காலையில் இருந்து அதிரன் வருகிறேன் என்று அனுப்பிய பின் வேறு எதிலுமே கவனம் செல்லவில்லையே. இப்போதுமே இங்கே என்னவோ என்று பதறித்தான் பார்த்திருந்தாள்.
“அண்ணி…” மோனிகாவை பார்க்க,
“எதுவும் இருக்காது வரு. அண்ணா கண்டிப்பா பத்திரமா இருப்பாங்க….” மோனிகா தேற்ற,
“வர்ணா அங்க இப்ப யாரையும் கான்டேக்ட் பண்ண முடியலைம்மா. அதை வச்சு நீ எதுவும் நினைக்காத. அதி பத்திரமா இருப்பான்…” தேவராஜும் மருமகளிடம் சொல்ல,
“மாமா இதுல…” எனும் பொழுதே அவளின் கை பட்டு அடுத்த ஊடகத்தின் செய்தி விரிந்தது.
‘தமிழகத்தை சேர்ந்த உச்ச நடிகரும், பிரபல பின்னணி பாடகருமான அதிரன் தேவராஜ் படப்பிடிப்பிற்கு சென்ற வாகனம் மண்சரிவில் சிக்கிக்கொண்டதாக பரபரப்பு தகவல்’
‘அந்த குழுவை சேர்ந்த எவரையும் இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அனைவருமே அதில் சிக்கியுள்ளனரா என்பதையும், ஏதேனும் உயிர் சேதங்கள் உள்ளதா எனவும் இன்னும் தெரிந்துகொள்ள முடியவில்லை’
‘அந்த பகுதியின் மீட்பு பணிகள் வேறு இன்னும் துரிதப்படுத்தப்படாமலும், அங்கே மீட்பு பணியினர் செல்லவே சிரமமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது’
‘அதிரன் தேவராஜின் நிலை தற்போது என்னவென்று இன்னும் தெரியவில்லை. அந்த பகுதியில் இருந்து தகவலுக்காக ****** செய்தியிலிருந்து’
இப்படியாக செய்திகள் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்க தளர்ந்து அமர்ந்தாள் மேகா.
அவளின் இதயத்தின் சுவாசக்காற்றின் பற்றாக்குறையில் இதயம் வேகமாய் மூச்சிற்கு ஏங்கி துடித்துக்கொண்டு இருந்தது.
“அதி…” என்று முணுமுணுத்த மகளின் வெறித்த பார்வை,
“வரும்மா. மாப்பிள்ளைக்கு ஒன்னும் ஆகாதுடா. வந்திருவார். இதுல சொல்றதை நம்பாதம்மா…” அமுதன் மகளை அணைத்துக்கொண்டு கண்ணீருடன் பேச மற்றவர்களும் சூழ்ந்துகொள்ள நிலைமை கவலைக்கிடமாகியது.
சற்று நேரம் அப்படியே இருந்தவள் தன்னை முயன்று தேற்றிக்கொள்வதை போல இருந்தாள்.
“வருவாங்கப்பா, என்னை விட்டு எங்கயும் போகமாட்டாங்க. பத்திரமா இருப்பாங்க…” என சொல்லும் பொழுதே மலரும் மகளை ஆறுதலாய் பேசி தேற்றினார்.
தேவராஜ் தனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து அதிரனை கண்டறிய ஆவன செய்துகொண்டு இருந்தார்.
உடல்நிலை சரியில்லாத மனைவியை பார்க்கவா, மருமகளை தேற்றவா, மகனை நினைத்து கவலைப்படவா என்று தவித்து போனார்.
இதில் மாற்றி மாற்றி அழைப்புகள் வேறு செய்தியை பார்த்துவிட்டு. எதற்கும் பதில் சொல்ல முடியவில்லை.
அப்போதைய நிலமைக்கு பல்லவன் தான் அவருக்கு பெரிதும் பக்கபலமாய் இருந்தான்.
எந்த பக்கத்தில் இருந்து நம்பிக்கையான தகவல் வரவில்லை. ஆனாலும் விடாமல் முயன்றனர்.
யாராவது சொல்லிவிடமாட்டார்களா? இல்லை அதிரனே அழைத்துவிட மாட்டானா என?
எந்தவித செய்தி தொடர்பும் அவ்விடத்தில் இல்லை. தொலைபேசி, அலைபேசி என அனைத்து தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இரவு வரை கீழேயே இருந்தவள் மாடிக்கு சென்றுவிட்டாள். அவளால் மற்றவர்களின் முகத்தை பார்த்துக்கொண்டு தன் மனதை காட்டிக்கொள்ளாமல் தைரியமாக இருப்பதை போல நடிக்க முடியவில்லை.
“எனக்கு ரூம்ல இருக்கனும். நான் ரூம்ல இருக்கேன்…” என்று சொல்லி செல்ல மலர் பயந்த பார்வை பார்த்தார்.
“ம்மா, அவ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும். இங்க இருந்து, ப்ச். ம்மா விடுங்க வருவை…” என்றான் பல்லவன்.
அவன் சொல்லவும் மோனிகாவும் அவளுடன் சென்றவள் அறைக்குள் சிறிது நேரம் இருந்துவிட்டு வந்துவிட்டாள்.
மேகா அவளிடம் எதுவும் பேசவில்லை. மோனிகா பேசியதற்கும் ஓரிரு வார்த்தை பதில் தான்.
மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் தளர்ந்துபோய் இருந்தாள் மேகா. பார்வை போனையும், தன் மருதாணி கைகளை பார்க்கவுமாக இருந்தது.
“நீங்க போங்க அண்ணி. நான் மேனேஜ் பண்ணிப்பேன்…” என்றதும் மோனிகாவும் கீழே வந்துவிட்டாள்.
அவள் சென்றதும் எழுந்து அங்கே பெரிதாய் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் அருகே அதிரனின் முகத்தினருகே சென்று நின்றாள்.
“அதி…” என்று அவனின் பிம்பத்திற்கு முத்தமிட்டவள்,
“இருப்பீங்க தானே அதி? வந்திருங்க. என்னால இந்த நிமிஷத்தை கடக்க முடியலை. ரொம்ப இருட்டா பாதையே தெரியாதது மாதிரி இருக்கு அதி. தனியா இருக்க ரொம்ப பயமா இருக்கு…” என்றாள் இதயப்பகுதியை நீவியபடி.
தொண்டை அடைத்தது அவளுக்கு. பேச்சும் வரவில்லை. சீராக மூச்சும் வரவில்லை.
தண்ணீரை எடுத்து வேகமாய் உடை நனைய குடித்தாள். அவன் வந்துவிடுவான் என்னும் பெரும் நம்பிக்கையை மட்டும் உயிராய் பிடித்துக்கொண்டு அதிரன் வருகையில் தானும் நன்றாக இருக்க வேண்டுமே என.
இந்த தருணத்தை அவளின் மனது தாங்க முடியாமல் தள்ளாடியது. எங்கே தனக்கெதுவும் ஆகிவிடுமோ என பயமாக இருந்தது.
நிச்சயம் தன்னை விடமாட்டான். இந்த நொடி தன்னை எண்ணி எத்தனை கலங்கிக்கொண்டு இருக்கிறானோ என்று தான் மேகாவின் எண்ணமெல்லாம்.
இங்கே தான் கலங்குவதை நினைத்து அதிரன் வேதனைப்படுவானே? அங்கே இருக்கும் கஷ்டமும் இதனோடு சேர்ந்துகொண்டு அவனை வாட்டுமே என துவண்டுபோனாள்.
மனது விண்டுபோனது. எழுந்து வீணை அறைக்கு சென்றவள் சுருண்டு படுத்துக்கொண்டாள்.
நொடிக்கொருதரம் அதிரனின் எண்ணிற்கு மேகாவிடமிருந்து அழைப்பு முயற்சிக்க பட்டுக்கொண்டே தான் இருந்தது.
மறுநாள் வரை எந்தவித தகவலும் இல்லை. கேரளாவின் குறிப்பிட்ட அந்த பகுதி மொத்தமாய் தொலைதொடர்பு சேவைகள் இழந்து போய் இருக்க சுபத்ரா பூஜையறையே தஞ்சமென இருந்தார்.
மேகாவின் குடும்பத்தினரும் இங்கே தான் இருந்தனர். செல்வம் வந்து இரவு வரை இருந்துவிட்டு செல்ல மறுநாள் மேகாவின் பிறந்தநாள்.
சொல்லியிருக்கலாமோ? கேட்டிருக்கலாமோ? அதற்காகவேணும் அவன் சீக்கிரம் கிளம்பியிருந்திருப்பான் தானே? நினைக்காமல் இருக்க முடியவில்லை மேகாவிற்கு.
அறைக்குள்ளேயே தான் முடங்கி போயிருந்தாள். வெளியே வரவில்லை அன்றைய நாள் முழுவதும்.
போன் எந்த நேரமும் சார்ஜில் தான் இருந்தது. கட்டிலில் கீழே அமர்ந்தபடி அதனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
குடும்பத்தினர் அவ்வப்போது வந்து அவளை பார்த்து, சிறிதுநேரம் உடன் இருந்துவிட்டு சென்றனர்.
அஷ்வினை வைத்து போக்குக்காட்டி உண்ண வைக்கலாம் என மோனிகா நினைக்க மேகாவே கொஞ்சமாய் மறுக்காமல் உண்டுகொண்டாள்.
“மேகம், அழாத அத்த…” என அஷ்வின் கண்ணீரை துடைக்க துடைக்க மேகாவிற்கு பெருகியது.
தன் கண்ணீர் கூட நம்பிக்கையை தளர்த்திவிட கூடாதே, அது அவன் வருவதை தாமதப்படுத்திவிட்டால் என அதனையும் முயன்று விழுங்கினாள்.
‘என் நம்பிக்கை என் வாழ்க்கையை கொண்டு வந்து சேர்க்கும்.’ என உறுதியுடன் நினைத்தாள்.
எப்படி இருந்திருக்க வேண்டிய பிறந்தநாள்? இப்படியாகும் என்று யாரும் நினைத்தும் பார்க்கவில்லை.
இரவானது. நேரம் செல்ல செல்ல தேவராஜிற்குமே பதட்டம் கூடி நம்பிக்கை குறைந்தது.
அவருக்கு வந்த தகவல் படி அந்த பகுதியில் இருந்தவர்கள் யாரும் இன்னும் அதனைவிட்டு வெளியேறி இருக்கவில்லை. நிறைய உடல்கள் மணலில் புதைந்திருந்தது என்று தகவல்.
மேலும் அங்கிருப்பவர்களின் நிலைமை சொல்வதற்கு இல்லை என்று வந்திருக்க சுபத்ரா இறைவனை பார்த்தபடி அமர்ந்துவிட்டார்.