“இங்க என்ன பன்றீங்க? அவளை முதல்ல உள்ள விடுங்க…” என மேகாவின் நெருங்கிய தோழிகளான புவனாவும், ரேவதியும் மேலே வந்தபடி சொல்ல,
“வந்துட்டாங்கடி பாடிகார்ட்ஸ், இவங்களும் அவங்க லவ்க்கு உடந்தை. அமுக்குணி மாதிரி இருந்துட்டு நமக்கு எதுவுமே தெரியலை பாரேன்…” என்று பேசிக்கொண்டே கலைந்து உள்ளே சென்றனர்.
“நீ ஏன் வரு இப்படியே நிக்கற? வா…” என்று ரேவதி சத்தம் போட்டு உள்ளே அழைத்து சென்றாள்.
உள்ளே செல்லவும் அங்கே இன்னும் முணுமுணுப்பு தான் சிலரிடம். எப்போதும் தான் அமரும் இருக்கையில் சென்று அமர அவளின் கோச் வந்துவிட்டார்.
“வாம்மா மேகவர்ணா, நல்லா இருக்கியா?…” என்றதும்,
“நல்லா இருக்கேன் ஸார்…”
“உன் கல்யாணத்துக்கு என்னால வர முடியலைம்மா. ஃபேமிலி சூழ்நிலை அப்படி…”
“பரவாயில்லை ஸார்….”
“ஓகே, ரேவதிட்ட இருந்து நோட்ஸ் கலெக்ட் பண்ணிக்கோம்மா. அதை ரெஃபர் பண்ணு. டவுட்ஸ்னா கேளும்மா…” என்று சொல்லிவிட்டு பாடத்தை துவங்கினார்.
பாடங்கள் துவங்க சலசலப்பு அடங்கி அதில் கவனம் வைத்தனர் மாணவர்கள் அனைவரும்.
வகுப்புகள் மதியம் வரை என்பதால் பரிட்சையும் நெருங்குவதால் பாடங்கள் முடித்திருக்க இப்போது ஒத்திகை வகுப்பை போல தான் நடந்துகொண்டு இருந்தது.
இடையே சில நிமிடங்கள் நேரம் கிடைக்க அதில் அதிரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் மேகா.
ஏர்போர்ட் செல்லவுமே அங்கிருந்து அதிரன் அவளுக்கு செய்தி அனுப்பியிருக்க கேரளா சென்றதும் அழைப்பதாக கூறி இருந்தான்.
இப்போது தனியே ஒதுங்கி இருந்தவள் தன்னுடைய செய்தி செல்ல படாமல் இருக்க இன்னும் அவன் சென்று சேரவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
வகுப்பில் வந்து அமர அந்த நேரம் சூழ்ந்துகொண்டனர் மற்ற பெண்கள். ரேவதியும், புவனாவும் தலையில் கை வைத்துக்கொண்டனர்.
மேகாவிற்கு அவர்களிடம் கடுமையாகவும் பேச முடியவில்லை. முடிந்தளவு பொறுமையாகவே இருந்தாள்.
“என்ன வர்ணா அதிரனுக்கா மெசேஜ்?…” என்று ஒருத்தி கண்ணடித்து கேட்க,
“மரியாதையா பேச வராதா உனக்கு?…” என்றாள் ரேவதி கடுப்பாக.
“எல்லாருமே அதிரன்னு தான கூப்பிடுவாங்க. இதென்ன புதுசா?…” என்று அவள் கண்டுகொள்ளாமல் இருக்க,
“வரு நீ பேசாத யார்க்கிட்டயும்…” என்றாள் புவனா.
“உங்க வேலையை நீங்க பாருங்க…” என்ற அந்த பெண்,
“டெய்லி உன்னை ட்ராப் பண்ண வருவாங்களா? இல்லை இன்னைக்கு மட்டுமா? ஆமா அடுத்து என்ன மூவி வருது? புது மூவி ரிலீஸ் போல? நேத்து ப்ரிவ்யூ ஷோ போனீங்கன்னு நெட்ல போட்டோஸ் பார்த்தேன். படம் எப்படி இருக்கு?…”
“ஹ்ம்ம், நல்லா இருந்துச்சு…” என்றாள் மேகா.
