“ஏன்ப்பா? அதெல்லாம் இல்லை….” என்றாலும் அவளிடம் சிறு தடுமாற்றம்.
முதல்வகுப்பில் பிகாம் படித்து முடித்த பெண். சி.ஏ எக்ஸாம் இரண்டுமுறை எழுதி தோல்வியுற மீண்டும் அதை எப்படியாவாது படித்து ஜெயித்துவிடவேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவள்.
ஒரு பரிட்சை தோல்வி என்றாலும் அத்தனையும் மீண்டும் எழுதவேண்டிய கட்டாயம் உள்ள பாடப்பிரிவு. இரண்டுமுறை தோல்வி.
என்னவோ அப்படியே விட்டுவிட முடியாதென்பதில் தெளிவாய் இருந்தாள் மேகவர்ணா.
அண்ணன் கூட சொல்லிவிட்டான் எம்.காம் படியேன் என்று. ஆரம்பத்தில் இருந்தே சி.ஏ முடித்து ஆடிட்டராக வேண்டும் என்பதில் ஒரு நாட்டம் மேகாவிற்கு.
அதனால் பின்வாங்க முடியாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டு இருந்தாள்.
பெரிய பெரியப்பா, அத்தை இருவரும் மேகவர்ணாவை அத்தனை கேலி செய்தார்கள்.
“அத்தை, எங்கப்பா தான சம்பாதிக்கிறார். அவர் பொண்ணுக்கு அவர் செலவு பன்றார். நீங்க கவலைப்படவேண்டாம்…” என்றுவிட்டான் பல்லவன் காட்டமாக.
“பாத்தியாடா அமுதா உன் மகன் பேசறத? உன் அக்கா நான் தலையிட கூடாதா?…” என்று ஆங்காரத்துடன் தான் கேட்பார் சந்திரா.
“அக்கா அவன் சின்ன பையன்…” என அக்காவை சமாளித்தாலும் மகனின் பேச்சை தடுத்ததில்லை.
சந்திராவிற்கு பூஜாவை எப்படியாவது திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று இருக்க பல்லவன் மோனிகாவை விரும்புவதாக வந்து சொல்லவும் அவரின் ஆசையில் இடியே விழுந்தது.
“முடியாது முடியாது. என் பொண்ணை தான் நீ கல்யாணம் பண்ணனும்….” என்று ஆர்பாட்டம் செய்துவிட்டார்.
மூத்த மகளை ஒத்த வயதிருப்பதால் பல்லவனுக்கு கொடுக்க முடியாமல் இரண்டாவது தம்பியின் மகனுக்கு கட்டிவைத்துவிட்டார்.
பல்லவனுக்கு பூஜாவை செய்துவிடலாம் என பேராசையில் இருக்க மோனிகா தான் தங்கள் வீட்டு மருமகள் என்று வந்து நின்றான்.
“நான் என் பொண்ணை என் தம்பி வீட்டுக்கு மருமகளா கொண்டு வரனும்னு நினைச்சா அசிங்கமா லவ்வுன்னு வந்து நிக்கிற?…” என்ற சந்திராவின் பேச்சில் முகம் சுளித்தவன்,
“உங்க பேச்சு தான் அசிங்கமா இருக்கு. இன்னும் ஸ்கூல் முடிக்காத பொண்ணு அவ. அதுவும் வருவுக்கும் சின்ன பொண்ணு. இங்கயே வளர்ந்தவ. இன்னொருதடவை இப்படி பேசாதீங்க…” என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டான் பல்லவன்.
அவனுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து உறவுகளை உறவுமுறை வைத்தே அழைக்கமாட்டான்.
அமுதினியன் சொல்லியும் பார்த்துவிட வாங்க போங்க அவ்வளவு தான். இளைய பெரியப்பாவை மட்டுமே கொஞ்சம் பிடிக்கும்.
ஆனால் மேகா எப்போதும் தந்தையை கொண்டு நடப்பவள். எல்லோரிடமும் ஒன்றுபோல பேசி பழகுபவள்.
சிரித்த முகமும், கனிவும் மட்டுமே அவளின் அடையாளமாக இருக்கும். விட்டுகொடுப்பதில் தவறில்லை என்பதை போல இருந்துவிடுபவள்.
அவளுக்கும் சேர்த்து பேசுவான் பல்லவன். கொஞ்சமும் தன் வீட்டினரை பேச இடம் கொடுக்கமாட்டான்.
“அப்பா, கொஞ்ச நாள் விடுங்க. தானா வருவாங்க. பார்த்துட்டே இருங்க. இங்க வந்து போகாம அவங்களால் இருக்க முடியாது. சும்மா தாங்காதீங்க…” என்று சொல்லவிட அவன் சொல்லியதை போல தான் நடந்தது.
