“கேட்டுட்டு தான் செஞ்சேன் அதி. இந்த ஆடிட்டர் நம்ம ஆடிட்டர் சஜஸ்ட் பண்ணினவர் தான். நல்லா கைட் பண்ணுவார். வர்ணாவுக்கும் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்…” என சொல்ல அதிரனும் சம்மதித்துவிட்டான்.
இரண்டு மாதங்கள் சென்ற வேகம் தெரியவில்லை. மேகாவிடம் இப்போது மிகவும் தெளிவு.
அதிரனின் வேலைகளை பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டு தெரிந்து வைத்துக்கொண்டாள்.
விடுமுறை அன்று அவனுடன் ஸ்டூடியோ செல்வது, அவன் பாடுவதை, டப்பிங் பேசுவதை கேட்பது என்று நாட்கள் ஓடியது.
“பரவாயில்லை மருமக பொண்ணு இதையும் கவனிக்கிறா…” என சுபத்ரா தேவராஜிடம் சொல்ல,
“உன் மகன் கவனிக்க வைக்கிறான்னு சொல்லலாம். அதுதான் உண்மையும். படிக்கிற நேரம் போக மிச்ச நேரமெல்லாம் தன் கூடவே தான் வச்சு பார்த்துக்கறான். அந்த பொண்ணை படுத்தறான் அதி…”
“ஏன் இதுல உங்களுக்கு என்ன கஷ்டம்? அவன் பொண்டாட்டி, அவன் கூட்டிட்டு போறான்…” சுபத்ரா மகனுக்காக தேவராஜிடம் பேச,
“அப்போ நீயும் வாயேன் நான் கம்போஸ் பண்ணும் போது. உனக்கும் பொழுது போகும் தானே?…” என்றார் கிண்டலாக.
“இதையே நீங்க முன்னாடி கூப்பிட்டிருந்தா வந்திருப்பேன். காலம் போன கடைசில அங்க வந்து நிம்மதியா தூங்க கூட முடியாது. டொயிங் டொயிங்ன்னு அந்த ஆர்மோனிய பெட்டிய போட்டு தட்டி அதையும் என்னையும் பாடா படுத்தவா?…”
சுபத்ரா பேசிய பேச்சில் தேவராஜ் முகம் மாறிவிட அதனை கேலியாய் பார்த்து சிரித்தவர்,
“இப்படித்தான் போகும். பாட்ட முழுசா முடிக்கவும் கேட்டுக்குவேன். நீங்க ஆனா ஆவன்னா வாசிக்கிறதை கேட்டு என்னாக போகுது?…” என்று சொல்லி சென்றுவிடுவார்.
“பார்த்தியா உன் அம்மா பேச்சை?…” என மகனிடம் தான் கொண்டுவருவார் தேவராஜ்.
இதற்க்கிடையில் அமுதினியன் குடும்பத்தில் சொத்து பிரச்சனையும் முடிவிற்கு வந்தது.
வீட்டை விற்க முயன்றார் பரமசிவம். விற்று நான்கு பங்காக போட்டுக்கொள்ள அவர் சொல்ல அதற்கு செல்வம் சம்மதிக்கவில்லை.
ஏன் விற்க வேண்டும்? வேண்டாமென்று செல்வம் மறுத்தார். அவருக்கு பூர்வீக வீட்டை விற்க மனமில்லை.
மூவரும் சேர்ந்து சந்திராவிற்கு தொகையை தந்துவிடுவோம் என்றும், வீடு மூவரின் பெயரில் இருக்கட்டும் என்று கூறினார். அமுதினியனும் சம்மதிக்கவில்லை.
ஏற்கனவே அதிரன் பேசியதை பற்றி பரமசிவத்திடம் சந்திரா சொல்லியிருக்க அவரும் கொஞ்சம் அடக்கி வாசித்தார்.
