“ப்பா…” ஸ்பூர்த்தி சுணங்கியபடி அழைக்க அந்த பாவனை அப்படியே மேகாவை கொண்டு இருந்தது.
அதிரனின் பார்வை தன் மேகத்தை தான் தொட்டது. அவள் அதிரன் வரவும் பிள்ளைகளுக்கும் சேர்த்தே உணவை மாடிக்கு வரவழைக்க இன்டர்காமில் பேசிக்கொண்டு இருந்தாள்.
அதிரன் கீழே கிளம்பி வரும் வரை நிச்சயம் குழந்தைகள் இடத்தை விட்டு நகரமாட்டார்கள்.
அதனால் மாடிக்கே அனுப்ப சொல்லி சொல்லிக்கொண்டு இருக்க அதிரன் தன்னை பார்ப்பதை கண்டு மேகா புருவம் உயர்த்தவும், பார்த்து கண்சிமிட்டியவன்,
“என்ன ப்பா?…” என்றான் தன் பெண்ணிடம் அதே பாவனையில்.
“பேரன்ட்ஸ் மீட்டிங்…”
“எஸ் ப்பா…” தோளில் தன் பெண் கழுத்தை கட்டிக்கொண்டு முன்னும் பின்னுமாய் ஆட அதற்கேற்ப அதிரனும் அசைய நந்தன் பார்த்தபடி நின்றான்.
“நீங்களும் வாங்க ப்பா ப்ளீஸ்…” ஸ்பூர்த்தி முடிக்கவும்,
“குட்டிம்மா அப்பாவை இப்படி போர்ஸ் பண்ண கூடாதும்மா…” என்றாள் மேகா.
முடிந்தளவு குழந்தையின் பள்ளி சம்பந்தப்பட விஷயங்களுக்கு எல்லாம் மேகா அதிரனை அழைப்பதில்லை.
அவனை சங்கடப்படுத்தும் அளவிற்கு அவன் பக்கம் எடுத்து செல்லவும் மாட்டாள்.
சுபத்ராவுடன் தானே சென்று கவனித்துவிடுவதுமாய் இருக்க பள்ளியின் சக பிள்ளைகளின் கேள்வியில் அதிரனை பிடித்துக்கொண்டிருந்தார்கள் அவனின் பிள்ளைகள்.
“அப்பாவோட போகனும்னு..” என்று இரு பிள்ளைகளும் லஞ்சமாய் முத்தம் வைக்க அதிரனுக்கு தாளவில்லை.
மேகாவிடம் புருவம் உயர்த்தினான் என்ன செய்யலாம் என்று கேள்வியாய். மேகா ஒன்றும் சொல்லவில்லை.
தெரிந்துவிட்டதே இதிலேயே அவனும் வருவான் என. பிள்ளைகளின் வகுப்பு ஆசிரியருக்கு அழைத்தாள் மேகா.
“மேகம் ஓகே சொல்லியாச்சு. அப்பா வருவேனாம்…” என்று தன் கைகளை நீட்ட பிள்ளைகள் ஆளுக்கொரு கையில் ஹைபை தந்தனர்.
அத்தனை கொண்டாட்டம் தகப்பனும் தங்களுடன் வருகிறான் என்பதில் முகமெல்லாம் மலர்ச்சி.
அவர்களின் சந்தோஷத்தை கண்கொட்டாமல் புன்னகையுடன் பார்த்திருந்தவன் இருவரையும் அணைத்து முத்தமிட்டு,
“கீழே போய் ப்ரேக்பாஸ்ட் முடிங்க. அப்பா வரேன்…” என்றான்.
“ஓகே ப்பா…” என்று குதித்துக்கொண்டு இறங்கி ஓடினார்கள் இருவரும்.
“மேல கொண்டுவர இப்பதான் சொன்னேன்…”
“ஓகே டா மேகா…” என்றான் அதிரன்.
