சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்றும், இதோ கிளம்பியாகிற்று என்றும் குறுஞ்செய்தி மட்டும் அதிரனின் எண்ணிலிருந்து வந்திருந்தது மேகாவிற்கும், தேவராஜிற்கும்.
அதிரன் கிளம்பிவிட்டான் என்றதுமே மேகாவிற்கு இங்கே நிலைகொள்ளவில்லை.
தனது பிறந்தநாளுக்கு அவன் வந்துவிடுவான் என சற்று நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது.
கிளம்பும் தருவாயில் தான் சொல்ல முடியும் என அதிரன் அதற்கு முன்பு பேசியிருக்கையில் சொல்லியிருக்க பிறந்தநாள், நீ வா என்று அழைத்து அவனை கஷ்டப்படுத்தவில்லை.
ஒருவேளை அதிரனுக்கு ஞாபகம் இல்லாமல் இருந்திருந்தால்? அப்படி நினைக்கவும் முடியவில்லை.
தன்னுடைய எல்லாம் விஷயங்களையும் ஞாபகம் வைத்திருப்பவன், பிறந்த தினத்தையா மறந்துவிடுவான் என நினைத்துக்கொண்டாள்.
நினைத்திருப்பவனின் சூழ்நிலை அங்கே எப்படி இருக்குமோ? தான் அழைத்து வரமுடியாமல் போனால் அது இன்னும் அவனை வருத்தும் என தானும் அதை பற்றி பேசவில்லை.
வருகிறேன், கிளம்பிவிட்டேன் என்று சொல்லியிருக்க வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் தான் சந்தோஷத்தில் துள்ள ஆரம்பித்தாள்.
அதிரனிடமிருந்து தகவல் வந்திருந்த அன்று மோனிகாவும், பல்லவனும் அஷ்வினுடன் பார்க்க வந்தனர் மேகாவிற்காக புதிதாய் பிறந்தநாள் உடையை எடுத்துக்கொண்டு.
சுபத்ராவிடம் மெஹந்தியிடுபவரின் தகவலை கேட்டுக்கொண்டிருந்தவள் அவர்களை கண்டதும் இரட்டிப்பு சந்தோஷத்தில் குதூகலித்து போனாள்.
“அண்ணி…” என முகமெல்லாம் பளீரிட வந்து அனைத்துக்கொண்டவளை பார்த்த மோனிகா,
“அம்மாடியோவ், நீ இப்படி சிரிச்சு எவ்வளோ நாள் ஆச்சு?…” என கேட்கவும்,
“சுபா என்ன இது? வர்ணா நினைக்கிறது தப்பில்லையே? அதி வராம எப்படி சொல்லுவா? அதுவும் கல்யாணத்துக்கப்பறம் வர முதல் பிறந்தநாள்…” என்றார் தேவராஜ்.
அதற்குள் சுபத்ரா மெஹந்தி போடும் பெண்ணை வர சொல்லிவிட்டார். அருகில் தான் இருப்பதால் பத்து நிமிடத்தில் அந்த பெண்ணும் வந்துவிட்டார்.
“நீங்க போட்டுட்டிருங்க. மோனி நீயும் போடும்மா. வந்துடறேன்…” என்று அஷ்வினை கூட்டிக்கொண்டு வெளியே சென்றார்.
அறைக்குள் மெஹந்தி போடும் பெண்ணும், மோனியும் மட்டும் உடனிருக்க மேகாவிற்கு சொல்லவே வெட்கமாக இருந்தது மோனியை வைத்துக்கொண்டு.
“என்ன டிசைன் மேம்? இந்த கேட்லாக் பாருங்க…” என்று கையோடு கொண்டு வந்திருந்ததை காண்பிக்கவும் மேகா விழிக்க,
“பாரு வரு, ஏன் என் முகத்தையே பார்த்திட்டிருக்க?…” என்றாள் மோனி.
“அது வந்து…” என்று பார்க்க,
“எந்த டிஸைன் வேணும்னாலும் போட்டுடலாம் மேம். சொல்லுங்க…” அந்த பெண் மீண்டும் சொல்ல,
“என் கல்யாணத்துக்கு நீங்க போட்ட டிஸைன் தான்…” என்று சொல்லிவிட்டு மோனிகாவை பார்க்க அவளின் முகத்தில் ஏகத்திற்கும் கிண்டல்.
