“நத்திங் டா…” என சொல்லிவிட்டு அவளின் முகத்தையே புன்னகையுடன் பார்த்தான்.
“மேகம் முகத்துல பதட்டம் தான். ஆனாலும்…” என சொல்லியவன் அதற்கு மேல் பேச்சை இழுக்கவில்லை.
அங்கே வைத்து அந்த சூழ்நிலையில் எதையும் சொல்லவும், பேசவும் அவன் விரும்பவில்லை.
தன் மனதின் ஆர்ப்பரிப்பை, கொண்டாட்டத்தை அவளிடத்தில் தனிமையில் தான் காண்பிக்க முடியும்.
இப்போதும் கலங்கி போய் இருப்பவளை அணைத்துக்கொள்ள ஆறுதல்படுத்த முடியாமல் உதட்டை மடித்து கடித்தபடி இருந்தான்.
அவனின் முகத்தில் என்னவோ அசௌகரியம் என்பதை உணர்ந்தாள் மேகா. என்னவென்று தான் தெரியவில்லை.
ஓடி வந்து தன்னை அணைத்திருந்தவன் தன்னை நிமிரவிடாமல் தலையோடு சேர்த்து பிடித்துக்கொண்டு காதினருகே, ‘பயப்படாத மேகா’ என சொல்லிக்கொண்டே அழைத்து வந்திருக்க எதையும் கேட்கவில்லை.
அதிலும் பயம் வேறு. இத்தனை கூட்டம். நடக்க கூட முடியாதளவிற்கு சூழ்ந்திருக்க வயிற்றில் பிள்ளை வேறு.
எதுவும் ஆகிவிடகூடாதென்ற பதற்றமும் மேகாவை உலுக்கியிருக்க இப்போது அதிரனின் தோற்றம் மேகாவை சஞ்சலப்படுத்தியது.
ஹாஸ்பிட்டல் செல்லும் முன் ஹர்ஷத்திற்கு சுபத்ரா அழைத்துவிட மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருப்பதாக சொல்லவும் அவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
தேவராஜிற்கு அழைத்து சொல்ல அடுத்த ப்ளைட்டில் தானும் வந்துவிடுவதாக அவர் சொல்லிவிட்டார்.
என்ன நடக்கிறது என்று கூட புரியாமல் மலங்க மலங்க விழித்தபடி மேகா அதிரனின் கையை பிடித்துகொண்டிருந்தாள்.
“என்ன செய்யுது அதி?…” என்றவள் மெலிந்த குரல் அதிரனை வருத்தியது.
மீண்டும் மேகாவை இப்படியான உணர்விற்குள் தள்ளிவிட்டுவிட்டேனே என மருகிக்கொண்டு இருந்தான்.
தன்னால் தான் தன்னை பார்க்கவென்று வந்ததனால் தான் என நினைக்க ஆரம்பித்துவிடுவாளோ என்று தோன்றியது.
வலியில் மயக்கம் வேறு வருவதை போலிருக்க லேசாய் கையை அவன் அசைக்கவும் அவ்விடத்தில் ரத்தத்துளிகள்.
“அதி ரத்தம்…” என்று அவனின் கையை பிடித்து பார்க்க அவன் விடவில்லை.
இடது கையால் மேகாவை வளைத்து தன் தோளில் அழுத்திக்கொண்டான் பலமாய்.
“அதி என்னை பார்க்க விடுங்க…” என்றவள் அழுகை அவனை அசைக்க,
“ம்ஹூம், வேண்டாம். பேசாம இரும்மா…” என்றவன் மனதில் பலம் கையில் வெளிப்பட அது மேகாவை நிமிரவிடவில்லை.
அதற்குள் மருத்துவமனைக்கு வந்துவிட ஹர்ஷத் ஏற்கனவே சொல்லியிருக்க மருத்துவர்கள் காத்திருந்தனர்.
