“ஆமா இன்னைக்கு என்னோட பர்த்டே…” என்றவள் நேரத்தை பார்க்க இரவு பத்து மணியாகியிருந்தது.
“முடிஞ்சு போச்சு…” என்றாள் அவனிடம்.
“இல்லையே? முடியலை…” என்றவன் அவளை கீழே இறக்க,
“அதி…” என்று கழுத்தை கட்டிக்கொண்டாள்.
“அஷ்வினும் நான் வரவும் இதை தான் செஞ்சான்…” என அதிரன் சிரிக்கவும் தான் இன்னும் முழுவதுமாய் அனைத்து இறுக்கங்களில் இருந்தும் வெளியே வந்தாள்.
“அச்சோ, கீழே அம்மா அப்பா எல்லாரும் இருக்காங்க…” என எழுந்துகொள்ள பார்க்க,
“எல்லாரும் சாப்பிட்டு தூங்க போயிருப்பாங்க. காலையில பார்த்துக்கலாம். நீ என்னோட இரு…”
“கிளம்பிட்டாங்கன்னா…”
“இல்லை தங்க சொல்லிட்டாங்க அப்பா. நானும் சொல்லிட்டு தான் வந்தேன்…” என்றவனின் தோளில் இலகுவாய் சாய்ந்துகொண்டாலும் மேகாவின் இதயத்துடிப்பு இன்னும் குறைந்தபாடில்லை.
“என்னடா பண்ணுது உனக்கு?…” அதனை உணர்ந்து அதிரன் கேட்க,
“ஹ்ம்ம், தெரியலை. மூச்சு விடவே கஷ்டமா இருக்கற மாதிரி இருக்கு. அவ்வளோ சந்தோஷம்…”
“நான் உன்னை விட்டு எங்க போவேன் மேகா?…” என்றவனுக்கு மேலும் அவள் இருந்த நிலையை சொல்லி இன்னும் வருத்த மனமில்லை.
மெதுவாய் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். ஓரளவு அவனின் அனுமானம் இதனையும் பெரிதாய் இந்த ஊடகங்கள் பேசி அதில் குடும்பம் உருகுலைந்து போயிருக்கும் என்பதில் அத்தனை நிச்சயம்.
அதற்குள் உணவு கொண்டுவந்தவர்கள் கதவை தட்ட மேகாவை அமர சொல்லிவிட்டு தான் எழுந்து சென்று ட்ரேயை வாங்கிக்கொண்டான்.
“குளிச்சிட்டு வா சாப்பிடலாம்…” என சொல்ல,
“ஹ்ம்ம்…” என்று எழுந்தவள் போகாமல் மீண்டும் அதிரன் அருகே வந்து நின்றுகொண்டாள்.
தனக்கு உடையை எடுத்தபடி நின்றவன் மேகா தன்னை பார்த்துக்கொண்டே வந்து நின்றதும் சிரித்தவன்,
“வேணும்னா என்னை அடிச்சுக்கோ, நான் வந்தது நிஜமா இல்லையான்னு?…” என கிண்டலாக சொல்ல,
“ஹ்ம்ம், இல்லை இருக்கட்டும், காலையில குளிச்சுப்பேன்…”
“சரி அப்ப நான் குளிச்சிட்டு வரேன்…” என சொல்ல அவனையும் மறித்து நின்றாள்.
“நீங்களும் தான்…” என்று பிடிவாதமாய்.
“மேகா…” என இடுப்பில் கை வைத்து பார்த்தவன்,
“உன்னை…” என்று கையில் இருந்த உடையை கட்டிலில் போட்டுவிட்டு தூக்கிக்கொண்டான்.
“அதி என்ன பன்றீங்க?…”
“வேற என்ன பண்ண? நீயும் நகராம, என்னையும் விடாம. இந்த பொண்ணுக்கு இப்ப பிடிவாதம் கூடி போச்சு…” என்றபடி பாத்ரூம் சென்றான்.
“அதி…”
“பிடிவாதத்தை கரைச்சிருவோம் பொண்ணே இந்த தண்ணில…” என்று ஷவரை திறந்துவிட்டவன் புன்னகையுடன் அவளை நெருங்கினான்.
