“பாருங்கண்ணா, நினைச்சது கிடைக்கனும்…” என்று மகனை அதட்டிவிட்டு தோசையை எடுக்க சென்றாள் மோனிகா.
“சேம்ப் தோசை வருதாம்…” என்று அஷ்வினிடம் ரகசியமாய் அதிரன் சொல்ல,
“தோசை சாப்பிட்டு ஹீரோ நான்…” என்று சொல்லவும், அதிரனும் தலையாட்டி சிரிக்க அடுத்த ரகளை தோசை வரவும்.
“ஸ்பூன், போர்க் வேணும்…” என அதில் தான் சாப்பிடுவேன் என்று சொல்ல மோனிகா இன்னும் முறைத்தாள்.
“அஷுக்குட்டி, தோசை ஸ்பூனால சாப்பிட முடியாதுப்பா. எப்பவும் போல எடுத்து சாப்பிடு…” என பல்லவன் சொல்ல அஷ்வின் அதிரனின் கையில் இருந்த முள்கரண்டி, கத்தி இரண்டையும் பார்த்தான்.
“போச்சுடா…” அதிரன் கீழே வைத்துவிட்டு,
“அது ஆம்லேட் சாப்பிட்டது சேம்ப்…” என்றான் அதிரன்.
“டேய் உன் அட்டூழியம் ரொம்ப போகுது. நான் வரவா ஊட்டிவிட?…” என்றதும் மோனிகாவை முறைத்துக்கொண்டே தோசையை பிய்த்து சாப்பிட்டான் பிள்ளை.
“இரு இரு உன்னை வச்சுக்கறேன்…” என மோனிகா சத்தமில்லாமல் மிரட்ட,
“மாமா, அம்மா…” என்று கூப்பிட்டு காண்பிக்க தலையில் அடித்துக்கொண்டாள் அவள்.
“போதும்ப்பா, நீ சாப்பிடு…” அமுதினியன் பேரனை சொல்லவும் அரை தோசை தான் இறங்கியது.
அதிரனும், மேகாவும் சாப்பிட்டு முடித்ததும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவர்கள் நேராக தங்களின் ஸ்டுடியோவிற்கு வந்து சேர்ந்தனர்.
“இதுதான் நம்ம ஸ்டூடியோ…” என காண்பித்தவன் உள்ளே அழைத்து சென்றான் மேகாவை.
அத்தனை பிரமாண்டமாய் இருந்தது. ஒவ்வொன்றிற்கும் தனி தனி பிரிவுகள், முழுவதும் நவீனமாகவும் இருந்தது.
இதை எல்லாம் அவள் பார்த்ததே இல்லை. ஒவ்வொன்றையும் மேகாவிற்கு விளக்கினான் அதிரன்.
புரியவில்லை. ஆனாலும் கேட்டுக்கொண்டாள். அவளின் முகமே அதனை காண்பிக்க அதனை எளிய முறையில் விளக்கினான்.
ஒவ்வொன்றின் உபயோகம் என்னவென்று சொல்ல சொல்ல இப்போது அந்த பொருட்கள் மீதான ஆச்சர்யம் போய், அதிரன் மீது வியப்பு தோன்றியது.
“எப்படி எல்லாமே தெரியுது உங்களுக்கு?…” என கேட்டுக்கொண்டே வர இன்னொரு பெரிய அறை.
அது பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் அறை. அத்தனை பெரிதாய் இருந்தது அது மட்டும்.
ஒருபக்கம் அமர்வதற்கு இடமும், அதன் எதிரே கண்ணாடி அறையில் பாடுவதற்கான அறையும் இருந்தது.
“இங்க தான் டப்பிங்கா?…” என கேட்டாள்.
“ம்ஹூம், அதுக்கு தனி ரூம். இப்படி இருக்காது அந்த ரூம். அதையும் பார்க்கலாம்…” என்று சொல்லிக்கொண்டிருக்க அதற்குள் தேவராஜ் அழைத்துவிட்டார்.
“அப்பா கூப்பிடறாங்க. வா…” என இன்னொரு பெரிய அறைக்கு செல்ல அங்கே பணிபுரியும் ஏனையோர் கூடி இருந்தனர்.
