கண்ணை மூடி அவன் அமர்ந்திருக்க இவற்றை கவனித்துக்கொண்டிருந்த ஹர்ஷத்தும் அதிரனிடம் அப்படி ஒரு மாற்றத்தை எதிர்பாக்கவில்லை.
ஒருவனால் பார்வையிலேயே உணர்வுகளை கொட்ட முடியுமா? திரையில் அந்த பெண் வந்ததில் இருந்து காதல் காட்சியில் கூட பார்த்திராத ஒரு பாவம் அதிரனின் முகத்தில்.
உண்மையில் திகைத்து தான் இருந்தான் ஹர்ஷத். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேரலையை துண்டித்துவிட்டு அமர்ந்தவனின் முகம் நிதானமிழந்து எதையோ யோசித்தபடி இருந்தது.
கேட்கவும் பயமாக இருந்தது ஹர்ஷத்திற்கு. அமைதியாக தள்ளி அமர்ந்துகொண்டான் அவனே அழைக்கட்டும் என்று.
“ஹர்ஷத், இன்ஸ்டால இன்கன்வினியன்ஸ் போஸ்ட் போடு. இன்னொரு நாள் திரும்ப லைவ் வரேன்னு சொல்லி…” என்று சொல்லிய அதிரன் எழுந்து சென்று பால்கனியில் நின்றான்.
மனது அமைதியின்றி தவித்ததை போல இருக்க நெஞ்சை தடவியபடி அங்கேயே ஊஞ்சலில் அமர்ந்துவிட்டான்.
அன்று நேரலையில் ஐந்து ரசிக, ரசிகர்களுடன் நேரடியாக வெகுநேரம் உரையாடியவன் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஆறாவதாக பூஜா என்ற பெண் நேரலையில் இணைவதற்கு விடாமல் முயற்சி செய்வது வரவும் சிரித்தபடி அவளுக்கு அனுமதி அளித்தான்.
சிறுபெண். திரையில் அதிரனை கண்டதும் துள்ளி குதித்தாள். நம்பமுடியாமல் லேசாய் கண்கள் கூட கலங்க,
“அதிரன். ஓஹ் மை காட். சத்தியமா நம்ப முடியலை. என்னால நம்பவே முடியலை. எத்தனைதடவை லைவ்ல உங்க கூட பேச முயற்சி பண்ணினேன் தெரியுமா? இந்த லைவ் தான் எனக்கு கிடைச்சிருக்கு. நான் ரொம்ப லக்கியா பீல் பன்றேன்…”
“ரிலாக்ஸ் பூஜா…” என்றான் மென்னகையுடன்.
அவள் இன்னும் இன்னும் என்னென்னவோ பிதற்ற, அவனை எப்படி பிடிக்கும் என்று சொல்ல அதிரன் சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டே இருந்தான் இரு கைகளையும் கோர்த்து தாடையில் ஊன்றியவாறு.
“நீங்க ரொம்ப ஹேண்ட்சம்…”
“ஆஹாங், தேங்க் யூ…” என்றான் பதிலுக்கு.
“உங்க கூட பேசறேன். இருங்க நிஜமான்னு கிள்ளி பார்த்துக்கறேன்…” என்று அவள் ஆர்பாட்டம் செய்ய,
“கிரேசி…” என்று சிரித்தான் ஒரு விரிந்த புன்னகையோடு.
“படிக்கறீங்களா பூஜா?…” என்று அவளிடம் பேச,
“ஆமாம், பர்ஸ்ட் இயர்…” என சொல்லி படிப்புடன் கல்லூரியையும் சொல்ல வர,
“காலேஜ் நேம் வேண்டாம். இருக்கட்டும்…” என்றான்.
“இன்னைக்கு எங்க வீட்டுல விசேஷம்…” என்று சொல்லும் பொழுதே அவளின் மொபைல் பேட்டரி லோ என்று காண்பித்தது.
“ஐயோ, என்னோட பேட்டரி லோ…” என தலையிலடிக்க,
“ஓகே, உங்களை மீட் பண்ணினதுல சந்தோஷம்…” என இரு கைகளை விரித்து பை சொல்ல,
“ப்ளீஸ் ப்ளீஸ், போய்டாதீங்க அதிரன். ஒரு முக்கியமான ஆளை உங்களுக்கு காமிக்கறேன். ப்ளீஸ், ப்ளீஸ். ரொம்ப நாளா முயற்சி பண்ணி இன்னைக்கு தான் முடிஞ்சது. நான் இன்னும் எதுவும் பேசவே இல்லை…” என சொல்லிக்கொண்டே அவள் ஏதோ அறைக்குள் நுழைவது தெரிந்தது.
அதிரனுக்கு அத்தனை சிரிப்பாக இருந்தது பூஜாவின் இந்த படபடப்பும், பேச்சும், இப்போதைய பதட்டமும்.
“ஓகே, ஓகேம்மா. வெய்ட் பன்றேன். பேசுங்க…” என்றான்.
மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பவன், அதற்கான மரியாதையையும் தருபவன் தான் அதிரன்.
