“ம்ஹூம், எனக்கு ஒருமாதிரி இருக்கும். அங்க யாரையும் எனக்கு தெரியாதே?…”
“இதென்ன பேச்சுடா மேகா? இது என் மூவியோட ப்ரிவ்யூ ஷோ. அதுவும் நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் ரிலீஸ் ஆக போற படம். உன்னை எல்லாரும் எதிர்பார்ப்பாங்கடா…”
“ஹ்ம்ம்…”
“வா போகலாம். எனக்கும் தோணும் தானே? என் மூவியை நாம சேர்ந்து பார்க்கனும்னு…” என்றவன் பேசி பேசி அவளை கிளப்பி இருந்தான்.
“நீங்களும் வாங்கத்தை…” சுபத்ராவை துணைக்கு அழைக்க அன்று அவர் மௌனவிரதம் வேறு.
“இன்னைக்கு முடியாது. நான் ரிலீஸ் ஆனதும் பார்த்துக்கறேன். முதல் முதல்ல அவன் படம் பார்க்க போறீங்க. ரெண்டுபேர் மட்டும் போய்ட்டு வாங்க…” என எழுதி காண்பித்து சொல்லிவிட்டார்.
அதிரனுக்கு தெரியும் தாய் வரமாட்டார் என்று. ஆனால் மேகா அவரை அழைக்க ஒன்றும் சொல்லாமல் புன்னகையுடன் பார்த்தபடி தான் இருந்தான்.
“நீ சொல்லமாட்டியா?…” என சைகையில் சொல்லி கேள்வி கேட்க தோளை குலுக்கியபடி சிரித்தான்.
“சரிங்கத்தை…” என்று கிளம்பிவிட்டாள் மேகா.
மீண்டும் அவனின் வெளிச்சத்திற்குள் அவள். இயல்பாய் எடுத்துச்செல்ல முடியவில்லை மேகாவினால்.
என்று அதிரனை திருமணம் செய்தாளோ அன்றே அந்த வெளிச்சத்திற்குள் அவள் வந்துவிட்டாள் என்று இன்னும் முழுதாய் உணரவில்லை மேகா.
அதிரன், குடும்பம், வீடு இவை மட்டும் போதும் என்னும் வட்டத்திற்குள் அவள் நிற்க பிரயத்தனப்பட வேண்டியதாக இருந்தது.
இந்த வட்டத்திற்குள் மட்டும் தான் இருந்துகொண்டால் போதுமானது என நினைத்திருந்தாள்.
வரவேற்பின் பொழுதே அத்தனைபேரின் அறிமுகத்திலும் திணறி போயிருக்க மீண்டும் அதே போலொரு சந்திப்பு.
அங்கே யார் யார் வருவார்கள் என்று எதுவும் கேட்கவில்லை. யோசனையுடனே தான் இருக்க சாலையோரங்களில் கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது அதிரனின் முகத்துடன், படம் வெளியாகவிருக்கும் போஸ்டர்.
அவற்றை வேடிக்கை பார்த்தபடி தான் வந்தாள் மேகா. வழக்கம் போல ஹர்ஷத் முன்னிருக்கையில் இருக்க அதிரன் மேகாவை பார்ப்பதும் மொபைலை பார்ப்பதுமாக இருந்தான்.
அவள் வேடிக்கை பார்க்கும் தனது விளம்பர கட்டவுட்களில் அதிரனும் அவனின் அந்த திரைப்படத்தின் கதாநாயகியும் ஜோடியாக இருந்தனர்.
முழுக்க முழுக்க மென்மையான காதல் திரைப்படம். பார்க்கும் பொழுதே அழகாய் வந்திருந்தது.
இப்போது அடுத்த போஸ்டர் அதிரன் நீரில் நனைந்தபடியும், அவனின் பின்னால் நின்று தோளில் அவனின் கழுத்தை கட்டியபடி கதாநாயகியும் அவளின் கையை பிடித்தபடி புன்னகையுடன் அதிரனும்.
பார்த்தபடி கடந்த மேகாவின் முகத்தில் மென்னகை குறைந்து எழ அது கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரனின் மனதில் பதிந்துவிட்டது.
“மேகா…”
“ஹ்ம்ம்…” என்று அவன் பக்கம் திரும்பினாள்.
முகம் இப்போது எப்பொழுதும் போல சாதாரணமாக இருந்தது. ஒரு நொடி என்ன கேட்க வந்தோம் என்பதே மறந்தது அதிரனுக்கு.
