“ஸார் ஹீரோயின்…” என்று ஹர்ஷத் சொல்ல தலையசைத்துக்கொண்டான் அதிரன்.
“ஹலோ அதிரன் ஸார்…” என வந்ததும் அந்த பெண் கை கொடுக்க பற்றி குலுக்கிக்கொண்டவன் பதிலுக்கு ஹலோ என்பதோடு முடித்துக்கொண்டான்.
மேகாவை பார்த்ததும் தன்னை அறிமுகப்படுத்தி அணைத்து விடுவித்த பெண் தன்னை புகைப்படம் எடுக்க அழைத்ததும் சென்று நின்றுகொண்டாள்.
“ஸார் ஹீரோ, ஹீரோயின் சேர்ந்து நில்லுங்க…” என ஒரு ஊடகத்துறை நபர் சொல்ல,
“வெய்ட் மேகா…” என்றுவிட்டு அதிரன் சென்றதும் மேகாவின் மனதில் மத்தளம்.
அந்த நொடி அங்கே யாருமற்று தவிப்பதை போலொரு உணர்வு வந்து தாக்க அதிரனை பார்த்தபடி முகம் மாறாமல் தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.
“மேம் சும்மா ரெண்டு ஸ்டில் தான். ஸார் வந்திருவார்…” ஹர்ஷத் அவளின் அருகே நின்றுகொண்டான்.
பின்னால் வசந்த்தும் நிற்க தெரிந்தவர்கள் இருக்கும் பொழுது வரும் தைரியம் மேகாவிடமும் ஒட்டியது.
புகைப்படத்திற்கு நின்ற அதிரனை கண்கொட்டாமல் பார்த்தவளுக்கு முகத்தில் தன்னைப்போல் புன்னகை ஒட்டிக்கொண்டது.
கதாநாயகியுடன் தான் நிற்கிறான். ஆனால் அத்தனை இடைவெளி. இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் வைத்தபடி ஒருபக்கமாக லேசாய் திரும்பி நின்றான்.
‘இவன் எப்படித்தான் ஜோடியா நடிக்கிறானோ?’ என கேலியாய் நினைக்க கூட தோன்றியது மேகாவிற்கு.
போட்டோ எடுத்து முடிக்கவும் அதிரன் வந்ததும் மேகாவுடன் படம் பார்க்க உள்ளே சென்றான்.
ஏற்கனவே அங்கே பலர் வந்து அமர்ந்திருக்க அத்தனைபேரும் அதிரனை பார்த்ததும் வணக்கம் சொல்லி கையசைத்துக்கொண்டனர்.
“இப்படி உட்கார்…” என ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு அருகே அமர்ந்துகொண்டான்.
அந்த வரிசையில் பெரும்பாலோர் இல்லை. அதிரனும், மேகாவும். சற்று தள்ளி தயாரிப்பாளரும், அவரின் நண்பர்களும் என்று இருந்தனர்.
முன்னால் பின்னால் என்று நிறையவே ஆட்களின்றி காலி இருக்கைகள் இருக்க அவற்றை எல்லாம் சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள் மேகா.
“இவ்வளோ தானா? வேற யாரும் வருவாங்களா?…” என கேட்க,
“இது ப்ரிவ்யூ ஷோ. ஸ்பெஷல். இன்வைட் பண்ணிருக்கறவங்க மட்டும் தான் வருவாங்க…” என்று சொல்லும் பொழுதே கதவை திறந்துகொண்டு தேவராஜ் வருவது தெரிந்தது.
“அதி மாமா வராங்க…” என மேகா காண்பிக்க,
“இந்த படத்தோட ம்யூஸிக் டைரக்டர் வரார்…” என்று சிரித்தான்.
