முதலில் இதனை சமாளித்து சமாதானமாக பேச முயன்ற எவரையும் வாயை திறக்க அனுமதிக்கவில்லை பிரதாப் குடும்பத்தினர்.
“எங்க குடும்பத்துக்குன்னு தனி கௌரவம் இருக்கு. இன்னொருத்தனோட அதுவும் ஒரு நடிகனோட சேர்த்து பேசப்பட்ட பொண்ணை ஏத்துக்கற அளவுக்கு நாங்க பெரிய மனசுக்காரங்க இல்லை…” என்று பிரதாப்பின் அப்பா சொல்லிவிட்டார்.
“என்ன பேசறீங்க நீங்க? இது ஒரு ஆக்சிடென்ட் மாதிரி. என்னோட அத்தை பொண்ணு விளையாட்டா செஞ்சதால வந்த வதந்தி. அதை போய் நம்பிட்டு…” என்று பல்லவன்,
“படிச்ச நீங்களே இப்படி யோசிக்காம பேசலாமாங்க? கொஞ்சமும் யோசிக்க மாட்டீங்களா?…” என்று கொதித்தான்.
“பல்லவா, கொஞ்சம் அமைதியா இரு…” என்ற செல்வம்,
“முடிவா என்ன சொல்றீங்க?…” என கேட்கும் பொழுதே பிரதாப் வேகமாய் அங்கே வந்து சேர்ந்தான்.
“அப்பா, நான் தான் சொன்னேன்ல. பொறுமையா பேசலாம்ன்னு. ஏன் இப்படி அவசரப்படறீங்க?….” என்றான் தன் தந்தையிடம்.
“அப்பா, விடுங்க, என்ன பன்றீங்க?…” என்று அவன் கையை இழுப்பதற்குள் உருவியவர்,
“அவ்வளோ தான். எங்களுக்கு உங்க பொண்ணு வேண்டாம்…” என்றவர்,
“நான் எந்த தப்பான நோக்கத்திலையும், உங்க பொண்ணை சந்தேகப்பட்டும் இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லலைங்க…” என்றவர் மேலும் பேசும் முன்,
“அப்பா அமைதியா இருங்க. வீட்டுல வச்சு பேசிக்கலாம்…” என பிரதாப் தடுக்க பார்த்தான். அதை கண்டுகொள்ளாமல்,
“இங்க பாருங்க, நாளைக்கு இதையும் மீறி கல்யாணம் நடந்தா இன்னாரோட பேசப்பட்ட பொண்ணை தான் நாங்க மருமகளா எடுத்திருக்கோம்ன்னு அடையாளப்படுத்தப்படுவோம். அது எங்களுக்கு அசிங்க. அந்த பேச்சு எங்களுக்கு வேண்டாம்…” என்று சொல்லிவிட்டார்.
அத்தனைபேரும் இடிந்து போய் தான் செயலற்று நின்றார்கள் அவர் சொல்லியதில்.
“அப்பா போதும்…” என்ற பிரதாப் அமுதனை பார்க்க அவரிடம் பேசமுடியும் என்று தெரியவில்லை.
“பல்லவன், கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் எல்லாரையும் கன்வின்ஸ் பன்றேன். ப்ளீஸ். நீங்க எதையும் மனசுல வச்சுக்க வேண்டாம்…” என பிரதாப் சொல்ல,
“பிரதாப், நான் சொல்லிட்டே இருக்கேன். எவன் கூடவோ பேசப்பட்டவ எப்படி உனக்கு மனைவியா வர முடியும்? அதுவும் நம்ம குடும்பத்துக்கு. கிளம்பு முதல்ல. என்னை இதை விட ஹார்ஷா பேச வச்சிடாத…” என்று கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
ஆனால் பிரதாப் மீண்டும் மீண்டும் போன் செய்து பேசிக்கொண்டு சமாதானம் செய்ய முயல மேகாவின் வீட்டினர் என்ன செய்வது என தடுமாறி நின்றார்கள்.
மாலை வரை நன்றாக யோசித்தவள் வீட்டில் சொல்லிவிட்டாள் இந்த திருமண பேச்சை இத்துடன் முறித்துவிடும்படி.
