அதிரன் பேச பேச அடிமனத்தின் ஓசைகள் அவள் காதிலேயே திடுமென்று கேட்டு மனதில் இடியை கூட்டியது.
“ப்ளீஸ், நான் சொல்றேன்ல மேகா. நான் போய்டறேன்…” என அதிரன் மீண்டும் சிறுபிள்ளைக்கு சொல்வதை போல அவளுக்கு வலியுறுத்த அவனின் மொபைல் அழைத்தது.
“ஹர்ஷத்…”
“ஸார் மீடியா டோர்கிட்ட இருக்காங்க. எப்படி தெரிஞ்சதுன்னு தெரியலை. அவ்வளோ பேர் நிக்கிறாங்க…” என்றான்.
அதிரனுக்கு ஸ்தம்பித்த நிலை. இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. நண்பனின் தியேட்டர். அவ்வபோது இங்கே வந்து தனிமையில் அமர்ந்துவிடுபவன் தான்.
அன்றும் அதை போல வேறு ஒரு டென்ஷனில் வந்திருக்க படம் போட ஆரம்பிக்கவும் அப்போதைக்கு எதையும் யோசிக்காமல் இருக்க படத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.
அவனே எதிர்பாராதது மேகா அந்த இடத்திற்கு வந்ததும், தன்னருகே அமர்ந்ததும்.
விதியின் வசம் தங்கள் வாழ்க்கை சென்றுகொண்டிருப்பதை கண்கூடாக உணர்ந்த நிமிடங்களில் இதுவும் ஒன்றாகி இருந்தது.
வந்ததும் எழுந்து சென்றுவிடுவோம் என்று இருந்தவனின் காதல் கொண்ட மனது அதற்கு எதிராக தர்க்கம் புரிய அங்கிருந்து அசைய கூட முடியவில்லை அவனால்.
மேகாவாக அழைத்து பேசும் வரை திரும்புவதாக இல்லை என்பதை போலவே தான் அமர்ந்திருந்தான்.
அவள் தன் காலை மிதித்து மீண்டும் மன்னிப்பை கேட்க பேசியிறாவிட்டால் அப்படியே கிளம்பிவிடலாம் என்றிருந்தவனுக்கு அடுத்த சோதனையாக அவளின் அழைப்பும், மன்னிப்பும்.
எத்தனை தான் அடக்கி வைத்திருக்க அவனும் அவள் மீதான நேசத்தை. இந்த தருணம் தான் இருவரும் நேரில் சந்திக்க கூடிய அந்த நொடியோ என்று நினைத்தபடி திரும்பி பார்த்துவிட்டான்.
அதன் பின்னர் தான் தன்னுடைய அடுத்த தவறும் புரிந்தது. தவறு தான். மிகப்பெரிய தவறு.
இது அவளை எத்தகைய சூழ்நிலையில் கொண்டு சென்று நிறுத்தும் என மீண்டும் அவன் கவனம் சிதறிய தருணம்.
இப்போது என்ன செய்வது என யோசனையிலேயே அதிரன் இருக்க அதற்குள் மேகா பல்லவனுக்கு அழைத்துவிட்டாள்.
“என்னடா? படம் பார்க்க போறோம்ன்னு சொன்ன? கால் பண்ணிருக்க?…” பல்லவன் கேட்டுக்கொண்டே யாருக்கோ பாத்திரத்தை எடுத்து காண்பிப்பது இங்கே கேட்டது.
“அண்ணா, இங்க தியேட்டர்ல அதிரன்…” என்று மேகா பதட்டமாக சொல்லியதும்,
“அதிரன், அங்க தியேட்டர்லையா? என்ன சொல்ற வரு?…” என்று பதறிவிட்டான்.
இருக்கும் பிரச்சனைகளில் இன்னொன்று என்றால் மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போகும்.
பல்லவனுக்கு யோசிக்கமுடியவில்லை. முதலில் அவ்விடத்தை விட்டு தங்கை கிளம்பினால் போதும் என்று தான் தோன்றியது.