அங்கிருந்தே தேவராஜ் அதிரனை பார்த்து இருவருக்கும் கையசைத்துவிட்டு அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
“இங்க கூப்பிடுங்க…”
“யாரை?…”
“ஹ்ம்ம், ம்யூஸிக் டைரக்டரை…”
“அவர் ஹீரோ பக்கத்துல உட்கார மாட்டார்…”
“என்ன?…” மேகா விளங்காமல் பார்க்க,
“ஹீரோவுக்கு தனியா தான் ஷோ பார்க்க புடிக்கும். அதனால மத்த கோ வொர்க்கர்ஸ் கூட இருக்கமாட்டாங்க…” என்று சிரிக்க,
“ஆனாலும் உங்களுக்கு…”
“இவ்வளோ ஆகாதா?…” என்று அவளின் தோளில் இடித்து சொல்ல அவர்களை கடந்து கதாநாயகி சென்றாள்.
விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இருள் சூழ திரையில் படத்தின் முகப்புகள் ஒளிபடப்பாகி படம் துவங்கியது.
ஆரம்பங்கள் எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டு இருந்தது. அதோ அன்று மேகாவின் கடையின் பகுதியில் வைத்து எடுத்த காட்சி.
“இது ஞாபகம் இருக்கா மேகா?…” என கேட்கவும் அவளும் தலையசைத்தாள்.
கடையில் வைத்து மேகாவை அதிரன் கண்ட நாள். அவளுடன் மீண்டும் பேசிய நாள். அமுதனுக்கு மகளின் மனது தெரியவந்த அன்று நடந்த படப்பிடிப்பு காட்சி.
இப்படி ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருக்க காதல் காட்சிகள் துவங்கியது.
நாயகனை துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்து வாழும் நாயகி. அவளுக்காக வாழ்க்கையில் வெற்றிபெறும் நடுத்தரவர்க்க நாயகன்.
பார்க்க பார்க்க என்னவோ மனதிற்குள் சொல்லொண்ணா உணர்வு. தன் கணவனாகப்பட்ட அதிரனோடு நெருக்கமாய் வேறு ஒரு பெண்.
‘இல்லை இல்லை, அத்தனையும் நடிப்பு மட்டும்’ என மனதில் தோன்றினாலும் அழுத்தம் ஏற்படாமல் இல்லை மேகாவிற்கு.
அடுத்தடுத்த கட்டங்கள் காதலை கடந்து திருமணம் முடிந்து என காட்சிகள் வர மேகாவிடம் அசைவில்லை.
அதற்கு நேர் மாறாக அதிரனின் மனது தான் இங்கே தடுமாறிக்கொண்டு இருந்தது.
அவன் தான் பேசிக்கொண்டிருந்தான். மேகாவிடம் பேச்சுமில்லை, பெரிதாய் பதிலும் இல்லை.
‘என்ன நினைக்கிறாள்?’ என நொடிக்கொருதரம் அதிரன் அவளை பார்ப்பதும் திரையில் பார்ப்பதுமாக இருக்க, படத்தை பார்ப்பவர்களுக்கு அது மிக நெருக்கமான காட்சி.
எடுக்கப்பட்ட விதம் அப்படித்தான் இருந்தது. இதழ் முத்தம் எப்போதும் அவன் ஒப்புக்கொள்ளாத ஒன்று.
இயக்குனர் பக்கத்தில் தேவை இருக்கிறது என்னும் பட்சத்தில் லேசாய் உரசி மின்னல் வேகத்தில் கடந்துவிடும் விதத்தில் தான் இருக்கும் காட்சிகளும்.
ஆனால் காண்பிப்பதோ ஆழ்ந்த முத்தமாகவும், மிக நெருக்கமாகவும் இருக்கும். இந்த படத்தில் அப்படியாக இருக்க ஒற்றை கையால் முகத்தை தன்னைப்போல மூடிக்கொண்டான் ‘அய்யோ’ என்று.
எப்போதும் இப்படி இருந்ததில்லை. அங்கே என்ன நடந்ததென்று அவனுக்கு தெரியுமே? அலட்டிக்கொள்ளாமல் தான் பார்ப்பான்.
அன்று மனைவியையும் அருகே வைத்துக்கொண்டு, அவளுக்கும் இது முதல் முறை வேறு என்பதால் வெகுவாய் பதட்டத்தை எடுத்திருந்தான் அதிரன்.