“அண்ணி ப்ளீஸ்…”
“வாயை திறக்கறதுக்கு முன்னாடியே கேட் போட பார்க்குறியே வரு? தேறிட்ட போ? அன்னைக்கு அந்த டிஸைன் போட்டுட்டு என்ன பாடு படுத்தின?…” என்று மோனிகா கிண்டல் பேசிக்கொண்டிருக்க வந்த பெண் சிரித்தபடி வரைய ஆரம்பித்தாள்.
இரண்டு கைகளிலுமே அதிரனின் புன்னகை முகம். போட்டு முடிக்கவும் அதனையே பார்த்துக்கொண்டிருக்க வந்த பெண்ணும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
“உன்னை பார்த்தா என்னவோ இன்னைக்கு தான் கல்யாணம் செஞ்சுக்கறதை மாதிரி தெரியுது. எவ்வளோ வெக்கம்? அண்ணா பார்த்தா பிளாட் தான் போ…” என மோனி சொல்லவும் மேகாவின் முகம் முழுவதும் ஏக்கத்தின் ரேகைகள்.
அதற்கு மேல் அந்த விஷயத்தில் அவள் என்ன சொல்ல முடியும்? சம்பந்தப்பட்ட இருவரும் பேசி முடித்த பின்னர்?
“சரி வா, வெளில போகலாம்…” என்று எழுந்து வந்தனர்.
மாலை வரை அங்கே தான இருந்தனர். இடையிடையே மேகா அதிரனின் எண்ணிற்கு முயற்சிக்க தேவராஜ் முகமே சரியில்லாது இருந்தது.
தங்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் முதலில் இருந்ததை போலில்லாமல் சற்று பதட்டத்துடன் இருப்பதை போல இருந்தது.
பின் தேவராஜ் சுபத்ராவிடமும் பல்லவனிடமும் தனியே பேச அவனிடமும் பதட்டம்.
முதலில் கவனியாத மேகா தனது தாயும் தந்தையும் வருவதை பார்த்ததும் அவர்களும் தன்னை பார்க்க வந்திருக்கின்றனர் என நினைக்க முகம் அப்படி இல்லை.
மோனிகாவும் தன்னை ஏதோ ஒரு விதத்தில் திசை திருப்புவதை போலவே பேசிக்கொண்டு இருந்ததை உணர ஆரம்பித்து இருந்தாள்.
“வரும்மா…” என்று மலர் வந்ததும் மகளின் அருகே வந்து கையை பிடிக்க,
“ம்மா மெஹந்தி போட்டிருக்கேன்…” என காட்டினாள் மகள்.
அதிரனின் முகம் அதில் அச்சாய் பதிந்திருக்க மலருக்கு அழுகை பொங்கியது. உதட்டை கடித்து மடித்தபடி,
“நல்லாருக்குடா…” என்றார்.
தன்னை தவிர அனைவரின் முகத்திலும் பதட்டம். மோனிகா வேறு அவ்வப்போது போனை பார்ப்பதும் தன்னை பார்ப்பதுமாக இருக்க அங்கே பல்லவன் தான் மோனிகாவிற்கு செய்தியாக சொல்லிக்கொண்டிருந்தான் விவரத்தை.
அதிரனின் படக்குழுவினர் வந்த வாகனத்தில் ஒன்று மண்சரிவில் புதைந்து போனதென.
“என்னாச்சு ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கீங்க?…” என மேகா கேட்க,
“ஒண்ணுமில்லைம்மா. ஊரெல்லாம் ஒரே மழை. அதான்…” என அமுதன் சொல்லவும் தான் மேகாவிற்கு என்னவோ தடுமாற்றமாய் இருந்தது மனதிற்குள்.
அவர்களுக்கு பதில் சொல்லாமல் தனது எண்ணிலிருந்து அதிரனுக்கு அழைக்க அழைக்க தோல்வியில் தான் முடிந்தது.
இப்போது மனதில் பதட்டம் சூழ வேறு குறுஞ்செய்தி எதுவும் அநுப்பியிருக்கிறானா என்று தேட எதுவுமில்லை.
அவன் முதலில் அனுப்பியது தான் இருந்தது. அதுதான் அவனிடமிருந்து வந்த கடைசி தகவலும் கூட. அதன் பின்னரும் கூட தொடர்புகொள்ளவே முடியவில்லை.
அடுத்ததாக யூட்யூப்பில் செய்திகளில் என்ன வருகிறது என்று சென்று பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
அங்கே வெள்ளமும், மழையும் என அவனிருந்த பகுதியின் சேதங்களின் மதிப்பு உயர்ந்துகொண்டே இருப்பதை ஊடகங்கள் காண்பித்துகொண்டு இருந்தது.