“வரு பதட்டப்படாதடா. முதல்ல அங்க இருந்து கிளம்பு. இப்பவே கிளம்பு. நீ வீட்டுக்கு வா…” என்று பல்லவன் கூற,
“அண்ணா…” என்றவளின் குரலில் அத்தனை அச்சம்.
“வரும்மா, அண்ணா சொல்றேன்ல. ஒன்னும் இல்லை. நீ கிளம்பி வந்திரு…” என்று சொல்ல போனை வைத்துவிட்டு மேகா எழுந்துவிட்டாள்.
அவள் எழவும் தான் அதிரனும் தன்னுணர்வு வந்தவன் அவளை யோசனையுடன் பார்த்து,
“எங்க கிளம்பிட்ட மேகா?…” என்றதும்,
“உங்ககிட்ட பேச நான் தயாரா இல்லை. வழி விடுங்க…” என்றாள்.
அவனை தாண்டிக்கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் தோழிகளின் பக்க வழியில் செல்ல வேண்டும்.
மேகாவிற்கு இருந்த பதட்டம் எதையும் யோசிக்கவிடவில்லை. அங்கிருந்து புறப்பட்டால் போதும் என்றிருந்தாள்.
ஆனால் நிலைமை அப்படி இல்லையே? மேகாவை நன்றாக தெரியுமே வெளியே இருப்பவர்களுக்கு.
“நீ யார் இதை சொல்ல?…” என்று அவள் பேச அருகில் இருந்த தோழிகள் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தார்கள்.
திரையில் இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்க பால்கனியில் தான் இவர்கள் இருந்தது.
மேகா எழுந்து நிற்கும் வரை அங்கே என்ன நடக்கிறது என்று அவர்களுக்கும் தெரியவில்லை.
எழுந்து அதிரனுடன் பேசும் போதும் இருளில் யாரிடம் பேசுகிறாள் என்றும் தெரியவில்லை.
“வரு என்னாச்சு?…” என புவனா கேட்க,
“விடுங்கடி, எல்லாம் உங்களால தான்…” என்று அவள் செல்ல போக அதிரன் அவளின் கையை பிடித்துவிட்டான்.
சுத்தமாய் அவள் இதனை எதிர்பார்க்கவில்லை. பிடிக்கவேண்டும் என்று அதிரனும் நினைக்கவில்லை.
“கையை விடுங்க. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?…” என்று அடிக்குரலில் அப்படி ஒரு சீற்றம்.
எங்கே சத்தம் போட்டு யாரும் இங்கே திரும்பிவிடுவார்களோ என மேகா குரலை தணித்தே அவனிடம் பேசிக்கொண்டிருக்க பால்கனியில் இருந்தவர்களில் சிலரின் கவனமும் இங்கே திரும்பியது.
“மேகா வெளில பிரஸ் பீப்பிள்ஸ் இருக்காங்க. இப்ப நீ போனா தேவை இல்லாம இஷ்யூ ஆகிடும். என் பேச்சை கேளும்மா…” என்றான் அதிரன் தன்மையுடன்.
அவன் சொல்லியதில் மூளை செயலற்று போக தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள்.
தலையில் கை வைத்துக்கொண்டு எதையோ முணங்கியபடி கண்ணீர் விட்டவளை செய்வதறியாது வேதனையுடன் பார்த்தான் அதிரன்.
‘முதல் சந்திப்பில் இத்தனை இன்னல்களா? இப்படி அழுது பார்க்கவா காத்திருந்தோம்?’ என்று கலக்கமாய் அவளை பார்த்தான்.
“ரிலாக்ஸ், நானே கிளம்பிடுவேன். நான் பார்த்துக்கறேன். நீ எங்கயும் மூவ் ஆகாத. ப்ளீஸ் மேகா…” என்று கெஞ்சும் குரலில் பேச மேகாவிற்கு பல்லவனிடமிருந்து அழைப்பு.
பல்லவனும் யோசிக்காமல் பதட்டத்தில் அவள் சொல்ல வந்ததை கவனிக்காம கிளம்பு என்பதிலேயே குறியாய் நிற்க அதிரனின் பேச்சுக்கள் எதுவும் மேகாவின் தலையில் ஏறவே இல்லை.