குழந்தைகள் இருவருமே இரண்டாம் வகுப்பில் இருக்க மேகா பிள்ளைகளை சாதாரணமாகவே வளர்த்தாள்.
அதில் அதிரனின் தலையீடு எதுவும் இல்லை. ஆனால் பள்ளி என்று வருகையில் அவன் சொல்லிய பள்ளியில் தான் சேர்க்க வைத்தான்.
“சாதாரணமா எந்தளவுக்கு வளர்க்கோமோ அது நம்ம கையில. அதே நேரம் அவங்க பாதுகாப்பும் முக்கியம் மேகா. ப்ரைவேசியும் முக்கியம்…” என்றான் அவளிடத்தில்.
“ஈஸியா சொல்லிடலாம் ஏன் இவங்களாம் சாதாரண ஸ்கூல்ல பிள்ளைங்களை சேர்க்க மாட்டாங்களான்னு? ஆனா சாதாரணமா இருக்க விடுவாங்களா அங்க நம்ம பிள்ளைங்களை? சான்ஸ் இல்லை மேகா…” என்பான்.
“சில பேச்சுக்கள் பேச்சுக்களா மட்டும் தான் பார்க்க முடியும். நடைமுறைக்கு சாத்தியமில்லை. அது மாதிரிதான் நம்ம வாழ்க்கையும். சாதாரணமா வாழனும்னு நாம நினைச்சாலும் இருக்க முடியாதேடா…” என நிதர்சனத்தை எடுத்துரைப்பான்.
அதன்படி பிள்ளைகள் படிக்கவிருக்கும் பள்ளி அதிரனின் தேர்வானது. அங்கேயும் பிள்ளைகளை தனியாய் பார்க்க தான் செய்தனர் முதலில்.
நாளடைவில் அதுவே பழகியும் போனது. பிள்ளைகள் வந்து சொல்லும் பொழுது வருத்தமாகவும், இருக்கும்.
“ப்பா என் ப்ரெண்ட்ஸ் அப்பா உங்களை மீட் பண்ணனும்னு சொன்னாங்க. என் ப்ரென்ட் ப்பா. பார்ப்போமா?…” என புரியாமல் வந்து அதிரனிடம் கேட்கையில் மறுக்க கஷ்டமாக இருக்கும்.
ஆனாலும் தனது மறுப்பையுமே தெளிவாய் புரியும்படி சொல்லிவிடுவான் பிள்ளைகளிடம்.
“அப்பாவுக்கு கிடைக்கிற நேரம் அப்பா குட்டீஸ் கூட தானே என்ஜாய் பண்ணனும். டைம் கிடைக்கும் போது பார்க்கலாம். சரியா?…” என்று சொல்ல அவனை மறுக்குமா குழந்தைகள்.
நிறைய சங்கடங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருந்தது அவர்களின் வாழ்க்கையில். இருப்பினும் அத்தனையும் கடந்துதான் வரவேண்டும்.
பிள்ளைகளின் பெரிய சந்தோஷம் அஷ்வின். அஷ்வின் வந்துவிட்டால் அவனுடனே தான் அத்தனை ஆட்டமிருக்கும் பிள்ளைகளுக்கு.
பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றதும் அவனுடன் தான் செல்வேன் என்று ஒருமூச்சு பிடிவாதமாய் இருக்க அதிரன் தான் சமாதானம் செய்தான்.
மேகாவிடம் காட்டும் பேச்சும், பிடிவாதமும் தந்தையிடம் செல்லுபடி ஆகாது பிள்ளைகளுக்கு.
புன்னகைத்தே பேசி மனதை மாற்றிவிடும் வல்லவனாகிற்றே. பலமுறை மேகா சொல்லுவதுண்டு.
“சரியான மந்திரக்காரன் நீங்க. பேசி பேசி எப்படி கூல் பண்ணிடறீங்க?…” என்று கேட்க,
மேகாவுடனான திருமணத்தின் பின்னர் எந்தளவுக்கு திரைத்துறையில் தனது காட்சிகளில் கவனமாக இருந்தானோ பிள்ளைகள் என்றானதும் இன்னுமே நெருக்கமான காட்சிகளை குறைத்தான்.
