இங்கே நடந்துகொண்டிருப்பதற்கும், சித்தப்பா சொல்வதற்குமான சம்பந்தம் எதுவென்று பார்க்கும் முன் செத்து பிழைத்தாள் மோனிகா.
“நான் அனுப்பற லிங்கை பாரு…” என்று போனை வைத்துவிட்டு அவர் வாட்ஸாப்பில் பகிர மோனியின் பதட்டத்தில் அத்தனைபேரின் கவனமும் இங்கே திரும்பியது.
“என்னாச்சு மோனி?…” பல்லவன் கேட்க,
“இங்க பாருங்க. இங்க பாருங்க. வரு இவளை அடிச்சதுல தப்பே இல்லை. இவளை இன்னும் நாலு அறை விடனும்…” என ஆத்திரத்துடன் மோனிகா சொல்லவும் பூஜா பயந்து போய் தாயின் பின்னால் ஒதுங்கினாள்.
“ஐயோ என் பொண்ணு…” என முணுமுணுத்தபடி அவளை சேர்த்து அணைத்துக்கொண்டவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
மோனியின் மொபைலில் பல்லவனும் அமுதியனுடன் மற்றவர்களும் பார்க்க அதற்கு டிவியை உயிர்ப்பித்து அதில் யூடியூப்பை செலெக்ட் செய்தாள்.
லேட்டஸ்ட் நியூசை பார்க்க பெரிய திரையில் அதிரன், மேகாவின் புகைப்படத்துடன் அவர்களின் விதவிதமான யூகங்களின் கேப்ஷன்கள் இடம்பெற்றிருந்தது.
“இதுவரை எந்த பெண்ணுடனும் கிசுகிசுக்கப்படாத அதிரன் தேவராஜின் வருங்கால மனைவி. இந்த பெண்ணிற்காக தான் இத்தனை காத்திருப்பா?…” என அதில் பிதற்றிக்கொண்டு இருந்தார்கள்.
பெற்ற மனது தகிக்க சர்வாங்கமும் ஒடுங்க அமுதினியன் சரிந்து அமர்ந்தார் இருக்கையில்.
“அப்பா…” என்று பல்லவன் தாங்கிக்கொள்ள மேகா திரையையே வெறித்தபடி நின்றாள்.
“படிக்கிற பிள்ளைக்கு போன் வாங்கி குடுக்காதன்னு சொன்னேனே கேட்டியா நீ?…” என்று இரண்டாவது அண்ணன் செல்வம் அமுதனை சாடினார் வேதனையுடன்.
“இன்னைக்கு உன்னோட கண்மண் தெரியாத பாசத்தால நம்ம பிள்ளை வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்குது…” என்றவர் பூஜாவை இழுத்து அடிக்க,
“விடுடா, விடுங்கேன்ல. என் பிள்ளைய அடிக்க எவனாச்சும் கையை ஓங்கினீங்க, அம்புட்டுதான்…” என்று சந்திரா குறுக்கே வந்து நின்றார்.
“ஏன் இவ ரூம்ல தான போன் இருக்கு? மேசை பக்கத்துல உக்காருவாளாம். எல்லாம் பண்ணுவாளாம். ஆனா போன மட்டும் பாக்கலையாம்? நல்ல கதையா இருக்கே? அதான் இவ லட்சணம் தெரியுதே இதுல. எப்படி வெக்கப்பட்டு நிக்கிறான்னு பாரு…” என சந்திரா தாறுமாறாக பேச,
“அடச்சீ வாய மூடு. அங்க நம்ம மோனியும் தான் இருக்கா. போன் இருந்ததே தெரியலைன்னு தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூஜா சொன்னதுக்கு வரு அடிச்சா. அதுவரைக்கும் அவளுக்கும் தான் தெரியலையே?…” செல்வம் பரிந்துகொண்டு பேச,
“பார்த்தியா பரமு, இவன் பேசறதை…” என பரமசிவத்திடம் நிற்க,
“அவன் சொல்றதுல என்ன தப்பு? உன் மக தான் அதிகபிரசிங்கத்தனம் செஞ்சிருக்கா. அப்படி என்ன ஒரு சினிமா நடிகன்கிட்ட பேச்சு வேண்டி இருக்கு? உன் பொண்ணை கண்டிச்சு வை…” என்றார் பரமசிவம்.
இப்படி அனைவரும் பூஜாவை மாறி மாறி திட்ட சந்திராவால் பொறுக்கவே முடியவில்லை.
