அதன் பின் அவளின் படிப்பும், எழுதிய பரிட்சை, எங்கே யாரிடம் மூன்று வருடம் ட்ரெய்னிங் என்பதெல்லாம் பேசி முடிவானது.
இடையே செல்வத்தை அழைத்து அவரிடம் தனியே பேசினான் அதிரன். முதல்நாள் நிகழ்வுகளை பற்றி கேட்டதுமே அவரின் அனுமானம் ஊர்ஜிதமாகியது.
“பேசினது வரை தெரிஞ்சிருக்கே மாப்பிள்ளை? இங்க யாராச்சும்…” என்றதற்கு,
“சீக்ரெட்…” என்றான் ரகசிய குரலில் புன்னகையுடன்.
“இது இப்ப இல்லை. மேகாவை பார்த்த அன்னைக்கே அவளுக்காக, குடும்பத்துக்காக நான் ஏற்பாடு செஞ்சது. ஆனா நேத்து நடந்ததை நானுமே எதிர்பார்க்கலை…” என்றான் கவலையுடன்.
“எங்க கவலை எல்லாம் பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கறதை பார்த்தாலே மறைஞ்சிரும் மாப்பிள்ளை. என்ன ஒன்னு அந்த வார்த்தை மனசை கலங்கடிச்சிருச்சு…” என்றார் தழுதழுக்கும் குரலுடன்.
“வாழ்க்கையை சொல்லி புரியவைக்க முடியாது மாமா. வாழலாம்…” என்று புன்னகைத்தவன் மீது இன்னுமின்னும் அபிமானம் கூடியது.
இரவு நேரம் நெருங்க நெருங்க எங்கே தன்னை அழைத்துக்கொண்டு கிளம்பிவிடுவானோ என்று யோசித்தபடி மேகா இருக்க இரவிற்கு சப்பாத்தியும், பருப்பும் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டான் அதிரன்.
இரவும் கவிழ உறங்கும் நேரம் வந்துவிட்டது. அதிரன் பேச்சுக்கள் குறையவே இல்லை.
அழகாய் பேசிக்கொண்டே இருக்க செல்வமும் கிளம்ப மனதின்றி அங்கேயே இருந்தார்.
அவரின் குடும்பம் காலையிலேயே சென்றிருக்க இரவு வருகிறேன் என்று சொல்லிவிட்டார் அவர்.
அதிரனும் இருக்க பேச்சு சுவாரசியம், அனைத்திற்கும் மேல் அஷ்வினின் அலப்பரைகள்.
‘என் மாமா, என் மாமா’ என்று சொல்லிக்கொண்டு மற்ற யாரையும் கண்டுகொள்ளவில்லை அவன்.
அமுதினியனுக்கு இங்கே தங்க சொன்னால் தங்குவானோ, இல்லை என மறுத்து கிளம்பிவிடுவானோ என யோசனையாக இருக்க பல்லவனின் முகத்தையே பார்த்தபடி இருந்தார் அவரும்.
சொல்லவும் தயக்கம், இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் ஆசை. இன்னும் வெளியே அவனின் ஆட்கள் நின்றுகொண்டு இருக்க கிளம்பித்தான் விடுவான் என நினைத்தார்.
“தூங்கற நேரமாகிடுச்சோ?…” மடியில் உறங்கிய அஷ்வினை கண்டு கேட்க,
“ஆமா, நேரமாகிடுச்சு…” என்ற அமுதன்,
“இல்லை, இல்லை மாப்பிள்ளை, லேட்டாகும்…” என்றும் மறுத்து கூறினார்.
எங்கே சொன்னால் கிளம்பிவிடுவானோ என்று. மகளின் முகத்தையும் வேறு பரிதவிப்புடன் பார்க்க அவளுக்கு தந்தையின் தவிப்பு உருக்கிவிட்டது.
உரிமையாய் சொல்ல கூட எத்தனை தயக்கம் என்று மனதில் பெரிதாய் ஒரு அழுத்தம்.