“இப்ப போய்ட்டிருக்கோம். இன்னும் கொஞ்சம் நேரத்துல பாரஸ்ட்குள்ள என்ட்ரியாகிடுவோம். சிக்னல் கிடைக்காது. நானே கூப்பிடறேன். டேக் கேர் மேகாடா…” என்று சொல்லவும் மேகாவும் பேசிவிட்டு வைத்துவிட்டாள்.
சாப்பிட்டு முடித்து வெளியே வைத்தவள் சுபத்ராவை தேட இன்னும் அவர் எழுந்திருக்கவில்லை.
மீண்டும் மேலே வந்தவள் வந்து படுக்க உறக்கம் வரவில்லை. அதற்குள் ரேவதி அவளுக்கு மெயில் அனுப்பியிருக்க அதனை கவனிக்க ஆரம்பித்தாள் மேகா.
அன்றைய நாளை கடந்து செல்லவே அத்தனை சிரமமாக இருந்தது. மாலை சுபத்ராவுடன் கோவிலுக்கு சென்று வந்தாள்.
இப்போது இன்னும் மனதிற்கு ஆறுதலாக இருக்க சுபத்ரா தன்னுடன் தங்குமாறு சொல்லியும் மறுத்துவிட்டாள்.
“நைட் படிப்பேன் த்தை. எக்ஸாம் வருது. அதனால உங்களுக்கு தான் தொந்தரவா இருக்கும்…” என்று சொல்லிவிட அவரும் ஒன்றும் சொல்லவில்லை.
மறுநாள் அலாரம் வைத்து எழுந்துகொண்டவளுக்கு அறையின் வெறுமை மனதை அறுத்தது.
இத்தனை நாளில் அவனில்லாத முதல் இரவும், முதல் விடியலும். சுத்தமாய் பிடிக்கவில்லை.
அதிரன் என்ன செய்கிறானோ என நினைத்துக்கொண்டே கிளம்பி வந்தாள் செண்டருக்கு.
“என்னம்மா அம்மாக்கு பேசினியா நீ? மோனி கூட கூப்பிடலை?…” என பேச்சினூடே சுபத்ரா தான் கேட்டார்.
அப்போதுதான் மேகாவிற்குமே ஞாபகம் வந்தது. தன் வீட்டிற்கு கூட தான் பேசாதது.
திருமணத்தின் பின்னர் பெரும்பாலும் மேகாவாய் அழைக்காமல் அவள் வீட்டிலிருந்து அழைப்பது அரிதாகி இருந்தது.
அதிரனும் உடன் இருக்க அழைத்து தொந்தரவு செய்ய கூடாதென நினைத்து அவளையே அழைக்க சொல்லியிருக்க மேகா இப்போது அழைக்கவே மறந்திருந்தாள்.
“என்ன வரு நீ?…” என்று சொல்ல மேகாவின் பார்வையில் அத்தனை அழுத்தம்.
அதன் பின்னர் அவர்களும் அமைதியாக பெசிக்கொண்டிருப்பவர்களுக்கு எந்த பிரதிபலிப்பையும் காண்பிக்கவில்லை மேகா.
உள்ளூர அத்தனை வலிக்கத்தான் செய்தது. ஆனாலும் கடுமையாய் மௌனம் கொண்டாள்.
“பார்த்தியா எவ்வளோ அழுத்தமா இருக்கான்னு. நம்மளை யார் என்ன செய்ய முடியும்ன்ற இடத்துல இருக்கோம்னு திமிர் வந்திருச்சு. மதிக்காம இருக்கறதை பாரேன்…” என அதற்குமே பேசத்தான் செய்தனர்.
சிலர் அதற்கு சத்தம் போடவும் செய்ய அதற்குமே நக்கலாக பேசத்தான செய்தனர்.
கூடுதலாய் ‘நடிகனை கல்யாணம் செய்துட்டு எப்படி இத்தனை தைரியமா இருக்கா இவ? எப்ப எவ கொத்திட்டு போவான்னு பயந்துட்டே இருக்கறது ஒரு வாழ்க்கையாக்கும்?’ என்றும் பேச ரேவதி தான் கொந்தளித்தாள்.
“நீங்கலாம் மனுஷ ஜென்மமா?…” என கேட்டுவிட அவளிடம் பேச முயன்று இன்னும் ரேவதியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.
“வரு சொல்றேன்னு தப்பா நினைக்காத. இந்த செண்டர் வேண்டாம் உனக்கு. வேற பாரு…” என்று கிளம்புகையில் சொல்லிய ரேவதியிடம் புன்னகையுடன் விடைபெற்றாள் மேகா.
