தன்னிலை மறந்த ஒரு நிலையில் தான் இருந்தாள் மேகா. அதிரன் அவளின் கண்ணீரையும், பிதற்றல்களையும், முத்தச்சத்தத்தையும் உள்வாங்கியபடி மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.
இன்னும் ஒருமுறை கூட அவன் அவளிடத்தில் அந்த வார்த்தையை சொல்லியிருக்கவில்லை.
ஆனால் ஒவ்வொரு பார்வையிலும், தன் அசைவிலும், அழைப்பிலும் அவளிடம் உணர்த்த தவறவில்லை.
அதுதான் அவனுக்கும் பிடித்திருந்தது. மேகாவிடம் வாய் வார்த்தையாக சொல்லிவிட்டு செல்ல தோன்றவில்லை.
உடன் நடிக்கும் எத்தனையோ பெண்களுக்கு அந்த வார்த்தையை பலவிதங்களில், பல பரிமாணங்களில் சொல்லியிருக்கிறான்.
அதிரனை பொறுத்தவரை வார்த்தை, அது வெறும் வார்த்தை மட்டுமே. அதற்கு மேல் அதில் காண்பிக்க என்ன உள்ளது என்று ஒரு தோற்றம் மனதிற்குள்.
தன் உணர்வுகளை காட்டிலுமா அந்த வார்த்தை காதலை அவனின் மேகத்திடம் சேர்ப்பித்துவிட போகிறது?
பத்தோடு பதினொன்றாக அதனை மேகாவிடம் சொல்ல தோன்றவில்லை அதிரனுக்கு.
அவனின் மேகம் எப்போதுமே அவனுக்கான பொக்கிஷம். அவனின் வாழ்வின் எல்லை அவள்.
அவளிடம் அந்த வார்த்தையை சொல்லிவிட அவனுக்கு என்றுமே தோன்றியதில்லை.
தன் மேகம் தன்னிடம் அதனை சொல்ல வேண்டும் என்றும் என்றுமே எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும் அவனுக்கு மேகா சொல்லிய இந்த வார்த்தையும், அவள் சொல்லியவிதமும், தன் மீதான தேடலும் அதிரனை புரட்டியது.
“மேகா டேய்…” அவன் சத்தமாய் இரண்டு மூன்று முறை அழைக்கவும் தான் நிமிர்ந்து பார்த்தாள்.
“கண்ணை துடைச்சுக்கோ…” என்றதும் ஈர இமைகளை மெல்ல சுடிதாரின் துப்பட்டாவை கொண்டு துடைத்துவிட்டு எழுந்தமர்ந்தாள்.
‘என்ன செய்துவிட்டேன்?’ என தன்னை குறித்தே சற்று கோபம் கூட வந்தது மேகாவிற்கு.
வெளியூருக்கு வேலை என்று சென்றிருப்பவனிடம் இப்படி அவனின் மனநிலையை கெடுப்பதை போல செய்துவிட்டேனே என தோன்றியது.
‘அதுவும் ஒரு வேலை. அதற்கு சென்றிருக்கிறான்.’ அவ்வளவே அவளின் எண்ணங்கள்.
அவனோடு முதல் பிரிவு, கோச்சிங் சென்டரில் இதுவரை இனிமையாக பேசி பழகிய தோழிகளின் எல்லை மீறல்களும், பரிகாசங்களும், மீண்டும் வீட்டின் வெறுமை என மேகா நிலைகுலைந்து போயிருந்தாள்.
காலை கிளம்பும் பொழுதே அதிரன் சொல்லியிருந்தானே? அவர்களின் பார்வை இப்போது எப்படி இருக்குமோ உன்னிடத்தில் என.
எத்தனை நம்பிக்கையாக அதற்கு வாய்ப்பில்லை என்று மறுத்தோம். இப்போது அவன் சொல்லியது எத்தனை உண்மை என புரிந்தது.
“மேகா சில்…” என்றவனை பார்த்தவள் மெல்ல புன்னகைக்க,
“தட்ஸ் குட்…” என்றான் திரையில் அவளின் முகத்தை விரல்களால் அளவெடுத்தபடி.
“நீ ஓகே தானே?…”
“நான் ஓகே, நீங்க அங்க ரீச்சாகியாச்சா?…”
“ஹ்ம்ம் டா. வந்துட்டோம். லஞ்ச் முடிச்சுட்டு லொக்கேஷன் கிளம்பனும். அங்க போனா வீடியோ கால் வர முடியாதே…” எனவும் மீண்டும் மேகாவின் முகம் வாட அதிரன் அமைதியாக பார்த்தான்.
மேகாவிடம் அவளை சந்தோஷப்படுத்த தான் இப்போதே கிளம்பி சென்றுவிடலாம். ஆனால் ஒவ்வொருமுறையும் அதனை செய்ய முடியுமா அவனால்?
