தன்னால் அப்படி எங்கும் செல்லாமல் இருக்க முடியாது நிச்சயமாக. இன்னும் அடுத்து ஒப்புக்கொண்டிருக்கும் படத்தின் வேலைகள் பாதி முடிந்திருக்க பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டு செல்லவேண்டிய கட்டாயம்.
அடுத்த மாதம் எப்போது வேண்டுமானாலும் கிளம்பலாம் என்று தான் யோசித்துக்கொண்டு இருந்தான் அதிரன்.
அதுவேறு அவனை உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. ‘தனியாக தன் மேகம், என்னை தேடுமே?’ அதிரனுக்கு மேகாவின் அன்றைய நிலை தான் மனதில் எழுந்து நின்றது.
இப்போது நினைத்தாலும் உடல் நடுங்கியது அதிரனுக்கு. எல்லாவற்றையும் எடுத்து வைத்தபடி மேகாவிடம் பேசிக்கொண்டே இருந்தான்.
“நான் சமாளிச்சுப்பேன். இங்க இருக்கற ஹைதராபாத். என்ன நீங்க? இதுக்கு போய்? கேரளால நீங்க இருந்த இடத்துல சிக்னல் இருக்காது. ஆனா இங்க கிடைக்குமே?…” என அவனை சமாதானம் செய்தாள்.
ஒருவழியாய் அதிரனும் கிளம்பி சென்றான் ஹைதராபாத்திற்கு. நிகழ்ச்சிகள் ஒருபக்கம், அங்கே தனியாய் பாராட்டுவிழா ஒருநாள் என்று மூன்று நாட்கள். நான்காம் நாள் இரவு தான் திரும்பி வரவேண்டியதாக முடிவு.
முதல்நாள் இரவு பதினோரு மணி போல அழைத்துவிட்டான் மேகாவிற்கு அவள் ஆன்லைனில் இருப்பதை கண்டு.
“என்னடா தூங்கலைய நீ?…” என வீடியோவில் வந்து அதிரன் கேட்க,
“அதி வேணும்னு சொல்லலையே…” என்றான் அவன் சிரிப்புடன் புருவம் உயர்த்தி.
“வேணும்னா உடனே வந்துடுவீங்களா?…” என்றாள் புடவைக்கு நகைகளை பார்த்துக்கொண்டே.
“வந்திடலாமே? மேகம் வான்னு சொல்லட்டும்…”
“வாங்க…”
“அதே கொலுசை போடுமா?…”
“அதி…”
“சொல்லுடா…” என்றான் கிண்டலாய்.
அதிரனின் கால்களை பதம் பார்த்த கொலுசையே மேகா முதல் வேலையாக தன் கால்களில் இருந்து மாற்றி இருந்தாள்.
அதிரன் அதனை கழற்ற சம்மதிக்கவே இல்லை. ஆனால் அத்தனை பிடிவாதமாய் மேகா மாற்றிக்கொண்டாள்.
இப்போதும் அதனை குறிப்பிட்டு கேட்க மேகாவின் முகத்தில் அத்தனை வெட்கம்.
“அதெல்லாம் முடியாது…” என சிரிப்புடன் சொல்லியவள் பேச்சை மாற்ற என்று,
“நாளைக்கு இந்த சேரி ஓகே வா அதி?…” என்று மெகா கேட்க, எழுந்து நின்றவன் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி,
“எங்க பிரண்ட் கேமரா வா. உன் முகம் பார்த்து சொல்றேன்…” என்றான் ஜன்னல் பக்கமாக வந்து சாய்ந்து நின்று.
“மாட்டேன்…” உடனடியாக மறுத்தது அவன் மேகம்.
“வர வர ரொம்ப க்ளவராகிட்ட மேகாடா நீ…” என அப்படி ஒரு சிரிப்பு அதிரனிடத்தில்.
“நைட் தூங்கும் போது பேசற பேச்சை பாருங்க…”
“ஓகே, பேசலை. நான் கேட்கறதுக்கு கரெக்ட்டா பதில் சொல்லு பேசலை…” என்றான் அதிரன்.
“அதி…”
“நான் உனக்கு முதல் முதல்ல வாசிச்ச ராகம் என்ன?…”
“நான் இந்த விளையாட்டுக்கே வரலை. எனக்கு தூக்கம் வருது…” என்று சொல்ல,
“முகத்தை காமி மேகா, எவ்வளோ நேரம் கட்டாத புடவையையே பார்க்க? அதுக்கா கால் பண்ணேன்?…” விஷமம் ததும்பும் குரல்.
அவனின் மேகம் திரையில் தெரிய இப்போதும் அவளை அத்தனை குறுகுறுப்புடன் பார்த்தான்.
“என்னவோ இருக்கே? என்னவாம்?…” என்று கேட்க,
“நீங்களா எதையும் யோசிக்காதீங்க. இப்ப போய் தூங்குங்க…” என்றவள்,
“நாளைக்கு நைட் சென்னை வந்திருவீங்க தானே?…”
“ஹ்ம்ம் டா. நாளைக்கு இந்த நேரம் நான் அங்க. நீ இங்க…” என்று தன் இதயப்பகுதியை தொட்டு காண்பிக்க,
“அதி…”
“சொல்லு மேகா, ராகம் கேட்டேனே?…”
“நிஜமா தெரியலை…”
“ரெண்டாவது ராகம்?…” என்று கேட்க அதற்கும் அப்படி சிரிப்பு.