மேகா நேராக தன் வீட்டிற்கு செல்ல அதற்குள் ரேவதி மோனிகாவிற்கு அழைத்து இங்கே நடப்பதை சொல்ல ஆரம்பித்திருந்தாள்.
வீடு சென்று சேருகையில் மோனிகாவும், மலரும் ஓரிடத்தில் சோர்வுடன் அமர்ந்திருக்க அமுதன் வீட்டில் இல்லை.
பல்லவன் மட்டும் நெற்றியை பிடித்தபடி கோபமாய் இருந்தான். பார்த்ததுமே தெரிந்துவிட்டது அவனின் கொதிநிலை.
திடீரென்று சொல்லாமல் மேகா வந்து நின்றதும் ஆச்சர்யமாய் எழுந்துவிட்டனர் வீட்டினர்.
“வா வரு, என்ன திடீர்ன்னு? போன் கூட பண்ணலை?…” என மலர் படபடக்கவும் மோனிகாவும் வியப்பாய் பார்த்தாள்.
“என்ன நீ போன் கூட பண்ணலை வரேன்னு. ரேவதி கூட சொல்லலையே?…” என உளற,
“ரேவதி பேசினாளா?…” என்ற மேகா அதற்கு தான் சோர்ந்து போய் இருக்கிறார்களா என நினைத்து அண்ணனை பார்த்தாள்.
“வா வரு. உட்கார்…” என்றான் அவன்.
குரலில் அத்தனை சுரத்தில்லை. கவலையும், ஆற்றாமையும் போட்டிபோட்டுக்கொண்டு இருந்தது.
“என்னாச்சும்மா?…” மேகா தாயிடம் கேட்க,
“ம்மா, கிளாஸ்ல இருந்து நேரா வந்திருக்கா போல? சாப்பிட சொல்லுங்க…” என்ற பல்லவன்,
“அண்ணன் இப்ப வந்திடறேன் டா…” என்று எழுந்து சென்றான் வெளியே.
“என்ன வரு? சொல்லியிருந்தா அம்மா எதாச்சும் செஞ்சிருப்பேன்ல?…” என கேட்டுக்கொண்டே வீட்டில் சமைத்ததை எடுத்து வைத்தார்.
“தூங்கறான் வரு. இவ்வளோ நேரம் இருந்தான். இப்பதான் தூங்க வச்சேன் சாப்பாடு ஊட்டி…” மோனிகா சொல்லிகொண்டிருக்க அதற்குள் மலர் போன் அடிக்கவும் சென்றார்.
“என்ன பிரச்சனை செண்டர்ல?…” மலர் நகர்ந்ததும் மோனிகா கேட்க,
“நானே எதிர்பார்க்காதது அண்ணி. எல்லாரும் ரொம்ப பேசிட்டாங்க…” என்று சொல்ல,
“இதெல்லாம் இருக்கத்தான் செய்யும் வரு. ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காத…”
“சொல்லுங்கண்ணி, நான் எப்போ அப்படி நினைச்சிருக்கேன்?…”
“இதுவரைக்கும் வேற. அப்ப நீ என்ன நினைச்சாலும் உன் நல்லது தான் எனக்கு சரின்னு படும். பேசுவேன். இப்போ அப்படி இல்லை…”
“அண்ணி ப்ளீஸ், இப்படி பிரிச்சு பேசவேண்டாம்…”
“அப்ப நான் சொன்னா கேட்பியா?…”
“நிச்சயமா அண்ணி…”
“என்னதா அதிரன் அண்ணா உன் விருப்பம் போல நீ இருக்கனும். இந்த கல்யாணம் உன்னை எந்தவிதத்திலும் கட்டிப்போட்டுட்டதா நினைக்க வச்சிட கூடாதுன்னு சொன்னாலும் சில விஷயங்கள நீ ப்ராக்ட்டிக்கலா பார்க்கனும்…”
“அண்ணி…”
“நீ அதிரன் வொய்ப்ன்றது எத்தனை நிச்சயமோ அத்தனை அவரோட இமேஜ் இனி உனக்கும் சேர்ந்ததுன்றதும் மறுக்க முடியாது. ஏன் எங்களுக்கும் அதுதான்…”
“புரியுது அண்ணி. அதுக்கும்…”
“அதான் சொல்ல வரேன்…” என்று அவளருகே இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்துகொண்டாள்.