“இல்லைடா, நீ இப்பதான் கிளாஸ் போக ஆரம்பிக்கிற. இத்தனை நாள் கழிச்சு இன்னைக்கு போற. திரும்ப கேப் வேண்டாம். நான் வரதுக்குள்ள உனக்கு எக்ஸாமும் நெருங்கிடும்…”
“அங்க வந்து படிக்கேனே?…” அவனின் சட்டை இறுக்கமாய் பிடித்துக்கொண்டவள் தன்னையும் உடன் அழைத்து செல்ல மாட்டானா என்று இருந்தது.
“மேகாம்மா…” அவள் கேட்டும் மறுக்கும் நிலையை அவனால் தாளமுடியவில்லை.
“புரிஞ்சுக்கோடா…” என சொல்ல நெஞ்சில் முகத்தை சாயத்துக்கொண்டாள்.
“அதி…” என்றவள் மீண்டும் எங்கே அழைத்து செல் என்றுவிடுவளோ என அவளின் வார்த்தைகளை வெளியிட விடாமல் சிறையிட்டான்.
தவிப்புகள் தீராமல் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்க நேரம் செல்வதை இருவரும் உணரவில்லை.
அவளை விட்டு விலக மேகாவின் கரங்கள் அவனின் சிகைக்குள் அழுத்தமாய் கோர்த்திருந்தது.
“ப்ளீஸ் அதி…” என்றவளின் இறைஞ்சுதல் மீண்டும் ஒரு அச்சாரத்திற்கு அடித்தளமாக அவனின் விலகளை அவள் அனுமதிக்கவே இல்லை.
திருமணத்திற்கு பின்னான முதல் பிரிவு. இருவருக்குமே அடுத்தவரின் அருகாமையை இழக்க மனமில்லை.
அதிரனின் தேடல் மேகாவை கொதிக்க செய்ய, மேகாவின் அணைப்பு அதிரனை கட்டி போட்டது.
இதழ் முற்றுகையில் களைத்து போக சோர்வாய் அவனின் தோளில் சாய்ந்துவிட்டாள் மேகா.
அவளின் நெற்றி, கன்னம், இதழ்கள், கழுத்து என வருடியவன் மெல்ல நகர்த்திக்கொண்டு வெளியே வந்தான்.
“மேகா இங்க பார்டா…” என்று சொல்லியும் ஒருவித மோன நிலை. பேச்சுக்கள் இல்லை அவளிடம்.
“முகத்தை கழுவிக்கோ. கிளம்புவோம்…” என்று சொல்லவும் அவள் உள்ளே செல்ல அதிரன் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
அங்கேயே இருந்தால் ஒன்று தான் கிளம்ப போவதில்லை, இல்லை மேகாவை அழைத்து செல்வதை தவிர தன்னால் வேறு எதுவும் செய்ய முடியாது.
முகத்தை துடைத்தபடி வந்தவள் அறையில் அவனில்லாது இருக்க அழுகை முட்டியது. தொண்டையில் துருத்திய கேவலை விழுங்கியபடி கீழே வந்தாள்.
பூஜையறையின் முன்னால் சுபத்ராவுடன் அதிரன் இருக்க நேராக அங்கே சென்றாள்.
காலையில் தான் தேவராஜும் வந்திருக்க மகனை அனுப்ப அவரும் வந்துவிட்டார்.
“வாம்மா, நீ விளக்கேத்து…” என சுபத்ரா மேகாவையே செய்ய சொல்ல அதிரன் அவள் முகத்தை விட்டு விழிகளை நகற்றவில்லை.
மேகா பொம்மை போல சொல்லியதை செய்ய பூஜையை முடித்துவிட்டு அதிரனுக்கும், மேகாவிற்கும் நெற்றியில் இட்டவர்,
“சரி சாப்பிட வாங்க. நேரம் ஆகுது இன்னும். இப்பவே லேட்…” என்றார் சுபத்ரா.
உணவுண்ணும் இடத்திலும் மேகா எதுவும் பேசவில்லை. முகத்தில் ஒட்டவைத்த சிரிப்புடன் இருந்தாலும் உணவும் தொண்டையில் இறங்க மறுத்தது.
தேவராஜும், சுபத்ராவும் கனிவுடன் அவளை பார்த்துக்கொண்டே அதிரனிடம் பேசினார்கள்.