அத்தனைபேரும் மலர் கொத்துகளுடன் இருக்க இருவரும் உள்ளே நுழையவும் மாலைகளை கையில் கொடுத்து, பூங்கொத்துகளை தந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அத்தனைபேரிடமும் தலையசைத்து புன்னகையுடன் அவர்கள் ஆசிர்வாதங்களை ஏற்றுக்கொண்டான் அதிரன்.
மேகாவிற்கு யாரையும் தெரியாததால் சிரிப்போடு நின்றாள். சிறிது நேரம் அங்கே இருந்தவர்கள் அதற்கு அடுத்த அறைக்குள் நுழைந்தனர்.
“இதுவுமே ரெக்கார்டிங் தியேட்டர் மாதிரியே இருக்கே…” அதனை சுற்றி பார்த்துக்கொண்டே அவள் சொல்ல அங்கிருந்த பெரிய கீ போர்ட் அருகே சுழல் நாற்காலியில் அமர்ந்தான்.
“இது என்னோட ஹாபிக்கு. எப்பவாவது அப்பாவோட ம்யூசிக்ல நான் எனக்கு தெரிஞ்சதை இம்ப்ளிமென்ட் பண்ணுவேன்…”
“ஓஹ் சூப்பர்…” என்றவளை அழைத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.
“மாமா வந்திருவாங்க. விடுங்க…” என எழுந்துகொள்ள பார்க்க,
சிறிது நேரம் அவனின் அசைவுகளுக்கேற்ப விரல்களை கொண்டு சென்று வாசித்து பார்த்தவள்,
“எதாச்சும் பாடுங்களேன் அதி. சும்மா வாசிக்கிறதுக்கு, பாடிட்டே வாசிக்கலாமே?…” தலை திருப்பி கேட்டவளின் கன்னங்களில் அவனின் நெற்றியின் அடைந்த சிகை அலைந்தது.
“பாடலாமே…” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லியவன் அடுத்து ட்யூன் செய்தான்.
“ரெடி…” என விரல்களை எடுத்து இசைத்தவன்,
“உன் விரலில் எத்தனை தீண்டல் சொல்லு. உன்னிதழில் எத்தனை முத்தம் சொல்லு…” என மெல்லிய சிரிப்புடன் தன் ரகசிய குரலில் ராகமேற்றியவன் கழுத்தோர மச்சத்தில் தஞ்சம் புக,
“இது என்ன சாங்?…” என்றாள் அவள்.
“சுத்தம். பாட்டாடா முக்கியம்? என்ன பாடினேன்? எங்க சொல்லு…” என கேட்கவும் மடியிலிருந்து எழுந்துவிட்டாள்.
“எனக்கு தெரியலை. ராகம் பேர் கேட்கறீங்க, பாடினதை கேட்கறீங்க…” என்று இங்குமங்கும் நடக்க,
“மேகா…” என்றான் ஆழ்ந்த குரலில்.
திரும்பி பார்த்தவள் அவனின் பக்கவாட்டில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
“உனக்கு நான் முதல் முதல்ல இங்க இருந்து தான் கால் பண்ணேன். இங்க இருந்து தான் பேசினேன்…” என்றதும் மேகா அவனை பார்க்க,
“இங்க வச்சுதான், இதோ இந்த இடத்துல உக்கார்ந்து தான்…” என்றான் புன்னகையுடன்.
அதற்கு என்ன பதில் சொல்ல? அவள் மௌனமாக அவனை பார்த்தாள். அப்போதிருந்து இன்றுவரை அவனிடம் அதே பார்வையும், பேச்சும் தான். இன்று கணவன் என்ற உரிமையும்.
மெல்லிய புன்னகை மேகாவின் இதழில் அன்று எத்தனை சொன்னோம் அவனை சந்திக்கவே முடியாதென்று.
“ஓகே, அதை விடு. எங்க போகலாம் பத்துநாள் ட்ரிப்?…” என கேட்க,
“தெரியலை, உங்க விருப்பம்….”
