காலை உணவு மேகாவின் இல்லத்தில் தான். அவளிடமே கேட்டு மலர் செய்ய நினைக்க அவளோ ஆம்லேட், பழங்கள், ப்ளாக் டீ என்று மனப்பாடம் போல சொன்னால் அதிரனின் காலை உணவென்று.
“இதென்ன சாப்பாடு வரு?…” என்றார் மலர்.
“இதுதான் த்தை சாப்பாடே…” அவரின் திகைப்பை கண்டு மோனிகா கிண்டல் செய்ய,
“சரி பார்த்து போய்ட்டு வரனும். அப்பறம் வரு அங்க போய்ட்டு அடிக்கடி அவரை தொந்தரவு பண்ண கூடாது. உன் மாமியார், வீட்டுக்காரர் சொல்றதை கேட்டுக்கோ…”
“சரிங்கம்மா…”
“அவங்களுக்கு அப்பா, அண்ணன் மாதிரி வேலை இல்லை. அதனால எப்ப ப்ரீயா இருப்பாங்கன்னு தெரியாதுலப்பா. அதான் சொல்றேன். நம்ம ஒன்னு கேட்டு அவங்களை சங்கடப்படுத்த கூடாது…” என்றார் மலர்.
ஏற்கனவே காலையில் அக்கம்பக்கத்தினர் மலருக்கே அழைத்து அதிரனை பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று மாற்றி மாற்றி அழைத்திருக்க மலருக்கு தயக்கமாக இருந்தது.
“நான் பேசிக்கறேன் த்தை….” என மோனிகா தான் சமாளித்தாள்.
இதில் ஊருக்கு சென்றவர்களில் ஒரு சித்தி வந்து சேர்ந்துவிட்டதை சொல்ல எத்தேர்ச்சையாக மலரும் அதிரனும், மேகாவும் வந்து தங்கியிருப்பதை சொல்ல,
“ஏன் நாங்க இருக்கும் போது தங்கினா உன் மருமகனை என்ன செஞ்சிருவோமாம் நாங்க? ரொம்பத்தான் பன்றாங்க. நீயும் ஒத்து போய்ட்டிருக்க. நடிகன்னா வெளில. சொந்தம்ன்னு வரப்போ எல்லாரும் ஒண்ணுதான். மனசுல வச்சுக்கோ…” என காட்டமாக பேசியிருந்தார்.
இப்படி தேவையிலாத பேச்சுக்கள். பெரிய இடத்தில் பெண்ணை கொடுக்கவும் குணமே மாறிவிட்டது, பேச்சுக்களில் மறுப்பு வந்துவிட்டது என்று.
“எப்படி பேசறாங்க பாரேன்?…” என மோனிகாவிடம் தான் புலம்பி தீர்த்தார் மலர்.
போதாததிற்கு அக்கம்பக்கத்தினர், ‘என்ன இருந்தாலும் அவசரத்துக்கு நாங்கதான் வரனும். கூட இருக்கனும். அவங்களாம் கௌரவம் பார்த்து ஒதுங்கிதான் இருப்பாங்க’ எனவும் சொல்லி வைத்தனர்.
மலருக்கு இதுவே பெரிய மனவுளைச்சலை தந்தது. இப்படி ஒன்றுமில்லாததை பெரிதுபடுத்தி எப்படி பேச முடியுதோ என்று.
மகள், மருமகனுக்கென்று பார்க்கவேண்டுமே. வந்து தங்கியிருப்பவர்களிடம் இப்படி அடுத்தவர்களுக்காக பேசி அதுவே அதிரன் மனதில் ஒரு இறக்கத்தை கொடுத்துவிடுமோ என நினைத்தார்.
அவனை அத்தனை சாதாரணமாக பார்க்கவே அவர்களால் முடியவில்லை. மகளின் கணவன் என்று மனதிற்கு தெரிந்தாலும் அவனின் உயரம் தான் அதற்கும் முன்னால் நின்றது.
அதிரன் தேவராஜின் மனைவி என் மகள் இப்படித்தான் அவர்களில் பதிந்தேபோனது.
