இப்போது அதிரன் சரியாய் கவனித்து முகத்தில் என்னவென்று கேட்க எங்கே கண்டுகொள்வானோ என்றிருந்தது.
ஒவ்வொன்றாய் நினைத்தபடி கிளம்பிவிட்டாள். காலை முகூர்த்தம். இப்போது சென்றால் தான் சரியாக இருக்கும்.
புடவை மாற்றி கிளம்பி கீழே வர சுபத்ரா பூஜை அறையில் அமர்ந்திருந்தார். அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப,
“சாப்பிட்டு போ வரு…” என்றார்.
மேகாவிற்கு அங்கே தன் தோழியின் திருமணத்தில் சாப்பிடவேண்டும் என அத்தனை ஆசை.
முடியுமா என்று தெரியாது. ஆனால் பார்த்துக்கொள்ளலாம். அதுவும் தான் மட்டும் தானே?
புவனா ஏற்கனவே சொல்லிவிட்டாள் உனக்கு எந்தவித சங்கடமும் இல்லாமல் வந்து செல்லும்படி பார்த்துக்கொள்வதாக.
அவர்கள் வீட்டில் அத்தனை பெருமை. அதிரன் தேவராஜின் மனைவி மகளின் திருமணத்திற்கு வருகை தரவிருப்பது.
ஆனால் அதே நேரம் பாதுகாப்பாகவும் அவளை அழைத்துக்கொண்டு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார்.
“வரு என்னம்மா யோசிக்கிற?…”
“ஹாங், இல்லை த்தை. பசிக்கலை…”
“என்ன பொண்ணு நீ பசிக்கலைன்னு. அங்க போய்ட்டு வர வரைக்கும் சாப்பிடாம இருப்பியா? சரி இரு ஜூஸாவது குடி…” என்றார்.
‘ஆமா குழந்தைக்கும் பசிக்குமே?, இனி சாப்பாட்டுல கவனமா இருக்கனும். நேரத்துக்கு சாப்பிடனும்’ என நினைத்தபடி சுபத்ரா பின்னோடே சென்றாள்.
“இந்தா குடி…” என்று நீட்டியது மாதுளை ஜூஸ்.
‘குழந்தைக்கு ரொம்ப நல்லது’ என நினைத்துக்கொண்டே சிரிப்புடன் வாங்கியவள் குடித்தவளுக்கு அந்த குழந்தையுடன் கனவுகளும் வளர ஆரம்பித்தது. குடித்து முடிய சுபத்ரா மருமகளையே கவனித்தார்.
“குடிச்சுட்டேன் த்தை…” என்று சொல்லவும்,
“வரு ஒரு நிமிஷம் டா…” என்று உள்ளே சென்றவர்,
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு…” என மருமகளுக்கு சுற்றிபோட்டார்.
“அத்தை இந்த நேரம் என்ன?…”
“என்னவோ தோணுது. பத்திரமா போய்ட்டு வா…” என்றவர்,
“ஆனாலும் அதி வரான்னா தான் உன் முகத்துல கூடுதல் சந்தோஷம். ஹ்ம்ம், நாங்கலாம் கூட இருக்கறது கூட தெரியறதில்லை…” என்றார் கிண்டலாக.
“அச்சோ த்தை ஏன்?…”
“பார்த்தியா இல்லைன்னு சொல்லலையே நீ?…”
“ஆமா…” அதற்கும் மேகா சொல்ல,
“உன்னை கிண்டல் பன்றேன். சமாளிக்க கூட மாட்டேன்ற நீ? நல்ல பொண்ணு. சரி கிளம்பு. பத்திரமா போய்ட்டு வா…” என்றவர் அவளின் பாதுகாவலர்களை அழைத்து பார்த்துக்கொள்ளும்படி அனுப்பி வைத்தார்.
முதன் முதலில் அவர்கள் திருமணத்தின் பின்பு ஒரு பொது நிகழ்வில் அதுவும் அதிரனின்றி கலந்துகொள்ள இருக்கிறாள் மேகா.
