“ஹர்ஷத் சொன்னான் ப்பா…” என்றவனின் மனதில் தந்தை சொல்லியதே ஞாபகம் வந்தது. எதற்கு திடீரென்று இப்படி மேகாவை சொல்லுகிறார் என்று.
“ஓகே ப்பா வரேன்…” என எழுந்துகொண்டான்.
மாடிக்கு செல்லும் மகனையே பார்த்தபடி தேவராஜ் அமர்ந்திருக்க அவரிடம் வந்த சுபத்ரா,
“இப்ப எதுக்கு வரு படிப்பை பத்தி பேச்சு?…” என்றார்.
“காரணமில்லாம இல்லை சுபா. ப்ராக்ட்டிக்கலா பார்த்தா இனிமே வர்ணா மத்தவங்க மாதிரி சாதாரணமா போய் வர முடியாது. வர்ணாவுக்கு தான் பிரஷர். அதோட அதை வச்சு அதிக்கும்…”
“நீங்க சொல்றது புரியுது. இப்பவே சொன்னா அவ மனசு கஷ்டப்படும். இதெல்லாம் தெரியாமலா அதி சரின்னு சொல்லியிருப்பான். எப்பவும் சொல்றதை விட அனுபவிச்சு தெரியும் போது மனசு இன்னும் தெளிவா ஒரு முடிவுக்கு வரும்…”
சுபத்ரா சொல்லவும் தலையசைத்துக்கொண்டவர் ஒரு பெருமூச்சுடன் எழுந்துகொண்டார்.
அறைக்குள் வந்த அதிரன் கட்டிலில் அமர்ந்து புத்தகங்களை எல்லாம் பிரித்து பார்த்துக்கொண்டிருந்த மேகாவை பார்த்தான்.
“இன்னைக்கே படிக்க ஆரம்பிச்சாச்சா மேகா?…” என அவளுக்கெதிரே கட்டிலில் படுக்க,
“இல்லை, எடுத்து வச்சேன். அப்படியே சும்மா என்னென்னன்னு பார்த்துட்டிருந்தேன்…”
“உன் அண்ணன் பேசினார், ஸார்ட்ட பேசியாச்சாம். நாளைக்கே கூட நீ வரலாம்ன்னு சொன்னாங்களாம்…”
“நாளைக்கேவா?…” அவள் விழிக்க,
“ஏன் வேண்டாமா?…” என்று சிரித்தவன் அவளின் கை பிடித்து தன் மீது சாய்த்துக்கொண்டான்.
“நானும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் மேகா…” என்றவன்,
“நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஷூட் ஆரம்பிக்குது…”
“இன்னும் நாள் இருக்குன்னு சொன்னீங்க?…” என்றாள் அவன் முகம் பார்த்து புரண்டு.
“ஹ்ம்ம், ஆனா ப்ரடியூசர்க்கு சம் இஷ்யூஸ். முன்னாடியே ஆரம்பிச்சு கொஞ்சம் சீக்கிரம் முடிக்கிற மாதிரி இருக்கும்…”
“ஓஹ், ஓகே…”
“என்னவாம் வாய்ஸ் உள்ள போய்டுச்சு மேகத்துக்கு?…” என்றான் அவளின் முகத்தை நிமிர்த்தி.
“இல்லையே ஒண்ணுமில்லை…”
“மேகா, இனி நம்மோட ரொட்டீன் லைஃப்க்கு திரும்பறோம் இல்லையா?…” என்றான் மென்னகையுடன் மென்மையாய்.
“இந்த லைஃப் நமக்கு நிறைய கத்துக்குடுக்கும். என்னவா இருந்தாலும் எப்பவும் ஸ்ட்ராங்கா இருக்கனும். புரியுதா மேகா?…” என்றான்.
“என்கிட்டே கேட்கனும்னா வெளிப்படையா கேட்கனும். இனிமேலும் நீ எப்பவும் போல சைலன்டா இருக்க கூடாது. என்னை கேட்கணும். ஏதாவது சொல்லனும்னா சொல்லனும்…” என்றான் அவள் தலை கோதி.
ஆழ்ந்த அந்த குரலின் பின்னே கடலின் பேரமைதியும், அதையும் தாண்டி என்னவோ மறைமுக எச்சரிக்கையும் இருப்பதாக தோன்றியது.
ஒன்றும் சொல்லாமல் எழுந்துகொண்டவள் புத்தகங்களை எடுத்து அதனிடத்தில் வைத்துவிட்டு வந்து மீண்டும் அதிரனை அணைத்துக்கொண்டு அவன் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“மேகா, என்னடா? இங்க பாரு?…” என கேட்க,
“என்னவோ இது வார்னிங் மாதிரியே இருக்கு…”
“ஹேய் அப்படி இல்லைடா. சும்மா தான் சொன்னேன். நீ பயந்துக்காத…”
“உங்ககிட்ட சொல்லாம ஒன்னு மறைச்சுட்டேன்…” என்றாள் சற்றே பதட்டமாக.
“சொல்லு மேகா, எதுக்கு இவ்வளோ தயக்கம்? என்ன திரும்ப அதையே சொன்னாங்களா?…” என்றான்.
“உங்க பர்சனல் நம்பர் குடுக்க சொல்லி கேட்டாங்க…” எனும் பொழுதே முகம் வாடியிருந்தது.
“இங்க என்னை பாரு. எதாச்சும் பேசிட்டாங்களா?…” மேகாவின் முகவாட்டத்தை வைத்து கண்டுகொள்ள,
“ஹ்ம்ம்…” என்றாள்.
