அப்படி தம்பியின் தயவில் மகளை சேர்த்ததும் மட்டுமல்லாமல் பூஜாவிற்கு அறிவுரை வேறு,
“இங்க பாரு, நல்லா படிச்சு பெயிலாகாம பேர் வாங்கு. இவள மாதிரி படிச்சு மானத்தை வாங்காத…” என்று மேகாவை காண்பித்து பேச,
“இவங்கக்கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும் வரு. நீ என்ன படிக்கன்னு கூட தெரியலை. வாய் மட்டும் நீளும்…” என்று பல்லவன் திருப்பி கொடுக்க பதில் பேச வந்தவரிடம் கையமர்த்தி,
“எங்கப்பாவுக்கு அப்பறம் இந்த பொறுப்பெல்லாம் என்னோடது தான். மனசுல வச்சிட்டு பேசி பழக்குங்க. இல்ல மொத்தமா உறவே இல்லைன்னு ஆகிடும்…” என்று சத்தமின்றி எச்சரிக்க அதிர்ந்துவிட்டார் சந்திரா.
“பாத்தியா அமுதா?…” என்று இட்டுக்கட்டி இன்னும் சேர்த்து சந்திரா சொல்ல,
“நான் எப்ப அப்படி சொன்னேன்? உங்களுக்கு எதுவும் வேணும்னா கேளுங்க. என்னை இப்படி பேசாதீங்க. அவ்வளோ தான்…” என்று தான் எதுவும் சொல்லவே இல்லை என சாதித்துவிட்டான் பல்லவன்.
அமுதன் கூட தன் அக்காவை அதிருப்தியுடன் நம்பாத பார்வை பார்க்க சுதாரித்தார் சந்திரா.
இப்படி குடும்ப அரசியல் கழுத்தை பிடிக்கும் வகையில் மகளின் திருமண ஏற்பாட்டுகள் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் நடைபெற மூத்த அண்ணன் பரமசிவம்,
“இங்க பாரு அமுதா? பொண்ணை கேட்டாங்கன்னு சும்மா குடுத்துட கூடாது. பார்த்து பக்குவமா தான் குடுக்கனும். பெரிய இடம். தேடி வருதுன்னா அங்க ஏதோ வில்லங்கம் இருக்கும் போலயே? அங்க போனா பொண்ணு நல்லா இருக்கனுமே?…” என்றார்.
அப்படி அச்சானியமாக பேசிவிடவும் மலருக்கு அழுகையே வந்துவிட்டது மகளின் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னரே இத்தனை குடைச்சல் குடுக்கிறார்களே என்று.
“இங்க பாருங்க, பெத்தவரும், கூட பிறந்தவன் நானும் இருக்கேன். விசாரிக்காம குடுக்க நாங்க ஒன்னும் ஒன்னும் தெரியாதவங்க இல்ல…” என்ற பல்லவன்,
“எல்லாருக்கும் பாவம் பார்த்து சகிச்சிட்டு போனா எங்கப்பா அப்படியே ஏமாந்தவர்னு நினைக்க வேண்டாம். போனா போகுதுன்னு தான் பேசாம போயிட்டிருகோம்…” என்று படக்கென்று சொல்லிவிட்டான்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு…” என்று பரமசிவம் மீண்டும் பேச,
“கல்யாணத்தை பேச தான் வந்திருக்கோம். இப்ப பேச இஷ்டம் இல்லன்னா விடுங்க….” என்றவன்,
“அப்பா இன்னைக்கு வேலை நிறைய இருக்கு. ரெண்டுபேருமே இங்க வெட்டிவேலை பார்த்தா யார் கடையை பார்க்கறது. அனாமத்தாவா இருக்கு? எந்திங்க போவோம்…” என்று கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அதன் பின்னர் பெண் பார்க்க வரும்பொழுது கூடவே வந்து பல்லவன் இருந்து விஷயத்தை சொல்லிவிட்டு தான் தந்தையை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
நிச்சயத்திற்கு பெண்ணிற்கு மாப்பிள்ளை வீட்டினர் மேகாவிற்கு உடை எடுத்துவிடுவார்கள்.
