“ஹ்ம்ம், கொஞ்ச நேரம் ப்ளீஸ்…” என கால்களையும் எடுத்து மடித்தபடி தலை சாய்ந்துகொள்ள தலையசைப்புடன் சிரித்துக்கொண்டே தான் உடைமாற்ற சென்றான்.
சென்றவன் வர தாமதமாக மேகா அப்படியே கண்ணை மூடியிருந்தாள். வீட்டிற்கு வந்து சேர்ந்ததை பற்றி இன்னும் தன் வீட்டிற்கு சொல்லவில்லை.
‘போனதும் போன் செய், இல்லை மெசேஜ் செய்தால் கூட போதும்’ என்று சொல்லியிருந்தார் மலர்.
அதை நினைத்துக்கொண்டே மேகா சாய்ந்திருக்க அதிரன் தலையை துவட்டியபடி வர அதில் லேசாய் தெறித்து விழுந்த நீர் துளிகளில் எழுந்தமர்ந்தாள்.
“குளிச்சிட்டீங்களா?…” என கேட்டவள் அதிரனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி இருக்க,
“ஹ்ம்ம் மேகா, ஹாட் பாத் எடுத்துட்டேன். நீயும் குளிச்சுட்டு வா. பிரஷா இருக்கும். ரொம்ப நேரம் நின்னுட்ட இல்லையா?…”
“ஹ்ம்ம், ஓகே. இந்த அக்ஸசரீஸ்…”
“பேக் கொண்டு வர சொல்றேன். அதுல வச்சிடு. நாளைக்கு லாக்கர்ல வச்சிடலாம்…” என்றவன் அவளின் நகைகளை கழற்ற ஆரம்பிக்க,
“இல்லை நானே பார்த்துக்கறேன்…” என்று விலக்கினாள்.
“என்னவோ கேட்கனும்னு நினைக்கிற மேகா?…” இந்த அதிரன் அவளுக்கு எப்போதும் பழக்கப்பட்ட அதிரன்.
ஆனாலும் இந்த புன்னகையும் கனிவும், ஒருநொடி ஆவேசமும் சீற்றமுமாய் மாறியதை மறக்க முடியவில்லை.
மீண்டும் மீண்டும் அடக்கப்பட்ட எரிமலையென அவன் நின்ற அந்த ஷணம் மேகாவிற்குள் திரும்ப திரும்ப தோன்ற யோசிக்காமல் அவனின் தோள் சாய்ந்து அணைத்துக்கொண்டாள்.
“ஹேய் பொண்ணே, என்னடாம்மா?…” என்று அதிரனும் கட்டிக்கொள்ள,
“தெரியலை…” என்றவளுக்கு மனதே சரியில்லை.
இந்த நாள் என்னவோ அவளுக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுக்க ஆரம்பிப்பதை போலிருந்தது.
“மேகா, என் கோபத்தை பார்த்து பயந்துட்டியா?…” அவன் கேட்டதும் வேகமாய் நிமிர்ந்து பார்க்க,
“அப்போ அதுதான், ரைட்…” என புன்னகைத்தான்.
“இல்லை, நீங்க, அவ்வளோ கோபம். நான் நினைக்கவே இல்லை…”
“அந்த நிமிஷம் கோபம் வரலைன்னா தான் நான் அப்நார்மல். ஆனாலும் என்னால அதை காட்ட கூட முடியலை…” என கூறியவன்,
“உன் விஷயத்துல எப்பவும் நான் வேற அதிரன் தான் மேகா…” என்று அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவன் அணைப்பை இறுக்க அவளின் நகைகளும், உடையின் வேலைபாடுகளும் அவனின் தோலை பதம் பார்த்தது.
“ஸ்ஸ்ஸ்…” என மெல்ல விலகியவன்,
“ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது…” என்றான் கண்சிமிட்டி.
“ஓஹ், நான் இப்போ மாத்திட்டு வரேன்…” என எழுந்தாள் மேகா.
அவள் செல்வதையே பெருமூச்சுடன் பார்த்தவனின் மனது உள்ளே உலை கலனாக கொதித்துக்கொண்டு இருந்ததை மேகா அறியவில்லை.