இதுவரை ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு ராகத்தின் பெயர்கள் சொல்லி அவன் வீணையை வாசித்து, வீணையுடன் அவளையும் மீட்டி என்று எதையும் ஞாபகத்தில் வைக்கவிடாமல் செய்திருந்தான்.
ஒவ்வொன்றின் பெயர்களையும், அதன் விளக்கங்களையும் சொல்லி தந்தவன் சொல்லிய வேகத்தில் மறக்கடித்து தன்னை மட்டும் அவள் மனதில் நிறுத்தியிருக்க மேகாவிற்கு சுத்தமாக நினைவில்லை ஒரு ராகமும்.
அத்துடன் ஒவ்வொரு முறையும் அவளிடம் கேட்டு கேட்டு திணறடித்து மீண்டும் ஒரு ராகத்தை சொல்லித்தர மேகா மொத்தமாய் குழம்பி போவாள்.
“சாதிக்கறீங்க நீங்க…” என்னும் பொழுதெல்லாம் அதிரனின் அட்டகாச சிரிப்புகள் அவளை அள்ளிக்கொள்ளும்.
“சொல்லு மேகா…” என இப்போதும் கேட்க,
“சரண்டர். எனக்கு தெரியலை…” என அவள் விழிக்க,
“நாளைக்கு வந்து பேசறேன் பொண்ணே…” என்று இதழ் குவித்து முத்தமிட்டவன் அவளிடம் விடைபெற அழைப்பை துண்டித்துவிட்டு அமர்ந்துகொண்டாள் மேகா.
முகமெல்லாம் குப்பென்று வியர்த்திருந்தது. தன் ஒவ்வொரு மாற்றங்களையும் எப்படி கவனிக்கிறான் இவன் என்று.
மனதிற்குள் அத்தனை சந்தோஷம். அத்துடன் படபடப்பும் எதிர்பார்ப்புமாக அவள் நேரத்தை உறக்கம் வராமல் நெட்டி தள்ளிக்கொண்டு இருக்க விடியவும் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து சென்று பார்த்துவிட்டாள்.
அங்கேயே மடங்கி அமர்ந்துகொண்டவள் கைகளும், கால்களும் லேசாய் சந்தோஷத்தில் நடுங்க ஒருநொடி இதனை அதிரன் எப்படி எடுத்துக்கொள்வான் என்று இருந்தது.
நேரில் வரட்டும், அவனின் முகத்தினை கவனிக்கவேண்டும். அவனின் விழிகளில் வந்துபோகும் பாவங்கள் எப்படியானதாக இருக்கும் என பார்த்தும் பேராசையில் கண்ணை மூடி அமர்ந்திருந்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.
மீண்டும் ஒரு அலாரத்தின் சத்தம். சந்தோஷத்தில் கண்களோரம் நீர்த்துளி திரண்டிருக்க எழுந்துகொண்டவள் குளித்து முடித்து வெளியே வந்தாள்.
நேராக சென்றது வீணை அறைக்கு தான். அத்தனை வீணைகள் அந்த அறையை நிறைத்திருந்தாலும் அவளின் ஆஸ்தான வீணை அவனுடன் சேர்ந்து வாசித்த முதல் வீணை தான்.
அதனருகே சென்று நின்றவள் மனதிற்குள்ளேயே அத்துடன் பேசினாள். உரையாடினாள்.
தன் சந்தோஷத்தை அந்த வீணையுடன் பகிர்ந்துகொண்டாள். கையில் இருந்ததை வீணையின் மேல் வைத்தவள் நினைவுகள் அதிரனை தான் தேடியது.
‘வரட்டும், அவங்க வரவும் முதல்ல இந்த ரூம்க்கு தான் கூட்டிட்டு வரனும். இதை பார்க்கவும் கண்டுபிடிக்காங்களான்னு பார்ப்போம்.’ என நினைக்கையில் நினைவே தித்தித்தது.
‘நீ குட்டி அதியான்னு தெரியனுமே?’ என மனதிற்குள் கேட்டுக்கொண்டாள் கண்கள் பனிக்க.
இன்னும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. தனக்கே இரண்டு நாட்களாக அதிரன் சென்ற பின்னர் தான் தன்னையே நினைக்க முடிந்தது.
அதன் பின்னர் யோசிக்கவே இல்லை. அதற்கான கிட்டை வாங்கிக்கொண்டு வந்தவளுக்கு எப்போதடா விடியும், பார்ப்போம் என்றிருந்தது.
அதை யாருக்கும் தெரியாமல் வாங்குவதற்குள் தான் பெரிதாய் திணறி போனாள் மேகா.
வசந்த்தை வைத்துக்கொண்டு எங்கும் செல்லவும் முடியாமல் எப்படி வாங்க என்று யோசித்து அதனை செயல்படுத்தி வாங்குவதற்குள், அதுவும் அதிரனுக்கோ வீட்டிற்கு தெரிந்துவிடாமல் வாங்குவதற்குள் தான் அத்தனை கஷ்டம்.
மோனிகாவிடம் பேசும் பொழுதும் கூட எதையும் உளறிவிடாமல் இருக்க கவனமாய் வாட்ஸ் ஆப் சாட் மட்டும் செய்திருந்தாள்.