“இல்லண்ணா, இன்னைக்கு ஒரு வேகத்துல அவர் பேசலாம். ஆனா ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்த விஷயம் திரும்ப அவர் மனசுல பெருசா வந்தா. வேண்டாம். என் லைஃபை நான் ரிஸ்க் ஆக்கிக்க விரும்பலை…” என்று சொல்லவிட்டாள்.
மலர் தான் அழுது தீர்த்தார் மகளின் எதிர்காலம் இப்படியா ஆக வேண்டும் என்று.
“என்னை அவங்க வீட்டுக்கு மருமகளா எடுக்கறதையே அசிங்கம்ன்னு நினைக்காங்க. நீங்க அதுக்கு போய் அழுவீங்களா?…” என்று சததம் போட்டாள்.
மேகாவிற்கு வருத்தம் தான். பிரதாப்பிடம் பெரிதாக ஆர்வத்துடன் பேசி பழகவில்லை என்றாலும் திருமணம் செய்துகொள்ள போகிறவன் எனும் ஒரு எண்ணம் வியாப்பிக்க ஆரம்பித்திருந்தது நிச்சயம் நெருங்க நெருங்க.
இப்போது நடந்த நிகழ்வில் முளைவிட இருந்த எண்ணம் சுத்தமாய் எரிந்து சருகாகி போனது.
இதோ வீட்டினரிடம் அன்றே அவர்கள் போட்ட நகையை கொடுத்துவிட்டு வரும்படி அனுப்பிவிட்டாள்.
ஓரளவு தைரியமாகியும் விட்டாள். ஆனால் வெளியே செல்லவோ யாரிடமும் பேசவோ தோன்றவில்லை.
பெரியப்பா வீட்டினர் மட்டும் அவ்வப்போது என்ன செய்கின்றாள் என கவனித்து பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டு இருப்பார்கள்.
மோனிகா அவளுடனே தான் நேரத்தை கழித்தாள். இப்படி தன்னைக்கொண்டே மற்றவர்கள் தேங்கி இருக்க முயன்று தன்னை வெளிக்கொணர்ந்தாள்.
இன்னும் நான்கு மாதத்தில் பரிட்சை. இந்த தேர்வையேனும் சரியாக செய்துவிடவேண்டும் என்று புத்தகத்தை எடுத்துக்கொண்டாள்.
முழுக்க முழுக்க புத்தகமும், கணக்குகளுமாக அவள் மூழ்க நினைக்க நிகழ்வுகள் அவளை வாட்டாமல் இல்லை.
செய்திகள் அடங்கிவிட்டாலும் இன்னும் அவளை சுற்றி இருப்பவர்கள் அதனை விடவில்லை.
வீட்டு மனிதர்கள் தவிர யாரிடமும் பேசுவதை தவிர்த்தாள். எந்த குறுஞ்செய்தியையும் பார்ப்பதை வெறுத்தாள்.
அதிரன், ஒரு நடிகனாக அதைவிட பாடகனாக பிடித்தம். அவனின் தீவிர ரசிகை என்று சொல்லிவிட முடியாது. மற்றவர்களின் படங்களை போல அவனினதையும் பார்ப்பாள்.
இப்படி எங்கோ தூரத்தில் தன் கண்ணிற்கெட்டாத தொலைவில் இருப்பவனுடன் இப்படி ஒரு செய்தி இன்னும் நம்பவும் முடியவில்லை என்பதை விட ஜீரணிக்க முடியவில்லை.
என்னவெல்லாம் நடந்துவிட்டது? இந்த சில நாட்கள் அவளின் வாழ்க்கையில் இல்லாமலே போய்விடாதா என்று எண்ணியபடி புத்தகத்தை ஓரமாய் வைத்துவிட்டு கட்டிலில் சாய்ந்திருந்தாள்.
“வரு…” என கதவை தட்டிவிட்டு மோனிகா உள்ளே வர,
“சொல்லுங்க அண்ணி…” என்று எழுந்தமர்ந்தாள்.
