இப்போது உள்ளே சென்றால் தன்னை கண்டு யாரேனும் பேச வர கூடும் என்பதால் சரியாக கடைசி நொடியில் தான் உள்ளே நுழைவதை வழக்கமாகி வைத்திருந்தாள்.
இது அவர்களின் செண்டரில் வைத்து நடக்கும் பரிட்சை இல்லை. வெளியே என்பதால் எச்சரிக்கையாக இருந்தாள்.
இப்போது தன்னை அனைவருக்குமே தெரியும் என்பதால் இன்னும் அதிக கவனமாக இருக்கவேண்டிய சூழ்நிலை.
அதிரன் இதழ்களுக்குள் என்னவோ பாடியபடி இருக்க சிறிது நேரம் இருந்தவள் மீண்டும் நேரத்தை பார்க்க கிளம்பினால் சரியாக இருக்கும் என்று கதவை திறந்தாள்.
அதிரன் அவளை வாழ்த்தி அனுப்பி வைத்து மேகா உள்ளே செல்லும் வரை பார்த்திருந்தான்.
அவளுடன் வசந்த் பின்னால் செல்வதும் தெரிந்தது. புன்னகையுடன் பின்னிருக்கைக்கு மாறியவன் ட்ரைவருக்கு அழைக்கவும் அவர் வந்துவிட்டார்.
வீடு வந்து சேரும் வரை அங்கே தன்னை குறித்த செய்திகள் என்னவென்று வலைதளங்களில் பார்க்க ஆரம்பித்தான்.
உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்பது வரை அவர்கள் பேசியிருக்க முகத்தில் கசப்பாய் ஒரு வெறுமை.
ஒன்றை பத்தாக்கியிருந்த செய்தியில் மனதிற்குள் அடக்கமுடியாத ஒரு சீற்றம் பொங்கியது அதிரனுக்கு.
கொஞ்சமும் தன் குடும்பத்தினரும் தன்னை சேர்ந்தவர்களும் இதனை கண்டு பதட்டமடைய மாட்டார்களா என யோசிக்காமல் ஏகத்திற்கும் பேசியிருக்க அடுத்தடுத்து பார்த்தபடி இருந்தான்.
தன்னை சேர்ந்தவர்களும், பெற்றோரும், மனைவியும் எத்தனை தூரம் இதனால் துவண்டிருப்பார்கள்?
மேகாவின் முந்தைய நாள் நிலை அகக்கண்ணில் எழுந்து அவனை வருத்தியது. தான் வந்துவிட்டோம், ஒன்றில்லை.
இதுவே தனக்கு ஏதாவதென்றால்? தன் மேகம் மொத்தமாய் கலைந்து காற்றோடல்லவா சேர்ந்திருக்கும்.
உள்ளுக்குள் அப்படி ஒரு வலி. மேகா மனதில் இந்தளவிற்கு உடைந்து போவாள் என நினைத்திருக்கவில்லை.
வீடு வந்து சேரும் வரை அதே நினைவு தான் அவனுக்கு. உள்ளே வர அமுதனுடன் விளையாடிக்கொண்டு இருந்தான் அஷ்வின்.
பல்லவனும் அப்போதுதான் வந்திருக்க அதிரனை பார்க்கவும் எழுந்து வரும் முன் அஷ்வின் துள்ளிக்கொண்டு ஓடி வந்தான்.
“சேம்ப் சாப்பிட்டாச்சா மை பாய்?…” என்று அவனை தூக்கி போட்டு பிடித்தான் அதிரன்.
“மாமா, இன்னும் இன்னும்…” என்று அஷ்வின் அதிரனை தன்னை மேலே தூக்கி போட்டு பிடிக்கும்படி சொல்ல, இரண்டு மூன்று முறை பிடிக்க,
“போதும் அஷ்வின். இப்பதான் சாப்பிட்டிருக்க…” என்று அவனை அதட்டினாள் மோனிகா.
“இருக்கட்டும், என்னை ரொம்ப தேடியிருக்கான்…” என்று அவனை அணைத்துக்கொண்டு வந்து அமர அனைவரும் அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“அதான் வந்துட்டேனே? இன்னும் என்ன? விடுங்க…” என பொதுவாய் சொல்ல,
“அதுல லக்கேஜ் வண்டி தான். ஆட்கள் ரொம்ப கம்மி மாமா. நாலு பேர் தான் வந்தாங்க. பாதை சரியில்லைன்னதும் வண்டியை அங்க கொஞ்ச நேரம் நிப்பாட்டிட்டு எங்கக்கிட்ட சொல்ல வந்தாங்க…”
“வண்டில ட்ரைவர் மட்டும் தான் இருந்தார். அவரும் சுதாரிச்சு வண்டியை விட்டு இறங்கி ஓடி வர மண்ணோட வண்டி சரிஞ்சிருச்சு. மத்த திங்க்ஸ், தான் இருந்தது. ஆட்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் சேதாரம் தான்…”
“மழையோட வேற வண்டி புடிச்சு வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு. எங்கயும் யாரையும் காண்டேக்ட் பண்ண முடியலை. சுத்திலும் வெள்ளம். என்ன பன்றதுன்னு தெரியலை….”