“என்னாச்சுங்க?…” மேகா கேட்கவும்,
“இன்னைக்கு ஷோவுக்கு யார் எல்லாம் வராங்கன்னு எதுவும் கேட்கவே இல்லையே?…” என்றான் சுதாரித்து.
“ஹ்ம்ம் ஓகே…” என்றவனுக்கும் மேகாவின் அந்த நொடிநேர முகமாற்ற மனதில் வந்துபோனது.
அதற்குள் தேவராஜ் அழைத்திருக்க அவருடன் பேசியபடி வந்தான் அவன். மறுநாள் கிளம்பவேண்டும் அதிரன்.
பேச்சுக்கள் எல்லாம் அதனை பற்றியே இருந்தது. காட்டிற்குள் வைத்து படப்பிடிப்பு.
நாற்பத்தைந்து நாட்கள் அங்கே தான் தங்குவதற்கும் ஏற்பாடாகி இருந்தது. அவன் பேச பேச மேகாவின் மனதிற்குள் ஏராளமான சஞ்சலங்கள் அலைமோதியது.
அத்தனை நாட்கள் அவனில்லாமல் எப்படி என நினைக்க முகமே சோர்ந்துவிட்டது.
“ப்பா தியேட்டர் வந்துட்டோம். நான் நைட் வீட்டுக்கு வந்து பேசறேன்…” என்று அழைப்பை துண்டித்துவிட அந்த வளாகத்தில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.
ஆயிரக்கணக்கானோர் கும்பலாக காரை சுற்றி வளைத்திருக்க அவர்களின் ஆர்ப்பாட்டமும், அதிரனை காண காத்திருந்ததில் அவன் வந்துவிட்ட சந்தோஷமும் மேகாவை மிரள வைத்தது.
எத்தனையோ முறை இதனை டிவியில் செய்தியாக, யூட்யூப்பில் இப்படி கண்டிருக்கிறாள்.
இன்று நேரடியாக காண ஒருவிதமாய் பதட்டம் சூழ்ந்தது. இதனை மீறி எப்படி உள்ளே செல்ல போகிறோம் என்று.
காரின் மேலே இருந்த சன்ரூப்டாப்பை விலக்கிவிட்டு அதிரன் எழுந்து நின்றுவிட்டான்.
மேகா ஜன்னல் புறமாக பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் இப்படி எழுந்து நின்றதும் நிமிர்ந்து பார்க்க அத்தனைபேருக்கும் இரு கைகளையும் ஆட்டியபடி சிரித்துக்கொண்டிருந்தான்.
அதிரன், அதிரன் என்னும் கோஷங்கள் காதை கிழித்து அவ்விடத்தையே கிடுகிடுக்க செய்துகொண்டு இருந்தது.
விசில் சத்தம் காதை பிளக்க அதற்கு மேலான ஆக்ரோஷ கத்தல்களும், கூச்சல்களும்.
அதிரனை தொட்டுவிடமாட்டோமா? அருகில் நெருங்கிவிடமாட்டோமா? என்னும் ஆசை ஆவேசம் தாங்கி வெளிப்பட அதிரன் மீண்டும் கீழே அமர்ந்துவிட்டான்.
“மேகா, வா…” என அவன் கதவை திறந்துகொண்டு இறங்க அவனின் பாதுகாவலர்கள் ஒருவரோடு ஒருவர் கையை பற்றியபடி பாதுகாப்பு சங்கிலியாய் இருபுறமும் நின்றுகொண்டனர்.
“வா…” என்று தான் இறங்கிய பின்னும் மேகா இறங்காமல் இருக்க கை பற்றி அவன் அழைத்ததும் இறங்கினாள்.
‘அதிரன், அண்ணி’ என்னும் அடுத்த கோஷங்கள். ஐயோ என்றானது மேகாவிற்கு.
அவளின் பதட்டத்தை கவனித்து தோளோடு அணைத்துக்கொண்டு உள்ளே சென்றான் அவன்.
“பயந்துட்டியா?…” என செல்லும் பொழுதே கேட்க அவளிடம் பதிலில்லை. லேசாய் வியர்த்திருந்தது.
உள்ளே நுழைந்ததும் ஊடகவியலாளர்கள் அடுத்ததாய் அவர்களை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க வர திரைப்படத்தின் போஸ்டரின் முன்பு நின்றுகொண்டனர் இருவரும்.