மேகா என்று வருகையில் அந்த அதிரனின் பார்வைகளும், முடிவுகளும் வேறு என்பதை உமேஷ் உணரவில்லை.
ஏதோ வந்ததற்கு அவனை கோபப்படுத்தி, அவனோடு இருந்தவளை வேதனைப்படுத்தி பார்த்தாகிற்று. போதுமென்று நினைத்தது அவனின் மனது.
உள்ளே வரவேற்பு முடியவிருக்கும் தருணம் குடும்ப உறுப்பினர்கள் குடும்பம் குடும்பமாய் சென்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.
பிரபலங்கள் எல்லாம் கலைந்திருக்க குடும்பத்தினர் மட்டும் எஞ்சி இருக்க அனைவரும் இன்னும் நெருங்கி அதிரனிடம் பேச ஆரம்பித்தனர்.
கிளம்பும் நேரம் சொல்லிக்கொண்டு கிளம்ப அனைவருமே வந்திருக்க இன்முகத்துடன் பேசிக்கொண்டு இருந்தனர்.
இலகுவான சூழ்நிலை. அதுவரை வேறு எந்தவித சங்கடங்களும் இன்றி இருக்க அதனை உடைப்பதை போன்று இருந்தது அடுத்த பேச்சு.
வெளியூரில் இருந்து வந்திருக்கும் மேகாவின் சித்தப்பாவும் அவரின் மகனும் அதிரனிடம் கூடுதலாக உரிமையுடன்,
“மாப்பிள்ளை, பையனுக்கும் சினிமாவுல நடிக்கனும்னு ரொம்ப ஆசை. நீங்க தான் என்னன்னு பார்த்து வளர்த்துவிடனும்…” என்று கேட்டுவிட மேகாவிற்கு சங்கடமாகி போனது இப்படி பட்டென்று கேட்டதில்.
இதை அமுதினியனும் எதிர்பார்க்கவில்லை. மலரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு தர்மசங்கடமாக போக,
“சித்தப்பா இதை பேச இப்பவா நேரம்? அவங்க கிளம்பனும்…” என்றான் பல்லவன் கோபத்தை காட்டாமல் மறைத்துக்கொண்டு.
“ஏன்டா நம்ம வீட்டு மாப்பிள்ளை. நமக்கில்லாத உரிமையா?…” என்றதும் அதிரன் அமைதியாகவே இருந்தான் ஒரு சிரிப்புடன்.
“சித்தப்பா, அவங்க கிளம்பனும்…” என்றான் பல்லவன்.
“மாப்பிள்ளை…” என அந்த சித்தப்பா மீண்டும் அதிரனை முற்றுகையிட,
“பார்க்கலாம்ங்க…” என்று சொல்லிவிட்டு நகர அதுவே என்னவோ வாக்கு கொடுத்துவிட்டதை போல ஆனது அவருக்கு.
மேகாவும், அதிரனும் மண்டபம் விட்டு கிளம்பிய நேரம் மொத்த உறவுகளிடமும் இதனை கடைபரப்பிவிட்டார் அவர்.
“வரு புருஷன் என் பிள்ளையை நடிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டார்…” என்றே உறுதியாக சொல்ல அவரை எப்படி வாயடைக்க செய்வதென்றே தெரியவில்லை அமுதினியன் குடும்பத்திற்கு.
அவர்கள் வீடு வந்து சேரும் வரை கூட ஓயவில்லை இந்த பேச்சு. பெரிய வேனில் தான் அனைவரும் திரும்பி இருக்க அவர்கள் மறுநாள் தான் கிளம்புவதாக இருந்தது.
வீடு வந்த பின்னாலும் இதே பேச்சாக இருக்க பொறுமையிழந்து போனார் பரமசிவம்.
