“ம்மா மாமா…” என்று முதலில் பார்த்த அஷ்வின் கத்தி சொல்லிக்கொண்டு இறங்கி ஓடி சென்று அவனின் கால்களை கட்டிக்கொண்டான்.
“ஹேய் சேம்ப்…” என்று தூக்கிக்கொண்டவன் முகத்தில் அத்தனை களைப்பு.
அதன் பின்னர் தான் மற்றவர்களுக்கு சுரத்தே வந்தது. அதிரனை பார்த்ததும் சென்ற உயிர் திரும்பி வந்ததை போலென்றால் அடைக்கப்பட்டிருந்த அழுகை வெடித்தது சுபத்ராவிற்கு.
“அதிம்மா…” என்று அவரின் கேவல் வெடிக்க ஓடி வந்து அணைத்துக்கொண்டான் தாயை.
“ம்மா, அழாதீங்க. நான் தான் வந்துட்டேன்ல?…” என அவரை ஒரு கையாள் அணைத்து தேற்ற அஷ்வின் அதிரனின் கழுத்தை கட்டிக்கொண்டான்.
“மாமா எங்க போன?…” என்று எல்லோரும் அழுகையில் கரைவதை பார்த்து அவனும் அழ,
“டேய் சேம்ப், எங்கயும் போலயே மாமா…” என அவனையும் தேற்ற பல்லவன் மகனை வாங்க முயன்றான்.
“போ போ…” என்று தகப்பனின் கையை தட்டிவிட்டு அதிரனை இறுக்கமாய் கட்டிக்கொண்டான்.
குழந்தை கூட எந்தளவிற்கு அவனை தேடியிருக்கிறதென பார்த்து இன்னும் கரைந்தனர்.
அத்தனைபேரும் சுற்றி இருக்க அதிரனின் விழிகள் தன் மேகத்தினை தான் தேடியது.
“மேகம் எங்க சேம்ப்?…” என்றான் அவன் அஷ்வினிடம்.
“மாடில, அத்த அழறா…” என்றும் சொல்ல வேதனையில் முகம் சோர்ந்தது அதிரனுக்கு.
“ம்மா, போதும்மா. அதான் வந்துட்டேனே?…” என்று இருக்கையில் அமர்ந்தவன் மனது பரிதவித்தது.
“மோனி நீ போய் வருவை வர சொல்லு….” பல்லவன் சொல்ல,
“இல்லை, நானே போய் பார்க்கறேன் பல்லவன்…” என்றவன் மோனிகாவிடம் வேண்டாம் என்பதை போல பார்வையில் இறைஞ்சினான்.
“சுபா அமைதியா இரு. அதி வந்தாச்சுல. அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்று சொல்லவும் அழுகை குறைந்தது.
“நாளைக்கு நான் மௌன விரதம்…” என்றார் சுபத்ரா வேகமாய் பூஜையறைக்கு சென்றபடி.
“ம்மா…” என அதிரன் சிரிக்க திரும்பி வந்தவர் மகனின் நெற்றியில் பூசிவிட்டு,
“போய் வருவை பாரு அதி. ரூம்க்குள்ளையே தான் அடைஞ்சு இருக்கா…” என்றார்.
அதிரனும் எழுந்துகொள்ளவும் தான் அமுதினியன், மலர் என்று கவனித்தான். செல்வமும் அங்கே தான் இருந்தார்.
“மாமா…”
“நீங்க என் பொண்ணை போய் பாருங்க மாப்பிள்ளை. நாளைக்கு பேசிக்கலாம். இங்க தான இருக்க போறோம்…” என்று.
அவரும் சொல்லி அனுப்பி வைக்க அஷ்வின் இன்னும் அதிரனிடம் இருக்க மோனிகா அவனை ஏமாற்றி அழைத்துக்கொண்டாள்.
“ரூம்க்கே சாப்பாட்டை அனுப்பி வைக்கறேன் அதி. சாப்பிட்டு தூங்குங்க. நாளைக்கு பேசலாம்…” என சுபத்ரா சொல்லிவிட்டு வேகமாய் மலரையும் அழைத்துக்கொண்டு சென்றார்.
சுபத்ரா அதுவரை அவர் இருந்ததென்ன? இப்போது இருப்பதென்ன? மகனை கண்டதும் அவரின் உற்சாகம் எல்லாம் மீண்டுவிட்டது.
தலையசைத்து சிரித்துக்கொண்டவன் மாடிக்கு சென்றான். அவன் செல்வதை பார்த்ததும் தேவராஜும் அமுதனும் ஒருவரை ஒருவர் சந்தோஷமாய் அணைத்துக்கொண்டனர்.