“நாங்களும் ட்ரெய்லர் பார்த்தோம். அந்த ஹீரோயின் ரொம்ப அழகுல. அப்படி ஒரு பர்பெக்ட் மேட்ச் தெரியுமா? இன்னொரு மூவி ரெண்டுபேரும் சேர்ந்து நடிப்பாங்களா?…” என கேட்க அதற்குள் மீண்டும் கோச் வந்துவிட அனைவரும் கலைந்தனர்.
மதியம் வகுப்பு முடிந்தவுடன் உடனே சென்றுவிட வேண்டும் என மேகா நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
ஒரே நாளில் தன்னுடைய படிப்பே வெறுத்துவிடும் என அவள் நினைத்ததே இல்லை.
அப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டாள் மேகா. அங்கிருக்கவே பிடிக்காமல் போனது.
அவர்களுக்கு பதில் சொல்ல பிடிக்காமல் போனது. இதென்ன பேச்சு? இதற்கு நான் மதித்து சொல்ல வேண்டுமா? என எரிச்சல் வந்தது.
வகுப்புகள் முடியவும் சிலர் கிளம்ப ஆரம்பிக்க ரேவதியிடம் நோட்ஸ் அனைத்தையும் பார்த்துக்கொண்டவள் அவற்றை தனக்கு மெயில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டு கிளம்ப மீண்டும் சுற்றி வளைத்தனர்.
“எப்படியாச்சும் அவரோட ஒரு மீட் அரேஞ்ச பண்ணு வர்ணா. ஒருதடவை எங்களை எல்லாம் இன்ட்ரட்யூஸ் பண்ணி வைப்பா. லஞ்ச், டின்னர் எதுவா இருந்தாலும். ப்ளீஸ் ப்ளீஸ்…”
“வர்ணா என்னோட அண்ணன் சீரியல்ல அப்பப்ப சைட் ரோல் பண்ணிட்டிருக்கான். நீ தான் உன் ஹஸ்பன்ட்கிட்ட சொல்லி மூவில ஒரு சான்ஸ் வாங்கி தரனும், யாரையுமே மீட் பண்ண முடியலை. நீ எங்களோட பிரண்ட் ஆச்சே. இந்த ஹெல்ப் நீ கண்டிப்பா பண்ணனும்…”
“வர்ணா அதை விடு, நீ எப்படி இருக்க? ஆமா உன் வீடு எப்படி இருக்கும்? ஒருநாள் வீட்டோட பிக்சர்ஸ் கொண்டு வாயேன். எங்களை கூப்பிடுவியா உன் வீட்டுக்கு? செலிபிரிட்டி வீடு உள்ள எப்படி இருக்கும்ன்னு பார்க்கனும்….”
“ஆமா இங்க மாதிரி தான் அங்கயும் மூடி டைப்பா நீ? உன்னை எப்படி பிடிச்சதோ போ. நல்லா பேசுவியா அவர்கிட்ட? என்ன ரொம்ப பிடிக்கும் அதிரனுக்கு?…”
“ப்ச், என்னடி இது இப்பத்தான் கல்யாணம் ஆகியிருக்கு. அவக்கிட்ட இப்பவே எல்லாம் கேட்டுட்டு…” என்ற ஒரு பெண்,
“இங்க வா. அதிரன் ஸார் ஸ்க்ரீன்ல எப்படின்னு தெரியும். வீட்டுல எப்படி? ஜாலி டைப்பா? இல்லை ரொம்ப அமைதியா? உன்கிட்ட எப்படி?…” என்ற பேச்சு மெல்ல எல்லை மீற,
“ஸ்டாப் இட்…” என இரைந்துவிட்டாள் மேகா.