ஆனால் தன் குடும்பத்தினர் அனைவருக்கும் எடுத்துக்குடுக்க அத்தனை ஆசையாக இருந்தார் அமுதினியன்.
பல்லவன் திருமணத்தின் பொழுது அப்படி செய்ய முடியவில்லை. காதல் திருமணம் ஏனோதானோவென்று வந்துவிட்டு சென்றுவிட்டார்கள் அண்ணன் வீட்டினர்.
இதுவாவது சிறப்பாய் இருக்கவேண்டும் என்று நினைக்க அனைவரையும் அழைத்துக்கொண்டு வந்து அவரவருக்கு பிடித்தமாக எடுத்தும் தந்துவிட்டாகிற்று.
“செலவு தான்ப்பா, ஆனா மனசுக்கு நிறைவா இருக்கே? அடுத்து இனி பேரப்பிள்ளைகள் விசேஷம் தான். நாம என்ன ஒன்னோன்னுத்துக்குமா எடுக்க போறோம்? இப்ப அடுத்து வரு கல்யாணம்…” என்று சொல்லிவிட்டார்.
மேகவர்ணாவின் திருமணத்தில் அப்படி யாருக்கும் உடைகள் எதுவும் எடுத்து தரவேண்டிய அவசியம் ஏற்பட போவதில்லை என்பதை உணராது போனார்.
நிச்சயத்தின் அன்று முதல்நாளே வீட்டை அலங்கரிக்க ஆட்கள் வந்துவிட வீடே அழகாய் மாறிவிட்டது.
பெரிய வீடுதான். உள்ளே அலங்கார பொருட்கள் எல்லாம் மரத்தால் இழைக்கப்பட்டிருந்தது கலைநயத்துடன்.
அண்ணன்கள், அக்கா குடும்பத்துடன் வந்தால் தங்கும் விதமாக தான் சேர்த்தே கட்டியிருந்தார்.
இப்படி ஒவ்வொன்றிற்கும் அவர்களின் வசதியையும் பார்த்து கட்டியிருக்க அவரின் மனது பரமசிவத்திற்கும், சந்திராவிற்கும் புரியாமல் போனது.
“இருக்க நமக்கு வீடே இல்லாத மாதிரி நமக்கு கட்டிருக்கானாம்? பவுசா குத்திக்காட்டுறான்…” என்று அக்காவை கூட்டு சேர்த்துக்கொண்டு பேசினார் பரமசிவம்.
ஆனாலும் அங்கே வந்து தாங்காமல் இருந்ததில்லை. உறவாடாமல் தவிர்த்ததும் இல்லை.
அன்று காலையே அண்ணன்கள் குடும்பத்தினரும், அக்காவின் குடும்பத்தினரும் வந்து சேர்ந்தார்கள் அமுதினியன் வீட்டிற்கு.
வந்ததில் இருந்து வேலைகள் எல்லாம் பரபரப்பாய் இருந்தது. உணவுகள் காலையில் இருந்தே வெளியே தான் பேசி வைத்திருந்தார்கள்.
வீட்டில் ஆட்களும் நிறையவும் கல்யாண களையே வந்துவிட்டதை போன்று உற்சாகமாக இருந்தது.
அமுதினியன் சுற்றி சுற்றி மகளை பார்த்துக்கொண்டே தான் இருந்தார். அத்தனை நாள் இல்லாத ஒரு சோபை மகளின் முகத்தில் மிளிர்ந்தது.
அது அவளை இன்னும் அழகாய் காட்ட பார்த்து பார்த்து பூரித்து போனார் அமுதினியன்.
“ப்பா, சும்மா இப்படியே பார்க்காதீங்க. மத்த வேலையை யாரா பார்ப்பா?…” என பல்லவன் கூட கிண்டல் பேச,
“அதான் நீயிருக்கியேப்பா…” என்றார் மகனின் கன்னத்தை வருடி யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்து தன்னுதட்டில் பதித்துக்கொள்ள இன்னும் பலமாய் சிரித்தான் பல்லவன்.