தேர்வு செய்யும் படங்களை முன்பை விட இன்னுமே அத்தனை கவனமாக தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்திருந்தான்.
அதிரன் வந்து நின்று, பார்த்து, புன்னகைத்து, நடனமாடி கண்களில் காதலை காட்டி இரண்டு வசனம் பேசினாலே போதுமே என்றிருந்தது இயக்குபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கு.
அந்த காதல் காட்சிகளுக்கே அத்தனை ரசிகர்கள் இருக்க அவன் அணைத்து, சேர்ந்து நெருங்கவேண்டும் என்று கூட தேவையில்லாது போனது.
மேகாவிற்கு அவனின் தேர்வுகளை கண்டு புரிந்து போக ஒன்றும் சொல்லவில்லை.
“அஷ்வினும் சரி, நம்ம பிள்ளைங்களும் சரி என்னை கவனிக்கும் போது நான் இன்னும் கவனமா இருக்கனுமே மேகா…” என்றான் அவளின் பார்வையை கொண்டே.
“மனசுல கூட எதையும் நினைக்க முடியலை போங்க…” என்று சலித்துக்கொள்பவளை சிரிப்போடு அணைத்துக்கொள்வான்.
சகஜமாக உறவுகளின் வீட்டு விசேஷத்திற்கு கூட சென்றுவரமுடியாது மேகாவாலும், பிள்ளைகளாலும்.
சென்றாலும் கூட பெரிதாய் பொருந்தாத இடத்திற்கு வந்துவிட்டதை போல அவர்களுடன் இரண்டுபேர் துணைக்கென இருக்க சென்ற சில நிமிடங்களில் கிளம்பிவிடுவாள்.
சென்றாலும் நிம்மதியாக பேசி சிரித்து நிறைவாய் வர முடியாது. ஒவ்வொருமுறையும் ஏதேனும் சங்கடம்.
‘இதை எனக்கு நீ செய்யேன்’ என்பவர்களின் அருகாமை தான் அங்கே அதிகமாக இருக்கும்.
இப்படி எல்லாம் குறைந்து வெளிப்பார்வைக்கு முழுமையாய் ஒரு பிரபலத்தின் மனைவியாக மாறிவிட்டிருந்தாள் மேகா.
“என்ன யோசனை மேகா?…” என்றான் அதிரன் அவளை நோக்கி கை நீட்டியபடி.
“ஹாங், ஒன்னுமில்லையே?…” கையில் இருந்து போனை வைத்துவிட்டு வர,
“ஒன்னும் இல்லை பதறாத. இப்போ ஓகே தான். டேப்லெட் எடுத்துட்டேன். சரி நான் கிளம்பி வரேன். நீ இரு…” என இழுத்தணைத்து விடுத்தவன் டவலை எடுத்துகொண்டு கிளம்பினான். (https://blogs.20minutos.es)
முதல்நாள் அதிகாலை கிளம்பி சென்றவன் இப்போது தான் வீடு திரும்பி இருந்தான்.
நேரங்கள் எத்தனை குறைவாக இருந்தாலும் கிடைத்த நேரத்தில் பிள்ளைகளுடனும் குடும்பத்துடனும் மட்டுமே அதிரனின் பொழுதுகள் கழியும்.
இப்போதும் அவன் கிளம்பி தயாராகி வர மேகா தந்து ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டாள்.
“ரெடி டா…” என்று சட்டையின் கையை மடித்துவிட்டபடி நடந்து வந்தான்.
“இந்த தாடியை எப்போ ஷேவ் பண்ணுவீங்க அதி?…” என முறைத்துக்கொண்டே கேட்க,
“ஏன் இதுக்கென்ன?…” என நீவிக்கொண்டே சிரித்தவன் அவளை முத்தமிட குனிய,