மற்றவர்களில் வயிற்றெரிச்சல் வார்த்தைகள் அப்படி ஒரு உணர்வை கொடுத்து அவர்களை மாற்றியிருந்தது. இலகுவான எண்ணங்கள் கூட வேறு விதமாய் தான் தோன்றியது.
“என்னம்மா? நான் பேசிட்டே இருக்கேன்?…” மேகா தாயை உலுக்க,
“ஒன்னுமில்லடா. சரி நான் செய்யறேன்…” என சொல்லியும் மேகா அவருடன் தான் இருந்தாள்.
உப்பும், மிளகு தூளும் அளவாக சேர்த்து சாலட் தயாரிக்க மகளையே இமைக்க மறந்து பார்த்தார் மலர்.
“என்னம்மா?…” என்றாள் புன்னகைத்து.
“அங்கயும் இப்படித்தான் அமைதியாவே இருக்கியா வரு?…” என கேட்க,
“ஏன்ம்மா? நான் எப்பவும் இப்படித்தான?…”
“ஹ்ம்ம், ஆமா. ஆனா உன் மாமியார் உன்னை பேச வச்சிருவாங்க…”
“அத்தை உங்களை கூட பார்க்கனும் சொல்லிட்டிருந்தாங்க…” என பேச்சுக்கள் இங்கே இருக்க அங்கே அறையில் அஷ்வின் சுபத்ராவிடம் பேசிக்கொண்டிருந்தான் வீடியோ காலில்.
“வரு நீ போய் சாப்பிட கூட்டிட்டு வா…” என மோனி அனுப்பவும் உள்ளே வந்தவளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.
அஷ்வின் சுபத்ராவின் பேச்சில் சளைக்காமல் பதில் சொல்ல அவரும் அவனுக்கு இணையாக பேச,
“ம்மா என்கிட்டே பேச கூப்பிட்டீங்க நீங்க…” எனஅதிரன் புன்னகையுடன்.
“உனக்கடுத்த ஹீரோடா இந்த குட்டி பையன். எவ்வளோ அழகா பாவனையா பதில் சொல்றான் பாரேன்…” என்று சொல்ல அதிரன் மேகாவை பார்த்ததும் அவள் திகைத்து போனாள்.
“என்ன மேகா?…”
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை…” என சொல்ல அப்போது தான் பல்லவனும் சாப்பிட அழைக்க வந்தவன் இது காதில் விழ அப்படியே திரும்பிவிட்டான்.
“ம்மா, நான் சாப்பிட்டு கூப்பிடறேன்…” அதிரன் மொபைலை வைத்துவிட்டு,
“சேம்ப் நீ போ, மாமா வரேன்…” அனுப்பவும் அஷ்வின் இறங்கி நடக்க மேகாவின் பக்கம் திரும்பினான்.
“ஏன் சடனா உன் முகம் மாறிடுச்சு மேகா?…”
“அண்ணனும் வந்து பார்த்துட்டு போனாங்க. இதை கேட்டிருப்பாங்க…” என்றாள் அவனின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்.
“நடிப்பு அத்தனை விரும்பத்தகாத விஷயம் இல்லை மேகா. அதுவும் அவன் குழந்தை. அம்மாவும் ஏதோ சொன்னாங்கன்னு நீ இவ்வளோ பீல் பண்ண தேவை இல்லை…” என அவளின் கன்னம் தட்டியவன்,
“வா…” என்று இறங்கி நடக்க அவனுடன் வந்தவள் பல்லவன் முகத்தையும், அதிரனையுமே மாறி மாறி பார்த்தாள்.
இதில் மலர் போதாததற்கு வேறு மகளுக்கு பிடிக்குமென வகையாய் அத்தனை செய்திருந்தார்.
மருமகனுக்கு தான் செய்ய முடியவில்லை. மகளாவது சாப்பிடட்டும் என செய்திருக்க அதுவும் மேகாவை திணறடித்தது.
“ம்மா, போதும்மா…” என கெஞ்ச கொஞ்சமும் விடவில்லை.
