“போங்க, நான் ஞாபகமா வச்சுக்கனும் நினைக்கும் போது தான் இப்படி செஞ்சு மறக்கடிச்சிருவீங்க…” என அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் அந்த அறையை விட்டு வெளியே வர சிரித்தபடி அவனும் பூட்டிக்கொண்டு வந்தான்.
“ஹேய் நில்லுடா…” என வந்தவன்,
“ஏன் இவ்வளோ நேரம் வாஷ்ரூம்ல? இப்போ கால் வலி பரவாயில்லையா?…”
“ஹ்ம்ம், பெட்டர். ஹாட் வாட்டர்ல கால் வச்சிருந்தேன். இப்ப பரவாயில்லை…”
“தூக்கம் வருதா?…”
“ம்ஹூம், இல்லையே…” என்றாள் அங்கிருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டபடி.
“ஓகே ட்ரைவ் போகலாமா?…” அடுத்ததாய் கார் ஓட்டுவதை போல கையால் செய்து காண்பித்து கண் சிமிட்டி கேட்க,
“இப்பவா?…” என்றவள் உடனே,
“ம்ஹூம், வேண்டாம்…”
“நான் தான் ட்ரைவ் பண்ண போறேன். கார்ல நம்ம ரெண்டு பேர் மட்டும் தான். இப்ப சொல்லு. ஓகேயா? வேண்டாமா?…” என்றதுமே மேகாவின் முகம் பளிச்சென்றாக அப்படி ஒரு சிரிப்பு.
“ப்பா, இதுக்கே உன்னை கூட்டிட்டு தினமும் எங்கியாச்சும் போய்ட்டே இருக்கலாம் போல?…” என்று இரு கன்னங்களையும் கைகள் கொண்டு தாங்கினான்.
“உங்களுக்கு ஓகே வா? மேகமலை மாதிரி இல்லை இங்க. எப்பவும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்…” குரலில் கவலை தொனிக்க,
“எனக்கு பழக்கம் தான். போகலாம்டா…”
“அப்ப ஓகே டபுள் ஓகே…” என்றாள் உடனே தன் இரு கைகளின் பெருவிரலையும் அவனுக்கு காண்பித்து.
அதனை பிடித்து முத்தமிட்டவன் மொபைலை மட்டும் எடுத்துக்கொண்டு மேகாவை தோளில் கை போட்டு அழைத்து செல்ல,
“ட்ரெஸ் மாத்திக்கறேன். இது நைட் ட்ரெஸ்…”
“ஒன்னும் பிரச்சனை இல்லை, வா…” என்றவனின் கையை எடுத்துவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தவள் ஒரு பாட்டியாலா சுடிதாரை போட்டுவிட்டு அவசரமாக நெற்றியில் பொட்டை ஒட்டிவிட்டு ஓடி வந்தாள்.
அதுவரை அறையின் வாசலில் நிலையில் மேலே கைகளை பிடித்து ஊன்றியபடி அவளுக்கு காத்திருந்தான் அதிரன்.
“அவ்வளோ தானா?…” என கிண்டலாய் சிரிக்க,
“ஆமா ஆமா…” என்றவளுக்கு அத்தனை சந்தோஷம்.
பெரிதாய் பொது இடங்களுக்கு எங்கே சென்றுவிட கூடும் அதிரனோடு. இனி அதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதை விட வாய்ப்பு இருக்குமா என்பதே சந்தேகமாய் தான் இருந்தது மேகாவிற்கு.
அதற்கு அவசியமே இல்லை என்பதை போல அதிரன் அன்றே அவளை அழைத்துக்கொண்டு கிளம்ப கால்கள் தரையில் இல்லை.
அவளின் அகத்தின் மகிழ்ச்சி முகத்திலும் அப்பட்டமாய் தெரிய அதிரனுக்கு இதை விட வேறென்ன வேண்டும் என தோன்றியது.
தேவராஜிற்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு காரை எடுக்க வழக்கம் போல இடைவெளி விட்டு அவனின் பாதுகாவலர்கள் பின் தொடர்ந்தனர்.
