அக்கம்பக்கத்தில் வீட்டின் முன்னால் யாரோ இருப்பதை போல தெரியவும் செல்வம் சுதாரித்தார். சாதாரண நிகழ்வு கூட அவர்களை பதட்டப்படுத்தியது.
“பல்லவா முதல்ல வீட்டை பூட்டு, வெளி கேட்டை சாத்து…” என்றார் செல்வம்.
“பெரியப்பா…” அவனே கலங்கிபோய் பேச,
“அட என்னய்யா? நாங்கலாம் இருக்கோம்ல. சரி சரி…” என்று தோளை தட்டியவர் தன் மகன் முருகனிடம் கதவை எல்லாம் பூட்டிவிட்டு வரும்படி சொல்லிவிட்டு அனைவரும் அங்கேயே இருந்தார்கள்.
மேகாவை பார்க்கவே அத்தனை கஷ்டமாக இருந்தது. சற்று நேரத்திற்கு முன் எப்படி இருந்த பெண்? தங்கள் கண்ணே பட்டுவிட்டதோ என்று தான் தோன்றியது.
மோனிகாவும், பிரபாவும் மேகாவை உள்ளே அழைத்து செல்ல மலரை பெரியப்பாக்களின் மனைவிகளான மூத்தவர் தெய்வானையும், இளையவர் சுகந்தியும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
மாற்றி மாற்றி வெளியூர் சொந்தங்களிடம் இருந்து அழைப்பு மேல் அழைப்பு வந்துகொண்டே இருந்தது.
“என்னவோ பேங்க் மாப்பிள்ளைன்னு சொன்னீங்க? இப்படி சினிமாக்கார சம்பந்தம்ன்னு மறைச்சுட்டீங்க? ஏன் எங்கட்ட சொன்னா நாங்க என்ன சொல்ல போறோம்?…”
“புடிச்சாலும் புடிச்ச பெரிய புளியங்கொம்பு தான். இனிமே கேட்டுட்டு தான் உன்னை பார்க்க வரமுடியும் போல?…”
“நீ அங்கிட்டு நிச்சயம் பண்ணினா உன் பொண்ணு என்ன பண்ணிருக்கா பாரு. இதென்ன பழக்கம்?…”
“என்னப்பா திடீர்ன்னு இப்படி ஒரு செய்தி? என்னவோ நல்லாருந்தா சரி. கல்யாணத்துக்காவது கூப்பிடுவ தானே?…”
“உன் பொண்ணை ரொம்ப அமைதின்னு நினைச்சேன். பெரிய வேலையெல்லாம் பார்த்திருக்கா?…”
இப்படி சொந்தங்களே மாற்றி மாற்றி அவர்களாக எதையோ நினைத்து பேசி பேசி நொந்துபோய் இருந்தவர்களை இன்னும் குற்றுயிராக்கினார்கள்.
யாரோ செய்த ஆர்வக்கோளாறு செயலால் இப்படி தன் பெண்ணின் வாழ்க்கையும், அவளின் நன்னடத்தையும் கேள்விக்குரியாகிவிட்டதை நினைத்து மருகியபடி இருந்தார்கள் பெற்றவர்கள்.
எதையும் யோசிக்கும் திறன் கூட அற்று குடும்பமே நிலைகுலைந்து போயிருந்தது சற்று நேரத்தில்.
—————————————————–
சற்று நேரம் கழித்து அதிரனே தேவராஜிற்கு அழைத்துவிட்டான். சூழ்நிலை அங்கே எப்படி இருக்குமென யூகிக்க முடிந்தது.
“ப்பா…” என்ற மகனின் குரல் உற்சாகமிழந்து வறண்டிருக்க உணர்ந்தார் தேவராஜ்.
“இப்ப நீ ஓகேயா அதி?…” மகனிடம் எப்படி கேட்பதென்று அவருக்கு தெரியவில்லை.
நிச்சயம் அவர் மகனின் கண்களில் பார்த்த அந்த உணர்வு பொய்யில்லையே. எப்படி ஒரு ஆழ்ந்த பார்வை?