அதன் பின்னர் வரும் போனை எல்லாம் அட்டன் செய்த தேவராஜ் தெம்பாய் பேச ஆரம்பித்தார்.
மாடிக்கு வந்தவன் அறை ஒருக்களித்து திறந்திருக்க உள்ளே நுழைந்து கதவை அடைத்துக்கொண்டான்.
அவன் விழிகள் மேகத்தை காண தவிக்க அந்த அறையில் மேகா இல்லை. வீணை அறையில் விளக்கெரிவது தெரிய புன்னகையுடன் அங்கே சென்றான்.
இரண்டு நாட்கள் ஆகிற்று குளித்து. அங்கிருந்து கிளம்பிய அன்று போட்ட உடையுடன் வேறு எந்த உடைமைகளும் இன்றி போராடி வந்து சேர்ந்திருந்தான் அவன்.
இப்போது எதற்கும் நேரமில்லை. அவனின் மேகத்தை கண்டு கண்ணார தழுவிக்கொள்ள வேண்டும் என்ற வேகம் பரபரத்தது.
வீணை அறையும் திறந்தே இருக்க அவன் வந்த சுவடை கூட உணர முடியாமல் மெத்தையில் சாய்ந்திருந்தாள் மேகா.
சுருண்டு படுத்திருந்தவள் தோற்றம் அதிரன் மனதை உலுக்கியது. வேகமாய் அவளை நெருங்கியவன் முகத்தை குனிந்து பார்க்க விழிகள் மூடி எதையோ இதழ்களுக்குள் மொழிந்துகொண்டு இருந்தது அவனின் மேகம்.
‘வந்திடு அதி’ மந்திரம் போல அதி என்னும் உச்சாடனம் அவளின் வாயில் இருந்து இடைவிடாது மெல்லிய சங்கீதமாய் ஒலிக்க அவளின் முகம் நோக்கி குனிந்தவன் கன்னத்தில் முத்தமிட்டு,
“மேகத்துக்கு அதிரனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்…” என்று சொல்லி மீண்டும் முத்தமிட மெல்ல திரும்பியவள் கண் சிமிட்டாமல் பார்த்தாள்.
“மேகா…” என அழைக்க அவனை பார்த்தவள் மீண்டும் மெதுவாய் திரும்பிக்கொண்டாள்.
அதிரனுக்கு புரியவே இல்லை. தன்னை கண்ட பின்னும் எந்தவித பிரதிபலிப்பும் இல்லாமல் அவள் இருக்க மீண்டும் அதே அதி என்னும் அழைப்பு.
“மேகா, டேய் பொண்ணே…” என்று அவள் தோள் தொட்டு திருப்ப இப்போது அவன் பக்கமாய் திரும்பி படுத்தவள் நெஞ்சோடு அவனின் புகைப்படத்தை பிடித்திருக்க உதடுகள் பிதுங்கியது.
“நிஜமா வா அதி…” என நடுக்கத்துடன் சொல்லியவள் கண்ணை மூடினாள்.
“மேகாடா. என்னடா நீ? இங்க என்னை பாரு…” என சொல்ல சொல்ல மேகா கண்ணை திறப்பதும், மூடுவதுமாய் தான் இருந்தாள்.
உணர்வால் தன்னை சுற்றி அவனின் அழைப்பும், பிம்பமும் கற்பனையில் வந்து சென்றுகொண்டிருக்க இப்போது நிஜமாய் வந்ததை கூட உணர முடியவில்லை.
அவளை எப்படி தன் பக்கம் திசை திருப்புவது என்று தெரியவில்லை. அதிரன் தவிப்புடன் மீண்டும் முத்தமிட வாகாய் அவனுக்கு முகத்தை காட்டினாலும் கண்ணை மூடி கனவு காண்பதை போலவே தான் இருந்தாள்.
உயிரோடு மரித்த நிலை தான் அதிரனது. இந்தளவிற்கு மேகா நிலைகுலைந்து போவாள் என எதிர்பார்க்கவே இல்லை.
“என்னடா ஆச்சு உனக்கு?…” என முகம் பற்றி கேட்க,
“அதி, எப்போ வருவீங்க?…” என ஏக்கமாய் கேட்கவும் அவளை பார்த்துவிட்ட மகிழ்ச்சி எல்லாம் எங்கோ சென்று ஒழிய வேரொடிந்த மரமாய் சரிந்துவிட்டான் அதிரன்.
என்ன செய்ய? ஏது செய்ய? எதுவும் தெரியவில்லை. மூளையே மரத்து போய் ஸ்தம்பித்து பார்த்தான் அவளை.