“அவன் பிழைக்கிறது ஒரு பிழைப்பு. இதுல உன் மகன் சேர்ந்து கூத்தடிக்க போறானா? ஒழுங்கா படிச்ச படிப்புக்கு சோலிக்கழுதையை பார்க்க சொல்லு…” என கத்திவிட்டார் அத்தனைபேரின் முன்பும்.
“பெரியப்பா பார்த்து பேசுங்க. என்ன நினைச்சிட்டு மாப்பிள்ளையை அப்படி பேசறீங்க?…” என உடனே பல்லவன் கொந்தளித்துவிட்டான்.
இவர்கள் பேச பேச எத்தனை தான் பொறுமையாக இருப்பது என்று வெறுத்துவிட்டது அவனுக்கும்.
இப்போதும் கொஞ்சமும் மரியாதை இன்றி அத்தனைபேரின் முன்னிலும் அதுவும் தங்களையும் வைத்துக்கொண்டு தங்கள் வீட்டு மாப்பிள்ளையை இப்படி கீழிறக்கி பேசுவதை ஏற்க முடியவில்லை.
“என்னடா என்னமோ சிலுத்துக்கிட்டு வார? உள்ளதத்தான சொன்னேன். பணமிருந்தா போதுமா? தரம் வேண்டாமா?…” பரமசிவம் பேச பேச அமுதினியன் கொதித்து போனார்.
“அண்ணே, என்ன தரமில்லாம பார்த்துட்டீங்க? வார்த்தையை அளந்து பேசுங்க…” என சொல்லிவிட உறவுகள் எல்லாம் சண்டையை கவனித்து இருவருக்கும் சப்போர்ட்டாக நின்றார்கள்.
சந்திரா பரமசிவத்தின் பக்கம் நிற்க நினைக்க வருவின் திருமணத்திற்கு பூஜாவிற்கு மலர் நகை தந்திருக்க வேறு வழியின்றி அமுதன் பக்கம் நிற்கவேண்டியதானது.
பரமசிவம் அதற்கு மேல் தன்னை அடக்கி வைக்க முடியாமல் ஆட ஆரம்பித்திருந்தார்.
அதிலும் தன்னுடைய சொந்தங்களே தன்னை பொருட்டாக மதியாமல் பெரிதாய் அதிரன் குடும்பத்தை தூக்கிவைத்து பிரமித்து பேசுவதும் அவனிடம் உதவி கேட்பதும் என்று பொறுக்க முடியவில்லை.
எத்தனை ஆடம்பரம்? எத்தனை பெரும் புகழும்? அதிலும் தேவராஜ் அமுதினியனை அணைத்தபடி வரும் முக்கியஸ்தர்களிடம் ஒருவர் விடாமல் அறிமுகப்படுத்துவதும் பெருமையாக பேசுவதும் என்று அடிவயிறு காந்தியது.
கூடவே மண்டபத்தில் இருந்து போட்டிருக்கும் உடைகள், அங்கிருந்த அலங்காரங்கள், உணவுகள் என ஒவ்வொன்றையும் சில்லாகித்து பேச பேச காதுகொடுத்து கேட்க முடியவில்லை.
தன் தம்பிக்கு கிடைத்த மரியாதை அவருக்கும் சேர்த்து தான் என்பதை அவர் உணரவே இல்லை.
தம்பி கஷ்ட ஜீவனத்தில் தனியாக தன் கையை விட்டு உழைத்து முன்னேறியதையே இன்றுவரை ஜீரணிக்காதவர்.
இப்போது இப்படி ஒரு அந்தஸ்து. வேறு எதை சொல்லி மட்டம் தட்டவாம்? அவர்கள் சிரிப்பை நிறுத்துவதாம்? அவர்கள் சந்தோஷத்தை குறைப்பதாம்?
தெரியவில்லை. ஆனால் தன் கண் முன்னே அவன் தன்னை மீறி வளர்ந்து இன்று ஒரு பெரும் உயரத்தில் இருக்கும் குடும்பத்துடன் சம்பந்தம் வைத்து இன்னும் இன்னும் எங்கோ சென்றுகொண்டிருப்பது பொறுக்கவில்லை.