அதிலும் தலைசாய்த்து அந்த பெண்ணை பார்த்து புன்னகைத்ததில் என்னவொரு தீவிரம். இதனை மகன் உணர்ந்தானா என அறியவேண்டி இருந்தது அவருக்கு.
“சொல்லுங்கப்பா…”
“என்ன செய்யலாம் அதி? மீடியா ரொம்ப ஸ்ப்ரெட் பன்றாங்க. அவ்வளோ எடிட்ஸ். இப்ப உன் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்ல போய்ட்டிருக்கு…” என சொல்ல,
“ஹ்ம்ம்ம் ப்பா…” என்றான் அமைதியாக.
“ஒரு மறுப்பு செய்தி குடுப்போமா?…” என்றார் நினைத்ததை கேட்காமல் இப்போதைய சூழ்நிலையை மாற்றும் பொருட்டு.
“சொல்லி என்ன ஆகும்ப்பா? மறுத்தா அதுக்கும் ஒரு ந்யூஸ் போடுவாங்க. ஏன் போட்டீங்கன்னு கேட்டாலும் அதையும் பிரச்சனை ஆக்குவாங்க. இதை விடுங்க..”
“எப்படி விடமுடியும்? இன்னொரு பொண்ணும் சம்பந்தப்பட்டிருக்கு. நிச்சயம் மீடியா ஃபேம் இல்லாத பொண்ணு…”
“அப்பா, எனக்கும் புரியுது. இப்படியே கண்டுக்காம விட்டுட்டா கொஞ்ச நாள் பேசிட்டு விட்டுடுவாங்க…”
“நோ அதி, அந்த பொண்ணோட ஃபேமிலி…”
“ஏம்ப்பா? ஒரு இன்ஸ்டா லைவ்ல வந்த ஒருநிமிஷ வீடியோவால பிரச்சனையாகற அளவுக்கா நம்ம மக்கள் நாலேஜ் இருக்கு? ஏதோ ரூமர் கிளப்பினா அதுக்கெல்லாம் பதில் சொல்லனுமா?…” என்றவன்,
“மீடியா சும்மா அவங்க பாப்புலாரிட்டிக்காக பேசறாங்க. இதை கூட புரிஞ்சுக்க முடியாத முட்டாள் யாருமில்லை. ரெண்டு நாள்ல இதுவே அடங்கி அடுத்த ஹாட் ந்யூஸ் தேடி போயிருவாங்க…” என சொல்லிவிட்டான்.
“எனக்கு என்னவோ சரின்னு தோணலை. அந்த பொண்ணை பார்க்கும் போது….”
“ஹ்ம்ம், அடுத்த மாசம் மேரேஜ் போல அந்த பொண்ணுக்கு…” என்றவன் குரல் லேசாய் கரகரத்ததோ?
தேவராஜின் மௌனம் அதிரனை பாதிக்க முயன்று தன்னை மீட்டுக்கொண்டான் தன்னுணர்வுகளில் இருந்து.
தனக்கே பிடிபடாத இந்த எண்ணங்களின் அலையில் இருந்து முதலில் வெளி வரத்தான் நினைத்தான்.
“எங்க இருக்கீங்க?…” தந்தையிடம் கேட்க,
“நம்ம ரெக்கார்டிங் தியேட்டர்ல…”
“ஓகே, அந்த தெலுங்கு மூவிக்கு சாங்ஸ்க்கு ட்யூன் போட்டாச்சா?…”
“ஆல்மோஸ்ட் ஓவர். இன்னும் ரெண்டு சாங் பேலன்ஸ். நீ வந்து பாடறது மட்டும் தான் பாக்கி…”
“அதை முடிங்க. நாளைக்கு நான் வந்து பேசறேன்…” என்று வைத்துவிட்டான்.