“ஓகே ம்மா, மேகாவை பார்த்துக்கோங்க…” என்றான் மேகாவின் அருகே வந்து நின்று.
“நாங்க இத்தனை பேர் இருக்கோமே? அங்க நீ பத்திரமா இரு அதி. இப்ப ரெய்னி சீசன் வேற. அருவி, பாறைன்னு விளையாட்டா இருக்காத…” என்றார் சுபத்ரா.
“நான் பார்த்துக்கறேன் ம்மா…” என்றவன்,
“மேகா போகலாம்…” என முன்னே நடந்தான்.
வாசலை நெருங்கவும் அவனுக்கான வாகனமும் பின்தொடரும் வாகனமும் வரிசையாக நிற்க வழக்கம் போல ஹர்ஷத், ட்ரைவருடன் என்று நினைத்துக்கொண்டே நடந்தாள் அவள்.
“முன்னாடி உட்கார் மேகா…” என பின் பக்க காரை திறந்தவளிடம் சொல்லியவன் ட்ரைவரை நோக்கி சாவியை தூக்கி போடும் படி கை நீட்தி சாவியை கேட்ச் பிடித்தான்.
“நான் தான் ட்ரைவ் பன்றேன் பொண்ணே, உட்கார்…” என்று கண்சிமிட்டி புன்னகைக்கவும் மேகாவின் முகத்தில் சட்டென ஒரு மலர்ச்சி.
“உட்கார் மேகா…” என்று மறுபக்கம் வந்து அமர்ந்து காரை கிளப்பினான்.
வீட்டை தாண்டியதும் மேகா அதிரன் பக்கமாக நன்றாக திரும்பி அமர்ந்துகொண்டாள்.
“என்னடா பன்ற மேகா நீ?…” அத்தனை சிரிப்பு அவள் திரும்பி அமர்ந்த விதத்தில்.
“சும்மா தான்…” என்ற்றவளுக்கும் லேசாய் வெட்கமாக இருந்தாலும் இப்போது விட்டால் இந்த அருகாமை அடுத்து இன்னும் எத்தனை நாள் கழித்தோ என தோன்றியது.
அதிரன், சுபத்ரா பேச்சில் ஓரளவு அவள் அனுமானித்தது படப்பிடிப்பில் ஏதேனும் குளறுபடியோ, இல்லை யாருக்கேனும் முடியவில்லை என்றாலோ தள்ளி போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதை.
அப்படி எதுவும் ஆகிவிடாமல் விரைவில் ஷூட்டிங் முடிந்து அதிரன் கிளம்பி வந்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
“என்ன யோசிக்கிற மேகா?…” அதிரன் கேட்க,
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை….” என்றவள்,
“அங்க கிளைமேட் உங்களுக்கு ஒத்துக்குமா?…” என்றாள்.
“ஹ்ம்ம், இல்லைன்னாலும் பார்த்துக்கலாம்…”
“மேலே ஹில்ஸ் ஸ்டேஷன் சொன்னீங்க. அங்கயே தங்கறதுன்னா மேல எப்படி போவீங்க?…” என்றதும் திரும்பி பார்த்தான்.
ஏற்கனவே அதன் விவரங்களை எல்லாம் அவளிடம் அதிரன் சொல்லியிருக்கிறான்.
இப்போது மீண்டும் மேகா முதலில் இருந்து கேட்கவும் மெல்லிய புன்முறுவல் அவனிதழ்களில்.
“ஜீப் இருக்கு மேகா. என்ன ஒன்னு, பாதை தான் ரொம்ப கரடுமுரடா இருக்கும். அது பாதைன்னும் சொல்ல முடியாது. அங்க உள்ள மக்கள் யூஸ் பன்ற வழி தான். அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை….”
“சாப்பாடு? உங்களுக்கு அங்க சாப்பாடெல்லாம் செட்டாகுமா?…” அவள் கேட்க கேட்க அதிரனின் மனதில் மெல்லிய வலி ஊடுருவியது.
“குக்கிங் டீம் வராங்கடா. பிரச்சனை இல்லை…”
“ஹ்ம்ம், அங்க ரொம்ப குளிரும்ல…” என்றவள்,
“தங்க வீடு எல்லாம் இருக்கா?…” என்றாள்.