“அதுக்கு ஏன் வருத்தப்படற? இனி இதை எல்லாம் பேஸ் பண்ணனும் நீ. ஹேண்டில் பண்ண பண்ண உனக்கு பழகிரும்…” என சிரித்தான்.
“என்ன ஈஸியா சொல்றீங்க?…” என்னும் பொழுதே மலர் போன் செய்தார் மகளுக்கு.
“அம்மா தான்…”
“உங்க சித்தப்பா அங்கயும் கால் பண்ணியிருக்கலாம், நீ பேசு, நான் வாஷ் ரூம் போய்ட்டு வரேன்…” என சொல்லி சென்றதும் மேகா எடுத்து பேச,
“வரும்மா, சித்தப்பா பேசினாங்கடா…”
“நான் என்னம்மா செய்ய? இவங்களோட பர்சனல் நம்பர் வேணும்னு சண்டை போடறாங்க. அந்த நம்பரை எப்படி தர?…”
“நீ குடுக்க வேண்டாம். அவங்களுக்கு வேற வேலை என்ன?…”
“ரொம்ப பேசிட்டாங்கம்மா…” என்றவள்,
“ஒரு போன் நம்பர் கூட நம்பி தரமாட்டேன்னு சொல்ற? எங்களை மதிச்சு வச்சிருக்கறது இதுதானான்னு கேட்கறாங்க. என்னவோ அவங்க பையன் நல்லா வந்திட கூடாதுன்னு நினைக்கறேனாம்…”
“வரு…” மோனிகா இப்போது மொபைலை வாங்கிக்கொண்டாள்.
“இங்க பாரு. ஆளாளுக்கு இப்படி எமோஷனலா தான் பேசுவாங்க. இதுக்கெல்லாம் நீ இம்பார்டென்ஸ் குடுக்காத. இங்கயும் போன் பண்ணினார். நல்லா நான் பேசிட்டேன்…”
“அண்ணி…”
“ஆமா, அத்தையை பிடிச்சு திட்டிட்டு இருந்தார் பெரிய இடம் அமையவும் குணமே மாறிடுச்சு. அவ்வளோ தானா அப்படின்னு. ஆமா, அப்படித்தான் என்ன செய்வீங்கன்னு கேட்டுட்டேன்…”
“இங்க என்னை பேசவே விடலை அண்ணி…” என்றாள் வருத்தமாய்.
“விடு, அதுவும் நல்லதுன்னு நினைச்சுக்கோ. கண்டுக்காத…” என்றவள்,
“துபாய் போய்ட்டு வந்தியே, எப்படி இருந்துச்சு? நாம அதை பேசுவோம்…” என்று சொல்ல பேச்சு திசை மாறியது.
அதிரன் வேறுடை மாற்றி வந்தவன் மேகா இன்னும் போனில் இருக்க அவளை பார்த்தபடி நின்றான்.
இன்னும் ஒருவாரம். அதன் பின்னர் அவளுடனான நேரங்கள் எப்படி அமையுமோ என தெரியவில்லை.
அடுத்தடுத்த படங்கள், பாடுவதற்கு ஒப்புக்கொண்டிருக்கும் முன்பதிவுகள் என இப்போது அதிரனை இறுக்கிப்பிடித்திருந்தது.
இந்த நேரத்தை அவன் இழக்க விரும்பவில்லை. முழுக்க தன் மேகத்திற்கான நேரம்.
“மேகா…” என்றதும் அவள் பேசியபடி எழுந்து வர,
“கிளம்பு வெளில போகலாம்…” என்றான்.
“இப்பவா?…” என நேரத்தை பார்க்க,
“ஓகே போய்ட்டு வா வரு…” என மோனிகா போனை வைத்துவிட்டாள்.
“என்ன இப்போவா? கிளம்பு…” என்று சொல்லியவன் அழைத்துக்கொண்டு கிளம்பியேவிட்டான்.
அன்றைக்கு போல முதலில் கடற்கரைக்கு சென்று பின் மேகாவை மீண்டும் சந்தித்த அந்த தியேட்டருக்கு சென்றுவிட்டு என இரவு எல்லாம் வெளியில் தான். அதிகாலை தான் வீடு திரும்பினார்கள் இருவரும்.
அந்த வாரம் மொத்தமும் மேகாவுடனே தான் அதிரனின் நிமிடங்கள் எல்லாம் கழிந்தது.
மறுநாளில் இருந்து மேகா கோச்சிங் கிளம்ப அதற்கு மறுநாள் அதிரனுக்கு படப்பிடிப்பு கேரளாவில் வைத்து.
அன்று இருவரும் அதிரன் திருமணத்தின் முன்பு முடித்து கொடுத்த படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து படம் வெளியாவதற்கு முன்பான தனிப்பட்ட பிரிவ்யூ ஷோ இருக்க படத்திற்கு கிளம்பினார்கள்.
வாழ்க்கையின் இளந்தென்றல் காலநிலைக்கேற்பவே உருமாற்றம் பெரும். சுவாசத்தை நிறைக்கும் காற்றிற்கே மாற்றங்கள் இருக்கையில் எந்த நேரமும் இதத்தை மட்டுமே தரவல்லதா வாழ்க்கை?
வலிகளை கடக்கும் நெஞ்சங்களின் வலிமையே அந்த வழிகளையும் கடந்ததனால் உருவாவது தானே?