“உன்னை படிக்க வேண்டாம்ன்னு சொல்லலை. ஆனா இடம், இதை நீ யோசிக்கலாம். உன்னை எல்லாரும் முன்னாடி இருந்த வருவாவே பார்க்கமாட்டாங்க. உன்கூட இருக்கற ப்ரெண்ட்ஷிப் வச்சே யூஸ் பண்ண தான் பார்ப்பாங்க…”
“ஹ்ம்ம் அண்ணி…”
“இப்ப உன்னால மாற முடியாது. எக்ஸாம் முடியட்டும். அடுத்து என்ன செய்யறதுன்னு உன் மாமனார்க்கிட்ட கேளு…”
“அண்ணி…”
“அதிரன் அண்ணா உன்கிட்ட கேட்பாங்க. உன் விருப்பத்தை கேட்பாங்க. ஆனா உன் மாமனார் அவரோட குடும்பத்தையும் பார்ப்பார். அதுக்காக தான் சொல்றேன்…”
“சரிங்கண்ணி. ஆனா இதுக்காகவா இவ்வளோ டல்லா இருக்கீங்க எல்லாரும்?…” என்றாள் உண்டு முடித்து கையை கழுவிவிட்டு.
“நீ உன் ரூம்க்கு போ. இப்ப வரேன்…” என்று மோனிகா சொல்லிவிட்டு மகனை பார்த்துவிட்டு வர மலர் போனில் பேசிக்கொண்டிருந்தார் செல்வத்தின் மனைவியுடன்.
“அத்தை அஷ்வினை ஒரு பார்வை பார்த்துக்கோங்க…” என்று சொல்லிவிட்டு மேகாவின் அறைக்கு வர அங்கே மேகாவின் திருமண புகைப்படங்கள் சிலதை மாட்டி இருந்தனர் வீட்டினர்.
“எப்போ பிரேம் பண்ணினேங்க அண்ணி? சொல்லவே இல்லை?…” என்றாள் அவற்றை பார்த்தபடி.
“நீ துபாய் போய்ட்டு வரவும் சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு சொல்லலை. நல்லா இருக்கா?…”
“ரொம்ப மிஸ் பன்றியா வரு?…” மேகாவின் விழிகள் கலங்கியிருக்க அவள் அதிரனை பார்த்துக்கொண்டே இருப்பதை கண்டு கேட்டாள்.
“ஹ்ம்ம் அண்ணி…” என தலையசைக்க,
“சரியாகிடும். பீல் பண்ணாத…” என்றதும் மேகா வந்து கட்டிலில் அமர,
“இங்க நிறைய நடந்திருச்சு வரு. பரமசிவம் மாமா செல்வம் மாமாவை வீட்டை விட்டு வெளில போக சொல்லிட்டாங்களாம்…”
“என்ன?…”
“ஆமா, எல்லாம் உன் கல்யாணத்துல ஆரம்பிச்ச பிரச்சனை தான். செல்வம் மாமா மாமாவோட கூட்டு சேர்ந்துட்டு மதிக்காம நடந்துக்கிட்டாருன்னு சின்ன சின்ன கரைச்சல்ல ஆரம்பிச்சு இப்ப சண்டை பெருசாய் சொத்து பிரிக்கிற அளவுக்கு போய்டுச்சு..”