“உனக்கு எங்கயும் போகனும்னு தோணலையா மேகா? இல்லை இங்க போகனும்னு எதாச்சும் ஒரு ஐடியா?…”
“எனக்கு தெரியலை. அவ்வளோ யோசிச்சதும் இல்லை. இப்ப நீங்களே டிஸைட் பண்ணுங்க. நெக்ஸ்ட், ஹ்ம்ம்…” என சிரித்தாள்.
“ஹ்ம்ம், நெக்ஸ்ட் சொல்லுவ தான் நீயும்…” என சிரித்துக்கொண்டான்.
“இப்ப பாடலையா? எதுவும் சாங் இல்லையா?…” என்றாள் அவன் ஒரு புது பாடலை எப்படியெல்லாம் பாடுவான் என நேரில் பார்க்கும் ஆசையுடன்.
“அப்படி ஒன்னு நடந்தா நீ ரெக்கார்டிங்கையே வெறுத்துடுவ…”
“ஏன்?…”
“ஒரு சாங் பாடி முடிக்க குறைஞ்சபட்சம் எட்டுமணி நேரம் ஆகும். சாங் கம்ப்ளீட் பர்பக்ஷன் வரவரைக்கும் இன்னும் கூட நேரமெடுக்கும். ஒருநாள் கண்டிப்பா கூட்டிட்டு வரேன். பார்த்து தெரிஞ்சுக்கோ…” என்றவன் எழுந்துகொண்டான்.
“கிளம்புவோம். வா…” என்று அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
ஏற்கனவே திருமணம் முடிவாகியதும் அவளின் பாஸ்போர்ட் வைத்து மேகாவிற்கு வெளிநாடு செல்வதற்கான அனைத்தையும் செய்துமுடித்திருந்தான் அதிரன்.
இப்போது அவளை அழைத்துக்கொண்டு துபாய் பறந்துவிட்டான். மேகாவிற்கு முதன் முதலில் இத்தனை தூரம் விமானத்தில் பயணம்.
ஏற்கனவே ஒருமுறை டெல்லி வரை குடும்பத்துடன் சென்றது தான். அதன் பின்னர் இரண்டாம் முறை அதிரனுடன்.
அதிரனுக்கு மேகாவை லைவில் வைத்து சந்தித்த பொழுது தான் இருந்த இடத்திற்கு அழைத்து செல்லவேண்டும் என்னும் ஆசை.
துபாய் அதே ஹோட்டல், அதே அறை என அதிரனின் நினைவுகள் எல்லாம் அன்றைக்கும், இன்றைக்குமான மனநிலையில் துள்ளிக்கொண்டிருந்தது.
இங்கே அமர்ந்துதான் உன்னை பார்த்தேன், இங்கே தான் உன் திருமண நிச்சயம் அறிந்து நொடிந்து அமர்ந்தேன், என தன்னுனர்வுகள அன்று எப்படி இருந்ததென்பதை துல்லியமாய் அவளுள் கடத்தினான்.
மேகாவிற்குள் தன்னை கண்ட பின்னர் அதிரனின் வாழ்க்கையில் எந்தளவிற்கு தான் கலந்திருக்கிறோம் என நினைக்கையில் நெஞ்சை முட்டும் காதல் மிளிர்ந்தது.
காதலிப்பதை விட காதலிக்கப்படுவதன் சுகத்தின் பரிபூரணம் என்னவென்பதை திகட்ட திகட்ட அதிரன் தன் மேகத்திற்கு உணர்த்தினான்.
பத்து நாட்களும் துபாயில். ஒருவரின் அருகாமை இன்றி நாளும் பொழுதுமில்லை.
நாட்கள் ஓடிய வேகம் தெரியவில்லை. மீண்டும் தாயகம் திரும்பிய நேரம் மேகாவின் படிப்பு மட்டுமல்ல, அதிரனுக்கும் வேலை காத்திருந்தது.
அவன் ஒப்புக்கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை திட்டமிட்ட நாளில் இருந்து அதற்கு முன்னமே துவங்கிவிட்டால் நல்லது என தயாரிப்பு நிர்வாகம் யோசித்து அதிரனை தொடர்புகொண்டனர்.