“சாப்பிடுடா, உனக்கு புடிக்கும் தானே?…” என சொல்லி உன்ன வைக்க அதிரன் புன்னகையுடன் இதனை பார்த்தபடி இருந்தான்.
இடையில் பல்லவனிடம் பேச்சுக்களும் கூட. அமுதினியன் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிவிட்டார்.
குடும்பமாய் அமர்ந்து சாப்பிட அஷ்வின் அதிரன் அருகில் அமர்ந்தபடி அவன் என்ன உண்ணுகிறான் என பார்த்து அதையே தனக்கும் கேட்டான்.
‘உனக்கு பிடிக்காது, நீ சாப்பிடமாட்டாய்’ என மோனிகா, மலர் சொல்லியும் அஷ்வின் அடம் பிடிக்க அவனுக்கும் எடுத்து வைத்த மோனிகா,
“நெய் தோசை, உடைச்சா உடையனும். மொறு மொறுன்னு வேணும்னு கேட்டு வா, கன்னத்துல நாலு இடிக்கிறேன்…” என்று திட்ட,
“சேம்ப் எப்பவும் ஹீரோ தான் எனக்கு. இப்ப நீ சாப்பிடுவியாம்…” என அவன் போக்கிலேயே அதிரன் பேசி சமாதானம் செய்ய அந்த வேக வைத்த காய்கறி கொஞ்சமும் இறங்கவில்லை அஷ்வினுக்கு.
ஆம்லேட் மட்டும் கொஞ்சம் சாப்பிட்டவன் அதிரனை பார்த்து முகம் வேண்டாம் சுளித்து, மோனிகாவை ஓர பார்வை பார்த்து முழிக்க அதிரனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
இதழ்களுக்கு சிரிப்பை அடக்கியபடி அஷ்வினை கண்டு புருவம் உயர்த்திய அதிரன்,
“ஹீரோவுக்கு பிடிக்கலையாமா?…” என கேட்க,
“ம்ஹூம்…” என்று உதட்டை பிதுக்கினான் அஷ்வின்.
அஷ்வின்குட்டியின் பார்வை தன்னை போல மேகாவின் தட்டிற்கும், பல்லவனின் தட்டிற்கும் சென்றுவிட்டு தாயை தேடியது.
“சேம்ப்…” என அவனை இடது கையால் அணைத்தபடி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.
“நான் ஹீரோ வேண்டாம்…” அடுத்ததாய் சொல்ல,
“ஹீரோன்னா ஆக்டிங் மட்டும் தான் ஹீரோவா சேம்ப்? இந்த பேமிலில உன் தாத்தா பர்ஸ்ட் ஹீரோ. உன் அப்பா, செகேன்ட் ஹீரோ. நீ லிட்டில் ஹீரோ சேம்ப். எல்லாருமே ஹீரோ தான்…” என்று சொல்லவும் பல்லவன் புன்னகையுடன் பார்த்தபடி இருந்தான்.
அழகாய் அஷ்வினை சமாளித்துவிட அதிரனை பார்த்தவள் தோசையை வாயில் வைக்காமல் அப்படியே கையை வைத்திருக்க,
“சாப்பிடு மேகா, கிளம்ப வேண்டாமா?…” என்றான் அவன்.
“மோனிகா, நீங்க இவனுக்கு தோசை கொண்டுவாங்க…” என அவளிடம் சொல்ல,
“அண்ணா என்கிட்டே கேட்க சொல்லுங்க இந்த வாண்டை. கொஞ்சமா சாப்பிட நூறு அதட்டல் போடும் என்கிட்டே…” என்றதும் அஷ்வின் இன்னும் அதிரனின் இடுப்பில் இருந்து முகத்தை நிமிர்த்தவில்லை.
“பொங்கல் மிளகு இல்லாம இருந்தா தான் புடிக்கும். தோசை மறந்தும் திருப்பி போட கூடாதுன்னு ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுவ. எங்க இப்ப கேளேன்?…” என மகனை அதட்ட,
“தோசை வேணும்…” என்று மீண்டும் அழுத்தமாய் சொன்னான் அஷ்வின்.