உடனே உள்ளே செல்ல அதிரனின் வாகனத்தை தொடர்ந்து வந்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் அதிரன் மருத்துவமனை வரவும் அதிர்ந்து போக அவன் இறங்கிய விதம் வேறு அவர்களை கலவரப்படுத்தியது.
அதனை அப்படியே போட்டோ எடுத்தவர்கள் ‘அதிரனுக்கு விபத்து. ரசிகர்களின் வெறிச்செயல். ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி’ என்று அடுத்த தங்கள் சேவையை துவங்கி வைத்தனர்.
இறங்கி செல்லும் வரை நடந்து சென்றவன் உள்ளே செல்லவும் அவனால் நிற்க முடியவில்லை.
உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட மேகா அலண்டு போய் நின்றாள் அவ்விடத்தில்.
“டேக் கேர்டா மேகாம்மா…” என்ற முணுமுணுப்புடன் தான் உள்ளே சென்றான் அதிரன்.
அடுத்த சில நொடிகளில் சுபத்ராவும் வந்துவிட மேகா நின்ற கோலம் வேறு அவரை பயமுறுத்தியது.
அவள் இருக்கும் விதம் இபோதைக்கு பேசமாட்டாள் என்று சுபத்ரா ஹர்ஷத்திடம் கேட்க அவன் விவரத்தை சொல்லவும் ஐயோ என்று தலையில் கை வைத்துவிட்டார்.
அதற்குள் வெளியே மீடியா ஒன்று சேர்ந்திருந்தது. அதிரனுக்கு என்னவாகிற்றோ என்று ஆளுக்கொன்றாய் பேச ஆரம்பித்தனர்.
அவர்களிடம் ஹர்ஷத் வந்து அதிரனுக்கு சிறிய காயம் தான் கூட்டத்தில் வேறு ஒன்றுமில்லை என்று சொல்லி செல்ல அதையும் நம்புவதாக தெரியவில்லை.
அதிரனுக்கு தன் திருமணத்தில் துவங்கி அதன் பின்னரும் ஏகப்பட்ட பிரச்சனைகள், கண்டங்கள், உயிருக்கு ஆபத்து என என்னென்னவோ திரித்து பேசினார்கள் சிலர்.
இப்படி வெளியே பரபரப்பாய் பேசப்பட்டுக்கொண்டு இருக்க மேகாவை பார்த்த சுபத்ரா,
“ஒண்ணுமிருக்காது. பயப்படாத…” என்று சொல்ல அவரின் கையை பிடித்துக்கொண்டாள்.
மருத்துவர் வந்து எலும்பில் சிறு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி பிரச்சனை இல்லை என்று சொல்லியிருக்க மேகா உடைந்துபோனாள்.
“என்னால தான், என்னாலதான் த்தை. நான் போனதால தான். இல்லன்னா இப்படி ஆகியிருக்காது…” என்று அழ ஆரம்பிக்க சுபத்ராவிற்கு மகனை பார்ப்பதா இவளை பார்ப்பதா என்றானது.
“இங்க பாரு வரு. சின்ன முறிவுன்னு தான் சொல்லியிருக்காங்க. வேற எதுவும் இல்லை. நீ வீட்டுக்கு கிளம்பு…” என்றார் உடனே.
“அத்தை…”
“ஆமாம்மா, அதான் டாக்டர்ஸ் சொல்லிட்டாங்களே? சரியாகிடும். நீ வீட்டுக்கு கிளம்பு. போய் இந்த ட்ரெஸ் எல்லாம் மாத்திட்டு வா. இல்லைன்னா அங்க இரு. இங்க வேண்டாம். நான் இருக்கேன்…” என்றார் கண்டிப்புடன்.
இதுவரை இப்படி ஒரு கட்டளை குரலில் அவர் பேசிருக்கவில்லை. ஏற்கனவே உடைந்துபோய் இருப்பவளின் மனது இன்னும் நொறுங்கியது.