“நடந்து வேற இடம் மாறி வந்து ட்ராவல்ஸ் புடிச்சு முதல்ல வீடு வந்தா போதும்ன்னு ஆகிடுச்சு சென்னை ரீச் பன்ற வரைக்கும். தகவலும் குடுக்க முடியலை. மொபைல் எல்லாம் எங்க மிஸ் ஆச்சுன்னு தெரியலை…”
கவலையுடன் நடந்த விவரங்களை சொல்லிக்கொண்டு இருந்தான் அதிரன். கேட்டவர்களுக்கு தான் திடுக்கென்று இருந்தது.
அந்த வாகனத்தில் இருந்திருந்து கவனியாமல் போயிருந்தால் என அப்படி இருந்தது.
அதன் பின்னர் பேச்சுக்கள் ஊடகத்துறையை பற்றி ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் திசை மாறிக்கொண்டிருக்க செல்வம் வந்துவிட்டார். உடன் சந்திராவும்.
சந்திராவை பார்க்கவுமே அமுதன் முகம் மாறிவிட செல்வம் சங்கடமாய் பார்த்தார்.
“நான் கிளம்பி வரும் போது நானும் வரேன்னு கேட்கவே இல்லை அமுதா…” என்று தம்பியிடம் சொல்ல,
“நல்லபடியா வந்துட்டீங்களா தம்பி?…” என அழுகையுடன் அதிரனிடம் ஒரு நடிப்பை போட்டார் சந்திரா.
“உங்களுக்கு என்னாச்சோன்னு நினைச்சு துடிச்சு போய்ட்டோம். நான் வேண்டாத சாமி இல்லை. என் வேண்டுதல் உங்களை இங்க கொண்டுவந்து சேர்த்துருச்சு…” என்று சொல்ல அதிரன் தலையசைத்தான்.
“உட்காருங்கம்மா…” என்று தேவராஜ் சொல்லவும் சந்திரா மலரின் அருகே சென்று அமர்ந்தார்.
“சுபத்ரா…” என்ற தேவராஜ்,
“நீங்க பேசிட்டிருங்க. ஒரு போன் பேசிட்டு வரேன்…” என்று எழுந்துகொண்டார் மனைவியுடன்.
சந்திராவிற்கும் செல்வத்திற்கும் குடிக்க வரவழைத்துவிட்டு சுபத்ராவும் உள்ளே சென்றுவிட்டார்.
“இது என்ன நான் வந்ததே பிடிக்காத மாதிரி கிளம்பிட்டாங்க?…” என மலரிடம் சந்திரா கேட்க அதிரனுக்குமே கேட்டது.
“பேச என்ன இருக்கு தம்பி?…” என்று மூக்கை உறிஞ்சியவர் அமுதனை பார்க்க அவரின் முகம் கோவத்தில் கொதித்து போய் இருந்தது.
யாருக்கும் அவர் வந்தது பிடிக்கவில்லை என அப்பட்டமாய் தெரிந்தது. பல்லவன் அதிரனை வைத்துக்கொண்டு வேறு ஒன்றும் பேசாமல் இருக்க அதிரன் அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
“பேச எதுவும் இல்லாம தான் தேடி வந்தீங்களா?…” என்றவனின் தோரணையில் அமுதனின் முகம் மாற, செல்வம் தேவை தான் என்று பார்த்தார்.
“அட இருங்க, ஆடு பிரியாணி போல இன்னைக்கு. வேடிக்கை பாருங்க…” என மோனி.
“என்ன?…”
“என்ன என்ன? எவ்வளவு நாள் தான் நீங்களும் சொல்லி பார்ப்பீங்க? பார்ப்போம் என்ன நடக்குதுன்னு…” என அவனை அடக்கி வைத்தாள்.
“என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க? உங்களை காணுமேன்னு நான் என்ன பாடுபட்டேன் தெரியுமா? என் தம்பி மக வாழ்க்க நட்டாத்துல போயிருமோன்னு நினச்சு தூக்கமே இல்ல…”
“ஓஹ்…” அதிரன் நிமிர்ந்தமர்ந்தான்.
“என் தம்பிக்கும், தம்பி குடும்பத்துக்கும் தான் நான் ஆகாதவ ஆகிட்டேன். அதுக்காக எனக்கு பாசமில்லைன்னு போய்டுமா?…” என்றார்.
“ச்சே, ச்சே. யார் அப்படி சொன்னா?…”
“என் தம்பியும், இவனும் தான்…” என பல்லவனையும் சேர்த்து கை காண்பித்தவர்,
என்னதான் அமுதன், பல்லவன் பேசியதில் அடங்கி இருந்தாலும் தேவராஜ், அதிரன் இருவரும் இத்தகைய விஷயத்தில் இதெல்லாம் ஒரு சொத்தா என்று நினைத்து அமுதனிடம் சொல்வார்கள் என நினைத்தார்.
அதிலும் மகளின் கைங்கர்யம் தானே அதிரன், மேகா திருமணம். அதை வைத்தே பேசி மடக்கிவிடுவது என்று கிளம்பி வந்துவிட்டார்.