தேவராஜிடம் பேசி முடித்த அதிரனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஹர்ஷத்திற்கு ஒரு யோசனை தோன்ற,
“நோ ஹர்ஷித், அது இன்னும் பிரச்சனையை தான் குடுக்கும். யார் என்னன்னு விசாரிச்சு நான் முதல்ல புக் பன்றேன்னு அவங்க குடும்பத்துக்கு தான் குடைச்சல் குடுப்பாங்க. வேண்டாம்…”
“ஸார்…”
“லீவ் மீ ஹர்ஷத்….” என்றதும் அவனும் விலகி வந்துவிட்டான்.
ஆனால் அதிரன் அதை விட்டு விலகிவிடவில்லை. யோசித்தான். அந்த நொடி தனக்கு தோன்றியவற்றை கடகடவென்று செய்து முடித்தான்.
விஷயம் தேவராஜிற்கு சென்று சேரும் என தெரியும். ஆனாலும் செய்யாமல் இருக்க முடியாது.
அவனை எதுவோ மேகாவை நோக்கி தள்ள பின்வாங்காமல் முன்னே தான் பயணித்தான் அந்த ஈர்ப்பு திசையில்.
——————————————-
தேவராஜால் அதற்கு மேல் மகனை பிடிக்க முடியவில்லை. அவருக்கு வந்த அழைப்புகள் எதையும் அவர் ஏற்பதாக இல்லை.
மறுத்தால் கூட அதில் உண்மை இல்லையே? மீண்டும் மீண்டும் அதிரனின் அந்த பார்வையும், புன்னகையுமே மனக்கண்ணில் வந்துபோனது தேவராஜிற்கு.
கூடவே அந்த பெண்ணின் குடும்பத்தை பற்றி விசாரிக்கவும் அவர் முடிவெடுத்தார்.
மறுநாள் மேகாவின் குடும்பத்தின் விவரங்களை அறிந்துகொள்ள அவர் முயல அதற்கு முன்பே எல்லா தகவல்களும் மகனிற்கு கிடைத்துவிட்டதை அறிந்துகொண்டார்.
கூடுதலாக மேகா குடும்பத்தினருக்கே தெரியாமல் மகன் அவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் விஷயம் தேவராஜின் காதிற்கு வந்து சேர்ந்தது.
இதை எப்படி எடுத்துக்கொள்வதென்று அவருக்கு விளங்கவில்லை. எங்கே போய் முடியுமோ என யோசித்தவர் மகனாக சொல்லாமல் தான் செய்ய எதுவுமில்லை என்றிருந்தார்.
ஆனாலும் அமுதினியன் குடும்பத்தின் விவரங்கள் அத்தனையும் அவருக்கும் வந்து சேர்ந்தது.
————————————-
இத்தனை கலவரங்களுக்கு மத்தியில் சரியான நேரத்தில் துபாயிலிருந்து சென்னை வந்திறங்கினான் அதிரன் தேவராஜ் மேகாவின் நினைவுகளுடன்.
விமான நிலையத்தின் வாயிலிலேயே அவனை பிடித்துக்கொள்ள முயன்ற பத்திரிக்கை ஊடகங்கள் அலைமோதியது.
கொஞ்சமும் முகம் சுளிக்காமல், எப்போதும் போல மெல்லிய சிரிப்புடனே, அனைவரையும் பார்த்து தலையசைப்புடன் விலகி வெளியே வந்துவிட்டான்.
“அதிரன் உங்களுக்கும் மேகவர்ணா அவங்களுக்கும் எப்போ மேரேஜ் அப்படின்ற விஷயத்தையாவது சொல்லலாமே?…” என்று ஒருவன் கையில் மைக்குடன் உரக்க கத்தினான்.
அவனை திரும்பி பார்த்தவனின் முகத்தில் ஆச்சர்யபாவமும், மீசைக்கடியிலான அழகான புன்னகையுமாக தோளை குலுக்கிவிட்டு காரில் ஏறிக்கொண்டான் அதிரன்.
“மேகவர்ணா…” காரில் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தவன் இதழ்கள் அவளின் பெயரை முணுமுணுக்க, இசை ரசிகனின் இதழ்களும் மனதில் வந்து நின்ற பாடலை முணுமுணுத்தது.