அத்தனைபேரும் திகைத்து பார்க்க படபடவென்று இருந்தது மேகாவிற்கு அந்த நிசப்தமும், அனைவரின் பார்வையும்.
வெளியே இருந்த கோச் மேகாவின் சத்தத்தில் வேகமாய் உள்ளே வர அங்கே நின்றிருந்தவள் முகத்தில் தெரிந்த உணர்வில்,
“படிக்க தான வந்திருக்கீங்க எல்லாரும்?…” என்று சத்தம் போட்டுவிட்டார் அனைவரையும்.
“இனிமே வர்ணாவை யாராச்சும் இப்படி தொந்தரவு செஞ்சீங்க?…” என்று எச்சரித்தவர்,
“நீ கிளம்பும்மா. உன் கார்ட்ஸ் வெய்ட் பன்றாங்க கீழே…” என்று சொல்ல தலையசைத்துவிட்டு அவள் கீழே வந்துவிட்டாள்.
“தேங்க்ஸ் ஸார்…” என்று ரேவதியும், புவனாவும் செல்ல அவர்களிடம் தலையசைத்துவிட்டு மற்ற மாணவிகளை முறைத்தார்.
அவர்கள் எல்லோரும் கிளம்பி சென்றதும் தான் அவருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
எப்போதும் தன்னுடைய கோச்சிங் செண்டருக்கு என்று தனி பெயர் உண்டு. இப்போது ஒரு பிரபலத்தின் மனைவி இங்கே படிக்கிறாள் என்பது இன்னும் பெயரை பெற்று தந்திருந்தது.
அது அவரின் வருமானத்தை பெருக்குவதற்கான ஒரு வழி. அதிரன் தேவராஜ் என்னும் திரை நட்சத்திரத்தின் வெளிச்சத்தின் மூலம் தனக்கென்று ஒரு பெயர்.
மேகவர்ணாவின் குடும்பம், உறவுகள், படிப்பு என்ற தொகுப்புகள் சோஷியல் மீடியாவில் அலசி ஆராயப்பட்டதில் அவள் படிப்பு சம்பந்தப்பட்ட தகவல்களில் தன்னுடைய கோச்சிங் செண்டரும் இடம் பெற்றிருந்ததில் ஏக பெருமை அவருக்கு.
அதனை காட்டிக்கொண்டதில்லை என்றாலும் அதன் மூலம் தனது நிறுவனமும் பிரபலமாகியிருப்பதில் உள்ளூர சந்தோஷம் தான்.
எங்கும் எதிலும் லாபம் என்று ஒன்றை தான் வியாபாரியின் மனது தேடும் என்பதை போல கல்வியும் வியாபாரமாகி இருக்க அதனை கொண்டு அந்த வெளிச்சத்தில் சிறு புள்ளியாய் தன் நிறுவனத்தின் லாபத்தை தான் தேடினார் அவரும்.
சிறந்த ஆசிரியர். ஆனால் அதையும் இன்னும் பெரிதாய் காட்டிக்கொள்ள இப்படியான விளம்பரங்கள் தேவைப்படுகிறதே.
மேகா திருமணத்தின் பின்னர் இங்கே எங்கே வந்து படிக்க போகிறாள் என்று நினைத்திருக்க பல்லவனே அழைத்து பேசியதில் அகமகிழ்ந்து போனார்.
இப்போது நடந்த நிகழ்வு அவருக்கும் ஒப்பவில்லை. என்னதான் மேகாவிடம் அப்பெண்கள் பேசியது தவறென்றாலும் அதனால் முதலில் பாதிப்பு தனக்கு தானே என நினைத்தார்.
“ஹ்ம்ம், இதுங்க பேசினதுக்கு இந்த பொண்ணு இங்க வராம போயிட போகுது…” என கடுப்பாய் சொல்லிக்கொண்டு அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு காத்திருந்தார்.
