“உங்களை ட்ராப் பண்ண தான் வந்திருக்காங்க போல?…” என கிண்டலாய் சொல்லிக்கொண்டவள் உள்ளே செல்ல சுபத்ரா கையில் கந்தஷஷ்டி கவசம் வைத்து பார்த்துக்கொண்டு இருந்தார்.
இருவரும் உள்ளே வருவதை பார்த்ததும் சாப்பிடுகிறாயா என சைகையில் கேட்க மேகா மறுத்துவிட்டாள்.
“கொஞ்ச நேரம் ஆகட்டும் ம்மா. ரூம்க்கு அனுப்புங்க…” என மேகாவை பார்த்துக்கொண்டே சொல்ல சுபத்ரா மேகாவிடம் படம் எப்படி என்று கேட்டார்.
“நல்லா இருந்துச்சு அத்தை…” என்றவள்,
“நான் போகட்டுமா? நாளைக்கு கிளாஸ் இருக்கு…” என்றாள்.
அவளுக்கு தலையசைத்தவர் அதிரனிடம் என்னவோ கேட்க அடக்கமாட்டாமல் அப்படி ஒரு சிரிப்பு அதிரன்.
என்னவென்று திரும்பி பார்த்தாள் மேகா. மகன் சிரிக்கவும் அதன் கிண்டலை புரிந்துகொண்ட சுபத்ரா போகுமாறு சைகை காண்பித்துவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டார்.
மேகா மாடி ஏற அவளோடு சேர்ந்துகொண்டவன் அவள் என்னவென்று கேட்பாள் என பார்க்க எதுவும் பேசவில்லை.
“கோபத்தை பிடிச்சு வைக்கிறியா நீ? மேகத்தால முடியுமா?…” என்று நெற்றியோடு முட்டியவன் முதல் தளத்தை கடந்து இரண்டாம் தளம் செல்லவும் அவளை கைகளில் தூக்கிக்கொண்டான்.
“விடுங்க நீங்க…” என்று துள்ள அவனின் கைகளில் அழுத்தம் கூடியது.
“முடியாது, நீ சொல்லு. என்னன்னு ஏன் கேட்கலை?…”
“என்ன கேட்கனும்?…”
“அம்மா சொன்னதுக்கு நான் சிரிச்சேன்ல. உனக்கு தெரிஞ்சுக்கனும் தானே?…”
“இல்லை…”
“ஆனா எனக்கு சொல்லனுமே மேகத்துக்கிட்ட…” என்றவன் அவளை அனாயசமாக தூக்கியபடி படிகளில் ஏறினான்.
“அம்மா ப்ரிவ்யூ ஷோவுக்கு தனியா போனதுக்கு மாமனார் குடும்பத்தை கூட்டிட்டு போயிருக்கலாமேன்னு சொன்னாங்க…” என்று சொல்ல மேகாவின் பார்வை அகன்றது.
“என்ன?…” என அப்பட்டமாய் அதிர்ச்சியாக,
“ஏன் இந்த மூவியை உங்க வீட்டுல யாரும் பார்க்கமாட்டாங்களா? இல்லை நல்லா இல்லையா?…” என்றவன் அறையின் வாசலுக்கு வந்ததும்,
“பிங்கரை பிரஸ் பண்ணு மேகா…” என்றான்.
அவன் சொல்லவும் மேகா தன் கட்டை விரலை திறப்பானில் வைக்க கதவு திறந்துகொண்டது.
உள்ளே வந்து கதவை அடைத்துவிட்டு அவளை இரண்டு சுற்று சுற்றி இறக்கிவிட்டவன்,
“சேரி கட்டியிருக்கலாம் நீ…” என்று வேறு சொல்ல அவன் சுழற்றியதில் தலை சுற்ற நிற்க முடியாமல் அவனின் சட்டையை பிடித்து தடுமாற இருவரும் கட்டிலில் விழுந்தனர்.
“ஹ்ம்ம், அப்படியா?…” என்றவன் அவளின் கையை எடுத்து தன் இரு கரங்களுக்குள் வைத்துக்கொண்டவன்,
“உனக்கு எதுவுமே பீல் ஆகலைன்னா ஏன் உன் கையெல்லாம் வேர்த்து போயிருந்துச்சு மேகா? என்னை திரும்பி கூட பார்க்கலையே?…”
அதுவரை கலாட்டாவாக, குறும்பாய் பேசிய குரலில்லை இது. கரகரப்பாய், லேசாய் களைப்பை உணர்த்திய குரல்.
“அதி…”
“ஏன்டா என்னை பார்க்கலை பொண்ணே? மேகம் என்ன நினைச்சதோன்னு தவிச்சுட்டேன்…” என்றதும் அவனை நெருங்கி தோளில் சாய்ந்துகொண்டவளுக்கு அவனை அப்படி பார்க்க முடியவில்லை.
“சத்தியமா இல்லை அதி. ஆனாலும் அந்த நிமிஷம் என்னால முடியலைன்றது உண்மை…” என்றவள் மீண்டும் அவன் முகம் நிமிர்ந்து பார்த்தவள்,
“சந்தேகம் எல்லாம் இல்லவே இல்லை. இப்பவும் மூவில இருந்த அந்த அதிரன் இல்லை இல்லை. அதுல நீங்க அதிரன் இல்லையே…” என்றாள்.
“மேகாடா…” ஒற்றை கையால் அவளின் ஒருபக்க கன்னத்தை தாங்கிக்கொண்டான் அதிரன்.
“ஆனாலும் அந்த குரல், இன்னொரு பொண்ணோட. ரொம்ப ரொம்ப பக்கமா, இந்த கை, இந்த முகம். இந்த மீசை…” என்றவள்,
“தப்பு தப்பு. நான் நினைச்சது தப்பு. ஆனாலும் அந்த நிமிஷத்தை என்னால தாண்டி வர முடியலை அதி. கஷ்டமா இருந்துச்சு ரொம்ப…” என்ற சொல்லியவளை மீண்டும் அணைத்துக்கொண்டான்.
“மேகாம்மா என்னடா நீ?…”
“தப்பு தான், ஆனாலும் என்னை நானே சமாளிச்சுட்டேன். எனக்கே என் மேல கோவம். நான் தடுமாறினது உண்மை தான். ஆனாலும் அது எனக்கு நீங்க ப்ரூவ் பன்ற மாதிரி நின்னது தான் ரொம்ப காயப்படுத்திருச்சு. ஏன் அப்படி நின்னீங்க?..”
“இல்லடா, நான்…”
“எனக்கு தெரியும், நான் என்னை நினைக்கிறேனோன்னு உங்களுக்கு தோணிருச்சு. அதான் அப்படி பண்ணிட்டீங்க இல்லையா? ஆனா ப்ராமிஸ். நான் அடுத்தடவை அப்படி நினைக்க மாட்டேன். ப்ராமிஸ்….”
மீண்டும் மீண்டும் மேகா தான் தான் தவறு என சொல்லியவிதம் அதிரனை வெகுவாய் கலங்க செய்தது.
“சில்டா மேகாம்மா. ஒண்ணுமில்லை. ரெண்டுபேருமே ஒரு நிமிஷம் தடுமாறிட்டோம். ஆனா இனி அப்படி ஆகாது. நீ இதை நினைக்காத. நானும் தப்பு. சரியா?…” என மென்மையாய் தன் மேகத்தை கைகளுக்குள் பொத்திக்கொண்டான் அதிரன்.