“என்னங்க…” என்று நடந்துகொண்டிருந்தவள் திரும்ப அவளை பார்த்திருந்தவன் இந்த அழைப்பில் மீண்டும் புன்னகையுடன்,
“என்னங்க மேகம்?…” என்றான் குறும்பாய்.
“என் மொபைல் கேட்க திரும்பினேன், கிண்டல் பன்றீங்க…” இடுப்பில் கை வைத்து பார்த்து அவள் சொல்ல,
“இன்னும் இதை கொஞ்ச முறைப்பா, மிரட்டலா கூட கேட்கலாம். இல்லையா டேய் அதின்னு கேட்கலாம். கேளு சொல்றேன்…” என வம்பு செய்ய,
“ஆரம்பிச்சாச்சா?…” என சலித்தவள்,
“வீட்டுக்கு போனதும் கால் பண்ணுன்னு அம்மா சொல்லியிருந்தாங்க. மெசேஜ் கூட அனுப்பலை. அவங்க கிளம்பிட்டாங்களான்னும் கேட்கலை…”
“சரி நான் பேசிடறேன். நீ பாரு. நான் அப்படியே கீழே போய்ட்டு வரேன். அப்பாவை பார்க்கனும்…”
“இப்பவா?…” மேகா அவனருகே வேகமாய் வந்து நின்றாள்.
“இப்பவே தான். சில விஷயங்களை ஆற போட முடியாது மேகா…”
“அதி…” மேகாவின் முகம் கலவரமானது.
“இது காதல் இல்லை. காலம் கனியட்டும்ன்னு காத்திருக்க மேகாவுக்காகவும் இல்லை. இது வேற…” என்று அவளின் கன்னம் தட்ட,
“அந்த ஆள் சரியில்லை. அதனால உங்களுக்கு எதுவும் பிரச்சனை…”
“டேய் என்ன இது? என்னை எதாவது செய்ய முடியுமா? இல்லை அதுக்கு யோசிக்க கூட உமேஷ்க்கு நாளாகும்…” என்றவன்,
“ஒருத்தரை விட்டுவைக்கவும் அவருக்கு தகுதி வேணும்னு இப்ப எனக்கு பாடம் கத்து குடுத்திருக்கார் மிஸ்டர் உமேஷ். படிச்ச பாடத்துக்கான குருதட்சணை அவரை போய் சேரனுமே?…” என்றவன் குரலில் அத்தனை தீவிரம்.
“அதி…”
“நீ குளிச்சிட்டு வா. பேசலாம். நான் கீழே போய்ட்டு வரேன்…”
“நானும் வரேனே?…”
“இப்பவே நீ ரொம்ப டயர்டா இருக்க. வேண்டாம். பேசிட்டு நான் வந்திடறேன். உனக்கு சாப்பிட எதுவும் வேணுமா?…”
“ம்ஹூம். இப்ப எதுக்கு?…”
“டின்னர் சரியாவே சாப்பிட்ட மாதிரி தெரியலையே?…”
“அப்ப பால் மட்டும் போதும்…”
“இல்லை, கொஞ்சம் ப்ரூட்ஸ் சேர்த்து அனுப்பறேன். நீ சாப்பிட்டு. தூக்கம் வந்தா ஹ்ம்ம், ம்ஹூம், வேண்டாம். நான் அதுக்குள்ளே வந்திருவேன்…” என்று சொல்லி அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு கதவை திறந்து வெளியேறினான்.
மீண்டும் தானே கதவு பூட்டிக்கொள்ளும் வரை அங்கேயே தான் பார்த்தபடி நின்றாள் மேகா.
அவர்கள் துறையில் என்ன நடக்கும் என்னும் அடிப்படை கூட தெரியாமல் அவனை தான் தடுப்பதை போல பேசியிருக்க கூடாதோ என அப்போது தோன்றியது.
‘உனக்கு என்ன தெரியும் சினி ஃபீல்ட் பத்தி? அதிரனுக்கு தெரியாததா? அவர் கவனிச்சுப்பார்’ என மனசாட்சி எடுத்து கூட தனது அலங்காரத்தை கலைக்க ஆரம்பித்தாள்.