பேசிவிட இதோ என்ன பேசினாலும் அமைதியாக இருக்கும் தம்பியே எதிர்த்துவிட மனித தன்மை இழந்தார்.
“பார்த்துக்கிட்டே இரு. உன் மவளை இன்னும் நாலஞ்சு மாசத்துல அவன் துரத்திவிட போறான். வாழாம வர போறா. சினிமாக்காரனுங்க புத்தி அதானே?…” என்று சொல்லிவிட அமுதன் வாயடைத்துபோய் நிற்க,
“யோவ் வாய மூடுயா. வெளில போயா…” என்று சொல்லிவிட்டான் பல்லவன்.
“என்ன என்னையே வாயா போயான்னு…”
“ஆமா அப்படித்தான் பேசுவேன். என் தங்கச்சி வாழ ஆரம்பிக்க முன்னையே இப்படி பேசறியே?…” என்று மேலும் பேசும் முன் மற்ற உறவினர்கள் பல்லவனை பிடித்துக்கொண்டனர்.
“என்ன வளர்த்தீங்க? எங்கப்பா உழைச்சாங்க. அந்த காச வாங்கி அதுல சாப்பாடு போட்டீங்க. அப்படி பார்த்தா உங்க எல்லாத்துக்கும் எங்கப்பா தான் உழைச்சு கொட்டிருக்காங்க…” என பல்லவன் சொல்ல,
“என்னங்க, கொஞ்சம் அமைதியா…” என்றாள் மோனி பதட்டமாய்.
“இன்னவரைக்கு உன் கை காசுல எங்களுக்கு என்னய்யா பண்ணின நீ? சொல்லு? நிறைமாசமா இருந்த எங்கம்மா திரும்ப வாரதுக்குள்ள வீட்டை விட்டு போக சொன்னவர் தானே? உனக்கெல்லாம் பேசவே தகுதி இல்லை…” என்றான்.
அவமானத்தில் பரமசிவம் முகமே சிறுத்து போக பல்லவனின் இந்த பேச்சில் வெகுண்டார்.
“எங்க உங்க பிள்ளைங்களை நான் சொல்றது சரியா தப்பான்னு சொல்ல சொல்லுங்க. கேட்போம். மூணு பிள்ளை பெத்து வளர்த்து கட்டிக்குடுத்திருக்கீங்க. அதுல ஒன்னு பொம்பளை பிள்ளை. எப்படிய்யா வருவை அப்படி சொல்ல மனசு வந்துச்சு உனக்கு?…”
பல்லவனால் தாங்கவே முடியவில்லை. பொறாமை ஒரு மனிதனை இத்தனை தூரம் பேச வைக்குமா? அதிலும் ரத்த பந்தத்திலேயே என்று நொறுங்கி போனான்.
“என்னைக்காச்சும் பெரியப்பா பிள்ளைங்கன்னு பிரிச்சு பார்த்திருப்பாரா எங்கப்பா? இல்லை நானும் வருவும் தான் பார்த்தோமா? நம்ம அண்ணன், நம்ம அக்கான்னு தானே பழகினோம்? உன் கண்ணு முன்னாடி தானே அவளும் வளர்ந்தா?…”
மலரும், அமுதனும் நொடிந்துபோய் அமர்ந்துவிட்டனர். சற்று முன் மகளை பார்த்திருந்த கோலம் கண்ணில் நீருடன் நிறைந்தது.
அந்த சந்தோஷம் வீடு வரும் வரை கூட நீடிக்கவில்லை என்னும் பொழுது முழுதாய் கசந்த உணர்வு.
அதிலும் ‘சினிமாக்காரன் புத்தி, மகள் வாழாமல் வருவாள்’ இந்த வார்த்தைகள் பெரிதாய் மனதிற்குள் தாக்கத்தை தந்திருந்தது அந்த பெற்றோருக்கு.