தன் மேகம் எதற்கும் பழகிக்கொள்ளும் என்னும் நம்பிக்கை அவனுக்கிருக்க பார்த்தபடி தான் இருந்தான்.
“ஹ்ம்ம், நான் வரதுக்குள்ள எக்ஸாம் முடிஞ்சிரும்ன்னு நினைக்கறேன்…”
“அவ்வளோ நாள் ஆகுமா?…” என்றவள் நாக்கை கடித்துவிட்டு,
“ஓகே இருக்கலாம்…” என்றாள் உடனே.
“ஹ்ம்ம், இன்னும் ஒன் மந்த் தானே. நீ செண்டருக்கு போய்ட்டு வா…”
“அதி…”
“சைலண்ட் ரொம்ப பெரிய வெப்பன் மேகா. இந்த மாதிரி விஷயங்கள்ல ரொம்ப சைலண்ட்டா இருந்திரு. பேசி பேசி அவங்களே ஓய்ஞ்சு போய்டுவாங்க…”
“ஒரே கிளாஸ்ல, எப்படி அதி?…”
“முடியாதா என்ன? உன்னால முடியும். அவங்க மட்டும் தான் இருக்காங்களா? உன்னோட க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ரெண்டுபேர் இருக்காங்களே?…”
“இன்னைக்கு ஸார் வேற அவங்களை திட்டிட்டார்…”
“அதனால? என்ன நினைக்கிற மேகா? நீ உன் ஸ்டடிஸ் கம்ப்ளீட் பண்ண வேண்டாமா?…” என்றதற்கு அவளிடம் அத்தனை அமைதி.
“மேகா இங்க பாரு…” என்றதும் நிமிர்ந்து அமர்ந்தவள்,
“நான் போறேன் அதி…” என்றாள்.
“இப்படியா சொல்லனும்? அதை சிரிச்சுட்டே சந்தோஷமா போல்டா சொல்லனும். க்ரிட்டிஸிஸ் பன்றவங்களுக்கு அது ஒரு வேலை. நமக்கு ஆயிரம் வேலை இருக்கு…”
“ஹ்ம்ம்…”
“நீ சி.ஏ முடிக்கனும். எனக்கு ஆடிட் பண்ணனும். எனக்கு தான் பர்ஸ்ட் ப்ரிப்ரன்ஸ்ன்னு வேற கெத்தா உன் அண்ணன்கிட்ட சொல்லியிருக்கேன் உன்னை நம்பி. நீ என்னன்னா?…”
“நான் தான் போறேன்னு சொல்லிட்டேனே?…”
“குட். இப்ப கொஞ்சம் பெட்டர் தான்…” என்றவன்,
“ஹ்ம்ம், தென்?…” என்றான் சிரித்தபடி தாடையில் கை ஊன்றி அவளை ஆழ்ந்த பார்வையுடன்.
“என்ன?…”
“என்னவோ சொன்னியே. இப்ப சொல்லு. திரும்ப இப்ப கேட்கனும் போல இருக்கு…” என்று கண் சிமிட்ட என்ன சொன்னோம் என்றே ஞாபகமில்லை.
“புரியலை. என்ன சொன்னேன்? தெரியலை அதி…” என்றாள்.
“சூர்…” என கேட்டவன் இதழ்களில் குறும்பாய் புன்னகை.
“கால் அட்டன் பண்ணினதும் நீ என்ன பண்ணின? ரிவைண்ட் பண்ணி பாரேன்…” என்றான்.
“என்ன இது?…” என்றவள் யோசிக்க யோசிக்க இப்போது ஞாபகம் வந்து அவனை பார்க்க,
“சொல்லு சொல்லு…” என்றான் தலை சாய்த்து புன்னகையுடன்.
“ம்ஹூம், இல்லை. அது ஏதோ ஒரு எமோஷன்ல…”
“இப்ப எனக்கு அந்த எமோஷன் வேணும் மேகா. சொல்லேன்டா பொண்ணே…”
“அதி…”
“உண்மையா நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ சொல்லும் போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? மேகாம்மா…” என்றவன் முகத்தை இரு கைகளாலும் தேய்த்துக்கொண்டவன் பார்வையை மட்டும் காண்பித்தான்.
“அதி…”
“இப்பதான் உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பன்றேன்டா. உடனே உன் பக்கத்தில வரனும் போல இருக்கு. வரவா?…” என்று கேட்டான்.
அவனிருந்த அறை கதவை யாரோ தட்டுவதை போல இருக்க இங்கே மேகாவிற்கும் கேட்டது.
“ஹர்ஷத் தான்…” என்றவன் உள்ளே வர சொல்லி அனுமதி அளித்தான்.
“ஸார் கிளம்பலாம். ஜீப் வந்திருச்சு…” என சொல்லவும் மேகா அதிரனை பார்க்க அவனின் பார்வையும் அவளிடம் திரும்பியது.