அதை மேகா கவனித்தலும் பெரிதுபடுத்தவில்லை. இப்போதிருக்கும் இந்த சந்தோஷத்தை அவளால் இழக்க முடியாதே.
நெரிசலான பகுதியை விட்டு இப்போது கடற்கரை சாலையில் மிதமான வேகத்தில் காரை செலுத்தியவன் சன்ரூஃப் டாப்பை நீக்கினான்.
கடல் காற்று அசுரவேகத்தில் காருக்குள் நுழைந்தது. மேகாவின் கூந்தலில் இருந்த க்ளிப்பை எடுத்துவிட்டான்.
“ம்ஹூம். சென்னையில இருந்தேன்னு தான் பேர். அப்படி எல்லாம் வந்ததில்லை. எங்க போனாலும் பேமிலியோட தான். காலேஜ் போன பின்னாடி ப்ரெண்ட்ஸ் கூட தியேட்டர் போவேன். அதுவும் ரொம்ப ரேர்…”
மேகா சொல்லிக்கொண்டிருக்க ஆள் அரவமற்ற ஓரிடத்தில் காரை பார்க் செய்து மேகாவுடன் கீழே இறங்கினான் அவன்.
“என்ன இறங்கிட்டீங்க?…”
“வா, ஒரு வாக் போகலாம்…” என்றதும் மேகாவின் பார்வை சுற்றிலும் அலைபாய்ந்தது. யாரும் இருக்கிறார்களா என்று.
“ஹ்ம்ம், சுத்தம். இப்பவும் நீ என்னை முதல்தடவை தனியா பார்க்க வந்த மாதிரியே ஃபீல் பண்ணிட்டிருக்க மேகா…” என சொல்லி கேலி பேச,
“கிட்டத்தட்ட இது ஒரு ப்ரைவேட் ஏரியா மாதிரி. அடிக்கடி வருவேன் நான் அப்பாவோட. அதனால தான் இங்கயே வந்தாச்சு…”
“ஹ்ம்ம்…”
“இவ்வளோ தான் உன் ரியாக்ஷனா?…”
“வேறென்ன?…”
“கார்ல கன்னமெல்லாம் பிடிச்ச?…”
“அது நீங்க குடுத்த சர்ப்ரைஸ்ல சந்தோஷத்துல…”
“ஆஹாங், அப்போ மேகத்துக்கு இன்னொரு சர்ப்ரைஸ்…” என்றதும் அவனின் முன் வந்து நின்றவள்,
“என்ன? என்ன?…” என்றாள் ஆர்வமாக.
“கண்டுபிடியேன்…”
“நிச்சயம் நான் சொல்ல போறதில்லை. எனக்கு தெரியாது. நீங்களே சொல்லிருங்க…”
“ஹ்ம்ம், ஒரு ட்ரை கூட குடுக்கமாட்டேன்னு இருக்க…” என சொல்லி அவளின் தலையை பிடித்து ஆட்டியவன்,
“நாளைக்கு உன் அப்பா வீட்டுக்கு போய்ட்டு வரலாமா?…”
“நிஜமாவா?…”
இப்போது உண்மையில் மேகா சந்தோஷத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறை தான்.
போன முறை சென்ற பொழுதே சரியில்லாமல், மனதிற்கு சங்கடத்துடன் திரும்பி வந்திருக்க, மீண்டும் அங்கே செல்ல நாளாகும் என நினைத்திருந்தாள்.
இப்படி திடீரென்று போகலாம் சொல்லவும் மேகா அவனை அணைத்துக்கொள்ள அதிரனுக்குள் ஒரு அதிர்வு.
அவனின் மேகத்தின் இந்த சந்தோஷத்தை தன்னால் என்றுமே நிலைக்க வைக்க முடியுமா என்று.