சொத்துக்காக சொந்த அக்காவை பேசிவிட்டனரே என சம்பந்தி வீட்டிற்கு தெரிந்தால் அதில் அசிங்கப்பட்டு தன் தம்பியும் தந்துவிடுவான் என்று வந்துவிட கல்லாய் இறுகி இருந்தார் அமுதன்.
“குடும்பத்துக்குள்ள சொத்து தகராறு தம்பி. இப்பவே பிரிச்சிடலாம்ன்னு பேசியாச்சு…”
“என் தம்பிக்கு என்ன குறைச்சல்? லட்சுமி குடியிருக்கா அவன் வீட்டுல. அள்ள அள்ள குறையாம காசு. இப்ப சம்பந்தம் வேற பெரிய இடம் நீங்க…”
“ஹ்ம்ம்…”
“அவனுக்கு இந்த சொத்தெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அதனால அவன் பங்கு வேண்டாம்ன்னு சொல்லி மூணா பாகம் பிரிக்க சொன்ல்லிட்டான்…”
“அப்படியா மாமா?…” என்று அமுதனிடம் கேட்டவன் மீண்டும் சந்திரா பக்கம் திரும்பினான்.
“என்னை கேளுங்க தம்பி…” என சந்திரா சொல்ல,
“கேட்டுட்டு தான இருக்கேன், நீங்க சொல்லுங்க…” என்றான் முகம் மாறாமல் புன்னகையுடனே.
“மூணா பிரிக்கிறதுக்கு பதிலா அவன் பங்கை வாங்கி எனக்கு கூட பிறந்த அக்காவுக்கு குடுக்கலாம்ன்னு கேட்டேன். இதுல என்ன தப்பிருக்கு நீங்களே சொல்லுங்க…” என்று கண்ணீருடன் உருகுவதை போல நயமாய் பேசினார் சந்திரா.
“கண்டிப்பா பெரிய தப்பு தான்…” என்று அதிரன் சொல்லவும் சந்திராவின் முகம் பளிச்சென்று மாற அமுதனும், பல்லவனும் அதிர்ந்தனர்.
“இது பூர்வீக வீடு தானே? மாமா இந்த பங்கை உங்களுக்கு குடுக்கனும்னா சட்டப்படி நானும், மேகாவும் சைன் பண்ணனும் தானே?…” என கேட்க,
“ஆமா தம்பி. உங்களுக்கு பெரிய மனசு…” என்றார் சந்திரா அவனை குளிர வைக்கவென்று.
இதை எல்லாம் விசாரித்து அறிந்து தானே அதிரனை சந்திக்கவே அவர் கணக்கிட்டு வந்தது.
“உங்களுக்கு குடுக்கறதா இருந்தா நாங்க எப்படி சைன் பண்ணுவோம்?…” என அமர்த்தலாக கேட்க,
“தம்பி?…” என்று எழுந்துவிட்டார் சந்திரா.
மற்றவர்களுக்கு ஆச்சர்யமாகி போக அதுவரை எப்படி அமைதியாக இருந்தனரோ அப்போதும் அப்படியே இருந்தனர்.
“கண்டிப்பா கையெழுத்து போட மாட்டோம். பூர்வீக சொத்தை யாருக்கு வேணாலும் கொடுக்க என் மாமாவுக்கே ரைட்ஸ் கிடையாது…” என்றவன்,
“ஏன் பல்லவன் உங்களுக்கு தெரியும் தானே இந்த லா எல்லாம்? எப்படி மாமா பங்கை மூணா போடலாம்ன்னு சொன்னதும் சரின்னு சொன்னீங்க? இது உங்க உரிமை கூட இல்லை. உங்க பையனுக்கான உரிமை. அதை மறுக்கலாமா?…”
அதிரன் கேட்க கேட்க சந்திராவிற்கு ஏன் தான் வந்தோம் என்றானது. மோனிகா முகமெல்லாம் சிரிப்புடன் பார்க்க அமுதன் நெகிழ்ந்து போயிருந்தார்.
“ஏன் தம்பி, இந்த சொத்து உங்களுக்கு ஒரு விஷயமா? இவ்வளோ பெரிய இடத்துல இருக்கீங்க. சொத்துக்காக நீங்களும் தூண்டிவிடற மாதிரி பேசறீங்களே?…”
முயன்று அதிரனை மரியாதையாக அழைத்துக்கொண்டு இருந்தார் சந்திரா. வாசலில் செக்யூரிட்டியும், அவனின் பாதுகாவலர்களும் இருக்க அதிரன் சொடுக்கிட்டால் தன்னை தூக்கி வெளியில் வீசிவிட கூடும்.
அதிலும் சட்டம் எல்லாம் வேறு பாயிண்டாக பேச அரண்டு போய் தான் பார்த்தார் அவனை.
“சொத்து சின்னதோ? பெருசோ? இது காசு சம்பந்தப்பட்டது இல்லை. உரிமை சம்பந்தப்பட்டது. உங்களுக்கு ஏன் குடுக்கனும்?…” என்றான் அதிரன்.