அவள் தோழியின் திருமணம். செல்லாதே என்று சொல்லவும் முடியவில்லை. அதிரன் இருந்திருந்தால் அவன் செல்லவும் போவதில்லை.
மேகாவை தடுக்க மனமில்லை. அனுப்பி வைத்துவிட்டார். இப்படி வீட்டிலேயேவா இருக்க வைக்க முடியும்?
இதை எல்லாம் பார்த்து தான் ஆகவேண்டும். என்னவொன்று கவனமாய் போய் வர வேண்டும் என நினைத்தபடி பார்த்துக்கொண்டு இருந்தார்.
காலை தான் தேவராஜ் அழைத்திருந்தார். அங்கிருந்து காரில் தான் கிளம்ப இருப்பதாக.
அதிரனும் அவருடன் தான் வருவான் என இவர் நினைத்திருக்க மகன் அடுத்த கால்மணி நேரத்தில் வந்துவிட்டிருந்தான் வீட்டிற்கு.
“அதி…” என வியப்புடன் பார்த்தார்.
“அப்பா பேசும் போதுகூட சொல்லலையே…”
“ம்மா, நான் தான் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன். அப்பாவுக்கு வேலை இருக்கு. எனக்கு வரனும்னு தோனுச்சு. அதான் மார்னிங் ப்ளைட்ல வந்துட்டேன்…”
“நான் வந்துட்டேன்னு சொல்ல வேண்டாம். சர்ப்ரைஸா இருக்கட்டும்…” என்று சொல்ல அவனின் கன்னம் தட்டியவர்,
“சரி நீ போய் ரெஸ்ட் எடு…” என்றார்.
தன் அறைக்குள் வந்தவன் உடைகளை மாற்றிவிட்டு தளர்வாய் கட்டிலில் விழுந்தான்.
முதல்நாள் மேகாவை பார்த்துவிட்டு அதற்கு மேல் அவனால் அங்கே இருக்க முடியவில்லை.
எதுவோ அவனை உந்திக்கொண்டே இருக்க இனி எதற்கு அங்கே நேரத்தை கடத்தவென்று கிளம்பிவிட்டான் சொல்லாமல்.
“வந்து பார்க்கவும் என்ன செய்வா?…” என நினைத்தபடி எழுந்தவன் வாஷ்ரூம் சென்றான்.
களைப்பு தீர குளித்தவன் தலையை துவட்டிவிட்டு வெளியே செல்ல போக அங்கிருந்த குப்பை கூடையில் பார்வை சென்றது.
மேலோட்டமாய் நின்று பார்த்தவன் விழிகள் கூர்மையடைய நொடியில் உடலில் ஒரு பரபரப்பு அது என்னவென்று அறிந்ததும்.
கைகளில் எடுத்து பார்த்தவனின் உணர்வுகளில் எல்லாம் ஒரு புல்லரிப்பு ஒவ்வொரு அணுவையும் பற்றிக்கொண்டது.
“மேகா…” என முனுமுனுத்தவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
முந்தைய நாள் தான் பார்த்து ரசித்த தன் மேகத்தின் முகம் மின்னி மறைய மீசைக்கடியில் இதழ்களில் ஒரு சந்தோஷ அழுத்தம்.
உணர்வை அடக்கினான் இதழ் கடித்து. வெளியே வந்தவனுக்கு அதனை எப்படி கடக்க என்று தெரியவில்லை.
தண்ணீரை எடுத்து குடித்தான். மேகா செக் செய்து பார்த்துவிட்டாளா? என்னவென்று வந்திருக்கும்?
ஒருவேளை அப்படி எதுவும் இல்லையோ? அதனால் தான் தன்னிடம் சொல்லவில்லையோ?
யோசனைகளை தறிகெட்டு பாய்ந்தது. மேகாவிற்கு அழைக்க அழைப்பு நாட் ரீச்சபிள்.
“மேகா, டேய் பொண்ணே பிக்கப் டா…” என்று மீண்டும் அழைக்க ட்ரைவர், வசந்த் என யாருக்கும் செல்லவில்லை.