வீட்டை விற்று அந்த பணத்தை நான்கு பங்காக எடுத்துக்கொள்ள என்ற முடிவிற்கே அவர் மீண்டும் வர,
“இப்ப இருக்கற சூழ்நிலையில் இதே மாதிரி ஒரு வீட்டை நம்மளால சென்னையில் வாங்க முடியுமா?…” என கேட்டு பல்லவன் தான் முட்டுக்கட்டை போட்டான்.
“தானும் படுக்காம தள்ளியும் படுக்காம என்னடா செய்யனும்ங்கற?…” என அவனிடம் எகிறினார் பரமசிவம்.
“வீட்டை வித்துட்டு என்ன செய்யறதா இருக்கீங்க?…”
“நான் ஏற்கனவே வேற வீடு பார்த்து வச்சுட்டேன். அங்க தனியா குடித்தனம் போறோம் எங்க குடும்பம் மட்டும்…” என சொல்லவும் யோசிப்பதாக ஒரு நாள் அவகாசம் கேட்டான் பல்லவன்.
செல்வத்தையும் வரவழைத்து வீட்டில் எல்லோருடனும் கலந்து பேச மறக்காமல் அதிரனிடமும் விவரம் கேட்டுக்கொண்டனர்.
“அவங்க போகனும்னு முடிவு பண்ணினா தடுக்க வேண்டாம் மாமா. வீடும் பார்த்திட்டதா சொல்றீங்க….” என்றவனை குழப்பமாய் பார்த்தனர் செல்வமும், அமுதனும்.
“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? அப்ப வீட்டை விக்கனும்னு சொல்லுவாரே?…” அமுதன் கேட்டார்.
“வீட்டை வித்து தான் குடுக்கனுமா என்ன? வீட்டோட மதிப்பை பாருங்க. அதை நாலு பங்கா பிரிங்க. சந்திராம்மாவுக்கும், பரமசிவம் மாமாவுக்கும் எவ்வளோன்னு பார்த்து பணத்தை செட்டில் பண்ணிட்டு வீட்டை நீங்க ரெண்டுபேரும் எடுத்துக்கோங்க…” என்றான்.
அதிரனின் யோசனை சரியாக இருந்தாலும் இதற்கு அவர்கள் ஒத்துவர வேண்டுமே என்று அமுதன் யோசிக்க,
“அவ்வளோ பணத்துக்கு நான் என்ன செய்ய?…” செல்வம் மலைத்து போனார்.
ஒரு பங்கு சந்திராவிற்கு மட்டுமென்றால் முயற்சி செய்து ஏற்பாடு பண்ணி கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் இது?
அவர் முகமே இருண்டுவிட்டது. சாதாரண வேலையில் இருப்பவர். வீட்டின் மதிப்பை கொண்டு இருவருக்கும் தருவதென்றால் தன்னுடைய சக்திக்கு அது மிகப்பெரிய தொகை.
முகம் வாடிப்போக என்ன பேசுவதென்று வார்த்தைகளை விழுங்கியபடி கையை பிசைந்துகொண்டு இருந்தார்.
“என்னண்ணே பேசறீங்க? நான் இல்லையா?…” என்றார் அமுதன்.
“நானில்லையான்னா? இது சரிவராது அமுதா. வந்தா போனா செய்யிறது வேற. இது சொத்து, பெரிய தொகை. இது வேறப்பா…” என்று மறுத்தார் செல்வம்.
“ஏன் மாமா, மாமா என்ன சும்மாவா குடுக்காங்க? உங்களுக்கு முடியும் போது திருப்பி குடுக்க போறீங்க. அவ்வளோ தானே?…” என்ற அதிரன்,
“இப்ப என்ன தம்பி? என் தம்பியே மொத்தமா அந்த வீட்டை எடுத்துக்கட்டும்…” என செல்வம் சொல்லவும் அதிரன் பல்லவனிடம் கண்ணை காட்டினான்.
“பெரியப்பா சொல்றேனேன்னு எதுவும் நினைக்காதீங்க. பூர்வீக சொத்தாவே இருந்தாலும் அப்பா வாங்கிட்டா அது அப்பாவோட வீடாகிடும். இதுவே ரெண்டுபேரும் சேர்ந்துன்னா அப்படி இல்லை. அதுக்குத்தான் சொல்றேன்…”
இப்படி பேசி பேசி சம்மதிக்க வைத்திருக்க செல்வமும் சம்மதித்தார். பணம் அமுதன் தருவதாக பரமசிவத்திடம் சொல்ல வேண்டாம் என்றுவிட்டனர்.