“தூங்கிட்டிருந்தியா?…”
“இல்லைண்ணி, சும்மா தான்…” என்றவள்,
“அம்மாவும், அப்பாவும் கிளம்பிட்டாங்களா? அண்ணா போன் பண்ணாங்களா?…”
“இல்ல வரு. நான் பண்ணினப்போவும் எடுக்கலை. வரட்டும். கூப்பிட வேண்டாம்ன்னு விட்டுட்டேன்…” என்ற மோனிகா,
“நான் தம்பியை கொஞ்சம் தூங்க வைக்கனும். சிணுங்கிட்டே இருக்கான்…” என்றால் தோளில் சாய்ந்திருந்த மகனை.
“ஹ்ம்ம்,…”
“கொஞ்ச நேரத்துல வரேன்…”
“நான் எங்க போக போறேன்? நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. தம்பியை பாருங்க…” என்றதும் மோனிகா அவளின் அறை கதவை அடைத்துவிட்டு சென்றாள்.
மேகாவிற்கு வருத்தமாக இருந்தது தன்னைக்கொண்டே இவர்கள் செயல்படுகிறார்களே என்று.
புத்தகத்தை மீண்டும் புரட்ட மனம் செல்லவில்லை. கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் மனது அடுத்து என்ன என்பதிலேயே இருந்தது.
லேசாக விழிகள் கசியும் போல இருக்க முயன்று உள்ளிழுத்தாள் பலவீனமாகிவிட கூடாதென்று. அந்த நேரம் அவளின் மொபைலில் புதிய எண்ணிலிருந்து அழைப்பு.
“யார் இந்த ப்ரைவேட் நம்பர்?…” என பார்த்தவள் யாராக இருக்கும் என்று யோசித்தாள்.
முதல்முறை அடித்து ஓய்ந்துபோக மீண்டும் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டுதடவை வந்துவிட்டது. சற்றே எரிச்சலாகவும் இருக்க அட்டன் செய்துவிட்டாள்.
“ஹலோ?…” என்ற இவளின் சத்தத்தில் மறுபக்கம் நிசப்தம்.
“ஹலோ யாருங்க? கால் அட்டன் பண்ணலைன்னா திரும்ப ஏன் கூப்பிடறீங்க?…” என சற்றே காரத்துடன் அவள் கேட்கவும் மறுமுனையில் மெல்லிய சிரிப்பு சத்தம்.
“ஹலோ…”
“மேகா, நான் அதிரன்…” என்ற குரலில் விதிர்த்துபோனாள் மேகவர்ணா.
அவனின் அந்த அழைப்பில் தான் எத்தனை உணர்வுகள்? அவளறியாமல் அந்த வீடியோ கிளிப்பிங்கில் தான் கண்ட அவனின் பார்வையும், முகமும் அறை முழுவதும் படமாய் விரிய தலையெல்லாம் கிறுகிறுத்தது.
“மேகா…” மீண்டும் அவள் இருப்பை அறிந்துகொள்ள அழைக்க பயந்துபோய் போனை வைத்துவிட்டாள்.
இன்னும் நம்ப முடியவில்லை அழைப்பை துண்டித்து கீழே போட்டவள் சில நொடிகள் அந்த போனையே பார்த்திருந்துவிட்டு மீண்டும் மொபைலில் வந்த அழைப்பு உண்மையா பிரம்மையா என பரிசோதித்தாள்.
அதில் வந்திருந்த எண்ணை பார்த்ததும் அவன் தான் பேசியது என்று விளங்கியது.
லேசாய் உடலெல்லாம் வியர்க்க போனை தூரமாய் தள்ளி வைத்துவிட்டு சுவற்றோடு ஒட்டி அமர்ந்துகொண்டாள்.
ஏன்? எதற்கு இப்படி இப்போது ஒரு அழைப்பு? தன்னிடம் பேச என்ன இருக்கிறது? ஏன் அழைத்திருப்பான்? இப்படி கேள்விகள் அவனை சுற்றி வளைக்க மறுபடியும் அவளுக்கு அழைத்தான் அதிரன்.