மொபைலை பேக்கினுள் போட்டவள் வேகமாய் எழுந்து கொண்டாள். அவள் கிளம்புவதில் அதிரனுக்கு தான் பதட்டம் கூடியது.
“நோ, மேகா நோ. நீ போக கூடாது. நீ இரு. நான் போறேன்…” என்று அவளை மறித்து நிற்க பால்கனியில் படம் பார்த்துக்கொண்டு இருந்த மற்றவர்களின் கவனமும் மொத்தமாய் திரும்பிவிட்டது.
படபடவென்று பத்துபேர் மொத்தமாய் நிற்கவும் பயத்தில் இன்னும் வியர்த்துவிட்டது மேகாவிற்கு.
“வரு…” என தோழிகள் அதிர்ந்து பார்க்க படம்பார்க்க வந்த பொதுமக்கள் கத்த உடனடியாக விளக்குகள் போடப்பட அங்கே அதிரனை கண்டுகொண்டார்கள்.
“அதிரன் டி…” என புவனா ரேவதியிடம் சொல்ல ரேவதிக்கு உயிரே இல்லை.
இப்படி தோழியை அழைத்து வந்து சிக்க வைத்துவிட்டோமே என்பதை போல பயத்துடன் நின்றாள்.
விளக்குகள் எல்லாம் ஒளிர்ந்ததும் அத்தனையும் சுற்றி பார்த்தவள் யாரையும் பார்க்க விருப்பமின்றி,
“நோ…” என்று முகத்தை மூடிக்கொண்டு அதிரனை தள்ளிவிட்டு கதவை நோக்கி செல்ல அவனும் பின்னால் ஓடினான்.
“மேகா சொல்றதை கேளு…” என்று அவனும் செல்ல கீழே இருந்தவர்கள் அதிரனை கண்டு ஆர்ப்பரித்து குரல் எழுப்ப கூச்சலில் யாரின் குரலும் யாருக்கும் கேட்கவில்லை.
“மேடம்…” என்று அதிரனின் பாதுகாவலன் கதவை திறக்கவிடாமல் நிற்க அவனை பிடித்து தள்ளியவள் கதவை திறக்க அதற்கென்று காத்திருந்த மீடியா சூழ்ந்துகொள்ள வியர்க்க விறுவிறுக்க கதவை திறந்தவள் அதிர்ந்து நின்றாள்.
“மேகா உள்ள வா…” என்று அதிரன் அவளை கைபிடித்து அழைத்த நொடி பாதுகாவலன் கதவை அடைக்க இடது கை நசுக்கப்பட்டு அலறினாள்.
“நோ…” என்று அதிரன் அதை எடுத்து கதவை அடைக்க செய்ய வெளியே இருந்தவர்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது உள்ளே வருவதற்கு.
கதவை பூட்டவும் அதிரனிடமிருந்து கையை பிடுங்கியவள் பின்னால் திரும்ப தீயணைக்க பயன்படும் சிலிண்டரில் தலை மோதி காயமானது.
“மேகா…” மொத்தமாய் உயிர்ப்பிழந்து போனான் அவளின் நிலையை கண்டு.
“என்னை விடுங்க வீட்டுக்கு போகனும். ப்ளீஸ்…” என்று அங்கேயே மடங்கி அமர்ந்து அழுதவளுக்கு தலையிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்க அதற்கு மேலும் அதிரன் தள்ளி நிற்கவில்லை.
“வசந்த் க்விக்…” என்று அவனின் பாதுகாவலனுக்கு கட்டளை பார்வையால் கட்டளை பிறப்பித்துவிட்டு மேகாவின் தோழிகளை பார்த்து,
“இவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிடுங்க ஹாஸ்பிட்டல் வர சொல்லி…” என்று சொல்லி மருத்துவமனையின் பெயரை கூறியவன் மேகாவை கையில் ஏந்திக்கொண்டான்.
அவன் தூக்கிய நிமிடம் அரைமயக்கநிலையில் இருந்தாள் அவள். அவனின் அணைப்பில் திமிற திமிற வெளியே தூக்கி வந்தவன் எங்கேயும் தேங்கி நிற்கவில்லை.