ஒவ்வொன்றாய் எடுத்து வைக்கவே நேரமானது. அதிரனிடமே உதவி கேட்டிருக்கலாம் என தோன்ற ‘அவன் எப்படி உதவுவான்?’ என நினைக்கையில் முகத்தில் வெட்க பூக்கள்.
அப்போது தான் தேவராஜ் வந்திருக்க அவருக்கு குடிக்க பாலை எடுத்துவர வந்த சுபத்ரா கீழே இறங்கி வந்த மகனை பார்த்தார்.
“உன் அப்பாவும் அதி வந்தா வெய்ட் பண்ண சொல்லுன்னு சொன்னார். நான் தான் அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அப்படி நீங்க நினைச்ச நேரமெல்லாம் வரமாட்டான்னு சொன்னேன்…” என்று அவர் சொல்லிய பாவனையில் அதிரன் புன்னகை விரிந்தது.
“ஹ்ம்ம்…” என்று கை விரல்களை குவித்து தாடையில் தாங்கியபடி அவன் கதைகேட்கும் பாவனைக்கு மாற,
“என்ன ஹ்ம்ம்? என் மருமகளுக்கு சாமர்த்தியம் போதலை…” என்றார் சலிப்பாக.
“மேகாவுக்கு சாமர்த்தியம் இல்லையாமாம்?…”
“ஆமா, இருந்தா உன்னை திரும்ப கீழே வர விட்டிருப்பாளா அந்த பொண்ணு?…”
“மேகா, மேகவர்ணா…” அதிரன் புன்சிரிப்புடன் சொல்ல,
“அடடா, வாய் தவறி வந்திருச்சுப்பா…” என்றவர்,
“என் சமத்து இருந்திருந்தா அப்ப தெரிஞ்சிருக்கும்…”
“ஓஹ்…”
“என்ன ஓஹ்? எனக்கு வாய்ச்ச மருமக வாயில்லா பூச்சியா போய்ட்டாளே? அவளுக்கும் சேர்த்து நான் பேசனும் போல?…”
“ம்மா பூச்சி இல்லை…”
“பின்ன என்னவாம்?…”
“மேகா, மேகவர்ணா…”
“ஆஹா, நான் தூங்க கிளம்பிட்டேன். நீ இந்த மந்திரத்தை சொல்லிட்டே இரு…” என அவர் கோவித்து கிளம்புவதை போலிருக்க அதிரன் ஒன்றும் சொல்லாமல் அதற்கும் சிரிக்க,
“ஹ்ம்ம், கோவிச்சுட்டு போனா கூட சமாதானம் செய்யமாட்டேன்ற. சரி அதை விடு. குடிக்க என்ன வேணும்?…”
“க்ரீன் டீ குடுங்க…” என்றான்.
“நினைச்சா ப்ளாக் டீ. நடுராத்திரின்னா க்ரீன் டீ…” என சொல்லிக்கொண்டே கிட்சனிற்கு சென்றார்.
“ம்மா, மேகாவுக்கும் ப்ரூட்ஸ், பால் அனுப்புங்க. சரியாவே சாப்பிடலை…”
“அதெல்லாம் நான் பார்த்துப்பேன்…” என சத்தம் மட்டும் வர தேவராஜ் வந்துவிட்டார்.
“சொல்லு அதி, என்ன பண்ணலாம்?…” என வந்ததும் நேரடியாக கேட்க அதிரனின் விரல்கள் தாளமிட ஆரம்பித்திருந்தது.
முகத்தில் தீவிர சிந்தனை. முடிவெடுத்தாகிற்று. பின்வாங்க போவதில்லை அவன்.
“உமேஷ் என்ன பேசினான்னு நான் கேட்க போறதில்லை. ஆனா நீ சொல்றது தான் ஃபைனல்…”
“டிஸைட் பண்ணிட்டேன் ப்பா. கடிக்க வர பாம்புன்னு தெரிஞ்சும் விட்டுவைக்க முடியாதில்லையா?…” எனும் பொழுது சுபத்ரா வந்துவிட்டார்.