அவள் சாதாரணமாக வாழ்ந்த ஒரு வாழ்க்கை, தங்கள் திருமணத்தால் முற்றிலும் மாறி இருக்க சின்ன சின்ன சந்தோஷங்களை கூட இனி அவள் ஏக்கத்துடன் எப்போதோ என எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவாளே என தோன்றியது.
அதிரனின் கைகள் மேகாவை சுற்றிக்கொண்டது. முகத்தில் மெல்லிய வருத்தம் இழையோடினாலும் தன்னால் முடிந்தளவு அவளின் இந்த புன்னகையை வாட விட கூடாது என சபதம் எடுத்திருந்தான்.
“என்னாச்சு?…” அவனின் அணைப்பின் சிறு வித்தியாயத்தை கூட அவன் மேகம் உணர்ந்தது.
“என்ன என்னாச்சு?…” என்று அதிரன் சட்டென புன்னகைத்து கேட்க,
“இல்லை உங்க முகம் மாறியிருந்துச்சு, இந்த அணைப்பும்…” என அவள் கவனித்து கேட்டதும் நெற்றியில் முட்டியவன்,
“இதெல்லாம் கூட மேகத்துக்கு தெரியுதே…” என்றான் அதிரன்.
அவன் இன்னும் நெருங்கி நிற்கவும் மேகா விலகினாள் தூரத்தில் நின்றிருக்கும் பாதுகாவலர்களை கண்டு.
அதிரனும் திரும்பி பார்த்துவிட்டு மேகாவை பார்த்தான். அவனுடன் நெருக்கமாய் இப்படி வெளியில் இருக்கவே அவள் அத்தனை தயங்க,
“இல்லை இருக்கட்டும்…” என்றவள் அவனின் தோளில் மட்டும் சாய்ந்துகொள்ள அதுவே அதிரனின் தவிப்பை கூட்டியது.
“மேகா…” என மீண்டும் தனக்கெதிரே கைவளைவில் கொண்டுவந்தவன் இன்னும் தள்ளி இருளுக்குள் சென்றான்.
கடலின் ஓசைகளுக்கு இணையாய் அவனின் மனமும் பேரிரைச்சலுடன் சப்தம் எழுப்பி ஆர்ப்பரித்துக்கொண்டு இருந்தது.
“கஷ்டமா இருக்கா மேகாம்மா?…”
“இல்லை, இல்லை…” என்றவளின் பார்வை மீண்டும் அங்கே செல்ல அதற்கு மேல் தாளமாட்டாமல் அவளின் இதழ்களோடு தன்னை முழுதாய் பொருத்திக்கொண்டான் அதிரன்.
மெல்ல மெல்ல அவனின் மனதை போல மேகாவும் அமைதியடைய அவளின் முகத்தை நிமிர்த்தி கூந்தலை ஒதுக்கினான்.
“உன்னை சங்கடப்பட வைக்கிற, கஷ்டப்படுத்தற எதையும் நான் செய்யமாட்டேன்டா. ப்ராமிஸ்…” என சொல்ல கண்களை கரித்துக்கொண்டு வந்தது மேகாவிற்கு.
கையை கோர்த்தபடி மணலில் அமர்ந்துவிட்டனர் இருவரும் கடலை வெறித்தபடி.
பேச்சுக்கள் இல்லாத அந்த மௌனத்தில் இருவரின் உணர்வுகளும் ஒன்றுக்கொன்று மனதார உறவாடிக்கொண்டிருந்தது.
தனது சின்ன சின்ன ஆசைகளால் அதிரனுக்கு எந்த கஷ்டத்தையும் எதையும் தான் செய்துவிட கூடாது என மேகாவும், மேகாவின் மனதை எவ்விதத்திலும் தவிக்கவிட கூடாதென்று அதிரனும் மனதில் பதித்துக்கொண்டனர்.
பேரன்பு கொண்ட இதயங்களின் நினைவுகள் எல்லாம் நிகழ்வுகளை மாற்ற கூடுமானால் நிதர்சனங்களுக்கு அங்கே மதிப்பில்லாமல் போய்விடும் அல்லவா?