“மேகாடா, மேகாம்மா. அதிடா…” என்று அவளின் கன்னத்தை வருடியவன் விரல்களில் அவள் வைத்திருந்த புகைப்படம் முழுதாய் தெரிய அதில் வீணையை தாங்கியபடி அழகிய புன்னகையுடன் அதிரன்.
பார்த்தவனுக்கு ஏதோ ஒரு வெளிச்சம். மேகாவின் முகத்தை நிமிர்த்தியவன் இதழ்களில் அழுத்தமாய் முத்தமிட்டுவிட்டு வீணையின் அருகே சென்று நின்றான்.
மேகாவை பார்த்தபடி அவன் வீணையில் இசையை மீட்ட அவனையே பார்த்தபடி இருந்தவள் நேரம் செல்ல செல்ல எழுந்தமர்ந்தாள்.
இரண்டு நாட்களாக அவன் வந்துவிட்டதை போல நினைத்து பிரம்மையில் வாழ்ந்திருந்தவள் நிஜமாய் அவன் வந்ததை நம்ப முடியாது பார்த்து எழுந்தமர்ந்தாள்.
“அதி…” என இதழ்கள் முணுமுணுக்க அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தபடி நின்று வாசித்துக்கொண்டிருந்தவன் விழிகளிலும் நீர் ததும்பியது.
“மேகாம்மா, வந்திருடா பொண்ணே…” என்ற சத்தமில்லாத இதழசைப்பு அவளை அடைய,
“அதி…” மேகாவின் குரலில் தழுதழுப்பு.
நிஜமாய் வந்துவிட்டானா? கனவில்லையே? தன் கைகளை வலிக்க கிள்ளி பார்த்துக்கொண்டாள்.
சுரீரென்ற வலிக்கு பின்னரும் அவன் உருவம் அங்கேயே தன்னை பார்த்தபடி இருக்க இன்னுமே அச்சம் தான்.
கொஞ்சம் கொஞ்சமாய் தன் நம்பிக்கை குலைந்துகொண்டு இருந்தது அவன் வந்துவிட்டான் என்ற பிரம்மையில்.
இப்போதும் அப்படி கண்ணை மூடி திறப்பதற்குள் மறைந்துவிட்டால் தன் மூச்சே நின்றுவிடும் போலிருக்க தன் கன்னத்தை தன் கைகளாலேயே அடித்துக்கொள்ள திகைத்து போனான் அதிரன்.
“மேகா…” என வாசிப்பை நிறுத்திவிட்டு அவளிடம் ஓடி வர,
“அதி நிஜமா? நிஜமா?…” என்றவளுக்கு சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை.
அந்த மேடை மீது தடுமாறி எழுந்து நின்றவளை கீழ் நின்றவாறு அள்ளிக்கொண்டு தூக்கி சுற்றியவன் கீழிறக்கி தன் அணைப்பிற்குள் வைத்துக்கொண்டான்.
“மேகா ஏன்டா இப்படி பன்ற?…” என்றவனுக்கு அவள் வேதனையில் வார்த்தைகள் வரவில்லை என்றால், அவன் வந்துவிட்ட மகிழ்ச்சியில் மேகாவிற்கு பேச்சு வரவில்லை.
அவனை கட்டிக்கொண்டு அடக்கி வைத்திருந்த கண்ணீரை எல்லாம் வெளியேற்றியவளின் சத்தம் வீணையறையை அதிர வைத்தது.
அப்படி ஒரு அழுகை. அதிரனால் தேற்றவே முடியவில்லை. அவனின் பேச்சுக்கள் எதுவும் அவளின் காதில் ஏறவில்லை.
அழுத்தங்கள் கரைந்ததோ? வேதனை தொலைந்ததோ? ஆனால் இப்பிரிவில் இரு மனங்களிக்கிடையேயான ஆத்மபந்தம் இன்னும் வலுப்பெற்றது.
அதிரன் அணைத்தது மட்டும் தான் அவனுக்கு தெரியும். அதன் பின்னான செயல்கள் மொத்தமும் மேகாவினதே.
அவனை நிமிர்ந்து பார்த்து கன்னம் தொட்டு, கைகள் தொட்டு, முகத்தை வருடி, தலையை கோதி என ஒவ்வொன்றையும் செய்து அவன் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டாள்.
“மேகா நான் இருக்கேன்டா…” என்றவன் அவள் அழுகை குறையவும் அழைத்துக்கொண்டு வெளியே அறைக்குள் வந்தான்.