பற்றி மேகாவிடம் திருப்ப அதில் அதிரனும், மேகாவுமே லேசாய் சிரித்துவிட்டனர்.
“ஹ்ம்ம் மேகம் தான். என்னோட மேகம். எனக்கு மட்டுமேயான மேகம்…” அவளை பார்த்துக்கொண்டே அதிரன் சொல்ல,
“எனக்கு?…” என்றான் அஷ்வின் இரு கை விரல்களை விரித்து கண்ணை விரித்து.
“நோ நோ…” என்றான் அதிரன் புன்னகையுடன்.
அதில் இருவரும் இன்னும் சற்று இலகுவான மனநிலைக்கு வர மேகாவின் முகத்தில் குறைந்திருந்த வெளிச்சம் இப்போது மலர்ந்தது.
பல்லவனே இப்போது நன்றாக மிரட்டி தான் உமேஷை அனுப்பியிருந்தான் வெளியே.
“உன்னால என்னை என்ன பண்ணிட முடியும்? நீ என்ன பண்ணினாலும் அதுக்கு அதிரன் காரணம்ன்னு நான் மீடியாவுல சொல்லுவேன்…” என பல்லவனிடம் உமேஷ் எகிற,
“உனக்கு சொல்ல மீடியா தேவை. எனக்கு எதுவும் தேவை இல்லை. சொல்ல நீ இருக்கனுமே? என்கிட்ட ஒருதடவை தப்பிச்சிட்ட. இன்னொருவாட்டி சிக்கிடாத. அவ்வளோ தான் பார்த்துக்கோ…” என்று சொல்லியிருந்தான்.
அமுதினியன் குடும்பமும் ஓரளவு செல்வாக்கான குடும்பமாகவே இருக்க, அவரின் நண்பர்களின் வட்டமும் சொல்லிக்கொள்ளும்படி தான் இருந்தது உமேஷ் சேகரித்த தகவல்களின் படி.
பூர்விகம் தான் கஷ்ட ஜீவனமே தவிர இப்போதிருக்கும் நிலையில் ஏனையோர் பழக்கவழக்கத்தில் பெருமிடம் தான்.
கை நீட்ட யோசிக்காத முரட்டு பல்லவனிடம் உமேஷின் வார்த்தைகள் எடுபடவில்லை.
மண்டபத்தை விட்டு வெளியே வரவும் தான் செய்த தவறே மண்டையில் உரைத்தது உமேஷிற்கு.
கிளம்பிய பொழுது இந்த வரவேற்பை வைத்து தனக்கு ஆதாயம் தேட நினைத்து வந்திருக்க நடந்ததோ தனது கட்டுப்பாட்டை மீறிய நிகழ்வுகள்.
அப்போது தான் அதிரனின் சீற்றமும், தேவராஜின் கோபமுமே அவன் மண்டையில் சுளீரென உரைத்தது.
எத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கிறோம் என்னும் நினைவு அவனின் ஆணிவேரையே ஆட்டியது.
“ச்சை…” என்று முகத்திலட்டித்துக்கொண்டான் உமேஷ்.
கண்மண் தெரியாத கோபமும், தீயாய் வளர்த்து வந்த வன்மத்தின் வேகமும் இப்போது அவனின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கி இருந்தது.
ஆனாலும் ஓரத்தில் சிறு அலட்சியம், பெரிதாய் என்ன செய்துவிடுவார்கள்? அதிரன் அந்தளவிற்கு இறங்கமாட்டான் என்று நினைத்துக்கொண்டான் உமேஷ்.