“நல்லா பண்ணுனீங்க ரெண்டுபேரும். ஏன் அண்ணனுக்கு கொஞ்ச நேரம் வீட்டுல இருந்தா ஆகாதாமா? இப்ப தானா பிரச்சனையை கொண்டு வந்துட்டு. என்னம்மா இது?…” என்றாள் மோனிகா தலையில் கை வைத்து.
“அத்தை என்னை வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க…” விசும்பிக்கொண்டே சொல்ல,
“கோவமா இருக்காங்களா? வேற எதுவும் சொன்னாங்களா?…” மோனிகா பதறினாள்.
“கோவமான்னு இல்லை. ஆனா அவங்களுக்கும் இது கஷ்டம் தானே? போக சொன்னா காரணம் இருக்கும்…” என்றவளுக்கு இன்னும் கண்ணீர் பொங்கியது.
“அவங்களுக்கு என்னால எவ்வளோ கஷ்டம்?…” என கலங்கினாள்.
“நீ என்ன பண்ணுவ? அண்ணா வரதும் உனக்கு தெரியாது. மண்டபத்துக்கு வரதும் தெரியாது. இது உன் தப்பு இல்லை…” என்றவள்,
“சொல்ல போனா அண்ணா மேலயும், அவங்களுக்கும் கொஞ்சமாவது ப்ரைவேசி இருக்கும்ன்னு நினைக்காம இப்படி பண்ணியிருக்கற அந்த ரசிக கூட்டத்தை தான் சொல்லனும்…” என்று பல்லை கடித்தாள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவள் கிளம்புகிறேன் என எழுந்துவிட மோனிகாவிற்கு மனதே சரியில்லை.
இன்னும் இந்த பெண் எத்தனை பார்க்க வேண்டுமோ என்று வருத்தமாக இருந்தது மோனிகாவிற்கு.
“தனியா என்ன பண்ணுவ வரு?…”
“தெரியலை அண்ணி. ஆனா அவங்க வருவாங்க. வரும் போது நான் அங்க இருக்கனுமே? தேடுவாங்க அண்ணி…” என்றவளுக்கு நெஞ்சம் விம்மியது.
மயக்கம் தெளிந்ததும் அதிரன் தன்னை தான் தேடுவான் என்பதில் இன்னுமே நெஞ்சை அடைத்தது.
மோனிகா அவளுடன் வருகிறேன் என்பதையும் மறுத்து கிளம்பி வந்துவிட்டாள் மேகா.
மேகாவின் எண்ணம் போல தான் அதிரனுக்கும். கண் விழித்த நேரத்தில் தேவராஜூமே வந்திருந்தார்.
“இப்ப எப்படி இருக்கு அதி?…” என அவர் கேட்க,
“ஓகே ப்பா. ப்ளட் லாஸ் தான் ஒரு மாதிரி இருந்தது. மத்தபடி ஸ்ட்ராங் தான்..” என புன்னகைத்தான்.
“நீ ஏன் அங்க போன அதி?…” சுபத்ரா சொல்லவும் தான் தான் சென்றதன் ஞாபகம் வர,
“மேகா எங்கம்மா?…” என்றான் அவளை காணாமல்.
“வீட்டுக்கு போயிருக்கா அதி…” என சொல்லவும் அதிரன் திகைத்தான்.
“என்ன வீட்டுக்கா? என்னை இங்க விட்டுட்டா?…” என்றவன்,
“மேகாவா போயிருக்கமாட்டா…”
“நான் தான் அனுப்பி வச்சேன் அதி…” சுபத்ரா சொல்ல தேவராஜ் மனைவியை முறைத்துக்கொண்டு இருந்தார்.
வந்ததுமே சத்தம் போட்டிருந்தார் தேவராஜ். எத்தனை தான் சுபத்ரா சொன்னாலும் அதனை ஏற்க முடியவில்லை.
“என்ன சொல்லி அனுப்பி வச்சீங்கம்மா? என்ன பண்ணிருக்கீங்க?…” என்றான் தவிப்புடன்.
“அதி கையை அசைக்காத…” என அவர் பதற,
“இப்ப என்னலாம் நினைச்சு தவிச்சிட்டு இருப்பாளோ?…” என்றான் குரல் உடைய.
மெல்ல படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான் மெல்ல.
அவன் மனது தவியாய் தவித்தது ‘என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறதோ தன் மேகம்?’ என.
“நீங்க போன்னு சொல்லவும் அதுக்கு மறுத்து கூட பேசமாட்டாளே? ஏன் ம்மா இப்படி பண்ணுனீங்க?…” என்றான்.
“அதி, இங்க மீடியா…”
“மேகா என்னோட வொய்ப். இப்ப என்ன நடந்தாலும் அவ சமாளிப்பா. பேசுவா. பேசட்டும். ஏன் நீங்க கூட இருக்கீங்க தானே?…” என்றான் ஆற்றாமையோடு.
“என்னங்க நான்…” தேவராஜை பார்க்க,
“அன்னைக்கு நீ எனக்கு சொன்னது தான் சுபா. அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையில அவளோட புருஷனை பார்த்துக்க நினைப்பா தானே?…” வருத்தமாய் தேவராஜ் சொல்லவும் சுபத்ரா இன்னும் நொடித்து போனார்.
பரிதாபமாய் தன்னிடம் மறுத்து பேச முடியாமல் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றவளின் பிம்பம் இப்போது வதைத்தது சுபத்ராவை.
“தப்பு பண்ணிட்டேனோ?…” சுபத்ராவும் மகனை பார்த்து கேட்க அதிரனுக்கு கஷ்டமாகி போனது.
யாருக்கென்று பார்ப்பது? தாயும் முக்கியம், தாரமும் முக்கியம் என்றிருக்க இப்போது தனித்திருக்கும் மேகத்தின் நிலையே அதிரனை அங்கே இருக்க விடவில்லை.