அதன் பின்னர் தான் விலகி இருந்த மொத்த சோர்வும் ஆட்கொள்ள அப்படி ஒரு உறக்கம் இருவருக்கும்.
காலை வெகு நேரம் கழித்தே விழித்தனர். மேகாவின் உள்ளங்கை அதிரனின் கன்னத்தில் பதிந்திருக்க விழிக்கும் பொழுதே அவள் விரல்களில் முதல்நாள் இட்டிருந்த மெஹந்தியின் வாசம்.
ஆழ்ந்து நுகர்ந்தவன் கையை எடுத்து பார்த்தான். திருமணத்தில் தன்னுருவத்தை வரைய செய்திருந்தவன் இப்போது இருவரின் முகத்தையும் வரைய வைத்திருந்தான்.
மாட்டேன் என்று மறுத்தவளிடம் அதிரனின் சமாதான பேச்சுக்களோ, கட்டாயப்படுத்ததலோ இல்லை. புன்னகை மட்டுமே.
“போட்டுக்கோ மேகா, கல்யாணத்தப்போ தனியா இருந்தேன் உன் கைல. இப்ப ரெண்டுபேரும் சேர்ந்து. இல்லை இப்பவும் கப்பிளா வேண்டாம்ன்னா என்னை மட்டும் வரைஞ்சுக்கோ…” என்று சிரிக்க அவனை அடுத்து எங்கே அவள் மறுக்க?
காலை மெஹந்தி இட்டிருக்க மதியம் பார்த்து ரசிக்க கூட நேரமின்றி அதிரனின் வேலைகள் அதிகமிருந்தது.
அதன் பின்னரும் மாலை வரவேற்பு, உமேஷ் வருகை என கடந்து போக முதல்நாள் இரவு வெளியே சென்ற பொழுதும் பெரிதாய் ஞாபகமில்லை அதிரனுக்கு.
இப்போது ரசித்து பார்த்தவனின் விரல்கள் மேகாவின் கையிலிருந்த மருதாணியில் கோலமிட அந்த விரல் கூச்சத்தில் மேகாவும் விழித்துக்கொண்டாள்.
“ஹ்ம்ம், அதி…” என புரண்டு படுத்தவளால் கையை எடுக்க முடியாது போக கண் திறக்க அதிரன் அவளின் உள்ளங்கையில் அழுத்தமாய் முத்தமிட்டு தன் முகத்தை புதைத்துக்கொண்டான்.
“குட்மார்னிங் மேகா…” என மெல்ல சொல்ல,
“குட்மார்னிங்…” என்றவள் கையை இழுத்துக்கொள்ள பார்க்க மொத்தமாய் அவன் அணைப்பிற்குள் வந்தாள்.
“டைம் என்னன்னு பாருங்க…”
“நீ பார்த்தா போதும். எதுக்கு ரெண்டுபேரும் பார்த்துட்டு…” என சிரித்தவன்,
“நைட் பயங்கர தூக்கமோ மேகத்துக்கு?…”
“ஹ்ம்ம், படுத்தது தான் தெரியும். தூங்கிட்டேன்…” என்று சொல்ல அதிரனின் மொபைலில் சத்தம்.
“ஹப்பா…” என்று அவன் லேசாய் திரும்பியதும் எழுந்து ஓடியேவிட்டாள் மேகா.
“மேகா பார்த்து…” அவள் ஓட்டத்தில் சிரிப்புடன் சொல்லியவன் தனது மொபைலை எடுத்தான்.