அதற்குள் அப்போது தான் நிச்சயம் செய்து கிளம்பியிருந்த பிரதாப்பின் வீட்டிலிருந்து போன் வரவும் பதட்டதுடன் மகனை பார்த்தார் அமுதினியன்.
“அவங்க இத பார்த்துட்டு தான் பேசறாங்களோ? பல்லவா என் பொண்ணு கல்யாணம்ய்யா…” என்றார் மகனை.
“நான் பேசறேன்ப்பா. எதுவும் தெரிஞ்ச மாதிரி காமிக்க வேண்டாம். நாமளா அவங்க இதுக்குத்தான் கூப்பிடறாங்களோன்னு யூகம் செய்ய வேண்டாம்…” என்றவன் அந்த அழைப்பை ஏற்றான்.
“ஹலோ மாமா…” என பல்லவன் சாதாரணமாக பேசவும்,
“ஹலோ நான் பிரதாப் அப்பா பேசறேன்…” என மொட்டையாக உறவுமுறை சொல்லாமல் அவர் பேச பல்லவனின் முகம் மாறிவிட்டது.
“மாமா நான் பல்லவன், அப்பா பெரியப்பா கூட பேசிட்டிருக்காங்க…” என்றவன் அவனாகவே,
“அடுத்து கல்யாண பத்திரிக்கை குடுக்கனும்ல. அதான் எல்லாரும் உக்கார்ந்து பேர் எழுதிட்டு இருக்காங்க…” என்றான்.
மறுபக்கம் சிறு அமைதி. அவர் மீண்டும் பேசும் முன் இங்கே இவனின் நெஞ்சம் தடதடத்தது.
“தம்பி என்ன சொல்றதுன்னு தெரியலை. நாங்க நாளைக்கு வீட்டுக்கு வந்து பேசறோம்…”
“மாமா…”
“விஷயம் உங்களுக்கு இன்னும் தெரியலைன்னு நினைக்கறோம். நீங்க நியூஸ் பாருங்க தம்பி. நாங்க நாளைக்கு பேசறோம்…” என சொல்லி வைத்துவிட அசையாது நின்றான் பல்லவன்.
அவன் நின்ற விதமே சந்திராவுக்கு என்ன விஷயமாக இருக்கும் என தெரிந்துவிட்டது. உடனே மகளை பின்னிருந்து முன்னே இழுத்தவள்.
“எல்லாம் உன்னால தான்டி. நீ மட்டும் பேசாம இருந்தா இங்க ஒருவார்த்த உன்னை பேசியிருப்பாங்களா? என்னவோ வேணும்னே நீ செஞ்ச மாதிரி எங்க கொண்டு வந்து நிப்பாட்டிட்டாங்க?…” என்றவர்,
“என்னவோ உன்னால தான் இந்த கல்யாணமே நிக்க போவுதுன்னு பேச போறாங்க பாரு. எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி. புருசனும் சரியில்ல புள்ளைகளும் சரியில்ல…” என போட்டு பூஜாவை அடிக்க,
“ம்மா, இப்ப நீயேன் வாய்க்கு வந்தபடி பேசற? பூஜா பண்ணின தப்புக்கு சொன்னா உன்னால கேட்க முடியாதோ?…” என சந்திராவின் மூத்த மகள் பிரபா பேச,
அதுவரை உள்ளம் வெதும்ப மகளின் எதிர்காலத்தை நினைத்து அச்சத்தில் இருந்த அமுதனுக்கு தன் அக்காவின் பேச்சில் ரத்தம் கொதிக்க வெகுண்டு எழுந்துவிட்டார்.
“போதும் நிப்பாட்டுக்கா, என் பொண்ணை இன்னொருவாட்டி எதாச்சும் பேசின…”
“என்னடா என்ன செய்யுவ? நீயே பாரு எப்படி வெக்கப்பட்டு சிரிச்சுட்டு இருக்கான்னு. அவனை பார்த்து பிடிச்சிருக்குன்னு வேற சொல்லுறா…”
“சந்திராமா, கொஞ்சம் பேசாம இருங்க. நானும் பார்த்துட்டே இருக்கேன். அந்த இடத்துல நானும் தான் பேசினேன். நான் தான் கேட்டேன் பிரதாப்பை ரொம்ப பிடிச்சிருக்கு போலன்னு கிண்டல் பண்ணேன். வாய் இருக்குன்னு பேசாதீங்க. அவ்வளோ தான்…” மோனிகா கோபத்துடன் பேச,