“என்னண்ணி? இதை ஏன் என்கிட்டே யாருமே சொல்லலை?…”
“நீ துபாய்ல இருந்து வந்த அன்னைக்கு நைட் தான் இவ்வளவும். உன் அண்ணன் சொல்லவேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க உனக்கு…”
“பாவம் பெரியப்பா? அவர் என்ன பண்ணினார்?…”
“எல்லாம் உன் பெரிய பெரியப்பாவுக்கு வாய்க்கொழுப்பு. வீட்டை விட்டு வெளில பொண்ணு ராத்திரி நேரத்துல வீட்டுக்குள்ள ஆட்டம் போட்டா சும்மா போக அவர் என்ன மாமாவா? எனக்கும் இந்த வீட்டுல உரிமை இருக்குன்னு சொல்லிட்டாராம்…”
“அச்சோ…”
“ஏன்? அவர் சொன்னதுல என்ன தப்பு? பெரியவர் ஆட்டத்துக்கு எல்லாருமா தாளம் போட முடியும்? செல்வம் மாமா சரியா தான் கேட்டிருக்கார்…”
“சரிதான் அண்ணி…”
“அப்படியே பேச்சு முத்தி வீட்டை பிரிக்கிற மாதிரி பேச்சு வந்துருச்சு…”
“அத்தை ஒன்னும் சொல்லலையா?…”
“உன் அத்தைதானே? இருக்கறதை வழிச்சுட்டு தான போக பார்ப்பாங்க. நேத்து இங்க பெரிய ரகளையே நடந்து இன்னைக்கு காலையில உன் அத்தை வந்து ஒருபாடு மாமாவை படுத்தி எடுத்துட்டாங்க…”
“என்னன்னு அண்ணி?…”
“சொத்து பிரிக்கனும்னா பிரிச்சுக்கோங்க. ஆனா எனக்கு வேண்டாம். நாலு பங்கை மூணா போட்டுக்கோங்கன்னு மாமா சொல்லிட்டாங்க…”
“அப்பா சொன்னா சரியா இருக்கும் அண்ணி. அதை வச்சு நம்ம என்ன பண்ண போறோம்?…”
“அது உன் அத்தைக்கு புரியனுமே? நீ எப்படி அப்படி சொல்லுவன்னு சண்டை…”
“அத்தையா? நம்ப முடியலையே? அப்பாவுக்கும் பங்கு குடுக்கனும்னு அத்தை நினைக்கிறது ஆச்சர்யம் தான்…”
“ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத. பங்கு பிரிச்சு அந்த பங்கை வாங்கி உன் அத்தைக்கு குடுக்கனுமாம். ஏன் வேண்டாம்ன்னு சொல்ற? உனக்கு வேண்டாம்ன்னா வாங்கி எனக்கு குடுன்னு சண்டை காலையில…”
“இந்த அத்தைக்கு அறிவே இல்லை. ஏன் இப்படி பன்றாங்க?…”
“ஹ்ம்ம், அது என்னைக்கு இருந்திருக்கு? அதான் வீட்டுக்குள்ள எல்லாருக்குமே ரொம்ப டென்ஷன். மாமாவுக்கு கோவம். உன் இஷ்டத்துக்கு நான் எதுவும் நடக்க முடியாதுன்னு சொல்லவும் சாபம் விடற மாதிரி பேசறாங்க…”
“உன் அண்ணன் நல்லா குடமானம் குடுத்துதான் அனுப்பினாங்க. இனி வீட்டுப்பக்கம் வராதீங்கன்னு. எத்தனைதடவை தான் இதையும் சொல்ல?…” என சலித்துக்கொண்டாள் மோனிகா.
மேகாவிற்கு இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று இருந்தது. கொஞ்சமும் தந்தையை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்பதை போல கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்களே என.
“என்னவாம் உடனே முகம் வாடிருச்சு?…”
“என்ன சொல்லன்னு தெரியலை அண்ணி. இத்தனைக்கும் அப்பா எதுவும் வேண்டாம்ன்னு சொன்னது கூட புரியாம இப்படி அதிகாரம் செய்யறாங்க…”
“ஆமா, முன்ன இருந்தே இதான. எல்லாம் மாமா குடுத்துவச்ச இடம் தான். உனக்கென்ன கடை வச்சிருக்க வசதியா இருக்கன்ற பேச்சு போய் இப்ப பெரிய இடத்துல சம்பந்தம் பண்ணிட்டன்னு வந்திருச்சு…” என்ற மோனிகா,
“இதை எல்லாம் நினைச்சு வருத்தப்படாத. அவங்கக்கிட்ட வேற நல்லதை எதிர்பார்க்க முடியாது. இதை விட கீழ இறங்கவும் யோசிக்கமாட்டாங்க. அதை விடு…” என்று பேச்சை மாற்றிவிட்டாள் மோனிகா.
அதற்குள் அமுதினியனும், பல்லவனும் வந்துவிட மாலை வரை மேகா அங்கயே தான் இருந்தாள்.