அப்போதுதான் வீடு வந்த செல்வம் அனைவருமே ஹாலில் கூட்டமாக நிற்பதை கவனித்து வேகமாய் உள்ளே ஓடி வந்தார்.
மண்டபத்தில் இருந்து சிலர் பஸ் ஸ்டாண்ட் செல்லவேண்டும் என்பதால் அமுதனின் காரை எடுத்து சென்று விட்டுவர கிளம்பி இருந்தார்.
அப்போதுதான் வீடு வந்திருக்க ஒருவரின் முகமும் சரியில்லை. ஒருபக்கம் பரமசிவம் வெட்டவா என்பதை போல நிற்க, பல்லவன் கண்ணீருடன் களையில்லாமல் இருக்க அமுதனும், மலரும் அமர்ந்திருந்த விதம் பதறியது செல்வத்திற்கு.
“என்னாச்சு? என்ன பிரச்சனையா?…” என கேட்க,
“இப்ப வந்து கேளு. பணம்ன்னா நீயும் மாறுவன்னு எனக்கு தான் எப்பவோ தெரிஞ்சிருச்சே. எல்லாவனும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க தான? பெரிய மனுஷன்னு ஒரு மரியாதை வேணாமா?…” என பேச,
“பெரியப்பா இவரை வெளில போக சொல்லுங்க. நான் வெறியாகிருவேன்…” என்றான் அதுவரை தளர்ந்து இருந்த பல்லவன் மீண்டும் அவர் பேசிய பேச்சில்.
அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் பரமசிவம் தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு கிளம்ப அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் எல்லாம் பல்லவனிடம் பார்வையாலேயே மன்னிப்பை கேட்டு சென்றனர்.
“அப்பா…” என்று அமுதன் பக்கத்தில் பல்லவன் வர,
“அமுதா நாளைக்கு பேசிக்கலாம். இப்ப ரூம்க்கு போப்பா..” என்று அவர்களை அறைக்கு அனுப்பிய செல்வம்,
“இத்தனை பேர் இருந்தும் அண்ணனை பேசவிட்டு வேடிக்கை பார்த்தீங்களாக்கும்? போங்க போய் தூங்குங்க. நாளைக்கு ஊர்க்கு கிளம்பனும்…” என்றதும் அனைவரும் முணுமுணுப்புடன் கலைந்து செல்ல அமுதனின் அறைக்குள் நுழைந்தார் செல்வம்.
“என்னப்பா நீ? இதுக்கு போய் இப்படி சரிஞ்சிடலாமா? அவரை பத்தி தெரியாதா என்ன?…” என அமுதனை சமாதானம் செய்தார்.
“சரியாம எப்படி மாமா?…” என மோனிகா நடந்ததை எல்லாம் சொல்ல மலர் கதறி அழுதுவிட்டார்.
“என்னம்மா சொல்ற?…” செல்வம் பேச்சற்று நிற்க,
“அத்தை எதுக்கு அழறீங்க? இதுக்கெல்லாம் சேர்த்து நம்ம பொண்ணு நல்லா இருப்பா. சும்மா இருங்க. இது ஒரு திருஷ்டி. இந்த கண்ணீரோட போய்டுச்சு. அப்படி நினைச்சுக்கோங்க…” என மோனிகா தான் அவர்களை தேற்றினாள்.
அன்றிரவு யாருக்கும் உறக்கமில்லை. அங்கேயே தான் விழித்தபடி அமர்ந்திருந்தனர் அவர்கள் ஐவரும் அஷ்வினுடன்.
திருமணம் என்ற ஒன்று அனைத்திற்கும் முடிவல்ல. அதுவே ஒரு ஆரம்பம். அது காதல் கொண்ட இரு மனங்களுக்கு மட்டுமல்ல.
அவர்களை உறவாய் கொண்ட இரு குடும்பங்களுக்கும். அவர்களை சூழ்ந்திருக்கும் சமூகத்திற்கும்.