“பிடிவாதம் மட்டுமில்லை. இத்தனை நாள் தவிப்புகளையும் இந்த நீர்லையே கரைச்சிடுவோம். எங்கையோ அடிச்சு ஊத்தின மழையால வந்த கஷ்டம் எல்லாம் இந்த தண்ணியோட போகட்டும் மேகா. ஓகே வா?…”
ஒவ்வொரு வார்த்தையாய் கேட்டு கேட்டு அவளின் மச்சத்தில் முத்தமிட லேசாய் விழிகளை மூடினாள்.
“மேகா…” என்றவனின் குரலில் கரைந்தவள் சுதாரித்து அவனை பிடித்து வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிக்கொண்டாள்.
“டேய் மேகா…” என அதிரன் சிரித்தபடி கதவை தட்ட,
“நானே வரேன்…” என்று சொல்லிக்கொண்டவள் குளித்து வெளியே வர போன் பேசியபடி பால்கனியில் நின்றவனை மேகா கவனிக்கவில்லை.
அதிரன் எங்கே இவ்வளவு நேரம் நடந்ததும் கூட கனவோ என்று தலைசுற்றி போக மேகாவின் இதயத்துடிப்பு கூடியது.
“அதி அதி…” என்று அறையே அதிரும்படி அவள் கத்தவும் பதறிப்போய் உள்ளே வந்தவனை பார்த்ததும் ஓடி சென்று அணைத்துக்கொண்டான்.
“என்னடா, பால்கனில தான் இருந்தேன்…” என்றதும் தான் நிம்மதியானாள்.
“ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சு…” என விசும்ப,
“மேகா…” என்றவனுக்கு அவளின் இந்த அதீத அன்பும், பரிதவிப்புடன் கூடிய தேடலும் பயத்தை கூட்டியது.
“மேகா உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன். சில் மைன்ட் வேணும். நீ உன்னை அமைதியா வச்சிருந்தாலே நிஜமும், நிழலும் உனக்கு தெரியும். இவ்வளோ தூரம் படபடனாக கூடாதும்மா…” என பொறுமையாய் சொல்ல,
“ஹ்ம்ம்…” என தலையசைத்தாள்.
“குட், அப்போ நான் ப்ரேஷாகிட்டு வர வரைக்கும் இங்கயே இருப்பியா? இல்லை என்னோட மேகம் வருமா? செகேன்ட் இன்னிங்க்ஸ் பொண்ணே?…” என கண் சிமிட்டி கேட்கவும் சிரித்தவள்,
“இப்படி மேகம் இருந்தா நான் எங்க போக? ரெண்டுநாளா ஒரே ட்ரெஸ். மழையில நனைஞ்சிட்டே இருந்தது எல்லாம் ஒருமாதிரி இருக்கு…” என்று சொல்லியவன் அவள் விலகாமல் இருக்க,
“இங்க உட்கார்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவன் கதவை தாழிடவில்லை. முழுதாய் சாற்றவில்லை.
“மேகா ட்ராக் எடுத்து வை. தண்ணி இருக்கா பாரு. உன் மொபைல் தான் நான் யூஸ் பண்ண முடியும். ஹர்ஷத் கூப்பிட்டா சொல்லு…” என பேசிக்கொண்டே தான் குளித்து முடித்தான்.
அவன் வரும் வரையிலும் மேகாவும் அவனிடத்தில் அழைத்துக்கொண்டே இருந்தாள் ஒவ்வொன்றிற்கும்.
வந்து உண்டு முடித்து உறங்கும் வரை கூட மேகா ஓயவில்லை. அவனிடம் பேசிக்கொண்டே தான் இருந்தாள்.
உறக்கத்திலும் கூட அதி அதி என்னும் அழைப்புகள் நின்றபாடில்லை. அதிரனின் மேகப்பெண் அவனை அதிர வைத்தவண்ணம் தான் இருந்தாள்.
அவனுள் தான் நிறைந்து அவனை மொத்தமாய் அவளுள் எத்தனை ஆழம் நிறைத்திருந்தாள் என்பதை அதிரன் முழுவதாய் உணர்ந்துகொண்ட நாள் அது.
தானில்லையென்றால் மேகாவின் மனநிலை? அத்தனை களைப்பிலும் அதிரனுக்கு உறக்கமில்லை தன் மேகத்தை நினைத்து.