“ஒன்னும் கவலைப்படாதீங்கப்பா. எல்லாம் சரியாகிடும்…” என்று பெரியமனுஷி போல மேகா ஆறுதல் சொல்ல அமுதனின் கண்கள் பனித்தது.
“என் பொண்ணு எனக்கு அம்மாவா தெரியறா. எனக்கே ஆறுதல் சொல்றா பாரேன் மலரு…” என சொல்லி அத்தனை மகிழ்ந்து போனார்.
அப்போதுதான் முகத்தில் வெளிச்சமே வந்தது அவருக்கு. இடையே சுபத்ராவும் அழைத்து அனைவரிடமும் பேச இன்னுமே மனக்கலக்கம் அகன்றது.
அஷ்வினுடன் அத்தனை கலாட்டா. ஏன் மாமாவை விட்டு வந்தாய் என மேகாவை ஒருவழி செய்துவிட்டான்.
வாசல் வரை சென்று காரை பார்த்து, காவலுக்கு நின்ற வசந்த்தை மிரட்டி என அஷ்வின் வீட்டையே ஒரு கலக்கு கலக்கினான்.
இரவாகும் முன் கிளம்புமாறு மலர் சொல்லவும் தான் மேகா கிளம்பவே செய்தாள் அங்கிருந்து.
அதன் பின்னர் வாரம் இருமுறை இங்கே வந்து இருந்துவிட்டு செல்வதை வழக்கமாக்கி வைத்திருந்தாள்.
சில நேரங்களில் சுபத்ராவே வந்து விட்டுவிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டு செல்வார்.
இப்படியாக ஒரு மாதமும் பத்து நாட்களும் கடந்திருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் அதிரன் ஒருசில முறை மட்டுமே அழைத்து பேசியிருந்தான் மேகாவிடம்.
அவனிடம் தைரியமாக பேசினாலும், வெளியில் சிரித்தமுகமாக காட்டிக்கொண்டாலும் மேகாவின் மனதை அவளின் உடல் மெலிவு பிரதிபலித்தது.
அவனின் நினைவுகள் வரும் பொழுதெல்லாம் வீணை அறையில் தான் அவளுறக்கம் எல்லாம்.
புத்தகத்துடன் அங்கே சென்று அந்த மெத்தை போன்ற மேடையில் அமர்ந்துவிடுபவள் அங்கேயே இருந்துவிடுவாள்.
படிக்கும் இடத்தில் இன்னும் அவள் காதுபடவே பரிகாச பேச்சுக்கள் இருக்கத்தான் செய்தது.
இப்போது கொஞ்சமும் கண்டுகொள்வதில்லை. முதலில் இருந்த வருத்தம் கூட இப்போது இல்லை.
போக, படிக்க, வர அவ்வளவு தான். அதற்கு மேல் எதற்கும் அங்கே அவள் நெருங்கவில்லை.
யாரிடமும் பேசுவதும் இல்லை. தனியாய் வந்துவிட்டு ரேவதி, புவனா இவர்களுடன் இருந்துவிட்டு கிளம்பிவிடுவது.
தனது வட்டத்தை இன்னுமே சுருக்கிக்கொண்டாள். சொந்தங்களில் கூட விசாரிக்க அழைக்காமல் ஆதாயத்திற்கென்று அழைத்தனர்.
அவளிடம் பேசுகையில் வலுக்கட்டாயமாக பேசி பேச்சின் வித்தியாசத்தை வார்த்தையிலேயே காண்பித்துக்கொண்டுத்தனர்.
அவள் முன்பு வலம் வந்த சுற்றம், சூழல் எல்லாமே நாள்பட நாள்பட குறுகிக்கொண்டே வந்தது.
வெறுத்துவிட்டது யாரேனும் அழைத்து பேசினாலே என்ன கேட்பார்களோ என்ன சண்டையிடுவார்களோ என்று.
இதில் சந்திரா வேறு அமுதனிடம் பேசி தேவராஜை இந்த பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்ய அழைக்க போகிறேன் என்று வேறு மிரட்ட பல்லவன் அடிக்கவே பாய்ந்திருந்தான்.