“அத்தை அவங்க…”
“இப்ப மயக்கத்துல தான் இருப்பான். நான் சொல்றேன்ல. நீ கிளம்பும்மா…” என்றார் சுபத்ரா. அத்துடன் இல்லாது,
“வசந்த், போய் வருவை வீட்டுல ட்ராப் பண்ணிடு…” என்று சொல்ல அதற்கு மேலும் மறுக்க முடியவில்லை.
அழுகையை அடக்கிக்கொண்டு ஒன்றும் பேசாமல் கட்டளைக்கு அடிபணிவதை போல செல்பவளை பார்க்கவே அத்தனை பரிதாபமாக இருந்தது சுபத்ராவிற்கு.
ஆனால் இருக்கும் சூழ்நிலை அப்படி அல்லவே. தங்களின் அதிக சந்தோஷமும் பார்ப்பவர்களுக்கு செய்தி. அதிக கண்ணீரும் பார்ப்பவர்களுக்கு செய்தி.
தங்களின் உணர்வுகள் என்னவென்று பேசப்பட யாருமில்லை. எதற்காக இருக்குமோ என்று உண்மையில்லாத யூகங்களுக்கே இங்கே உயிரை கொடுத்து வேலை செய்கின்றனர்.
செய்தி சேகரிக்கிறேன் என்று என்னவும் செய்யலாம். மேகாவிடம் தேவை இல்லாமல் கேட்டால் இன்னும் அவள் கலங்கி போவாள் என்று அனுப்பி வைத்துவிட்டார் சுபத்ரா.
“வசந்த் கார் எடுத்துட்டு பேக் கேட்ல வந்து நிறுத்த சொல்லிட்டேன். அப்படி கிளம்புங்க. வெளில மீடியா…” என்று ஹர்ஷத் சொல்ல,
“வாங்க மேம்…” என அழைத்து சென்றான் வசந்த்.
அன்றும் ஒருநாள் இப்படித்தானே தன்னையும், தன் குடும்பத்தையும் அழைத்து சென்றார்கள் என்று மேகாவிற்கு தோன்றியது.
உயிர்ப்பின்றி நடந்து சென்றவளுக்கு வீட்டில் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.
“என்னை எங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா?…” என கண்ணீர் நிறைந்த கண்களுடன் கேட்க வசந்த்தின் மனது வேதனைப்பட்டது.
“சூர் மேம்…” என்று அவன் ட்ரைவரிடம் அமுதன் வீட்டிற்கு காரை செலுத்த சொன்னான்.
வீட்டு வாசலில் கார் நின்றதும் இறங்கி உள்ளே சென்றவள் மோனிகாவை தேட கதவு லேசாய் சாற்றி இருந்தது.
தந்தை, தாய், அண்ணன் எல்லாம் கோவிலுக்கு சென்றிருக்க அன்று இரவு தான் திரும்புவதாக இருந்தனர்.
“அண்ணி…” என்று தேட கிட்சனில் இருந்து வந்தாள் மோனிகா.
“வா வரு…” என வந்தவள் முகமே சோர்வுடன் இருக்க,
“என்னண்ணி? ஏன் இப்படி இருக்கீங்க?…”
“ஒண்ணுமில்லைடா, நைட்ல இருந்து ஃபீவர். இப்பதான் முழிச்சேன். கஞ்சி வச்சிட்டு இருக்கேன்…” என்றவள்,
“கல்யாணம் முடியவும் நேரா இங்க வர போல?…” என்றாள்.
கண்ணை நன்றாக திறந்து பேச கூட முடியவில்லை மோனியால். தலைவேறு வலித்துக்கொண்டு இருந்தது.
“உட்கார் வரு…” என்று சொல்லியவள் மீண்டும் மேகாவின் முகத்தை பார்த்து,
“என்னாச்சு வரு?…” என கேட்க,
“ஒண்ணுமில்லை அண்ணி…” என்றவள் லேசாய் முகம் திருப்ப,
“இரு வரு. என்னன்னு கேட்கறேன்ல?…” என்று சொல்லவும் விஷயத்தை சொல்ல மோனிகாவிற்கு அதிர்ச்சியானது.