“எத்தனை வருஷம் ஆனாலும் இதை மாத்திடமாட்டீங்களே? ஏன் எல்லாரும் பார்க்க என்னை கொஞ்சினா என்னவாம்? யார் என்ன சொல்றாங்கன்னு நானும் பார்க்கிறேன்…”
பல்லவன் செய்த கலாட்டாவில் குழந்தை அஷ்வின், மோனிகா, மலர், மேகா என்று கூட்டம் கூடிவிட சிரிப்புடன் பார்த்தார் அனைவரையும்.
“என்னடா…” மலர் கேட்க,
“என் கன்னத்தை கிள்ளி கொஞ்சினார் ம்மா அப்பா. எல்லாரும் பார்க்க கொஞ்சுங்கன்னேன். அதுக்கு வெக்கமாகிருச்சு அப்பாவுக்கு…” என பல்லவன் சொல்ல பேரன் அஷ்வினை கையில் வாங்கிக்கொண்டார் அமுதினியன்.
“அப்ப நான்?…” என மேகா கன்னத்தை காண்பிக்க மகளுக்கும் அதை செய்ய பேரன், அடுத்ததாக அண்ணன் பிள்ளைகள், பூஜா என்று மாற்றி மாற்றி அவர்களை சூழ்ந்துகொள்ள அவ்விடமே கொண்டாட்டமாக இருந்தது.
முகம்கொள்ளா புன்னகையுடனும், வஞ்சகமில்லா அன்புடனும் அவர்கள் மகிழ்ந்திருக்க,
“மயக்கி வச்சிருக்கான்…” என நொடித்தார் சந்திரா.
“ம்க்கும், இப்படியே இருந்தா சாயங்காலம் நிச்சயத்தை யார் நடத்த? போங்க போங்க…” என்று பரமசிவம் உறுமலுடன் வர கலைந்துவிட்டார்கள்.
மாலை நிச்சயத்திற்கு மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட இன்னும் சில நெருங்கிய சொந்தங்களும் வந்து சேர்ந்தார்கள்.
மாப்பிள்ளையாக வந்திருந்த பிரதாப்பின் கண்கள் மேகாவை தான் தேடியது. எங்காவது தென்படுகிறாளா என்று.
சம்பிரதாயங்கள் ஆரம்பித்து பொதுவான பேச்சுவார்த்தைகளில் இருவீட்டினரும் பரிபூரணமாக சம்மதிக்க தட்டு மாற்றப்பட்டு சபைக்கு அழைத்துவரப்பட்டாள் மேகவர்ணா.
அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்து சபையில் விழுந்து வணங்கியவள் அவர்கள் நீட்டிய தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று புடவை மாற்றி வர நலுங்கு ஆரம்பித்தது.
திருமணத்திற்கு அச்சாரமாக மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஆரம் ஒன்று மேகவர்ணாவின் கழுத்தை அலங்கரிக்க பார்த்து பார்த்து காதில் புகை வராத குறை தான் சந்திராவிற்கு.
எல்லாம் முடிந்து சாப்பிட அனைவரையும் அழைத்து செல்ல மேகாவை அறைக்குள் அனுப்பி வைத்தார்கள்.
ட்ரெஸ்ஸிங் டேபிளில் வந்து அமர்ந்தவள் தலையில் இருந்த அட்சதைகளை கண்ணாடியில் பார்த்துவிட்டு வெட்கத்துடன் புன்னகைக்க அங்கே ஒருவன் தன்னையே கண்ணெடுக்காது ரசித்து கவனிப்பதை அறியாமல் போனாள்.
“ஹ்ம்ம் பிடிச்சிருக்கு…” என்று மேகாவின் கண்களும் சேர்ந்து சிரித்தது.
“இப்பவே அவர் கவனிக்கிறதை தான் நீ கவனிச்ச. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். அப்பறம் எங்க எங்களை கவனிக்க போற?…” மோனிகா லேசாய் கன்னத்தை கிள்ளி சொல்ல,
“அண்ணி ப்ளீஸ்…” என்று சிணுங்கினாள் மேகவர்ணா.
இன்னும் ஒருமாதத்தில் திருமணம் என்ற வார்த்தையில் அலைபேசி திரையில் இருந்தவன் முகமும் மாற தன்னை சுதாரிக்கவும் முடியாமல் சில நொடிகளில் ஆஃப்லைன் சென்றுவிட்டான் அவன். அதிரன் தேவராஜ்.