மேகாவை அழைத்து கேட்கவும், பேசவும் அவனுக்கு வார்த்தை வரவில்லை. தன்னை அழைத்து எதுவும் கேட்கமாட்டாளா என்றிருந்தது.
மேகா அழைக்கவே இல்லை. பேசவும் இல்லை. கேட்கவும் இல்லை. உள்ளுக்குள் திடுதிடுவென்று யாரோ ஓடுவதை போன்றொரு ஓசைகள் மேகாவிற்கு.
இதயம் அந்த காட்சிகளில் பலமாய் துடித்துக்கொண்டிருக்க லேசாய் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
அந்த பார்வை தன்னை காணும் பார்வை இதில் இல்லை தான். ஆனாலும் அந்த குழையும் குரலும், பேச்சுக்களும் மேகாவை அசைத்து தான் பார்த்தது.
‘இல்லை இந்த அதிரன் இப்படத்தின் கதாநாயகன்’ அறிவிற்கு தெரிந்தது அகத்திற்கு தெரிய நேரமெடுத்து.
‘அதி’ மனதிற்கு அதி நாமம் ஒலிக்க துவங்க இனி இதை எல்லாம் கடக்க வேண்டும்.
‘நடிப்பு எப்போதும் நடிப்பு மட்டுமே. நடிப்பும், நிஜமும் ஒன்றில்லை மேகா’ அதிரனின் குரல் காதில் ஓங்காரமாய் ஒலித்தது.
அதில் நிதானத்தை அவள் கடைபிடித்து சற்றே இலகுவாய் அவள் இறங்கியிருக்க அதிரனின் அழுத்தம் தான் கூடியது.
அத்தனைக்கும் உட்சமாய் அந்த மழையில் நனைந்து ஆடும் காட்சி. ஈர உடையில் நீர் சொட்ட சொட்ட நனைந்தபடி கணவன், மனைவியாக நாயகன், நாயகி.
“ஐயோ, போச்சுடா அதி…” என்று கண்ணை மூடி திறக்க சத்தத்தில் மேகா அவன் பக்கம் திரும்பினாள்.
ஆனால் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் திரையை கவனிக்க ஆடல், பாடல் முடிந்து அடுத்து இறுதிகட்டத்தை நோக்கி சென்றது திரைப்படம்.
ஒருவார்த்தை மேகா பேசியிருந்தால் கூட அதிரன் சமாளித்திருப்பான், ஆனால் ஒன்றும் வாய் திறவாமல் அவனை கொன்று தின்று கொண்டு இருந்தது அவனின் மேகம்.
அந்த காட்சி அமுதினியன் அதிரனை பார்க்க வந்து பார்த்துவிட்டு நெஞ்சடைத்து சென்ற காட்சி.
மேகாவிற்கு ஓரளவிற்கு அனுமானம் தான். இதை தான் தந்தை பார்த்திருக்க வேண்டும் என்று.
நிச்சயம் ஒப்புக்கொள்வது கடினமாக தான் இருந்திருக்கும் அவருக்கும். அன்று என்னவெல்லாம் நினைத்தாரோ என நினைத்தவளின் உள்ளங்கையில் அதிரனின் விரல்கள் நுழைந்தது.
ஏசியின் குளுமையை தாண்டி அவளின் மனதின் வெம்மை கைகளில் இறங்கியிருக்க உள்ளங்கை வியர்த்து ஈரமாய் இருந்தது.
அதிரன் மேகாவின் கையோடு தனது விரல்களை கோர்த்து பின்னிக்கொண்டான்.
அவன் தொட்டதும் மேகா அவனின் விரல்களை அழுத்தமாய் நெறித்து பிடிக்க அதை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டவன் இதயம் வேகமாய் துடித்தது.
“மேகா, சில்…” என சொல்லிக்கொண்டவனுக்கு தனக்கும் அவ்வுணர்வு தேவைப்பட்டது.
இருவருக்குமே இது புதுவித அனுபவம். அதனை எப்படி கையாள்வது என்பதில் தடுமாறி தான் போனார்கள்.
எப்போதும் நிதானமாக இருக்கும் அதிரனுக்கே அந்த சூழ்நிலையை கடந்துவர முடியவில்லை.