பத்தே நாளில் தம்பிக்கு எதோ ஆபத்து என்பதை போல கனவு கண்டதாக கிளம்பி வந்து ஒப்பாரியை கூட்டிவிட அமுதினியனுக்கு இவர்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ என தோன்றும்.
ஆனால் அவரின் சுபாவம் வெளிக்காட்டத்தான் விடாது. அமைதியாகவே இருந்துவிடுவார்.
வந்தவரும் சும்மா இல்லாமல் மருமகள் வந்த நேரம் அது இதென்று பேச பதிலுக்கு பல்லவன் எகிற ஒரே ரகளை.
திருமண விஷயம் வரை பிடித்தமில்லாததை முகத்திலும், ஒற்றை வார்த்தையும் மட்டும் கட்டிக்கொண்டு ஒதுங்கிவிடுபவன் தனது திருமணத்தில் இவர்கள் அடிக்கும் கூத்தில் தான் இன்னும் அதிகமாக பேச ஆரம்பித்தான்.
அமுதினியனுக்கு மகனின் பக்கம் நிற்பதா, உடன் பிறந்தோர் பக்கம் பேசுவதா என திண்டாடி நிற்க,
“நீங்களும் பேசமாட்டீங்க, என் பிள்ளைகளையும் பேசாம இருக்க சொல்லுவீங்களா?…” என்றார் மலர் மகனுக்கு ஆதரவாக.
“என்ன இருந்தாலும் பெரியவங்க மலரு…”
“அப்ப அந்த பச்ச பிள்ளைய பல்லவனுக்கு கட்டி வைக்கவேண்டியது தான்…” என்றார் கோபத்துடன்.
கொஞ்சமும் நினைக்கவே முடியவில்லை. பல்லவனுக்கு பூஜாவா? பத்தாவது படிப்பில் இருக்கும் பெண்ணை போய் என்று முகத்தை சுளித்துவிட்டார்.
“நீங்க எதுவும் பேசவேண்டாம். அவன் பேசட்டும். தலையிடாம இருங்க. எங்களை அவங்களாம் பேசும் போது எப்படி இருப்பீங்களோ அப்படி…” என்று சொல்லியது அமுதினியனுக்கு சுருக்கென்று தான் இருந்தது.
தன் பிள்ளைகள் தன்னை போல கஷ்டமின்றி வளரவேண்டுமே என நினைத்தாரே தவிர எதிலும் துணிந்து நிற்கவேண்டும் என நினைக்கவில்லை.
“நம்ம அத்தை தானேடா, நம்ம பெரியப்பா தானேடா, நம்ம வீட்டு மனுஷங்கடா…” என்று தன் பிள்ளைகளை சமாதானம் மட்டும் செய்வார்.
இப்போது தன் அக்காவின் பேச்சுக்கள் எல்லை கடக்க மகனின் விருப்பத்தின் பக்கம் தான் நின்றார். அதன் பின்னும் நின்றார்.
“இங்க பாரு அமுதா? எனக்கென்ன ஆம்பள பிள்ளையா என்ன? பூஜாவுக்கு நீ தான் அப்பனுக்கு அப்பனா இருந்து நல்லது பண்ணனும். என் புருஷன் ஒரு ஒன்னுக்குமத்தவர். நீ எனக்கு வாக்கு குடுத்திருக்க…” என்று சொல்லியே நினைத்ததை சாதிக்கும் சந்திரா.
‘என் பெண்ணுக்கு நல்ல வரனை எங்கே தேடுவேன்?’ என்று நடுவீட்டில் அழுகையை கூட்ட,
“என் பிள்ளை மாதிரின்னு பேச்சுக்கு சொல்லலைக்கா. நான் நல்ல இடமா பார்த்து பேசி முடிக்கிறேன். சரிதான…” என்று சொல்லிய வார்த்தையை பிடித்துக்கொண்டவர் எடுத்ததிற்கெல்லாம் அதையே சொல்லி வந்து நிற்பார்.
பூஜாவின் பொறுப்புகளை அவரின் தலையில் கட்ட இப்போது முதல் வருடம் பூஜா கல்லூரியில் சேர்ந்ததும் அமுதினியனின் ஆதரவில் தான்.
“கையில காசா பணமா? படிச்சு என்னத்த கிழிக்க போறா? இல்ல அக்கா மக தானேன்னு நீ உன் பிள்ளைக மாதிரி நல்லா படிக்க வைக்க போறியா?…” என்று பன்னிரெண்டாவது படிக்கும் பொழுதே ஆரம்பித்து கல்லூரியில் சேர்த்துவிடவும் வைத்தாகிற்று.