தெரிந்தால் அதற்கும் பிரச்சனை என்று தான் நிற்பார் என பல்லவன் முடிவாய் சொல்லிவிட்டான்.
பணத்தை வாங்கிக்கொண்டு சந்திரா பரமசிவம் இருவரும் கையெழுத்து போட்டாலும் செல்வத்திற்கு எப்படி இத்தனை பணம் கிடைத்தது என்ற யோசனை குடையாமல் இல்லை.
ரிஜிஸ்ட்ரேஷன் பொழுது அதிரனுமே மேகாவுடன் அங்கே வந்தாக வேண்டிய சூழ்நிலை.
அவன் வரவும் அவன் மூலம் தான் செல்வத்திற்கு பணம் கிடைத்திருக்குமோ என்றும் யோசித்தனர்.
ஆனால் அமுதன் கொடுத்ததாக தெரிந்திருந்தால் பரமசிவம் நடந்துகொண்டிருப்பதே வேறாக இருக்கும்.
வீடு மாற்றப்பட்டு பரமசிவம் வீட்டை காலி செய்ய செல்வம் கூட சொல்லி பார்த்தார் எப்போதும் போல அவர் அங்கேயே இருக்கட்டும் என்று.
“பெரியப்பா என் தங்கச்சியை பேசினவருக்கு இங்க இருக்க எல்லாம் அனுமதிக்க முடியாது…” என்று பல்லவன் பிடிவாதமாக நின்றுவிட்டான்.
“நீயுமாச்சு உன் வீடுமாச்சு, போடா…” என்று கிளம்பிய பரமசிவம் அப்போதும் யாரும் நன்றாக வாழமாட்டார்கள் என்று சாபம் விட்டு தான் சென்றார்.
“இவங்க சாபம் எல்லாம் தூசிக்கு கூட பெறாது. நல்லவங்க கண்ணீருக்கும், சாபத்துக்குமே இப்ப வேல்வ்யூ இருக்கான்னு தெரியலை. கவலைப்படாதீங்க…” என்றான் அதிரன்.
சந்திரா வாயே திறக்கவில்லை. மோனிகா வேறு கையில் போனை வைத்துக்கொண்டே அவரின் எதிரே நிற்க அவரால் பேசவும் முடியவில்லை.
அவர்கள் கிளம்பவும் செல்வம் மட்டும் அங்கே தன் குடும்பத்துடன் குடியிருந்தார் அந்த வீட்டில்.
நேரம் கிடைக்கையில் அமுதன் வீட்டில் அனைவரும் ஒன்றாக சந்தித்து கொள்வார்கள்.
அதிரன் மீதான மதிப்பும் பார்வையும் இன்னும் பலமடங்கு உயரத்தான் செய்தது அவர்களின் மனதில்.
அன்று ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சி. மூத்த இசையமைப்பாளருக்கு எழுபத்தைந்து வருட நிறைவு என்று பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருக்க சென்றாகவேண்டிய கட்டாயம்.
தேவராஜும், அதிரனும் கிளம்பவேண்டிய சூழ்நிலை. இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் கிளம்புகிறான் அதிரன் மேகாவை விட்டு.
முன்பு போல எல்லாம் மருகி தவிக்கவில்லை. நான்கு நாள். இதோ இப்படி சென்று வந்துவிடுவான் என்று மேகா சந்தோஷமாக வழியனுப்ப நினைத்தாள்.
“நாலு நாள் தான். வந்திருவேன்டா மேகா…” என சொல்ல,
“நான் பார்த்துப்பேன் அதி. ஏன் இவ்வளோ சொல்றீங்க?…” அவனுக்கு உதவியபடி அவள் சொல்ல அதிரனுக்கு மனமே இல்லை.