மேகவர்ணா சென்டரில் இருந்து நேராய் வீடு வந்துவிட தேவராஜ் வீட்டில் இல்லை.
கிளம்பிய நேரமே அதிரன் அழைக்க வீட்டிற்கு வந்து பேசுகிறேன் என்று தகவல் அனுப்பிவிட்டு காரில் கண்ணை மூடிக்கொண்டாள்.
இப்படியான பேச்சுக்களை என்னவென்று எப்போதும் தவிர்ப்பது? தனியாய் எதிலோ மாட்டிக்கொண்ட உணர்வு.
அதிலும் தனிப்பட்ட பேச்சுக்களை கூட எத்தனை சாதாரணமா கேட்கின்றனர் இங்கிதமற்று என்று ஆற்றமாட்டாமல் இருந்தது.
அவள் வந்த நேரம் சுபத்ரா அவர் அறையில் இருக்க பணியாள் வந்து சுபத்ரா உறங்குகிறார் என்று சொல்லிவிட மாடிக்கு சென்றாள்.
பணியாள் சாப்பிட்டு செல்லுமாறு சொல்ல இப்போது வேண்டாம் என்றுவிட்டு மாடிக்கு வந்துவிட்டாள்.
திருமணமாகி அந்த வீட்டிற்கு வந்த பின்னர் முதன் முதலில் தனியே மாடிப்படி ஏறுகிறாள்.
எப்போதும் அவளை பயம் காட்டும் அந்த பிரமாண்டம் இப்போது தொண்டையடைக்க செய்தது.
மாடியில் கை கோர்த்தபடி அவளுடனே இழைந்துகொண்டு நடக்கும் அதிரன் இல்லை.
தன்னிடம் பேசி சிரித்தபடியே தன்னை அரவணைத்து கொண்டாடும் கணவன் இல்லை.
வெறுமையாக மனதெங்கும் அவனை தேடி தேடி அலைபாயும் உணர்வுகள் மேகாவினை ஆட்டிப்படைத்தது.
அதிரன் சென்ற அன்றே இத்தனை தூரம் அவள் வாடி இருக்க அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்ததும் அவனின் வாசம்.
“அதி…” என்று விழிகள் அலைப்புருதலுடன் அவ்வறையை அளவிட்டது.
உள்ளே நுழைந்து பேக்கை கட்டியில் வைத்துவிட்டு அமர்ந்தவள் இரு கைகளாலும் தலையை தாங்கிக்கொண்டாள்.
அவனின் தோள் சாய்ந்துவிடமாட்டோமா என்னும் எண்ணங்களில் இருந்து மீள முடியவில்லை.
“அதி, ப்ளீஸ் வாங்களேன்…” என்று மனதோடு இதழ்களும் அரற்ற அவளின் மொபைலில் வந்துவிட்டான் அதிரன் வீடியோ காலில்.
அழைப்பு வரவுமே கண்ணீருடன் பார்த்தவள் போனை எடுத்து அழைப்பை ஏற்றதும் திரையில் அதிரன் புன்னகைக்க,
“அதி…” என்று உதடு துடிக்க அழைத்தவள் தன் முகத்தை மொபைலோடு அழுத்தி புதைக்க,
“மேகா…” என்றான் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி புன்னகையுடன்.
“லவ் யூ அதி…” என உணர்வுகளின் மிகுதியில் சொல்லியதை நம்பமுடியாது அதிரன் பார்க்க அடுத்தடுத்து திரையில் பிம்பத்தில் இருந்தவனில் தன் அதரங்களை பதித்தது அவனின் மேகம்.
“மேகா நான் உன் கூடவே தான் டா இருக்கேன்ம்மா…” என்றவனின் எந்த சமாதானங்களும் அவளிடம் எடுபடவில்லை.
மொபைலை முகத்தில் வைத்தபடி அப்படியே ஒருக்களித்து சரிந்துகொண்டவள் கண்களை மூடிக்கொள்ள அதிரன் நிலை ஸ்தம்பித்தது.