அவனுக்கு உடனே அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. செய்தி என்னவென்று தெரிய வேண்டும்.
அதுவும் முதல்நாள் இரவில் நிலவாய் ஒளிர்ந்து கண்களை கூச செய்யும் அழகுடன் தன் மேகத்தை பார்த்திருந்தவனுக்கு இது மட்டும் இல்லை என்றால் அவள் என்ன நினைத்திருப்பாளோ என்று நெஞ்சம் அடித்துக்கொண்டது.
நிலைகொள்ளவில்லை அதிரனுக்கு. என்றுமில்லாமல் நிதானம் குறைந்தது. விழிகள் அலைபாய மனது ஆட்டம் காட்டியது அவனை ஓரிடத்தில் இருக்கவிடாமல்.
விரல்கள் வேகமாய் தாளம் போட சட்டென எழுந்து வீணை அறையை திறக்கவும் மனதிற்குள் ஒரு வழி திறந்தது.
வேறு எந்த வீணைக்கும் செல்லவில்லை. அவனுக்கு தெரியுமே தன் மேகத்தின் மனது.
நேராய் அந்த வீணைக்கு தான் சென்றான். அவன் மனது சொல்லிய வழியில் சென்றான்.
என்றைக்கும் போல இன்றும் அவனின் உள்ளுணர்வு பொய்க்கவில்லை. அங்கே மேகா வைத்திருந்த பரிசை மெதுவாய் விரல்களால் நீவி எடுத்தான்.
பார்த்தவனுக்கு இரு விழிகள் போதவில்லை. இதழ்களை புன்னகை நிறைக்க விழிகளை நீர் கோர்க்க அதன் இனிமை அடிமனதில் சுகமாய் பரவியது. ஆம், அவன் தகப்பன்.
“மேகா…” என்று அதனை கைகளுக்குள் வைத்து வருடியவன் மனதில் மேகத்தின் முகம்.
“டேய் பொண்ணே…” அப்போதே அவளை காணவேண்டும் என்று ஆவலாதி பொங்கியது.
ஒருபக்கம் வெட்கம் சூழ முகத்தை மூடிக்கொண்டவன் கைகளுக்குள் இருந்த பொருள் அவன் கண்களை தொட்டது.
‘படிப்பு முடியட்டும்ன்னு சொல்லி சொல்லி என்னடா அதி பண்ணி வச்சிருக்க?’ என்று சிரிப்பும், சந்தோஷமும், வெட்கமும் தான் அதிரனிடம்.
எழுந்து நின்றவனுக்கு மூச்சுவாங்கியது பலமாக. கண்ணாடி முன் நின்றவன் தன்னையும் அதன் பின்னால் புகைப்படத்தில் தெரிந்த பிம்பத்தில் மேகாவையும் பார்த்தான்.
“மேகத்துக்குள்ள குட்டி மேகமா?…” என சிலிர்த்து புன்னகைத்தவன்,
“ம்ஹூம். ஓஹ் நோ, இதென்ன நெஞ்சை அடைக்குது…” மீண்டும் தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டான்.
இல்லை இல்லை. நொடிகள் செல்ல செல்ல அவனால் அந்த அறைக்குள் மேகா இன்றி, அவளின் அருகாமை இன்றி இருக்க முடியவில்லை.
இப்போது மீண்டும் அழைத்தான் மேகாவிற்கு. அழைப்பு சென்றது. அவள் எடுக்கும் முன் இங்கே படபடவென்று அடித்துக்கொண்டது.
“அதி…” என்றவளின் குரலில் அப்படியே நின்றவன்,
“மேகாடா…” என்றான் கையில் இருந்ததை பார்த்தபடி.
“அதி, சொல்லுங்க. கிளம்பிட்டீங்களா? எப்போ வருவீங்க?…” என்றாள் அவள் அவன் ஹைதராபாத்தில் இருந்து கிளம்புவதாக நினைத்து.