அவளின் ஆர்வத்திற்கு மதிப்பளித்து பூஜா சொல்லியதை போல வேறு பேசும் முன் இப்படியாகவும் பொறுமையானான்.
மற்றவர்களுடன் அன்று நிறைய நேரம் உரையாடி இருக்க எங்கே வைத்துவிடுவானோ என்று பதட்டத்தில் கெஞ்சியதை மறுக்க முடியவில்லை.
“ஓகே, கைஸ், பூஜா ஸ்பெஷல் கெஸ்ட்டோட வரட்டும். அதுவரை உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்…” என்று கீழே வந்து கொண்டிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லலானான்.
இன்னும் இணைப்பிலேயே இருக்க அந்த அறை அவனுக்கு தெரிய, அவனுக்கு மட்டுமல்லாது உலகத்தின் மூலை முடுக்கில் இருந்து இந்த நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பவர்களுமே கவனித்தார்கள்.
எந்த எரிச்சலுமின்றி பூஜாவிற்காக காத்திருந்தவனிடம் பேசிக்கொண்டிருக்க அவனை பாடலையும் பாட சொல்ல,
“ஓகே, என்னோட நீங்களும் பாடுங்களேன்…” என அதிரன் சொல்லவும்
“ஒன, டூ த்ரீ. சித்திர மேனி தாழம்பூ, சேலை அணியும் ஜாதி பூ..” என மயக்கத்தோடு அவன் பாட அந்த அறையின் கதவை திறந்துகொண்டு நுழைந்தாள் பெண்.
புதிதாய் உள்ளே வந்தவள் மீது கவனம் செல்ல பாடிக்கொண்டிருந்தவனின் பார்வை அவளை அளவெடுத்தாலும் பாட்டை நிறுத்தவில்லை.
பாட்டின் ரசனையா? அவளை பார்த்ததன் ரசனையா? என பிரித்தறிய முடியாத பாவனைகளுடன் நான்கு வரி பாடி முடித்துவிட்டு மௌனமாக பார்த்தான் மேகவர்ணாவை.
முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்திருக்க, இதழ்களில் மின்னும் புன்னகையுடன் அந்த டேபிளின் முன்னால் அமர அதன் அதிர்வில் மொபைல் லேசாய் சாய்ந்துவிட்டது.
பூக்களும், நகைபெட்டியும் மேஜையில் அங்கே கசகசவென்று இருக்க அதனிடையே இந்த மொபைல் வந்தவர்களுக்கு தெரியவில்லை.
ப்ளூடூத் வேறு மொபைலுடன் தொடர்பு இணைத்திருக்க அதிரனே அழைத்திருந்தாலும் கேட்கும் வாய்ப்பில்லை மேகாவிற்கு.
அழைக்கும் நிலையில் அதிரனும் இல்லை. சில்லென்று ஒரு உணர்வு அவனறியாமல் உள்ளத்தை குளிர்விக்க லேசாய் சாய்ந்த திசையில் அதிரனும் புன்னகையுடன் தலைசாய்த்து பார்த்தான் மேகாவை.
தன்னை அத்தனை கோடி மக்கள் இந்த நிகழ்வுடன் கவனித்துக்கொண்டிருப்பதை மறந்தான். நேரலையில் இருப்பதை மறந்தான்.
தன்னெதிரே இருந்தவளை மட்டும் உலகம் மறந்து அவன் கவனிக்க அத்தனையும் அனைவரின் பார்வைக்கும் விருந்தானது.
இதை எதையும் உணராது ஒரு குடும்பம் நிச்சயம் நல்லவிதமாய் முடிந்ததில் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, கடல் கடந்து தன்னை தொட்ட அந்த உணர்வில் அதிரனோ குழம்பி இருந்தான்.
இதை பற்றி எந்த கவலையும் அற்று தன்னுடைய செயலே முதல் என்று செய்தியை தனது ஊடகத்தில் முதலில் பதிவேற்றி பணம் பார்த்துவிடும் வேகம் அத்தனைபேருக்கும்.
அந்த நோக்கில் பற்றிக்கொண்ட நெருப்பாய் சமூக வலைதளத்தில் இருவரின் புகைப்படம் மற்றும், அந்த சின்ன வீடியோ கிளிப்பிங் இரண்டையும் பகிர்ந்து இஷ்டத்திற்கு பேசி தீர்த்தனர்.
அதிரன் தேவராஜின் நேரலையில் ஒரு சுவாரஸியம்.
காதல் திருமணமா, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?
வலைதள வழியாக பெண் பார்க்கும் படலமா?
யாருக்கும் அறிவிக்காது ரகசிய நிச்சயமா?
சாதாரண குடும்ப பின்னணியில் தேவராஜ் குடும்பத்து மருமகளா?
மணப்பெண்ணை பார்த்த காதல் மன்னனின் கண்களில் காதல் ரசம்.
இப்படி எக்கச்சக்க யூகங்களில் இருவரின் புகைப்படங்களை இணைத்து அவர்கள் ஜோடிப்பொருத்தம் முதற்கொண்டு அவர்களே கதை கிளப்பி விட்டுவிட்டார்கள்.