எல்லாவற்றையும் மறந்திருந்தாள் மேகா. இப்போது ஒவ்வொன்றாய் மீண்டும் மீண்டும் கேட்க அதிரன் சளைக்காமல் பதில் கூறிக்கொண்டே வந்தான்.
“சின்ன சின்ன வீடு இருக்கு. அங்க தான் ஸ்டே. பாதுகாப்பா தான் இருக்கும். அதான் டீம் அத்தனை பேர் போறோமே?…”
“ஓஹ்…”
“மேகா நான் சேஃபா தான் இருப்பேன். கூட அவ்வளோ பேர் வராங்க. லேடீஸ் எல்லாம் கூட. நீ கவலைப்படாத…” என்றான் மீண்டும்.
“ஹாங், ஓகே ஓகே…” என்று சொல்லியவள் நேரமாவதில் பதற்றம் கூடியது.
இதோ அடுத்த வளைவு அவளின் கோச்சிங் செண்டர். அவனிடம் வேறு என்ன கேட்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை.
இதோ இறக்கிவிட்டு கிளம்ப போகிறான். மேகாவின் மனதில் தடதடப்பு அதிகமாக வளைவில் திரும்பும் முன் காரை நிறுத்தியவன் அவளை இழுத்து அணைத்து ஆழ்ந்த முத்தத்தை பதித்தான்.
கண்ணை மூடி அதனை கிரகிக்கும் முன் விலகியவன் மீண்டும் காரை எடுத்து அவள் செண்டரின் முன் நிறுத்திவிட மேகாவின் விழிகள் திறந்தது.
“கிளம்புடா, டேக் கேர்…” என்றவனின் விரல்கள் ஸ்ட்ரியரிங்கில் தாளமிட ஆரம்பிக்க அவனையும், அதனையும் பார்த்தவள் அங்கே வைத்து தான் அணைக்கவும் முடியாமல் போக தவிப்பை அடக்கியபடி காரின் கதவை திறந்தாள்.
“மேகா…” அதிரன் அவளின் கையை பிடிக்க,
“பை அதி. பார்த்து போய்ட்டு சீக்கிரம் வாங்க…” குரல் தடுமாற சொல்லவும் தலையசைத்தான் பரிதவிப்புடன்.
“நீயும் பத்திரம்டா பொண்ணே…” என்று அவளின் கன்னம் தட்டியவன்,
தான் செல்லாமல் அவன் கிளம்ப போவதில்லை. அதற்குள் அக்கம்பக்கத்தில் பார்த்துவிட்டால் அவனுக்கு தான் சங்கடம் என்று மேகா மாடிக்கு செல்ல அதன் பின்னர் அதிரன் கிளம்பினான்.
மேகா மாடியில் இருக்கும் சென்டருக்குள் நுழையும் முன் வாசலுக்கு திமுதிமுவென்று அத்தனைபேரும் வந்து நின்றனர்.
“எங்க வர்ணா அதிரன்? எங்க காணும்? கிளம்பிட்டாங்களா?…” என்று கையில் போனை வைத்துக்கொண்டு கேட்க திகைத்து போனாள்.
“கிளம்பிட்டாங்க…” என அவள் சொல்ல அவளுக்கு வாழ்த்து சொல்ல கூட மற்றவர்களுக்கு தோன்றவில்லை.
“என்ன நீ? நாங்கலாம் அவரை பார்க்க நினைப்போம்ன்னு உனக்கு தெரிய வேண்டாமா? இருக்க சொல்லியிருக்கலாம்ல….” என்று கேட்கவும் திடுக்கிட்டு பார்த்தாள் அவள்.
“ஏய் இப்ப என்ன அவ பழைய வர்ணாவா? அதிரன் தேவராஜ் வொய்ப். அந்த கெத்துல தான இருப்பா, நம்மளை ஏன் யோசிக்க போறா?…” என்றொருத்தி சொல்ல,
“இல்லையா பின்ன? நம்ம யாரையாச்சும் அவ கல்யாணத்துல அவர் பக்கத்துல கூப்பிட்டாளா? யாரும் கிட்ட போக முடியலை…” ஒருத்தி நொடித்துக்கொண்டாள்.
“நாங்க எவ்வளோ ஆசையா வந்தோம்? எங்க ப்ரென்ட், கிளாஸ்மேட் ஒரு செலிபிரிட்டி வொய்ப்ன்னு வந்தா நீ கூப்பிட்டதோட சரி…”