“உங்க அராஜகத்தை இங்கயே நிப்பாட்டிக்கோங்க. அங்க போனா செக்யூரிட்டியை வச்சு உங்களை வெளில தள்ளிருவாங்க. தேவை இல்லாம அங்க போக நினைச்சீங்க நடக்கறதே வேற…” என்று அதட்டி அடக்கியிருந்தான்.
“போறதா இருந்தா இதுவரைக்கும் செஞ்சதை எல்லாம் திருப்பி குடுத்துட்டு போங்க. உங்க பொண்ணுக்கு நகை போட்டு, உங்க சின்ன பொண்ணுக்கு நகைன்னு எத்தனை செய்தோம்? குடுங்க எல்லாத்தையும்…”
இப்படி இதுவும் மேகாவிடம் மலர் சொல்லி புலம்பியிருக்க எல்லாம் அவளை போட்டு வாட்டியது.
இன்னும் மூன்று நாட்களில் மேகாவின் பிறந்தநாள். பரீட்சைகள் நடந்துகொண்டிருக்க இன்னும் ஒரே ஒரு தேர்வு மட்டும் இருந்தது.
அதிரன் கிளம்பிவிட்டான் என்னும் தகவலுக்காக அவள் காத்திருக்க வந்த தகவலோ கேரளாவில் கடுமையான, புயலும் மழையும், வெள்ளமும் என்று.
மலையில் இருந்து கீழே இறங்கிவிட்டதாக அதிரன் அழைத்து சொல்லியிருக்க இப்போது எங்கே எப்படி இருக்கிறார்களோ என்னும் தகவல் எதுவும் இல்லை.
உயிர் கலங்கி போய் இருந்தாள் மேகா. படிக்க, உண்ண, உறங்க எல்லாம் மறந்த பித்துநிலை.
“ஒன்னும் ஆகாது வர்ணா, என்னம்மா நீ? சேஃபா வந்திருவான்…” என வெகுவாய் சமாதானம் செய்தார் சுபத்ரா. தேவராஜ் இருவரும்.
அவருக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் தைரியமாக காட்டிக்கொண்டவளால் தனியாய் அப்படி இருக்க முடியவில்லை.
ஆனால் மனது தனிமையை தான் தேடியது. மேகாவின் குடும்பத்தினர் இங்கே வந்துவிட்டனர் மகளை பார்க்க என்று.
தேவராஜ் யாரையும் தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு தவித்து போய் இருந்தார்.
இதில் அதிரனின் படப்பிடிப்பு குழுவின் ஒரு வாகனம் மலையை விட்டு இறங்கும் நேரம் மண்சரிவில் சிக்கிவிட்டதாக செய்தி வர பதட்டத்தை காண்பிக்காமல் இருக்க பெரும்பாடாக இருந்தது.
சுபத்ரா, மலர், மோனிகா என ஒருவராலும் மேகாவை தேற்ற முடியவில்லை. அஷ்வினை கொண்டு பேச வைக்க, சாப்பிட வைக்க என்று இருந்தாலும் முகத்தில் கிஞ்சித்தும் தெளிவில்லை.
‘நான் ரூம்ல இருக்கேன். ரூம்ல இருக்கேன்’ அவ்வளோ தான் அவளின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள்.
அவளிருந்த நிலையை கண்டு தனியாய் விடவும் பயம். விடாமல் இருக்கவும் முடியவில்லை.
கட்டிலின் ஓரத்தில் இருந்த டேபிள் லைட்லேம்ப் அருகே மொபைலை சார்ஜில் போட்டவள் அவனின் எண்ணிற்கு, ஹர்ஷத் எண்ணிற்கு என்று அழைத்துக்கொண்டே இருந்தாள்.
மேகா விடாமல் இரவும் பகலும் உறக்கமற்று அழைப்புகள் அனுப்ப அந்த பக்கம் இணைப்பு உயிரற்றதாகவே தான் இருந்தது.
“அதி மேகா…” அவளே சொல்லிக்கொண்டே இருந்தாள்.
அறையில் இருந்த டிவியில் அங்கிருக்கும் செய்திகள் மனதை பதற வைப்பவையாகவே இருக்க வெறித்த பார்வையுடன் அதனையும் கவனித்தபடி இருந்தது அதிரனின் மேகம்.